Monday 2 April 2018

இரவல்த் தாய்மண் !

சென்ற ஈஸ்டர் விடுமுறையில், நாடு கொஞ்சம் வெறுத்து போனதால்,மூன்று நாட்கள் காடு,மலை எண்டு மைனஸ் குளிரில உசிர் உள்ள நோர்வேயியன் நண்பர்களுடன் இயற்கைக்கு சிநேகமகா அலைந்ததால், ஆன்லைன் இலற்றோனிக் நண்பர்களுடன் தொடர்பில இருக்கவில்லை, மறுபடியும் பழைய வாழ்க ஆரம்பித்து அரைத்த மாவையே இனி அரைக்கப் போறான்,,

                                              எனக்கு நெருக்கமான ,பணக்கார நோர்வேயிய நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். மிகவும் வசதியான வாழ்க்கை வாழும் அவர்கள் இயற்கையின் அதிசயங்களை நேரடியாகவே சென்று பார்த்து உணரும் அலாதியான ஆர்வமும் உள்ளவர்கள் ,ஒருநாள்

                                                " இந்த ஈஸ்டர் விடுமுறையில் என்ன செய்யப்போறாய், பியரைக் குடிச்சுக்கொண்டு நாசமாப் போகாமல் , பிரயோசனமா ஏதாவது செய்யலாமே, நாங்கள் காடுமலை நடந்து சுற்றி அலைய மவுண்டின் ஹைக்கிங் போறம் நீயும் வாறியா? வாறதெண்டால் சொல்லுப்பா " எண்டு கேட்டார்கள், 

நான் இதுக்கு முதல் மவுண்டின் ஹைக்கிங் போனதேயில்லை, வாழ்கையில் போகாத பாதைகளில் ஒரு நாள் புதுமையாகப் போய்ப் பார்ப்பதுதான் சுவாரசியம் என்று நினைச்சுப்போட்டு , சரி இதையும்தாண்டி என்ன வரப்போகுது என்று ஜோசிதுப்போட்டு ,

"பெண்கள் வருகிறார்களா?"

                                              எண்டு அப்பாவியாக , வாழ்க்கைக்கு முக்கியமான அந்தக் கேள்வியைக் கேட்டேன்,

"பெண்கள்தான் அதிகம் வருகின்றார்கள், "

" யார் யார் எல்லாம் வருகினம், "

" ஜோசிக்காதை,உன்னோட பெஸ்ட் ப்ரென்ட் சிசிலியாதான் ஹைக்கிங் லீடர் , "

என்று  சொன்னார்கள். சிசிலியா வாறாள் என்றால் அதுவே ஒரு தீபாவளிக் கொண்டாட்டம் , அதனால அவளிடமே கேட்டேன் 

" ஓ, என்ன எல்லாம் கொண்டு வர வேண்டும்,சிசிலியா  "

" பியர் அல்கஹோல் தவிர வேற என்ன விருப்பமோ ,எல்லாம் கொண்டு வரலாம் "

" ஹஹஹஹா, அய்யோ, என்னோட வீக் பொயிண்டில பிடிச்சு அடிக்கிறிங்களே "

" இல்லைப்பா. மவுண்டின் ஹைக்கிங் உண்மையில் எப்படி கடுமையான பாதகமான வெளியில் நிலைமைகளைச் சாதகம் ஆக்கி தப்பி வாழ்வது என்பது பற்றியது "

" அப்பிடியா, சரி முக்கியமா என்ன எல்லாம் கொண்டுவர சிசிலியா"

" தோளில கொழுவுற ட்ரவலிங் பையில் நொறுக்குத்தீனியும் ,தண்ணிப் போத்திலும் மட்டும் கொண்டுவா, "

"அட, இவளவு சிம்பிளா இருக்கே  சிசிலியா"

"ஆமாம், இயற்கையோடு வாழுறதே சிம்பிள் தானே "

" வேற ஒன்றும் தேவையில்லையா "

" உன் கால்களில் திடம் இருந்தால் போதும் மிச்சம் நாங்க காடுகளில் உனக்கு எப்படி வாழுறது என்று காட்டுறோம் "

" காட்டுக்குள்ளே அப்படி என்னதான் இருக்கு உயிர் வாழ, சிசிலியா"

" எல்லாமே இருக்கு,, காடு சொல்லித்தரும் எல்லாம்  முதலில இறங்கடா கழுதை ,, வீணாப்போன விளக்கம் கேட்டுக்கொண்டு இருக்கிறாய் "

" ஹ்ம்ம்,முன்னம் பின்னம் காடு மலை ஏறி ,பழக்கம் இல்லையே சிசிலியா"

" டேய் நாங்கள் எல்லாருமே ஒருகாலத்தில் காட்டுக்கு இருந்துதான்டா நாட்டுக்குள்ள வந்தோம் ,,அதை நினை "

" சரி  உன்னை நம்பி வாறன் சிசிலியா"

" இல்லை  என்னை நம்பாதே,,உன்னை நம்பு,,உன் மனோதிடத்தை நம்பு செம்மறி "


                                               எண்டு சொல்ல ,இதுக்குமேல என்ன ஜோசிக்க இருக்குது எண்டு போட்டு ,"நானும் ரெடி என்றேன் ",

காடுகள் மலைகள் சுற்றி அலையும் இந்த இயற்கைக்கு நெருக்கமான இந்த "mountain hiking" என்பது தலைமுறைகளாக ஸ்கண்டிநேவியர்களின் கலாச்சாரம், அவர்கள் ரத்தத்தில் ஊறி உள்ள விசியம்! இளையவர்களே அதில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் இருப்பின் அடையாளங்களைத் தேடுவார்கள்
                     
                                                       அப்புறம் நோர்வே நீண்ட பெரிய நாடு. இங்கே காடுகள் மலைகள் தான் முக்கால்வாசி நிலப்பரப்பை ஆக்கிரமித்து அழுக்கான காபனீர் ஒக்சைட்டை உள் இழுத்து தூய்மையான ஓட்சிசனை வெளிவிட்டு சுத்தமாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் முல்லைக் கொடியுடை வேந்தனின் நாடு.

                                                     மலைகள் என் தாவணியை விலக்கி என்னை நன்றாகவே ரசித்து விடு எண்டு முகடுகளை முகில்களுடன் உரச விட்டு நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டிருக்கும் அழகை அனுபவிக்க விரும்புபவர்களின் லிஸ்ட் இல் ஆர்டிக் வட்ட வட துருவத்தில் இருக்கும் நோர்வே முக்கியமான ஒரு நாடு.

சிசிலியா என்னோட பெஸ்ட் ப்ரென்ட். என்னை எப்போதும் கோவேறு கழுதை, மோட்டு எருமை,உருப்படாதவன், மட்டி,மடையன் என்று அன்பாக அழைப்பாள். ஆனாலும் என் அம்மாவின் அன்புக்கு நிகரானவள். அவளோட மட்டும் காரைக்கால் அம்மையார் போல தலையால நடந்து இந்த உலகத்தை சுற்றினாலும் அலுக்கவே அலுக்காது .

                                                          அந்த அலைச்சல் முழுவதும் சிசிலியா காடுகளில் நின்ற மரங்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள் ,புதர்களின் பெயர்கள்,மலர்களின் பெயர்கள் எல்லாம் எனக்கு சொல்லிக்கொண்டு வந்தாள் .அவள் பாடசாலை நாட்களில் அவற்றின் பெயர்களை மனப்பாடம் செய்து படித்ததாகக் சொன்னாள்

                                                              " கரக் புறக் "எண்டு கற்கண்டு போல காலுக்குள் நெரிபடும் உறைபனியை மிதித்துக் கொண்டு பல மைல் நடந்து நடுக்காடுக்குள் போனபோது, பாதைத்தடம் இரண்டாகப் பிரியும் ஒரு இடத்தை வந்தடைய ,மனவெளி எங்கும் கவிதை பாய,அருகில் வந்த சிசிலியாவின் கையை பற்றிப் பிடித்தேன் ,அவள் திடுக்கிட்டு

" இப்ப எதுக்கு என் கையை பிடிச்சே,சொல்லு உருப்படாத கழுதை , என்னவோ ஜோசிக்கிறாய்,சொல்லு பா என் கோவேறு கழுதை ?" 
                                                  
                                                என்றாள்,நான் அதுக்கு

" இந்த பாதை பிரிவதைப் பார்க்கும்போது ரொபேர்ட் பிரெஸ்ட் எழுதிய Less travelled path கவிதை நினைவு வந்தது ,சிசிலியா,,வேற நீ நினைக்கிற மாதிரி வில்லங்கமா ஒன்றும் இல்லை, சிசிலியா "

                                                         என்றேன் . அவள் என்னோட கைய இன்னும் இறுக்கிப்பிடித்து

" ஹஹஹஹா, வில்லங்கமா என்னவும் இருந்தாலும் ,காட்டுக்குள்ளே அதிலயும் ஒரு ரொமாண்டிக் திரில் இருக்கு மடையா ,,அது உனக்கு தெரியுமாடா,மோட்டுக் கழுதை, "

" ஹ்ம்ம்,,அதுவும் தெரியும் ,கொஞ்சம்போல "

"சரி ,விடு எனக்கும் அந்தக் கவிதை ரெம்பப் பிடிக்கும்,

" ஹ்ம்ம்,,அப்புறம் அந்தக் / கன்றுக்குட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தேன் / கவிதை மறந்துவிட்டியா? சிசிலியா "

" எருமை மாடு, உனக்கே தெரியும் ரொபேர்ட் ப்ரெஸ்ட் கவிதைகள் ஒரு முறை வாசித்தாலும் மறக்கவே முடியாது தெரியுமா "

" ஹ்ம்ம்,,அது உண்மைதான் சிசிலியா "

" ஆனாலும் காட்டுக்குள்ளே ரெண்டு பாதை பிரிவதைப் பார்த்தவுடன் ரொபேர்ட் ப்ரெஸ்ட் இன் கவிதையை நினைவுக்குக் கொண்டு வந்த ஒரே ஆள் நீ தாண்டா "

                                                   என்றுசொல்லி,தொடர்ந்தும் கையை பிடித்துக்கொண்டு ,கொஞ்சம் விலங்கமான விசியம் சொல்ல தொடங்கினாள் ........

ஆனாலும் இந்தப் பாதையில் கோடைகாலத்திலும் ஒருமுறை வந்திருக்கிறேன்," காடெல்லாம் பிச்சி ,கரையெலாம் செண்பகப் பூ ,நாடெல்லாம் மணக்குதடி நல்லமகன் போறபாதை " என்ற நாட்டார் பாடல்போல அது ஜவ்வனமாக அப்போது இருந்தது...

                                                          இப்ப உறைபனி குளிரிலும், பறவைகள் பட்டுப்போன மரங்களின் அடியில் புழுக்கள் தேட,அவைகளை மர அணில்கள் பூசாண்டி காட்ட, எங்களைப் பார்த்து திடுக்கிட வெள்ளை நரி "இப்ப எதுக்கு எங்க ஏரியாவுக்குள்ள வாரிங்க?"எண்டு அதிர அதுக்கு பக்கத்தில நிண்ட ஒரு குள்ள நரி "இவங்கள் எல்லாம் சும்மா ஜுஜுபி "எண்டு சமாதானம் சொல்ல

                                                            கிளைகளிலும் ,இலைகளிலும் இயற்கை உறைபனிய அள்ளி எறிய , அந்த மரங்களின் கீழே " நானும் இருக்கிறன் " எண்டு சிற்றோடைகள் சத்தமில்லாமல் ஓட, இதமான வடதுருவ சூரியன் மிதமாக சூடு கொடுக்க, வடதுருவக் குளிர் காற்று காது நுனியைக் கடிச்சு " லாலி லாலி லல்லோ லாலி லாலி லல்லோ "என்று கோரஸ் பாட ..

                                                                    சும்மா சொல்லக்கூடாது , உண்மையை அஷ்டாங்க நமஸ்காரமா அடைக்கலம் தந்த இந்த இரவல்த் தாய்மண்ணின் மீது விழுந்து வணங்கிச் சொல்லுறேன் நோர்வேயின் காடுமலைகளில் இயற்கை இன்னும் தலை வாழை இலை போட்டு விருந்துக்கு வரச்சொல்லி நிறைகுடம் தழும்பாத இயற்கையாகவே இருக்கிறது !

.
../// 02. 04. 2013 ////


அப்படியொரு லயம், .....!

நேரடியாக முகத்துக்கு முன்னும் மறைமுகமாக முதுகுக்குப் பின்னாலும் நமக்கெல்லாம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். பொதுவெளியில் என்னைப்போல எழுதுகிறேன் பேர்வழி என்று அடிக்கடி எழுதிக்கொண்டு இருக்கும் அத்துப்பூச்சிகளுக்கு கொஞ்சம் வில்லங்கமான விமர்சகர்கள் எப்போதும் இருப்பார்கள்.

                                                   ஆங்கிலத்தில் solicitations என்று சொல்கிறார்களே அந்தமாதிரியான விரும்பத்தகாத மயக்குமொழிப் பரிந்துரைகளில் சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் கழுதைப்புலிகள் .
                                                                 என்னோட பள்ளிக்கால நண்பன் சொப்ட்வார் எஞ்சினியர் ஒருவன் நாளொரு வெப் சைட்டும் பொழுதொரு ஒன்லைன் கேம்ஸ்ஸுமாக மணிக்கணக்கில் கணனியில் நேரம் செலவிடுபவன். அவனின் விமர்சனங்கள் எப்போதும் மேலே சொன்ன ஆங்கில வார்த்தையின் அரத்தப்படுத்தலுக்குரியவை. ஆனாலும் தனிப்பட என்னுடைய வளர்ச்சியில் கவனிப்புக்கு உரியவை.
                                                                 அண்மையில் கவிதை பற்றி ஒரு உரையாடல் வெளிக்குள் படைப்பிலக்கியத்துக்குக் கிஞ்சித்தும் சம்பந்தமில்லாத வெல்வேறு துறைசார் அறிவியலில் வெள்ளியாகப் பிரகாசிக்கும் நான்கு நண்பர்களோடு " கொன்பிரன்ஸ் கால் " என்பதில் சங்கமித்து அதில் என்னையும் இழுத்துக்கொண்டு போய் விட்டு கூழுக்குத் தேங்காயா அல்லது குரங்குக்குத் தேங்காயா என்பது போல அநியாயத்துக்குப் போய் மாட்டிய என்னை வைச்சே நாலுபேர் வேடிக்கை பார்க்கும் சம்பவம் நடந்தது.
                                                               எப்போதும்போல நான் வைரவரோட நாய் போல சிவனே என்று நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு அமைதியாக இருந்து என்ன ஆரியக்கூத்து நடக்குது என்று கேட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு முடிவோடு என் கால் ரெண்டையும் லெக் போட்டு விழுத்தி வார்துறதுக்குத்தான் வந்திருக்கிறாங்கள் என்று சிவசத்தியமா தெரிந்தாலும் ஒன்றாகக் குட்டையில் ஊறின மட்டைகள்தானே என்பதில் என் கால்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது.
                                                           உண்மையில்ப் " படைப்பிலக்கியத்துக்குக் கிஞ்சித்தும் சம்பந்தமில்லாதவர்கள் " சொல்வதை அதிதீவிர எழுத்து முயட்சிகளில் இருக்கும் யாருமே ரெண்டு காதையும் கொடுத்துக் கேட்பதில்லை. மிகச் சரியாகச் சொன்னால் " படைப்பிலக்கியத்துக்குக் கிஞ்சித்தும் சம்பந்தமில்லாதவர்கள் " தான் நேர்மையான வாசகர்கள் என்று நான் நினைப்பது. 
                                            அவர்களின் சாதாரணமான உலகத்துக்குள் நம்மால் ஒரு சில எழுதுவடிவங்களை எடுத்துச் சென்று அவர்களை பாதிக்க வைக்கமுடியுமென்றால் அதுதான் உண்மையான ஆக்க இலக்கிய வெற்றி என்று எப்போதும் நம்புபவன் நான்,நீங்கழும் என்னை மாதிரி நினைச்சால் உங்களுக்கு அந்த சாவல்களின் அர்த்தம் புரியும், நீங்க வேற  என்ன மாதிரி நினைக்கிறீங்களோ , அது என்னோட பிரச்சினை இல்லை !

                                                     " டேய் மச்சான் கவிதை என்றால் என்ன ? சொல்லு ,உண்ணானத்தான் கேட்க்கிறேன், எது மச்சான் கவிதை ?, சரி இதுக்காவது பதில் சொல்லு,மச்சான் எதுக்காகக் கவிதை எழுதவேண்டும் ? " சொல்றாப்பா, அதை எதுக்காக மற்றவர்கள் வாசிக்க வேண்டும் ?"

                                                          என்று ஆரம்பத்திலேயே பொறுத்த இடத்தில கையை வைச்ச மாதிரி கேள்வியுடன் அவன் வந்தான்...இந்தக் கதையை தொடர்ந்து எழுதுகிறேன்,,,, இப்போதைக்கு முகநூலில் எழுதியவைகளை உங்களோடு இங்கே தொகுப்பாகப் பகிர்ந்து கொள்கிறேன் 


ஒரு
கதகதப்பான கனவு,
அதில்
காத்திரமான நிகழ்வுகளோ
அழுத்தமான 
நெருக்கங்களோ இல்லை ,
மிகப் பிரியமான
சினேகிதி.
தன்னை நம்பச்சொல்லி
நாலாவதுமுறையாக
இரங்கிக் கேட்க்கிறாள் !
என்
பிடிவாதம்
ஆதிக்கம் செலுத்துகிறது,
அவள்
ஆதங்கங்கள்
வலுவிழந்துகொண்டிருக்க
ஐந்தாவதில்
ஜன்னல் வெளிச்சம்
விழித்து எழுந்துவிட்டேன் !

.........................................................................

வாசல்க் கோலத்தில்
வானவில் நிறங்கள்,
மார்கழியில்
மிகப் பெரிய மழை,
பஜனைகளில் 
ஊதுவத்தி வாசனை ,
இளம் தென்றலும்
இளவேனிலக்காலமும் ,
பூசி மெழுகிய
தாழ்வாரங்கள்,
இன்று
பிரதோஷமாயிருக்கலாம் !
ஒரு
நொடிப்பொழுதில்
இன்னொரு வாழ்வியலுக்குள்
கடத்திவிடுகிறது
மனப்பிரமை !

..................................................................

ஒரு
குருட்டு நம்பிக்கை
தொலைந்து விட்டது.!
அவ்வளவுதான் !
எப்படித் தொலைந்தது?
எதிராகச்
செயல்ப்பட்ட .
எல்லாரையும்
விருப்பு வெறுப்பற்று
அணுகிக்கொண்டிருந்ததால்
காற்றில்
பரப்பப்பட்டு
வட்டத்தைத் தாண்டி
நினைவிலிருந்து
மீறத்துணிந்தவர்களோடு
எல்லைகளை விஸ்தரிப்பதில்த்
தொலைந்துபோய்விட்டது.!

......................................................................

மேகங்களை
நோட்டமிட்டுக்கொண்டு
வாசலோரம் நின்று
புகைபிடித்த
வளையங்களை 
பலூன்களாக்கி
சுழறவிட்டுக் கொண்டிருந்தேன்
நான் ,
எதிர் வீட்டுத்
தொடர்மாடி ஜன்னலில்
ஒரு நீள்வட்ட
முகம்பார்க்கும் கண்ணாடியில்
தனது இளமை
திருத்தமாக இருக்கிறதாவென
சோதிக்கிறாள்
வெள்ளைப்பெண் ,
உள்மனப்
போராட்டங்களின்
குறுக்குவெட்டுத் தோற்றங்களுக்கு
அறிமுகங்கள்
தேவையில்லை !

.........................................................................

நீதான்
யாரேனுக்கும்
முகம் கொடுத்துக்
கதைக்க மாட்டாயே !
உன்னைப் பற்றி 
என்ன எழுதி விளக்க முடியும்?
அவர்கள்
வித்தியாசமாகிப்போன
அணுகுமுறையின்
உலகங்களைச் சேர்ந்த
கேலிச் சித்திரங்கள் !
நானும் நீயும்
பிரக்ஞை ஜீவிக்க
பிறக்கும்போதே
நமக்குள்
நிர்ணயிக்கப்பட்டவர்கள்!

.................................................................

தனக்குரியதுபோல 
காத்திருந்து 
பின்முதுகில் கடித்தது,
விளக்கைப் போட்டு 
படுக்கை 
மடிப்புஉறைகளைக்
காற்றில் உதறி விசுக்கினேன்,
ஒரு
மூட்டைப்பூச்சி
அற்ப ஜீவன்
ஆனால் புத்திசாலி !
இருட்டு நோக்கி ஓடமுன்
"விளக்கை அணைத்துவிடு "என்றது
பெருவிரலால்
ஒரேயொரு நசி !
சூடான
சிவப்புப் புள்ளி
அது எனக்குரிய ரத்தம் !


................................................................

சப்பாத்துக்
கால்களில் கீழே
உறைபனிப்பாளங்கள்,
உச்சிக்கு மேலே
துர்வாச சூரியன் 
தன்னை
முழுமையாக
ஒப்புக்கொடுத்தது போல
உஸ்ணம் இல்லாவிடாலும்
வியர்துக்கொட்டும்
வாசனைகள்
இன்னும் வெளிப்படவில்லை, .
அப்படி ஓர் அழகு;
அப்படி ஒரு பாவம்.
அப்படியொரு லயம், !


.....................................................................

ஏதோவொரு திருப்தி
உன்
பதில்கள்
தன்நிகழ்வாக
எவ்வளவு 
வெளிச்சம் வெளிப்படுத்தவேண்டுமோ,
அவ்வளவு வெளிப்படுத்துகிறது !
உன்
சமரசங்கலற்ற
கேள்விகள்
அடர் இருட்டிலும்
மிகவும் எச்சரிக்கையாக
ஒரு
மிகப்பெரிய பரப்பை
எனக்குள்
விரித்துவைக்கப்
போதுமானதாயிருக்கிறது !.


.................................................................

திறப்புப்போட்டு
அறைந்து மூடவேண்டிய
அவசியங்களில்லை ,
இந்த
மேசை இழுப்பானுக்குள் 
சில
தீராக் கடன் கடிதங்கள்,
ஏதோ சில
காகிதங்களில் ஒப்பந்தங்கள்,
ஒரு
செல்லரித்துக்கொண்டிருக்கும்
சிறுகதைத்தொகுப்பு,
ஒரு
நொடிக்கொரு நேரம் தவறும்
கைக்கடிகாரம் ,
இவைதவிர
பத்திரப்படுத்துவதற்கென்று
வேறெதுவுமேயில்லை !
ஆனாலும்
சாவி போடுவதுக்கு
ஒரு எலித் துளையும்
உபரியாக ரெண்டு சாவிகளுமிருப்பதால்
சம்பிரதாயமாகவெப்போதும்
அடித்துப் பூட்டிப்போட்டு
உறுதிப்படுத்த இழுத்துப்பார்க்கிறேன் !


..............................................................................

பலவீனமான
பங்குனி மாதக்கடைசி
வெய்யிலில்
நிழல்கள்
வரிசைகளைத் 
தவறவிடுகின்றன,
மேதாவித்தனங்களை
அவிழ்த்து வைத்திருக்கு
ஊசிக்குளிர்,
காட்டிக்கொள்ளாமல்
பூட்டியிருக்கும்
வயதான
வீட்டுக்கு வெளியேயும்
காத்திருக்கிறது
உறைபனி !


.......................................................................

உன்னதமான
ஒழுங்கமைவுகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும்
ஒருவராயிருக்கலாம்
அந்த ஓய்வூதியர், 
என்னோடு
பேருந்துத் தரிப்பிடத்தில்
காத்திருந்தார்.
வந்தேறிகள்
அதிக எண்ணிக்கையில்
ஒழுக்கங்கெட்டவர்கள்போல
என்னைப்
அசட்டையாகப் பார்த்தார்.
அவருடன்
பயணிக்க வந்திருந்தாள்
ஒரு சின்னச் சிறுமி,
நிறுத்தத்தில்
வந்து நின்ற நீள்வண்டியில்
நான் அவரைக்
மேல்லெனக் கைத்தாங்கலாகப்
படியேற்றி விட்டேன்.
அவரை முந்திக்கொண்டு
குழந்தை நன்றி சொல்கிறாள். !
வளர்ச்சியடையாத
மனமொன்றில்
எளிதில்
அமிழ்ந்து போகக்கூடியது
நிறத்துவேசம் !


.......................................................................

நேரமொதுக்கி
லயித்திருந்து
பூங்காவொன்றில்
இரைச்சலிலிருந்து நிசப்தத்தை
மொழிபெயர்க்கும் 
அவசியங்கள் எனக்கில்லை !
மனம்
எழுந்து நடமாடும்
நாளொன்றின்
பாதி இரவுகளில்
மலர்களின்
சருகுகளின்
இலை அசைவுகளின்
ஆத்மாவின் ராகங்கள்தானே
கேட்டுக்கொண்டிருக்கு !


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


இதனை வருடங்களில்
இதைத்தானே
கற்றுக்கொண்டேன்.!
இது
மறைக்கப்பட்ட
குற்றவுணர்வாயிருக்கலாம்
ஆனால்
மறுக்கப்படுவதெற்கென்று
சபல நிராகரிப்புகள்
இதிலொன்றுமில்லை .
தூண்டப்படும்
மெல்லுணர்வுகள்
குளிரிரவின்
அதிகாலைத் தூக்கத்துக்கு
அவசியமாயிருக்கிறது !


..............................................................

ஒரு
இரயில் பயணம்,
முன்னிலைப்படுத்துகிறது
முன்னிருபவள்
உள்ளிறங்கி வாசிக்கும் 
தினசரி செய்தித்தாளில்
முன்பக்கமாக
வெகுண்டெழும்
இரண்டு முக்கிய செய்திகள் !
ஒன்று
முறைதவறிய
அரசியல்வாதியொருவர்
பெண்ணிடம் அடிவேண்டியது !
இரண்டாவது
பாதிரியாரொருவர்
ஓரினப் பாலினச் சேர்க்கையை
ஒத்துக்கொண்டது !
பரவசம் அவள் முகத்தில்
மின்னி மறைகிறது ,
அவள்
உள்பக்கத்தில்
எதைப்பற்றி வாசித்திருப்பாள் ?
முகம் சோர்ந்துபோய்
சலித்துக்கொள்கிறாள் ,
இப்போது
எதைப்பற்றி வாசித்திருப்பாள் ?
அவள்
நாலாய் மடித்து
குப்பைத் தொட்டியில்
விசிறி வீசியெறிந்து போது
அச்சொட்டாக
நிறுத்தம் வந்தது !
சொல்லாமல்ச் சொல்லி
எல்லாருக்கும் புரியக்கூடாதென்று
பயணங்களும்தான்
வடிவமைக்கப்படுகின்றன !