Wednesday 2 May 2018

அனுதாபங்கள் அவசியமில்லை

ஒரு ரெயில்ப் பயணத்தில் யாருமில்லாத முன்னிருக்கையில் சுவுடிஷ் மொழியில்  ஒரு கைவிடப்பட்ட சஞ்சிகை கிடந்தது. அதன் தலைப்பைப் பார்க்க உதோபியா என்று எழுதப்பட்டு இருந்தது. எத்தியோப்பியா எரித்திரியா போல இதுவும் ஒரு ஆபிரிக்க நாடாக இருக்குமோ என்று ஒருவித சுவாரஸ்யத்தில் பக்கங்களை  பிரட்டிப் பார்க்க அதில மருந்துக்கும் நான் எதிர்பார்த்தவைகள் இருக்கவில்லை. அதில இருந்ததெல்லாம் வில்லங்கமான கட்டுரைகள்.

                                                                  ஆங்கிலத்தில் " Utopia " என்ற சொல்லுக்கு விளக்கம் தேட அது  "  is an imagined community or society that possesses highly desirable or nearly perfect qualities for its citizens..." என்று தொடங்கி மிக நீண்ட வரலாற்றுத் தத்துவக் கோட்பாடு உள்ள விளக்கங்கள் நிறையவே இருந்தது. ஆச்சரியமாக உதோபியா என்று ஒரு இடத்தை ஸ்டோக்ஹோம் நகரத்து விளிம்பில் உள்ள ஆல்பி என்ற புறநகரத்தில் உருவாக்கி   இருப்பதாகவும் , இந்த சஞ்சிகையை அங்கே வசிக்கும் இளையவர்கள் வெளியிடுவதாகவும் அதில விபரங்கள் இருந்தது.

                                                              உதோபியாவுக்கு இணையான தமிழ் சொல் என்ன என்று எனக்குத் தெரியாது. அதை மொழிபெயர்த்து சொல்லவும் முடியவில்லை. பலசமயம் வார்த்தை வலைக்குள் சிக்கிக்கொள்ள முடியாதவாறு சில சொற்கள் தனித்துவமான தன்னிலை அர்த்தங்களுடன் இருக்கின்றன, அவற்றை மொழிமாற்றம் செய்தால் ஆதாரமான  செய்தி  கசங்கிப்போய்விடும் நிலைமையும் இருக்கு. 


                                                          எப்படியோ அந்நிய மொழியாக இருந்தாலும்  நமக்குத் தெரியாத எத்தனையோ சொற்கள் இன்னமும் அறிவதட்காகக் காத்திருக்குது போலிருக்கு. நாம் தானே " எங்களுக்கு எல்லாமே தெரியும் " என்ற திமிரெடுத்த மனப்பான்மையில் கண்டறியாதவன் கலியாணம் கட்டின உடன பெண்டிலை தலையில தூக்கிக்கொண்டு காடுமேடெல்லாம் அலைஞ்சானாம் என்பது போல  கெப்பம்  நிமிர்த்திக்கொண்டு திரிகிறோம்

                                                                 அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க.  


உடல் நலத்தில் 
எல்லை மீறிய ஒத்துழைப்புக்கள் 
மறுக்கப்பட்ட நண்பன் 
இறந்தகாலமாகிவிட்டான். 


வயது 40 கூட ஆகவில்லை.
இளமை மனைவி,
16 வயதான மகன்,

திசை வெறித்தபடி
அமர்ந்து கொண்டிருந்தனர்.



என்னைக் கண்டதும்
நிர்க்கதியாக்கி
நிரந்தரமாய்ப்  போய்விட்டாரே என்றாள்
ஆறுதல் சொல்லி
அகாலத்தை சமாதானப்படுத்த
எனக்குத் தெரியாது


ஆனால்
இறுக்கமான வெற்றிடத்தில்
பொருத்திப்பார்க்கும் உறுத்தலில்
சோகம் குறையவில்லை…

அம்மாவும் மகனும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பிரிவின் இடைவெளிகளை
அர்த்தப்படுத்த
தன்பிடியில் விட்டுக்கொடுக்க
விதி முன்வரவில்லை.

மகனுக்காக வாழவேண்டுமென்றாள்
மூச்சு வெளியேறிய பின்னர்தான்
அதிகம் பொறுப்புகள்
காத்திருக்கிறதும் என்றாள்

எனக்கவள் சுருங்கிய முகத்தைப்
பார்க்கையில் அச்சமாக இருக்கிறது

விசுவாச மரணம்
எதையோ நம்பச் சொல்கிறது
தேர்வுசெய்துதான்
நிஜப்பிரதியை எடுத்துக்கொள்கிறது.

இறுதி
யாத்திரை ஏற்பாடுகளைக்
கவனிபவர்கள் வந்துவிட்டார்கள்

நான்
இன்னும் ஜோசித்துக்கொண்டிருக்கிறேன்
ருக்கும் வரையே எல்லாம்
பின் மிஞ்சுவது
நினைவுகள் மட்டுமே..!


..................................................................................

இப்படித்தானா
அப்படித்தானா எனத்தெரியாத 
ஒரு எதிர்பாராத 
மிதமிஞ்சி அலட்சியமான 
சடுதியைத் தேர்ந்தெடுத்து 
அந்த
விபத்து நடந்துவிட்டது


மின்னசைவில்
உள் நுழைந்த தண்ணி
விசைப்பலகையின்
விரல் அழுத்திய விலாசங்களையே
தேடியழித்து விட்டது



மிகமிக அவசரத்துடன்
மனவிரக்தியான கோபத்திலும்
பாதியிலேயே அணைத்து விட்டு
எழுந்து சென்று
பல்கனியில் அமர்ந்து விட்டேன்


இப்போதுதான்
அறுந்துபோன கணப்பொழுதுகளை
கைப்பிடிக்க முடியாத
காலத்தின் விந்தையை
திடீரென தொடக்கத்திட்கு
திசை மாற்றிவிட முடியாத
கட்டாயப்படுத்தல்
நம்பிக்கைகளோடு முரண்படுத்துகிறது

அடுத்த மடிக்கணனிவரை
நின்று கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
காத்திருப்பு பொறுமையிழந்து
கனதியானதாகத் தோன்றும்
உச்சக்கட்ட வெற்றிடத்தில்
ரசனையாகவே ரகளை செய்யும்
மவுனப் பெருமூச்சுக்கள்
என்னவெல்லாமோ சொல்லித்தருகிறது..


......................................................................................


இடறி விழுந்தபோது 
முழங்காலை நீட்டி உதைக்க 
நிமிரக்கஷ்டப்பட்டது
அப்பவும் 
சந்தேகம் வரவில்லை 


வெளிக்கதவு ஓட்டையில்
உள்கதவுத் திறப்பைப் போட்டு
நிமிண்டி முறிக்கப்பார்த்தேன்
அப்பவும்
ஒத்துக்கொள்ளவில்லை



அவசரத்துக்கு
நன்றாகத்தெரிந்த
ஒரு சொல்லின் எதிர்ச் சொல்
கண்ணாம்பூச்சி காட்டுது
அப்பவும்
நியாப்படுத்தமுடியவில்லை


ஐந்தாம்தட்டுக்கு
மாடிப்படிகளில்
ஏறிஇறங்கும் போதே
நெஞ்சோரம் வலியோடு
உள் மூச்சு வெளிவாங்குது
அப்பவும்
சமாதானம் சொல்கிறேன்

பின்சாம இரவுகளில்
வலது கையும்
தோள்மூட்டு எலும்புகளும்
கழண்டுபோவது போல
பிரிவினை கேட்குது
அப்பவும்
நம்பாமல் இருக்கிறேன்

ஆன்மீகத்தில்
அதிகளவு ஆர்வம் வர
பிறப்பையும் இறப்பையும்
ஒரு நாடகம்போல
ரசிக்கத்தொடங்குகிறேன்
அப்பவும்
ஏற்றுகொள்ள மனமில்லை

இன்னும் எவ்வளவு காலம்தான்
சமாந்தரமாகவே பயணித்து
நிஜத்தில் நிழலாகும்
வயதாவதை
அசட்டை செய்யமுடியும் ?


..............................................................................

ஐந்தாவது தட்டு
வெழிவிலத்தும் வாசல்
அகன்ற ஜன்னலை
அலைந்து வந்த காற்று திறந்தது

எலிவேற்றர்கதவருகே 
நான் 



படிப்படியா
மேலிருந்து இறங்கிவரும்
குதிக்கால் சப்பாத்துச் சத்தம்
யாராக இருக்கும்?
ஏழாவது மாடியில் வசிக்குமவளா?


ஹ்ம்ம்,,
அந்தக் கலையாத வெள்ளன்னமேதான்,

உலராத சுருள்முடி
கொரிடோரையே பறக்கவிட்ட சென்ட்

என்னைக் கவனிக்காமல்
படிப்படியாக இறங்கினாள்

செவ்வந்திப்பூக்களின்
மூச்சு முட்டல்களோடு
படிப்படியாக காமம் மேலேற
ஒரு நொடியின்
திடீர் முடிவெடுப்பில்
மெதுவாகப் பின்னுக்குப்
படிப்படியாக இறங்கினேன்

வளைவுகளில்
அவள் வளைவுகள்
இச்சையை அதிகரிக்க
இரகசிய ஆத்மாவின்
அசிங்கமான பக்கம்
படிப்படியா மேலேறிக்கொண்டிருக்க
நிதானமிழந்த ஒழுக்கம்
படிப்படியாகக் கீழிறங்கிக்கொண்டிருந்தது

வெளிக்கதவு வாசல்படியில்
வெடுக்கென்று திரும்பிப் பார்த்தாள்

பூனையின் நீலக்கண்கள்
புடையன்பாம்பின் கருநீலமாகி
ஒருபடி மேலேறியிருந்ததில்
படியளந்து திண்றதெல்லாம்
அப்பட்டமாகவே
பிடிபட்டது போலிருந்தது !


.................................................................................

புறக்கணிக்கப்பட்ட
அனுபவங்கள்
தரவிறக்க்கப்படுகிற
சில கனதியான நேரங்களின்
கொப்பளித்துவிடும்
கோபமாகி விடுகிறது


வார்த்தைகள்
ஒரு அரசியல் அகதிக்கு
களத்தில் நடந்ததை
புலத்தில் கொண்டுவந்து சேர்த்திட
ஆதரவுகள் இல்லவேயில்லை



முகத்தை முறித்து
தோற்றுப்போன மனிதனாக
கொடூரமான மொழியில்
பிரதி எடுத்துப்
பதிவாக்க வேண்டியுள்ளது


பொறுமையைக்
காத்திருக்க வைப்பதென்பது
அநிச்சயமான ஒரு நொடியில்
கைநழுவி விடுகிறது

ஒருபக்கத் தகவல்களும்
ஓரவஞ்சனைக் காட்சிகளும்
வெகுதூரத்தில்
பனங்கூடல்களுக்கும்
கிடுகுமட்டை வேலிகளுக்கும்

நடுவில் 
பிரிந்த திசைகளில்
முட்டிமோதி எரிச்சலூட்டுகின்ற
அவற்றை சேமித்து அடைகாப்பதில்
திக்கித் திணறல்களும் இருக்கிறது.

நினைத்து புளங்காகிதம் அடைவதில்
ஒரு பகுதி திருப்தி கொள்கிறது.

சராசரியாக வாழ்வதை
இப்போதைக்கு
விதியாக நினைப்பதை தவிர
வேறு வழியில்லை...


..............................................................................

பனிப்புகாருக்கென்று 
பிரத்தியேகமான வாசனைகள் 
ஏதுமிருக்கா ?

இன்றைய தினப்பயணம் 
திசையிழந்து தொடங்கியது 


மலை உச்சியான
என் வாழ்விடத்தில்
நிறையவே
மரங்களிருந்தும்
மண்ணெண்ணெய் வாசம்
பத்தடிக்கு முன்னே
உலகத்தையே அழித்துப்போட்டு
உறைநிலைக்குளிரின்
குரல்வளை இறுகிக்கொண்டிருந்தது



புரநகரத்தை
ஊடறுத்துக் கடந்தபோது
சவுக்காலை ஒன்றை
இழுத்து மூடிவைத்திருக்க
அந்த இடத்தில
பலநாள் குளிக்காத பிசாசின்
கழுத்து வியர்வை வாசம்


விளிம்புநகர எல்லை
மழையின் திரைச்சீலை

அடிச்சுப்போட்டுக்கொண்டு
அவடமெல்லாம்
மெதேன்வாயுவின் வாசம்
நடு நகரத்தையும்
சாம்பல் நிற நாக்கால்
நக்கிக்கொண்டிருக்க
சேறும் சகதியுமாய்
மூக்குச்சிந்திய
வீதியெங்கும்
மாட்டுச்சாண வாசம்

மத்திய ரெயில்வே சதுக்கத்தில்
நிறையப் பெண்கள்
முகம்சிவந்துலாவினார்கள்
அந்த இடத்தில மட்டுமே
றெக்ஸ்சோனா சோப்பு வாசம்

நீங்களே சொல்லுங்க
பனிப்புகாருக்கென்று
குறிப்பிட்ட வாசனைகள் ஏதுமிருக்கா ?

அல்லது
கார்த்திகைக் கூந்தல்களோடுதான்
உரசுகின்றதா ?


...........................................................................

திருடர்களுக்கு
இருட்டு கச்சிதமான வாய்ப்பு
எல்லாவிதமான
அடிப்படைகளின் படியில்
கால்களைத் தேய்த்துவிட்டுக் 
கவிதை எழுதலாம்


கோப்பிக் கப்பின்
ஆதர்சங்கள் இணையும்
வாழ்க்கை வரைபடத்தை
புரியாமலே
நாயர்கடையில் வாய்நாறும்
எவசில்வர் டம்ளரை
தேனீர்க் கோப்பை என்கிறீர்கள்



உருப்படாத காதல்
உப்பில்லாத சாம்பாறாகி
எத்தைனையோ வருடங்கள்


மிக மெல்லிய நட்சத்திரஒளியை
நாட்குறிப்பில்
விடியலென்று ஏற்றி வைக்கலாம்

பறக்கவிடாமல்
சிறகுகளை எழுதி எழுதியே
வானம்பாடியின்
சின்ன வானத்தை
துடைத்து அழித்துவிட்டீர்கள்

கொஞ்சமாக
இலையுதிர் இலைகள் இருக்கு
அதையும்
கூட்டி அள்ளிக்கொண்டு
குப்பை ஆக்குவீரகள்

வழி தவறிய மழையை
பாலத்காரமாய் இழுத்துவைத்து
எவளவு எழுதியும்
நீர் உண்ட மேக வரிகள்
நனையப் போவதில்லை

உயிரோடு இருப்பதை
நளினமாக வடிவமைக்கைப்பட்ட பொய்
என்கிறேன் நான்
அதை அபத்த மாயை என்கிற
நீங்கள்
மிகப் பெரிய உண்மையோடு
பேரம் பேசுகிறீர்கள் .


.....................................................................

மழையின்
ஒவ்வொரு துளியையும்
தனித்தனியாகப் பிரித்து
ஊடறுத்து அதன் நடுவே
நடக்க முயன்று 
தோற்றுப்போனேன்,


திரிச்சீலைபோலக்
குளிரை ஊதி அணைத்துவிட்டு
வெப்பமான மூச்சுக்களை
நகர்த்தி வைக்கும்
பதினாறு திசைகளும்
விறைத்துவிட்டது ,



முகத்தைச் சுழிக்கும்
முன்னிருட்டு இரவு
நட்ச்சத்திரங்கள் களவாடப்பட்ட
குற்ற வழக்கின்
விசாரணைகளை
ஒத்திப்போட்டுக்கொண்டேயிருக்கு,


விதைவையான காற்று
எல்லாவற்றிலும்
வாழாவெட்டியாகிவிட்ட
அமங்கலத்தை நினைத்துப் பின்வாங்குது,

இன்றைய மாலைக்கு
சோடனைகள் திணிக்கப்பட்ட
வாசனைகள் தேவையில்லை .

அதனாலயோ
சொல்லும்படியாகத் தெரியவில்லை
கோடுகளை மீறி
எந்தவிதமான கவலையுமின்றி
தன்போக்கில் திரிகிறது
கற்பனை,

மிச்சமிருக்கும் சம்பவங்களை
சோரம்போன
சில சொற்களில்
கள்ளமாகக் கடத்துவதுவதுக்குப்
போதுமானதாயிருக்கு
இப்போதைய தருணம்
.


...............................................................................

தயவுசெய்து 
எந்தக் கவிதையையும் 
உங்கள் 
தத்துவ வித்தைச்செருக்கில் 
விமர்சிக்க வேண்டாம் 


எந்தப் படைப்பாளியையும்
பாடை ஏற்றும் நோக்கத்தில்
பரிகசிக்க வேண்டாம்



நீங்கள் முருங்கைமரம் ஏறிய
விட்டுக்கொடுப்புகளின்
முட்டாள்த்தனங்களை
அப்பவே இவர்கள்
அறிந்தும்தெரிந்துமிருக்கலாம்


உங்கள் தம்பட்டங்கள்
உங்களைத் தவிர
உலகத் தகுதியானவையில்லை

கோபங்கள் இல்லை
அனுதாபங்கள் அவசியம் இல்லை
இப்போதைக்கு
கொஞ்சம் வழிவிட்டு ஒதுங்கி
நியாயமாக நில்லுங்கள்

பாதை ஓர நகர்வில்
பார்க்காத நேரத்தின்
வலிகளைச் சேர்த்துக்கொண்டு
முடிவு வழியில்
யாரோவொரு ஏதுமில்லாதவனின்

அல்லது

யாரோவொரு அதிபுத்திசாலியின்
விடை தெரியாமல் விட்டுச்சென்ற
விழுங்கவே முடியாத
கேள்விக் குறியியில்
மரணமே ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் !


..........................................................................................


தெருச்சுவரில் 
அபத்தமான ஓவியம் வரைபவன் 
தயங்கித் தயங்கிய 
கோடுகளையும் புள்ளிகளையும் 
சில கோணங்களையும் 
பல வளைவுகளையும்
சில பல சுழிப்புகளையும்
இணைத்துக்கொண்டிருக்கிறான் ,


வீடில்லாதா செய்திகள்
அவனின்
கலைந்த கற்றையான தலைமயிரிலும்
குளிப்பு முழுக்கு இல்லாத
விட்டேந்தியான வியர்வை வாசனையிலும்
முன்னுரை எழுதிக்கொண்டிருக்கு,



அவனின்
நிறத்தெரிவுகள்
அவனின் மனப்பிறழ்வுகள் போலவே
புரியமுடியாமலிருந்தது !


இந்தச் சுவர்
அவனுக்கென்றே பிரத்தியேகமான
தோல்விகளில் விடைதேடும்
நாட்குறிப்பாகவிருக்கலாம் !

சொல்ல முடியாத
வார்த்தைகளை அவன் காயப்படுத்தாமல்
மிக மிக மென்மையாகவே
மை விசுறும் கொள்கலனை
அசைத்துக்கொண்டிருக்கிறான் !

நான்
கொஞ்சநேரம்தான் அவடத்தில்
முழங்காலில் குந்தியிருந்து 
பார்த்துக்கொண்டிருந்தேன்

ஒரு
பெரிய கதையைப்
பகுதி பகுதியாக்கிப் புகுத்தி விடும்
நேர்மையான நேர்த்தியில்
நான்
இதுவரையில் 
வலிந்து எழுதிய 
எல்லா கவிதைகளும்
அர்த்தமிழந்துவிட்டது !







ஒரு வெள்ளை மரம்.

நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் தெரிகிறது, நிறைய சம்பவங்கள் நடக்கிறது. இதில் எதை நாம் பார்க்கிறோம் ? " பார்க்கிறோம் " என்பது ஒரு எளிமையான வார்த்தை. ஆனால் உண்மையில் நாங்கள் பார்க்கும் கோணமும் தெரிவுகளும் நமக்கு இன்னொரு பரிமாணத்தை உணரவைக்கலாம் .,நமது மூளை ஏற்கனவே பதிவுசெய்து வைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தான் கண்கள் காட்சியை திரை இழுத்து விரித்து வைக்கின்றன .

                                                          நமது மூளையில் உள்ள ரசாயன கலப்பு விகிதம் மாறும் போது அது பார்த்தலின் எதிர்வினையை முற்றாக வேறுஒரு அனுபவமாக மாற்றும் என்று நரம்பியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.  ஆங்கிலத்தில் இதை " சைக்கடிலிக்  எபெக்ட் " என்கிறார்கள் .பழமையான  சித்தர்களும் காலம் நேரம் காட்சி இந்த மூன்றையும்   " வெற்றிடத்தில்    வெறுமை நிலை " என்பதுபோல சொல்லி இருக்கிறார்கள்-

                                                   " இல்லாத மேடையில் எழுதாத  நாடகம் " என்று கவிஞ்சர் கண்ணதாசன் ஒரு சினிமா பாடலில் எழுதி இருக்கிறார்.  அதை ஆங்கிலத்தில் "  வேர்ச்சுவல் ரியாலிட்டி " என்கிறார்கள்.   எப்படியோ நம்மைச் சுற்றி ஒரு பார்த்து உணரக்கூடிய உலகம் நமக்காகவே காத்திருக்கு. அது வேற எப்பவுமே முரண்பாடாக இருக்குதா அதுதான்   எவ்வளவு கவிதைகள் எழுதக் காரணமாக இருக்கு!  அது போதுமே இப்போதைக்கு.!

                                                அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க.  


பூனைபோலவே 
வெய்யில் பதுங்கிக்கொண்டிருக்கும் 
விவர்மர நிழலில் 
அகன்ற தெருமுனை !

வளைத்துப்பிடித்துள்ள 
வீதியோரப் பூக்கடையில்
டூலிப்பையும்
ஆர்கேன்ஸாவையும் தவிர
மற்றதெல்லாமே
பெயர் தெரியா மலர்கள் !


முண்டுகொடுத்தபடி
அந்த கடை உரிமையாளன்
சிக்கரெட் பத்துகிறான் !


நான்
பிராங் காப்காவின்
" மேடமோர்போஸிஸ் " நாவலின்
நாட்பதியோராவாது பக்கத்திலிருந்து
நிமிர்ந்து பார்க்கிறேன் !


வண்ணங்களில்
மனதின் ஆதாரமான இருப்பு !


ஒரு
வயதான பணக்காரி
பத்துத் கன்றுகள் தெரிவுசெய்கிறாள் !


சுருக்கம் விழுந்தவளின்
வெறுமைக் கண்களை
நிறங்கள் விரித்துவிடுகின்றன!


அவளின்
வெளிறிய முகத்தில்
வீட்டின் வெற்றிடங்கள்பற்றிய
விபரங்கள் எழுதப்பட்டிருக்க
மழை லேசாகத்தூற ஆரம்பிக்கிறது !


மலர்கள்
போட்டிபோட்டு
சிரித்து விரியத்தொடங்குகின்றன !


பூக்கடைவைத்திருப்பவனின்
முகம்
வாடத்தொடங்குகிறது !


.....................................................................................

பயப்படவேண்டாம்
ஒரு
புதிதான யுகமென்பது
நுண்ணோவியனின்
காலமான ஆசையிலிருந்து 
விடுபட்டுக் கிளம்பிவருவதல்ல !


ஒரு
மோசமான
திக்குத்தெரியாத அலைச்சலில்
ஏதோவொருவிடத்தில்
நிஜமாகிப் பரீச்சயமாகிவிடும்
கவிதை ,


ஒரு
அர்த்தமில்லாத பாதையில்
தேவையிழந்து
அபத்தமாக முடிவடைந்த
யுத்தம்,


ஒரு
மனத் தைரியமிலாதவனுக்கு
கழுத்தளவு சாபங்களிலும்
விகசித்துக் கிடைத்துவிடும்
விமோசனம் ,


ஒரு
ஓவியனின் அசட்டைத்தனத்தில்
புதியவொரு திசையெடுத்துக்
கலைந்து போய்விடும்
நிறப்பிரிகைகள்


ஒரு
காலூன்றமுடியாத கனவில்
சிறகுகள் ரெண்டும்
கறுப்புவெள்ளையாகவிருக்கும்
வண்ணாத்திப்பூச்சி ,


ஒரு
பராக்கிரமகாலத்தின்
கடைசிப் பெருமூச்சைப்
புழுதியோடு முந்தவிடும்
வீராதி வீரன் ,


இப்படித்தான்
முடியவே முடியாதென்று
வரிந்துகட்டிக்கொண்டிருந்த
அத்தனை கட்டுமானங்களும்
அழுத்தமாகவே
முடிந்துபோகிறது !


.................................................................................

காதலர்களின்
தளிர்மேனிமினுக்கிகொண்டிருக்கும்
முகப்பிரகாசங்களை
ஒரு
பஸ்தரிப்பிலிருந்து 
விழுங்கிக்கொண்டிருக்கிறேன் !


சூனியக்காரியின்
அசிங்கமான சிரிப்புப்போல
தெருவிளக்குகள்
கசியவிடும் நியோன் வெளிச்சம் !


சுயகட்டுப்பாடிளந்து
பின்புறத்தை உள்ளங்கையிளிறுக்கி
ரசனையோடு முத்தமிடுகிறவனோடு
துவண்டுவிடுகிறாள் அவள் !


இருட்டில்
முகத்தைத் தேய்த்துவிட்டு
சுளித்துக்கொண்டு
மேமாதக் காற்று !


நம்பிய காதல் வார்த்தைகள்
எல்லாமே பொய்யென்று
குற்றம் சாட்டும் அவளைத்
தூக்கியெறிந்து
கைகளை விசுக்கிச் சாடுகிறான்
அவன்!


குமுறல்களை
மரியாதையோடு கேட்டுக்கொண்டிருக்கும்
கருங்கல்லு வீதி
உச்சுக் கொட்டுகின்றது !


வெறிஏறிய கூச்சலோடு
ரெண்டு பெண்கள்
இடுப்பை வளைத்துக் கழுத்தை
சங்கப்படுத்துகிறார்கள் !


வழிப்போக்கர் போலவே
நெருக்கி நடந்துகொண்டிருக்கும்
இராத்திரி மனிதர்களின்
யாத்திரை !


ஏமாற்றங்களை
அலட்சியம் செய்துகொண்டிருக்கும்
இன்றைய இரவின்
காம இணைப்புகளை
அடுத்தக்கடத்துக்குக்
காலம் கொண்டுபோகுமா ?


ஜோசித்து முடிப்பதுக்குள்
இரவுபஸ் தரிப்பிடத்துக்கு வந்துவிட்டது !


.....................................................................................

எது 
உண்மைகளை ஒத்துக்கொள்ளும் 
அசல் வரிகள் 
எது 
சோடிக்கப்பட்ட 
நகல்ப் பிரதியெடுப்புக்கள் ?


ஒழுங்கின்றிக் கிடக்கும்
இருவேறு மூலைகளில்
அசாதாரணமான தொகுப்பாக
நிட்கிறது
பெயர்களை ஒளித்துவைத்திருக்கும்
கையொப்பங்கள் !


கண்களைக் குருடாக்கிவிடும்
பிரகாசத்தோடு
வெளிப்படுத்தப்பட்ட வர்ணங்கள்
எதையுமே மறைக்கவில்லை !


இறுதிக்கு முன்னதாக
இரக்கமற்ற எளிமையோடு
திடுக்கிடும்படியாக
மூன்று வாக்கியங்கள்
நிஜத்தை வெளிப்படுத்திவிட்டது


என்
பாதிதான் முடிக்கப்பட்டிருக்கும்
நடைப்பயணங்களில்
பாதங்களில் ஒட்டியிருக்கும்
மணல் துகள்கள்
அனுபவத்தை
வானம் முழுவதும் நிரப்பிவிடும் !


நீ
மரணத்தவிப்போடு
பழக்கமான
இடைச்செருகல்களைத்
திருத்தவேமுடியாது
இப்படியேதான் எழுதுவாய் !


என்
வயதாகிய துயரமும்
ரகசியமான ஆசைகளும்
சந்தோஷக்கொண்டாட்டங்களுக்கு
விட்டுக்கொடுப்பதில்
முன்னேறிவிடுகின்றன !


............................................................................

அவன்
வெட்டையில் நின்ற
காட்டு மரங்களைப்பற்றி,

ஏத்துப்போடும்
வேட்டைக்காரர்களின்
இடியன் கட்டுதுத்துவக்குப் பற்றி,

ஆமணக்கு
இலைகளின் மேல்விழும்
வெளிச்சம் பற்றி ,

அதர் போட்டு அசையும்
அலியன் யானையைப் பற்றி,

கண்வளயத்தை நேரடியாகக்
கருக்கும்
வெய்யிலைப்பற்றி ,
துரமாய்ச் செல்லச் செல்ல

எதட்காக கிரவல்மண் பாதைகள்
சுருக்கிக்கொண்டுபோவதுபற்றி ,

எப்போதாவது
பொறுமையிழக்கும்
குளத்து முதலைகள்பற்றி ,


நீள் 
கதைகளாவே 
சொல்லிக்கொண்டிருந்தான் !

சிலநேரங்களில்
தலை அசையாமல்
சிலநேரங்களில்
ஓங்கியடித்துக் கொல்லப்போவதுபோலவும்
பார்த்துக்கொண்டிருந்தான்!


சலிப்பாகவும்
அபத்தமாகவுமிருக்குமென்று
வேறு
வழியில்லாமல்
அடுப்புத்¨தீயைக் கிளறி
தண்ணி ஊற்றியது போலவே
ஒன்பது வருடங்கள் முன்னர்
சரித்து விழுதப்பட்ட
முக்கிய சம்பவங்களைத் தொடவேயில்லை!


..............................................................................................

மெதுவாகவே
நெருங்கிக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு
புளித்துப் புரைத்தட்டிக்
கிழித்துப்போட்ட நினைவுகளிலும் 
கொட்டி இறுக்கி
அணைத்துக்கொள்ளவேணும்
இனிமையான விசியங்களேயில்லை !


கைவிரல்களில்
பிசைந்துகசிந்து ஒட்டிக்கொண்ட
பாலப்பழ வாசனைகள்
ஏதோவொரு கதையைச் சொல்ல
பாசாங்குகளற்று
நன்றாகவே நினைவிருக்கு !


பிரஞ்சைக்குள்
பெயர்ந்து வந்த ஞாபக அடுக்குகளில்
உள் நுழைந்துவிடும்
விரோதங்களையும்
அசைபோடப்போவதுமில்லை !


ஒரு
மெல்லிய ஒளிக்கற்றை
மெல்ல
ஊடுருவியதுபோலவே
பாதிமயக்கத்தில்
நாங்கள்
இலக்கற்ற மாயைகளில்
திளைத்துக்கொண்டிருந்தபோதே
முற்றிலுமாக சரணடைந்துவிட்டது
விஷங்களும்
வேஷங்களும்
விஷமத்தனங்களும் நிறைந்த
புராதனமான புழுதி !


...........................................................................

கவனத்தை
மேலும் கீழும் ஈர்க்காமல்
முடியும்வரையில்
ஒரு
மரத்தின் பின்னாலே 
மறைந்து நிற்கிறேன்   !


ஓரக்கண்ணால் பார்ப்பதை
நிறுத்திவிட்டு
எல்லோரையும்விட
அதிகமாய்
அழுகிறார்கள் அவர்கள் !


துள்ளிக்கொண்டிருந்த
நாட்களின்
நினைவுகளில்
நாற்றமெடுக்கும்
குளிர்ந்த சேற்றுமண் !


அடித்து ஓய்ந்தபின்னும்
விழுந்துவிடாமல்
மூச்சுக்குத் திணறும்
காற்று !


ஒப்பாரிகளில்
மிதமிஞ்சிய சோகத்தைத்
நனைத்துப்பிழிகிறது
மழை !


வதந்திபோலக் கிளம்பியதால்
நையப்புடைக்கப்பட்டு
சிதைக்கப்பட்டு
மர்மமான வியாதியொன்றின்
பிரதியெடுப்புப் போல
அட்பாயுளில் இறந்து போகிறது
இந்த
அட்புதங்களை உருவாகும்
நிமிடம் !


...............................................................................

நட்பின்பிரகாரம்
அழைப்புக்கொடுத்தனுப்பிய
நான்குநாட்களின் பின்
ஒரு
அருவருப்பான பிசாசு 
ஓவியம் வரைவதைப் பார்க்கக்
சென்றேன் !


அந்தப் பிசாசின்
வரலாற்றில்
மேலோட்டமான பொய்கள்,

மெய்யியலில்
தத்துவமில்லா சமாளிப்புகள்,

நிக்கமுடியாமல்
பக்கம் தேடிச் சாயும்
வெற்றுக்கொள்கைகள்,

இதெல்லாம் வெறுக்கவைத்தாலும்
அந்தப் பிசாசு
மனதுக்குள் சிலாகிக்கவைக்கும்
என் சிநேகிதம் !


பிசாசின் ஓவியக்கூடம்
பிணவாடை வீசும் கடலோரம் ,

சுவர்களில்
பேய்கள் கபாலத்தில் கூழ்குடிக்கும்
கறுப்பு ஓவியங்கள் ,

நிலமெல்லாம்
அநாதரவான ரத்தத் திட்டுக்கள்,

ஜன்னல்களில்
அடர்காட்டின் ரகசியங்கள் !


ஒரு மூலையில்
தலையில்லாத பெண்ணொருத்தி
நடனமாடிக்கொண்டிருந்தாள் !


பீதியெடுக்கும் பதட்டத்தில்
அந்தப் பிசாசு
வரையத்தொடங்கவிருந்த ஓவியத்தின்
தலைப்பை மட்டும்
தட்செயலாகக் கேட்டுவிட்டேன்.


" வானவில் "
என்றது மென்குரலில் பிசாசு!


...............................................................................

பறவைகளுக்காக
சொர்கத்தை விரிக்கும்
வசந்தகால விருட்சங்கள்,


மார்போடு இறுக்கியணைத்துப்
பாலூட்டும் 
இளம் பெண்னின் கண்களில்
நிரம்பிவழியும் திருப்தி,


வேகம் பிடிப்பதையும்
படபடப்பதையும்
ஓவியமாகிக்கொண்டிருக்கும்
காயம்படாத காற்று,


கயிற்றைப்போல
நெளிந்து செல்கிற
வாரயிறுதி வாகனங்கள்,


வடிவமில்லா மைதானத்தில்
தவளைப்பாச்சல் போடும்
வெள்ளைக் குழந்தைகள்,


துறைமுக முனையில்
ஒரு

பாய்மரக் கப்பல்,

அலைகரையொதுக்கத்தில்
ஆத்மாக்களுக்கு
நம்பிக்கைகளைக் கொடுக்கும்
கல்லறை,


அரைகுறை மேலாடையில்
மிகப்பருமனான பெண்ணொருத்தி
வேகநடை போகிறாள் ,


தெரிவதை விடவும்
அதிகமாகவே
பாக்கமுடியுமா ?

கேள்விக்கு
உதாரணமாகிவிடுகிறது
நானிருக்குமிந்த இடம் ! 


................................................................................

ஒரு
வெள்ளை மரத்தை
வர்ணிக்கும் பரவசத்தையாவது
எனக்குத் தாருங்கள் !


இத்தனை 
வெள்ளைக் குழந்தைகள்
அதுவும்
ஒரேபிரசவத்தில் !


போகோனியா மரத்துக்குக்
பூரித்துப்போன
கொண்டாட்டம் !


மழை பிழிந்து பெய்த
முன்வசந்த இராத்திரிகளில்
நெஞ்சு படக்குப்படக்கென்று அடிக்க
செவ்விதழ்
வண்டுகளோடு செய்த
காமக் கழியாடங்களை
ஒருபோதும் குறைசொல்லவேண்டாம் !


வஞ்சகமாகவே
மாலை நேரத் தென்றல்
பூந்துணர் பருவத்ட தொடக்கத்தில்
கருக்கலைப்புக்கு
உலுக்கிப்பார்த்ததும்
சத்தியமாய் உண்மைதான் !


பிடிவாதமான உறைபனி
மொட்டுக்களோடு
முட்டிமோதியபோது
அடிவயிற்றை இறுக்கிப்பிடிதுக்கொண்டே
தப்பிவிட்டது !


எப்படியோ
வெள்ளை மலர்களின் சுகப்பிரசவம்
சென்றகிழமை நடந்திருக்கு !
வாட்டி எடுக்கப்போகும்
கோடை வெய்யிலைத்
தனியாகவே சமாளிப்பது பற்றி
அலட்டிக்கொளவதில்லை !


இனி
தாலாட்டிப் பாலூட்டும்
தாய் மரம்
வாசனைகளோடு வந்திருக்கும்
பூங்காவனக் காதலர்க்கும்
கல்யாண ஊர்வலத்தை மறக்காமல்
மென்பூக்கள் சொரிந்து
தலைவாரிக்கோதிவிடுகிறது !