Thursday 1 March 2018

மகரந்த மணித்துளிகள்...


உலகப்புகழ் உம்பேர்டோ ஈக்கோ என்ற இத்தாலியன் எழுத்தாளர், தத்துவமேதை,இலக்கிய விமர்சகர் அதை அடி மடியிலேயே கையை வைச்ச மாதிரி " You are not Proust. Do not write long sentences. If they come into your head, write them, but then break them down. Do not be afraid to repeat the subject twice, and stay away from too many pronouns and subordinate clauses." என்று சொல்லி இருக்கிறார்,

                                                               ஆனாலும்  சில நேரங்களில் ஒருவர் எழுதுவதின் உள் நோக்கிய குவிமைய மறைபொருள்க்கருத்தைப் பிடிக்க முடியாது  கிச்சு  மூட்டி விடுற மாதிரியான சின்னச் சின்ன வரிகள் நினைக்காத பல கற்பனை எல்லைக்குள் அதை வாசிப்பவர்களை செலுத்துகிறத்தையும், சிந்தனை வரட்சியில் அதை மேலோட்டமாக விளங்கிகொள்வதும் நடக்குது."அப்படி நிலைமை இருந்தால்   In this case, we should not be ashamed of them, and we should not explain them. " என்று சொல்கிறார்   உம்பேர்டோ ஈக்கோ .

                                                              உம்பேர்டோ ஈக்கோ அந்த விசியதிலும் என்னைப்போல கத்துக்குட்டியாக எழுதும் பலருக்கு சப்போர்ட் செய்வது போல " We either use rhetorical figures effectively, or we do not use them at all. If we use them it is because we presume our reader is capable of catching them, and because we believe that we will appear more incisive and convincing." இப்பிடிப்  போட்டு வாங்கி இருக்கிறார் .

                                                                இன்னும் கொஞ்சம் அதிகமாக, கவிதைமொழியின் மிகப்பெரிய சாத்தியங்களில் பரிசோதனை செய்யும் எல்லாருக்குமே உத்வேகம் கொடுப்பது போல " If we think that our reader is an idiot, we should not use rhetorical figures, but if we use them and feel the need to explain them, we are essentially calling the reader an idiot. In turn, he will take revenge by calling the author an idiot." என்றும் சொல்லி இருக்கார் அந்தப் படிச்ச மனுஷன்.

                                                                 வழக்கம்போல முகநூலில்  எழுதிய    என்னுடைய  சின்னக் கவிதை போன்ற பதிவுகளை   வலைப்பூங்காவில் தூவிவிட்டு   உங்களோடு இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறேன் !


திரைச் சீலை போட்டு 
மூடிய 
மங்கலான மூடுபனி,
உடம்பை வருத்தி 
உஸ்ணத்தை விழுங்கும் 
உலர்ந்த குளிர் ,
துருவ வாசம் 
மேலோடமாய்த் தடவிய 
ஊமைக் காற்று ,
எல்லாப் பக்கமுமிருந்தும்
நெஞ்சை அமுக்கும் 
அச்சம் தரும் அமைதி ,

......................................................................


நினைவுகள் 
பேசுகிற நேரங்களில்...
மார்போடு 
வெள்ளை இதழ்கள்
விழுந்த 
குடை மரங்கள் 
இரவோடிரவாக 

நிறங்களை இழந்தன..

..........................................................


இங்கேதான் 
சாலையோரம் 
மலர்களின் வாசனைக்குள் 
விலாவாரியாக 
சங்கீதம் தேடிய 
மேகத்தூது
வார்த்தைகள்
இளைப்பாறிக்கொண்டிருக்கிறன,
இனிமேலாவது
பாரிஜாதக் கவிதைகளின்
மயக்கத்தைக் கெடுக்க
சப்தமிட்டு நடக்காதீர்கள் !


..........................................................................


உலகத்தின் 
மீட்சியற்ற அழகிங்கே 
உறங்கிக்கொண்டிருக்கிறதென்று
வரைந்து விட்டதென்னவோ 
திருப்தியற்ற
பிரபஞ்சப் பேரழகிகளை
சளைக்காமல்
போட்டிபோட்டு
வர்ணித்த மொழியின்
கல்லறை வாசகம் தான் !


.............................................................

இடை இடையில் 
மனத்தைத் தேற்றிக்கொள்ள
உபதேச உத்தேசங்கள் ! 
ஒரேதிசையில் ஒருங்கிணைவாக்க
ஆத்மாவோடு ஆறுதல்ப்படுத்தும்
அர்த்தமில்லா சமரசங்கள்!
முகக் குரலின்
முடிவு வார்த்தைகளில்
தொடர்பிழந்த
அவளின்
அலைபேசி இலக்கங்கள்
வருடங்களின்பின் உயிர்த்தது !


......................................................................


நிறங்கள் ஒடுங்கிப்போய் 
வெள்ளையும் வெள்ளியுமா 
வெளிறிய வெற்றிடத்தில், 
காத்துக்கொண்டிருக்கும் 
கடமைகள் ,
கோலங்களில் 
விடுதலையாகி நிற்கின்ற 
பனிச்சறுக்கு வழி 
உறைந்து போயிருந்த 
பாளங்களில் 
மீண்டும்

பாதங்கள்...

............................................

நமதுயிரே தாயே
நமோ நமோ தாயே என்று
சிங்கக் கொடிகள்அசைந்தாடப்
பாடியதின் அர்த்தம் 
மொழி இடைவெளிகள் 
மதம் கொண்டு அதிகமாகி
அது
நிகழ்ந்தேவிட்ட போதும்
நமதிளமை நாடே
உன் எண்ணம் எல்லாம்
அடல் செறி துணிவருளும்
ஆனந்தமே.!


......................................................


குளிர்காலம்
மீதான கோபத்தையும்
வழியின்றி அகப்பட்ட 
வருத்தத்தையும்
தள்ளி வைத்து 
நினைவுகள் பேசுகிற
நேரங்களில்
றுக்கி விழுந்த 
ஞாபகம்
தவிர்க்க இயலாவிட்டாலும் 
மீண்டும் உந்தி
எழுந்ததை 

மறக்கவே முடியவில்லை.

................................................................

அவன்
இறந்துபோன
அந்த செய்தி உண்மையானபோது
ரெயில்
வேகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது 
நான்தான்
பத்துநிமிட நேரங்கள்
நிரவமுடியாத
நேசிப்பின் இழப்பில்
நிலைக்குத்திய
வெறுமை வெளியில்
விழிகளை அசைக்கமுடியாது
ஸ்தம்பித்துவிட்டேன் !


.................................................................

பெருத்து 
மீண்டும் மீண்டும் 
நிரப்பிக் கொண்டு 
வழிந்த தடங்களில்
தெருக்களின் 
பெயர்கள் அழிந்தன....
 விசையறு 
இரவு முழுவதும் 
பயங்காட்டியபடி
நட்சத்திரங்கள் 
மறையத் தொடங்க
பறவைகள் 
திசைகளை மறந்தன ..

................................................................

நல்லெழில் பொலி சீரணியில்
நலங்கள் யாவும் நிறைந்த
ஒவ்வொரு
நாட்களும்
உண்மையாகவேயிருந்தது
வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலைகள் சூழ்ந்த
ஒரு காலத்தில்
ஒவ்வொரு சிரிப்பிலும்
இயற்கையின் ஆசிர்வாதம்
நிறையவே இருந்த
தேசத்தில் !


......................................................................

நீங்கள் எதை வைத்து
நம்புகின்றீர்கள் ?
பிரியம் நிறைந்த
பலரின் பங்களிப்புக்கள்
கலந்திருக்கிற காலம் 
நம்மை எத்தனை நாள்
விட்டு வைக்குமென்று .?
மற்றபடி,
பூக்களையும் புன்னகையையும்
கை நிறைய
தயாராக வைத்திருங்கள்
இரண்டுமே வெகுமதிதான் !


....................................................................

எதிர்காலத்தில்
என்னவெல்லாம் வருமென்று
சிறு குறிப்புக் கூட
எழுதி வைக்கவில்லை
மாலையில் மெல்லவே 
மொட்டவிழ்த்த
ஒரு பூவைப் போல
துளியும் ஓசையின்றி
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடவே
ஒரு வழியாக
நாங்களே தூரங்களை
எல்லைப்புறம் வரையவைத்தீர்கள்!


........................................................

எளிமையான ஏற்பாடுகளில்
அந்தக்
காட்சி வரும் நேரம்
எனக்காகவே காத்திருந்தது,
முகத்தில் அடிக்கும்
வெய்யில் எழுந்து
நடக்குமென்கிறார்கள்
இனியும்
எதை ஆதாரமாக வைத்து
வெளிச்சங்களை
ஆவணப்படுத்தமுடியும் !


..................................................................

மிகப் பழைய
மரபுக்கவிஞன்
வெண்ணிலவை மேடையேற்றிய
பெருமைகளைத் தூசுதட்ட
நேற்றுக்காலை
எழுதத் தளம் கிடைத்த
புதியவன்
புல்லின் நுனுனியில்
ஊசலாடும்
பனித்துளியை விசாரிக்கிறான் !


..........................................................................

விடியலில்  
 பாதை தேடிவந்து 
தேன் உறிஞ்சிக்குடிக்கும் 
வண்டுகள் ,
மகரந்த மணித்துளிகள்
நாளொன்றில்  
கரைசேரவேண்டுமென 
மாலைவரை   
நெஞ்சமெல்லாம் 
ஏக்க மயக்கமாகவே 
சூரியகாந்தி  மலர்கள்   !

............................................................................

முன்நிலவுக்கால
விருந்தில் 
வெண்பனிப்  பொழிவு ,   
மணல்த்தக்காளி நிறத்தில 
ஜன்னத்திரைச்சீலை, 
வேப்பம் துளிர்கள் போல 
விடியத்தொடங்கும்   
வெய்யில்,
மந்திரலோகம் 
தூக்கமில்லாமல் 
தியானம்செய்யத்தொடங்கும் 
நேரம் !  

..................................................................

விரும்பாமலே 
வாழ சபிக்கப்பட்ட 
இந்த நகரத்தில் 
சந்தோச சிரிப்பை 
இழுத்து வெளியேவிட,
அடுத்த 
மஞ்சள் வெயில்
அதிசயமாக அதிரவைக்கும் 
நாள் வரை 
காத்துக்கொண்டு இருப்பதுக்கு 
காரணங்கள் ஏதுமற்ற 
நம்பிக்கை தருவது 
என் பொறுமை அல்ல 
உன் நினைவு.


1 comment :

  1. இங்கேதான்
    சாலையோரம்
    மலர்களின் வாசனைக்குள்
    விலாவாரியாக
    சங்கீதம் தேடிய
    மேகத்தூது
    வார்த்தைகள்
    இளைப்பாறிக்கொண்டிருக்கிறன,
    இனிமேலாவது
    பாரிஜாதக் கவிதைகளின்
    மயக்கத்தைக் கெடுக்க
    சப்தமிட்டு நடக்காதீர்கள் !//

    அருமை

    ReplyDelete