Wednesday 28 September 2016

பார்வையற்ற உலகம் !!!

கதைகள்  உண்மையாக  இருக்கவேண்டிய அவசியமில்லை. எல்லா  உண்மைகளும் கதைகளாக வரவேண்டிய அவசியமும் இல்லை. தன்னிலையை முன்னிறுத்தி நான், என் அனுபவம், என் வாழ்வினைப் பாதைப் பயணம் என்று எழுதும்  எல்லாவற்றிலும் இருக்கும்  நான் வேறு ,புனைவுகளின் அபரிமிதமான சுதந்திரத்தை எடுத்து நான்  என்று  எழுதும்  நான் வேற . அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது இதுதான் ஒரு கதைசொல்லியின் உண்மையான ஆத்மாவின் குரல் .

                                                அகத்தின்  அழகு  முகத்தில் தெரியும்  இது எவளவு பெரிய உண்மை என்பது சின்னவயசில் அந்த சொல்லாடலைப் படித்த போது பெரிதாக ஒன்றும் அர்த்தம் கொடுத்ததில்லை . வாழ்க்கைப் பாதையில் பலவிதமான அனுபவங்கள் சேர்ந்துகொள்ளும் போது அதன் பரிமாணம் இன்னொரு படிமுறையில் பல்வேறு காரணகாரியங்களுடன் நம்மை அறியாமல்த் தொடுத்துவிடுகிறது. அந்தத் தொடர்சிகள் சுவாரசியமானவையாகவும் இருக்கலாம் .  

                                                    ரயில்ப் பயணங்களும், ரயில்ப் பயணிகளும் எப்போதுமே சுவாரசியமான பல வாழ்க்கை அனுபவதைத் கொடுபார்கள்   என்பது தெரியும். ஆனால்  மேலை நாடுகளில் ரெயில் பயணங்கள் எப்போதுமே திட்டமிட்ட நேர அவதிக்குள் அல்லாடுவதால் பல விசியன்களைப் போகிறபோக்கில் கவனிக்க முடிவதில்லை. பலவருடமாக  காலையும்  மாலையும்  ஒரு ரெயில் பயணியாக நகரத்தை ஊடறுத்துப் பிரயானிப்பதால்  அதை  உணரமுடிகிறது. 

                                               எவளவுதான் இயல்பாக ஒரு பயணத்தில் நமக்கு  அறிமுகமில்லாத  பல  மனிதர்களின் பல சம்பாஷனை உரையாடல்கள் தண்டவாள சத்தங்களுகுச்   சமாந்தரமாய்க்  காதுகளைக் கடந்தாலும் ,ஏறுவதில்   அவசரமும்  ஏறி  இறங்குவதில் இடங்களைத் தவறவிட்டு விடுவோமோ என்ற  எச்சரிக்கையிலும்  சில நல்ல தருணங்கள் தரும் பல படிப்பினைகளையும்  கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி போன்ற ஒரு நிலமையையை உண்டாக்கி விடும். 

                                                          லிண்டருத்  மெட்ரோ  ஸ்டேசனில் நான்  ட்ரைன்  ஏற  நின்றபோது  அவளும் நின்றாள் . வெள்ளைப் பிரம்பைத் தட்டித் தட்டிப் கைப்பிடிக்கும் சட்டங்களைப் பிடித்துப்  பிடித்து  ஒவ்வொரு அடியையும் மேல்நோக்கி கவனமாக வைத்து  படியேறி வரும்போதே அவளைக் கவனித்துவிட்டேன் . பார்வையர்வர்களின் உலகம் எப்படி இருக்குமென்று அறியும் ஆவலில்  அவள் இருக்கைக்கு  முன்னே போய் இருந்து  ,அல்லது அருகில் கவனிப்புக்கள் இடஞ்சலில்லாத ஒரு அருகிலிருந்து  கவனிப்பதுதான் என்னோட பிளான் ஆக அப்போது இருந்தது.

                                                       முக்கியமாகப்  பார்வையற்றவளின் உலகம்  என்று  ஒரு  கவிதை எழுதும் அற்ப  ஐடியாதான்  முதலில் வந்தது. கவிதைமொழியும் நேரடி விவரணை வார்க்கும்  வர்ணனைகளும் கைகோர்க்கும் போது கவிதை  அடுத்த தளத்துக்குப் போகுமென்று புகழ்பெற்ற  கவிஞ்சர்கள்  சொல்கிறார்கள்.   ஏனென்றால் கவிதை  எழுதுவதுக்கு  இந்த  நேர்வே நாட்டில்  சம்பவங்களோ, காட்சிகளோ அதிகம் இல்லை. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது மாதிரி தோண்டித் துருவி  எடுத்து  ஏற்கனவே  நிறைய எழுதி எழுதி எனக்கே அலுத்துப் போய்விட்டது. 

                               ஆனால் இதில  நிட்சயம்  ஒரு  கவிதைக்குக்  கரு கிடைக்குமென்றுதான்  என்னோட  மனது சொன்னது. பார்வையற்ற ஒரு பெண்ணின் புலன் இழப்பைச் சாதகமாகப் பயன்படுத்துவது மனிதாபிமான  இடறலாக இருந்தாலும்  முக்கியமாக  மனசாட்சிக்கு  விரோதமிலாமல் பார்க்க நினைத்தேன் .  அதனால்  அவள்  ஏறிய  பெட்டியில் அவளுக்குப்  பின்னால் ஏறினேன். ஆனால் அதன் பின் நடந்த சம்பவங்கள் அந்த உரையாடல் எதிர்பார்க்காத திசைகளில் ஒரு கதையாக  நகர்த்தும்படி  நிகழ்ந்தேவிட்டது .

                                         ஜன்னலுக்கு சற்று விலகி இருந்த தனி இருக்கையில் தடவித்தடவி இருந்தாள். வெள்ளைப் பிரம்பை ரெண்டாக மடித்துப் பின் நாலாக மடித்துப் பின் எட்டாக மடித்தபோது அது கையடக்கமான ஒரு குச்சி போல வந்துவிட்டது. அதை அருகில் கால்களில் உரசும்படி வைத்தாள் . தோளில் கொழுவி இருந்த பையைப் கழட்டவில்லை. முக்கியமாக அவள் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கண்களை மறைக்கவில்லை . உடம்பை இயல்பாக்கி அதைவிட இயல்பாக இருக்கையில் சாய்ந்துகொண்டாள் 

                                            நான் அவளுக்கு  முன்னுக்கு இருந்த வெற்று இருக்கையைத்  தேர்வு செய்து  மிக மிக அமைதியாகப் போய் இருந்தேன். அவள் தலையைக் குனிந்து ரெண்டு கண்களின் இமைகளையும் வேகமாக அடித்து அடித்து என்னவோ மனதுக்குள் தேடுவது போல இருந்த நேரம் தான் அவள் கண்களைப் பார்த்தேன். மஞ்சள் பழுப்புக் கலரில் ரத்தநாளங்கள் கோடுகீறி  விழித்திரையில் பாசிபிடித்து வெளிக் கருவளையங்களில்  இருண்டு  இருந்தது 

                                                   அந்த ரெயில் பெட்டியில் அதிகம் பயணிகள் இருக்கவில்லை.  இருந்த சில இளைவர்கள் கையடக்கித் தொலைபேசியில் முகத்தை வலைபோட்டு  ஓடவிட்டுக் கொண்டிருந்தார்கள் . ஒரு வயதான கிழவி பத்திரிகையில் அதிஸ்டலாபச் சீட்டு வெற்றி விபரத்தை வாசித்கொண்டிருந்தா, நடுத்தர வயதான ஒரு நேரமில்லா  வெறிக்குட்டி தொலைபேசியில் அவனோட காதலியோடு  உரத்துக் கத்திச்   சண்டை பிடித்துக்கொண்டிருந்தான். இரண்டு நடுத்தரப் பெண்மணிகள் விண்டர் குளிரில் இருந்து தப்ப இந்தமுறை   சூடேற்ற  எங்கே போகலாம்  என்று விடுமுறை சந்தோசங்களில் கதைத்துக்கொண்டிருந்தார்கள்

                                            இப்போது நான்  அவளை  கொஞ்சம்  பார்த்துவிட்டேன் .அந்த நேரம்   என் நோக்கம்  அவளின்  புற அழகைப் பார்ப்பது அல்ல. கனவில வந்த பணம் செலவுக்கு  உதவாது என்றது போல அழகான பெண்கள் எப்பவுமே என் வாழ்கையில் எம்பிக் குதிச்சு வந்து வீழ்ந்ததேயில்லை .அது   எனக்கு நல்லாவே தெரியும் .  ஆனால்  நான்  நினைத்ததுக்கு மாறாக அவளிடம் ஒரு  நளினம் அவள் தோற்றத்தில் இருந்தது.   அதனால்  அவளைப்பற்றி சொல்கிறேன்.  ஏனென்றால் அந்த நளினம்தான் உரையாடலின் முடிவில் இன்னொரு திசைக்கு  இருவரையும் விரும்பியே தள்ளி இருக்கலாம் என்று நினைக்கிறேன் . 

                                          நேரமொதுக்கி முகத்துக்கு  பவுண்டேசன்  மேக்கப் போட்ட  எந்த அடையாளமும் இருக்கவில்லை. மிக இயல்பான முகம் ,அது அகல் வட்டத்தில்  பெய்த பகல் மழை போல இன்னும் இயல்பாக அக்கம் பக்கம் பார்த்துப்பார்த்துப் பேசக்  கண்களைத்திறந்து மூட ஒருவிதமான சங்கடத்தில் இருப்பது போல இருந்த இமை மயிர்களுக்குத்  தென்னம் ஓலைபோல    கொஞ்சம் மஸ்கார தடவி இருந்தது  ஓரளவுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது .

                                                        மெல்லிய உடட்பயிட்சி  செய்யும் உ ருவம், என்னைவிடக்   குறைந்தது  நாலு  செண்டிமீட்டர்  உயரம், ஒடுங்கிய அவரைக்காய்  முகம், ஸ்கண்டிநேவியப்   பொன்னிற முடிகள். நடு வகிடு பிரிச்சு பிரில் ஸ்டைலில்  பறக்க விட்டிருந்தாள். கண்களைத் திண்டுவிடும் பூசணிக் கன்னம் , நீண்ட கல்லாடம் போன்ற கழுத்து. அளவான மாதுளை மார்பு, நீண்ட ஹென்னேஷ் அண்ட் மாரிஸ்  ஓட்டுமன் கலக்சன் வூல்  கவுன் போட்டிருந்தாள் , அதே கலரில் முழங்க கால்களைப்  பாதம்வரை மறைக்கும் ச்டோக்கிங்க்ஸ்  போட்டிருந்தாள் .நல்லகுருநாதன்  நாக்கில் வந்து  உக்காருவதால்   உள்ளதை உள்ளபடி சொல்லுறேன் அவள்மிக அழகாக இருந்தாள். 

                                                  எனக்கு  இருந்த மிக முக்கிய பிரசினை அவளோடு எப்படிக் கதையைத் தொடக்குவது. ஏனென்றால் என்னால் இலகுவாக வெட்கமின்றி யாரோடும் கதைக்க  முடியாது. அப்பிடி இல்லை  என்று வில்லங்கமாகத் தொடக்கினால்  கல்லடிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடுபொடி போல  அது  வேற வேற எங்கேயோ எல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்  இழுத்துக்கொண்டு போய், முடிவில் நடுமண்டையில் நாரத்தங்காய் தேச்சுப் பித்தம் இறக்கவேண்டிய ஒரு நிலைமைக்குள் கொண்டுவந்து விடும் . அதால சத்தமில்லாமல் இருந்தேன் .

                                            அவள் கைப்பையில் இருந்து ஒரு கட்டு பேப்பர்கள் எடுத்தாள், மடியில் வைத்தாள்  கட கட என்று பத்து விரல்களையும் அதன் பேப்பரில் தடவித் தடவி வாசித்துக்கொண்டு போனாள். அந்தப் பேப்பர்கள் மொத்தமாக இருந்தது. அதில் புள்ளிகள் ஆழமாகக் குத்திய அடையாளங்களை இங்கிருந்தே என்னால் பார்க்க முடிந்தது . ஒவ்வொரு வசனம் முடியும் போதும் ஒவ்வொரு உணர்ச்சி முகத்தில் காட்டினாள். பிரகாசமான  அவள்  வயது சுமாராக  இருவத்தி இரண்டு போல இருக்கலாம் போலிருந்தது. பெண்கள் உணர்ச்சி காட்டும்போது அவர்கள்  வயதை ஓரளவு யூகிக்கலாம் என்று எனக்குத் தெரியும் .

                                       சில நேரம் தலையைச்  சரித்து ஜோசிதாள். சுண்டுவிரலைத் பேப்பர் நுனியில்   தட்டினாள். வாய்க்கும் தெரியாதபடி மெல்லெனச் சிரித்தாள். பக்கங்களைப்  பெருவிரலால் ஒற்றி எடுக்கும் லாவகத்தில் அவள் ஒரு தேர்ந்த படிப்பாளி என்பது நிறுவப்பட்டுக் கொண்டிந்தது. ஒரு பக்கம் முடிந்து அடுத்த பக்கம் புரட்டும்  இடைவெளியில் முகத்தை இறுக்கி வைத்தாள். மற்றப் பக்கம் புரட்டிய முதல்  வசனத்தோடு  அவள் மூக்கு ராகம ஜம்புக்காய் போல சிவத்து விட்டது . ஒரு இடத்தில பத்து விரல்களையும் ஓய்வாக்கி அண்ணாந்து மேலே பார்த்தாள். அவள் கழுத்து வியர்த்திருந்தது.

                                          அவள்  என்ன  கதை படிக்கிறாள் என்று சத்தியமாய்  எனக்கு  விளங்கவில்லை.   ஒருவேளை அவள் மேற்படிப்பு யூனிவெர்சிட்டியில்  படித்துக்கொண்டு இருந்தால்  அவள்  படிப்பது அவள்  ஆராச்சி சார்ந்த பட்டப்படிப்பு  புத்தகமாக இருக்கலாம். அல்லது அவள் வேற என்னவாகவாவது இருந்தால் அதுவும் வேற   என்னவாகவும் இருக்கலாம். ஆனால் எழுத்தும்   வாசிப்பு உணர்வும் சேர்ந்து அவளுக்கென்று ஒரு பிரத்தியேகமான உலகத்தை அந்தக் கணங்கள் வடிவமைத்துக் கொண்டிருந்தது  மட்டும்  என்னவோ உண்மைதான். 

                                         படக்குப் படக்கு என்று பதின்மூன்று  பக்கங்களை வாசிதுப்போட்டு அமைதியாக இருந்தாள். அது எப்படி சரியாகப்  பதின்மூன்று பக்கங்கள் என்று சொல்லுறேனா,,ஹ்ம்ம்,,நான்தான் எண்ணிக்கொண்டு இருந்தேனே. இந்த அமைதியில் கதையைத் தொடக்க நினைத்தேன். முதல் பிரசினை அவள் என்ன மொழி கதைப்பாள் என்று தெரியவில்லை. பார்க்க நோர்வேக்காரி போல இருந்தாள். ஆனால் இந்த ரெயிலில் அதிகமாக ஒஸ்லோ  பிளிண்டரன் யூனிவெர்சிட்டி  வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாக பயணம் செய்வார்கள். 

                             ஏனென்றால் நான் இறங்கவேண்டிய ஸ்ட்சனுக்கு மற்றப் பக்கம் தான் யூனிவெர்சிட்டி ஸ்டுடண்ட்ஸ் தங்கிப்படிக்கும்  பதினைந்து  வானுயர தொடர்மாடிகள் இருக்கு . அதனால் அவள் ஒரு வெளிநாட்டு மாணவியாக இருக்கலாம். அல்லது நோர்வேநாட்டுக்காரியாக இருக்கலாம் . அதனால் கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம் என்று  நினைச்சு நோர்ஸ்கில் ,நோர்வே மக்கள் முன்னம் பின்னம் தெரியாதவர்களுடன்  எப்பவும் உரையாடல் தொடக்கும் தந்திரமான காலநியையைக் கையில பிடிச்சு 

                   " இன்றைக்கு வெயிலும் அதிகம் இல்லை   குளிர் நல்ல மிதமாக இருக்கு, நாளைக்கு  மழை  பெய்யுமாம்  என்று  சொல்கிறார்கள். உனக்கு  நோர்வேயின் இலையுதிர்காலம்  விருப்பமா  "

                                            என்று  நோர்ஸ்கில்  கேட்டேன் , அவள் சடார் என்று என்னை முகத்துக்கு முகம் பார்க்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பி வலது  காதை எனக்குக்  காட்டி,சக்கரைப்பொங்கலில்   வெல்லக்கட்டி கசிந்து பிசுபிசுத்த மாதிரி    அன்பாகச் சிரித்து ,

                                " யா,  அது  உண்மை,,உண்மையே  தான்,,எனக்கு  இந்த  இலையுதிர்காலக்  குளிர் கன்னத்தில் தடவுவது மிக மிக விருப்பம்,  அப்புறம் நீ வெய்யில்  என்று  சொன்னாய்,,,சொறி  என்னால்  அதைப்  பார்க்க முடியவில்லை..எப்படி  இருந்தது "

                                 " ஒ  சொறி.. நான்  என் பார்வையில் இருந்து  அப்படி  சொல்லிப்போட்டேன் "

                                    " அட,,சொறி  எதுக்கு, இதில  என்ன  இருக்கு ,,நீயும்  பிளிண்டரன் யூனிவெர்சிட்டி கிறிஸ்டானியா  அக்கடமியில்   படிக்கிறாயா , நீ  நல்லா  நோர்க்ஸ் கதைக்கிறாய் ,,நீ  நோர்க்ஸ்கா "

                                " நான்  படிக்கவில்லை,,வேலை  செய்கிறேன் "

                             "  அப்படியா,,,அது  மிகவும்  நல்லது , "

                             " எப்படியோ  உன்னைப் முதன்முதலில்  பார்த்த போது  நான்  நினைத்தது  சரியாகத்தான் இருக்கு, இல்லை  நான் நோர்க்ஸ் இல்லை,,வெளிநாட்டு வந்தேறுகுடி  "

                              "  அப்படியா  நீ  என்ன  நினைத்தாய் ,கனகாலம் நோர்வேயில் வசிக்கிறாய் போலிருக்கே "

                       " நீ ஒரு   யூனிவெர்சிட்டி மாணவியாக  இருக்காலம்  என்று  நினைத்தேன் , யா,,பல வருடம்  வாழ்கிறேன் "

                                 என்று சொன்னேன். அவள் அழகாக நோர்க்ஸ்கில் கதைத்தாள். நோர்வேக்காரிதான்  அந்த  சந்தேகம் அதோடு தெளிவாக 

                          "  என்னோட பெயர் ............."

                           என்று  சொல்லிக்  கையைக்  குலுக்குவதுக்காக  நீட்டினேன் ,அவளும்  கையை நீட்டினாள் 

                       " என்னோட  பெயர்  ஏஞ்சலினா ஹால்ஸ்றோம் ,ஹால்ஸ்றோம் அப்பா  பெயர் , அம்மா  எவான்யளிஸ்ட்  மரியா  ஹால்ஸ்றோம்,  ஆனால்  எனக்கு  உன் கை  எங்கே  இருக்கு  என்று  தெரியவில்லை  அதனால் நீயே  அதைப்  பிடித்துக் குலுக்கிவிடு" 

                              எதற்க்கு அளவுக்கு அதிகமான  குடும்ப விபரம் இருத்தி  வைச்சு  அடிச்சுப்பிடிச்சுச்   சொல்கிறாள் என்று எனக்கு ஆரம்பமே குழப்பமாக இருந்தது. தனிமையில் வாழும் கதைக்க அதிகம்பேர் இல்லாத, நிறையவே   சொல்லிவிட விரும்பும் நோர்வே நாட்டு   மனிதர்கள் இப்படித்தான் கதைப்பார்கள் என்பதை பலமுறை அவதானித்து இருக்கிறேன். இப்படி சம்பவங்கள்தான் ஏதுமில்லா வெற்றிடத்தை நிரப்பும் என்ற அற்ப ஆசை அவர்களிடம் இருக்கு   

                        "  ஓ  சொறி....பார்த்தியா ஏஞ்சலினா,, அதிலும்  நானே  பிழை விட்டுவிட்டேன் "

                        " என்ன  பிழை "

                        " இல்லை  நான்  வழமைபோல  உன்னையும்  எல்லார் போலவும்  நினைத்து  கையைக் குலுக்க நீட்டி விட்டேன்  பார்த்தியா "

                               "  அப்படி  அது  பழக்கம்...அதில  பிழை  இல்லை..மற்றது  ஒன்று சொல்கிறேன்  நானும்  எல்லார் போலவும்தான் "

                             "   அப்படியா,,எப்படி  இவளவு  துணிவா தெளிவா  உன்னால் சொல்லமுடிகிறது  ஏஞ்சலினா"

                       "  இதில  என்ன  கஷ்டம்..நான்  உணர்வதைச்  சொல்கிறேன் "

                           "  சரி,,,அதுவே  பெரிய விசியம்   " 

                            "  உன்  பெயர்  எனக்கு  விளங்கவில்லை..உன்  குரல் அதைத்தான் நான்  பதிவுசெய்து வைத்துள்ளேன்  " 

                        "   அட..அது  போதுமே  "

                           "  மிகவும்  நன்றி..எனக்கு  குரல்கள்தான்  மனிதர்களின்  அடையாளம் "

                            "   நீ போட்டு இருக்கும் இந்த ஹென்னஸ் அண்ட் மாரிஸ் கவுன்  உனக்கு  மிக  மிக  அழகா  இருக்கு "

                              " அட,,,அப்படியா..ஓ  நன்றி..நன்றி..ஆனால் எனக்குதான் நான் போடும்  உடைகளைக்  கண்ணாடியில்  பார்க்க முடியாதே  "

                                 "  அய்யோ..பேந்தும் பார்  சொறி ,,ஏஞ்சலினா "

                               " இல்லை  சொறி சொல்லாதே,  எனக்கு  எவளவு  ஆசையாக  இருக்கு தெரியுமா,,நீ  அழகா  இருக்கு என்று  சொல்லும்போது "

                               "  உண்மையில்  நீ  ஏஞ்சலினா,,ஏஞ்சல்  ,,தேவதை போலதான்  இருகிறாய் "

                            " இதுகொஞ்சம்  ஓவர்,,ஐஸ்  வைக்காதே,,சரி  இந்தக்  கவுன்  ஹென்னஸ் அண்ட் மாரிஸ்  என்று  எப்படி  தெரியும் ,,அதை  சொல்லு "

                             "  கழுத்துக்  கொலர் விழிம்புக்கு  உள்ள  சுவுடிஷ்  H M
 என்று  எழுதி அவர்களின் விற்பனை அடையாளமான உலகப்புகழ் பெற்ற H M  இருக்கே "

                           "  அய்யோ,  நீ  மைக்கிராஸ்கோப் லெவலில்  ஆராச்சி  செய்யுறாயே ,, இந்த  கவுன் என்  சுவுடிஷ் பிரென்ட்  பிறந்தநாள் பரிசாக  வேண்டித்தந்தது "

                        "  சரி,,நீ இப்போது  சில  பேப்பர்கள் வாசித்தாயே  அதில  என்ன  எழுதி இருந்தது "

                          "   உனக்கு  எப்படித்  தெரியும்  ,,நீ எனக்கு முன்னே நான் ஸ்ட்சனில்  ஏறி அமர்ந்த நேரத்தில் இருந்து எனக்கு முன்னுக்கு  இருக்கிறாயா "

                           " யா..அப்படிதான்,,நீ பதின்மூன்று பக்கங்கள் வாசித்தாய் "

                            "  அட அட  அவளவு விபரமாய்க் கவனிச்சியா "

                          "  யா,,நீ வாசித்து முடித்து மேலே அண்ணாந்து பார்த்தாய் ,,அப்போது உன் கழுத்து வியர்த்து இருந்தது "

                             "  அடப்பாவி,,அதையும்  பார்த்தியா "

                           "   யா..எல்லாம்  பார்த்தேன் ஏஞ்சலினா"

                        "எதுக்கு  இவளவு  விபரமாய் நோண்டிப்  பார்க்கிறாய் "

                      "  உன்னை  லின்டரூட் ஸ்ட்சனில்  கண்டபோது  உன்னைக்  கவனித்து  ஒரு  கவிதை  எழுத  நினைச்சேன் "

                    "  அட,,உண்மையாவா,,எவளவு  சந்தோஷமாய்  இருக்கு "

                           "  இப்ப  கதை  மாறிட்டுது "

                      "  என்ன  கதை..எது  மாறியது,ஒன்றும் புரியவில்லை எனக்கு "

                 " ஆரம்பத்தில் உன்னை வைச்சுக்  கவிதை  எழுதநினைத்தேன் " 

                     " அப்படியா  ,,நீ  பெரிய  கவிஞ்சனா,,நீ  வேலை  செய்வதா  சொன்னாய்  முழுநேர எழுத்தாளனா  நீ..அதுவா  உன்  வேலை "

                          "    ஹஹஹஹா ..இல்லை  ஏஞ்சலினா,,நான்  சமையல்காரனாக  வேலை  செய்கிறேன் "

                        "   அப்படியா,,நான்   சைகோலோயியில் கவுன்சிலிங்  திரபி ஸ்பெசலிஸ்ட் ஆக  வருவதுக்குப்  படித்துக்கொண்டு இருக்கிறேன் "

                           "  வாவ்,,,அது  நல்ல படிப்பு  என்று  கேள்விப்பட்டு இருக்கிறேன் ஏஞ்சலினா"

                           "  சரி,,விசியத்துக்கு  வா ,,என்ன  கவிதை  என்றாய்,,என்ன  கவிதை  எழுதுவாய்,,சொல்லு ,,முதல்  என்னை  வைச்சு  என்ன  எழுத  நினைத்தாய் ,,சொல்லுப்பா "

                            "   ஹஹஹா,,அய்யோ,,அந்தக்  கேவலத்தை  ஏன் கேட்கிறாய், கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரியாகி  பிறகு  கப்பல் உடைந்ததால்  பிச்சைக்காரியாகி பிறகு   கழனி பானையில் கைவிட்டமாதிரி கவிதை  எழுதுவேன் "

                         "  என்னப்பா  சொல்லுறாய்,,ஒன்றுமே  புரியவில்லை "

                          " சரி  என் அலங்கோலத்தை விடு ஏஞ்சலினா,நீ  கவிதை  வாசித்து  இருக்கிறாயா "

                        "     யா,,என்னிடம்  ஒரு  குற்றெழுத்து கைப்பிரதியே  சொந்தமாக்  இருக்கு,,அது  ஒன்றுதான்  விரும்பி விரும்பிப்  படிப்பேன்,,அடிக்கடி "

                                   "    அப்படியா  அது  யார்  எழுதியது  ஏஞ்சலினா"

                           "  லேர்ன் போல்தர்,  தெரியுமா,,பிரெஞ்சில்  எழுதியது,,,அவரோட  கவிதைத்தொகுப்புத் தான்  அது, அவரை  நீயும்  படித்து  இருக்கிறாயா "

                                 "  யா,,அவரோட  ஒரு  கவிதைத்தொகுப்பு தமிழ் மொழியில் மொழிபெயர்த்தது  படித்து இருக்கிறேன் ஏஞ்சலினா, அதுவும்  என்  டீன்ஏஜ்  வயசில் "

                              "  அதென்ன  தமிழ்மொழி,  சொல்லு,,டீன்ஏஜ்  வயசில்  வாசிக்கப்படத்தான்  கவிதைகளே  எழுதப்படுகின்றன,,அது  தெரியாதா  உனக்கு "

                             "   தமிழ்மொழி  என்  தாய்மொழி  ஏஞ்சலினா, வயதான  காலத்தில்  கவிதை  வாசிக்கக்கூடாதா "

                          "  வாசிக்கலாம்  அப்போது  அது  இன்னொரு  பரிமாணத்தில்  எல்லைகளை  நீட்டிவைத்து  வரைவிலக்கணம்  இல்லாத  வெறுமையில்  இன்னொரு  அர்த்தம் கொடுக்கும் "

                            "    யப்பா  சாமியோ..இதெல்லாம்  உனக்கு  எப்படித்  தெரியும் ,,போட்டுக்  கொல்லுறியே  தாயி "

                             "  ஹ்ம்ம்,,சைகோலோயி படிப்பதாலும்  ,,லேர்ன் போல்தர் படிப்பதாலும்  ,,ரெண்டையும்  இணைச்சுப் பார்ப்பேன்,,சிம்பிள்,,அவளவுந்தான்  I love sublime poems..."

                             "  ஹ்ம்ம்,,,,ஆனால்  உன்னால்  பார்க்க முடியாத  ஒரு உலக நடப்பை விவரிக்கும்  கவிதையை  எப்படி  உனக்குப்  பார்வையற்ற  அனுபவதில் இருந்து  முழுமையாக  உணரமுடியும்,,சொறி  இப்படிக்  கேட்பதுக்கு "

                        " முதலில்  சொறி..சொறி  என்று  பினாத்தாதே , ஒரு  நல்ல  கவிதை  உன் ஆழ்மனதோடு  உரசி உறவாடும்  அதுக்கு  விசுவல் பிக்ஸர்ரைசேசன் அவசியமில்லை "

                               " அட,,எனக்கு  உன் மீது  நிறைய  மதிப்பு  வருகுது   ஏஞ்சலினா,,நீ  எவளவு  படித்து  இருகிறாய் ,,நான்  எல்லாம் ஒரு வீணாப்போன உதவாக்கரை "

                         "  அப்படிச் சொல்லாதே,  I love sublime poems  ,லேர்ன் போல்தர்  அவரோட   சப்லைம் பொயடிக் ஸ்டைல் பற்றி அருமையாக  சொல்லி  இருக்கிறார்,,அதுவும்  ஆங்கிலத்தில்  தான்  இப்ப நினைவு  இருக்கு "

                                "  என்ன  சொல்லி  இருக்கிறார்  ஏஞ்சலினா,,சொல்லுப்பா,,உன்னை  வைச்சு  நாலு வரி சலாப்பி  கவிதை  எழுதி  உடான்ஸ் விட நெனச்சேன்,,,இப்ப  உன்னிடமே  வந்து  வசமா  மாட்டிக்கொண்டு  நிக்குறேன் "

                          " ஹஹஹஹா,,அப்பிடி  எல்லாம்,,இல்லை,,முதலில்  உன் தன்னம்பிக்கையை  நம்பு "

                                     "  சரி ,,லேர்ன் போல்தர்  அவரோட   சப்லைம் பொயடிக் ஸ்டைல் பற்றி என்ன  சொன்னார் ஏஞ்சலினா "

                             "  அவர்  சொன்னார்  whether you believe in absolutely anything I think it's a great quality to find something beyond self to keep that going, whatever you need , you find it & you do it for that reason. you never quit, you push yourself , fuss & cry , but you pull through . Because you believe in life , a purpose & a reason for your being. "

" அட,,எண்ட வீராளி அம்மாளாச்சி என்னை சிங்க வாகனத்தில வந்து இந்த காப்பியநாயகியிடம் இருந்து காப்பாற்றுமா "

" என்ன சொல்லி பிசதுறாய் You become a poet for the vary fact that you must know the full spectrum of possible problems that a poem can face. Not using the knowledge is not an accurate description of why you would learn that knowledge. "

" அட,, வீராளி அம்மாளாச்சி உன் பக்தன் மிகப்பெரிய சிக்கலில் வாயக்கொடுத்து மாட்டி நிக்கிறான் ஓடி வந்து காப்பாற்று அம்மா தாயே "

" இதையும் அவர் சொல்லி இருக்கிறார்,,கேள் , You DO use it in the sense that you must determine that this piece of knowledge is not a contributing factor to a problem இந்த அவரோட வரிகளில் நானும் எங்கேயோ அழுத்தமாக இருக்கிறேன் ,,நிட்சயமாக இருக்கிறேன் "

" பிறகு என்ன ஆச்சு ,,கவிதைக்கு மொழி முக்கியமா ஏஞ்சலினா "


" அதுக்கும் லேர்ன் போலதர் If languaqge were only taught the 10-20% of knowledge that they use think of the numerous situations that poem would not be treated for. It is kind of too bad that they have to learn the extra knowledge, because more words would have an easier time becoming poems ."

" அய்யோ சாமி நான் இனிக் கவிதையே எழுதமாட்டேன் ,,ஏஞ்சலினா "

" ஏன் அப்படி சொல்லுறாய்..நீ இன்னொருவர் போல இல்லை,,,இன்னொருவர் உன்னைப்போல இல்லை "

" அதெண்டா உண்மைதான்,,நான் உன்னைப்போல உன் அறிவு வீச்சுப் போல இல்லவே இல்லை "

" சும்மா பதறாதே,, லேர்ன் போல்தர் உன்னைப்போல பிரகிரதிகளுக்கும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறார் "

" என்ன சொல்லி இருக்கிறார், ஏஞ்சலினா,,அதை சொல்லு தாயி ,,நான் ஏற்கனவே அம்மாவசை இரவில இருட்டு அடி வேண்டினவன் மாதிரி நிக்குறேன் "

" அவர் சொன்னார் , you are supposed to tell the entire world the plan of action for a moments . That's why poets go through all the trouble.!!!. இப்படி சொல்லி இருக்கிறார் பா "

" ஹ்ம்ம் "

" இப்ப நான் சொறி சொல்லுறேன்,,ஏன் மவுனமாக இருகிறாய் "

" ஒன்றுமில்லை,,எனக்கு மூச்சு முட்டுது,,இந்த வரிகளை எப்படி நீ இவளவு கிளியர் ஆக நினைவு வைச்சு இருகிறாய் "

" ஹஹஹா என்னோட மூளையில் நிறைய இடம் இன்னும் கிளியராதான் இருக்கு,,உன்னைப்போல அநாவசியமான பிம்பங்கள் இல்லை I love that."

" அப்படியா, "

" யா,,அப்படிதான் ,,அதனால் எனக்கு இலகுவாக இருக்கு,,கவனக்குறைவாகவும் என்னிடம் கவனச்சிதறடிப்புக்கள் இல்லவே இல்லை,, Sometimes I think mentally ill break , but if I look for something beyond myself it just calms me or something "

" சொறி ஏஞ்சலினா "

" ஏனென்றால் எனக்கு அந்த வழிகள் திறக்கப்படப் போவதில்லை "

" ஹ்ம்ம்..சொறி .சொறி, "

" உனக்கு இரவு இருட்டு,,பகல் வெளிச்சம்,,எனக்கு எல்லாமே இருட்டுதான்,,ஆனால் ஒருநாளின் ஒவ்வொரு நிமிடமும் எனக்குச் சத்தம் .But I love that."

" வாவ்,,,, என்ன ஒரு விளக்கம் "

" யா,,இந்த உலகமே எனக்குச் சத்தங்களும் வாசனைகளும் மட்டுமே,,சிலநேரம் தொடுகை உணர்ச்சி..மற்றப்படி ஒன்றுமில்லை,,ஆனால் நான் சந்தோசமாக இருக்கிறேன் I love that."

" நீ சந்தோசமாய் இருகிறாய் என்பது தெரிகிறது ஏஞ்சலினா, சரி நீ எங்கே வசிக்கிறாய் "

" நான் ...............இல வசிக்கிறேன்,,நீ எங்கே வசிக்கிறாய் "

" நானும்............. ...இலதான் வசிக்கிறேன்,, "

ட்ரைன் இப்போது அவளும் நானும் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு முதல் ஸ்டேசனில் நின்றது ,அவள் சுதாகரித்து வெள்ளைப்பிரம்பை நீட்டினாள்.தொழில் கொழுவி இருந்த பையை அனைத்துக்கொண்டாள், ஏதாவது தவற விட்டாளா என்று இருக்கையை எச்சரிக்கையாகத் தடவிப்பார்த்து உறுதிப்படுத்தினாள். நான் உதவிசெய்ய நினைத்தேன். அவள் தானாகவே இறங்கினாள்

பிறகு நான் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி அந்த ஸ்டேசனுக்கு வெளியே போட்டிருந்த மரவாங்கில் இருந்தாள் . நான் ஒன்றுமே கதைக்காமல் கொஞ்சநேரம் அவளைப் பார்த்து ஜோசிதுக்கொண்டிருந்தேன் . குளிர் கொஞ்சம் கொஞ்சமாக முதுகில் குத்தத் தொடங்கியது. மழை வரும்போல காற்று நிறைய மர இலைகளின் வாசனைகளை இடையில் செருகிக்கொண்டிருந்தது

இந்த உலகத்தில் இவள் எப்படி வாழ்கிறாள், அழகாக இருக்கிறாள் , அறிவாக இருக்கிறாள், நம்பிக்கையோடு இருக்கிறாள்,இதைவிட வேற என்ன வேண்டும் வாழ்கையில், என் குறுக்கால போல கோணங்கிப் புத்தியில் இவளைக் கலியாணம் கட்டினால் எப்படி இருக்கும் என்று நினைக்கும்போது அவளே கதைக்கத் தொடங்கினாள்

" என்ன ஜோசித்துக்கொண்டு இருக்கிறாய்,,சொல்லு,,"

" ஒன்றும்மில்லை ,ஏஞ்சலினா ,"

" இல்லை, இந்த உலகத்தில் இவள் எப்படி வாழ்கிறாள், அழகாக இருக்கிறாள் , அறிவாக இருக்கிறாள், நம்பிக்கையோடு இருக்கிறாள்,இதைவிட வேற என்ன வேண்டும் வாழ்கையில், என் குறுக்கால போல கோணங்கிப் புத்தியில் இவளைக் கலியாணம் கட்டினால் எப்படி இருக்கும் என்றுதானே ஜோசிக்குறாய் "

" ஹஹஹா, ஏஞ்சலினா ,ஹ்ம்ம்,,என்னத்தை சொல்ல,,,ஹ்ம்ம்,,உண்மைதான் ஏஞ்சலினா அப்படிதான் நினைத்தேன் "

" இப்பிடி உன் மனசாட்சிக்கு உண்மையாக இருக்கு "

" சரி,,நான் நினைத்து அப்பிடியே உனக்கு எப்படி தெரியும் "

" எண்ணம்கள் தான்,,அது ஒரு அலை, உன் எண்ணம் அலைகளில் ஏறிவந்து என்னை உணரவைக்குது "

" ஹ்ம்ம்,, இந்த ஸ்டேசனுக்கு கீழே நீ கடக்கும் பாதையில் ஒரு பாதை இருக்கே அதில எப்பவும் வாகனங்கள் தாறுமாறாய் வருமே எப்படி பயமில்லாமல் கடக்கிறாய் "

" வாகனங்களின் எஞ்சின் உறுமல் சத்தத்தை வைத்து அவை எவளவு தூரத்தில் வருகுது என்று கணிப்பேன் , என் காலடிகள் எனக்கு என் பாதையின் வழியில் தப்படிகள் தவறாமல் இடம் காட்டும் "

" ஹ்ம்ம்,என்னைக் கண்டால் ,என்னோடு இன்னொருமுறை கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தால் கதைப்பியா "

" ஹஹஹா,,பிறகும் உன் பழக்கம் குறுக்கிடுகிறது, உன்னை நான் எப்படிக் காண முடியும் சொல்லு "

" அய்யோ சொறி சொறி ,,நான் உன்னைக் கண்டால் கதைக்கிறேன் "

" சரி கதை பிரசினை இல்லை,,என் டெலிபோன் நம்பர் தாரேன் அதில கதை ,

" அதுவும் நல்ல ஐடியாதான் ஏஞ்சலினா "

" நீ சிகரெட் பத்துவியா "

" ஓம் , சிகரெட் ஊதித்தள்ளுவேன் "

"வர்யினியா பில்டர் டொபாக்கோ பிராண்ட் வகையா பத்துவாய் ,,மால்பிரோ ,பரமுன் இந்தவகையா,,சின்ன வயசில் அப்பா அதுதான் பத்துவார் "

" அட, சத்தியமாய் ஆமாப்பா அதுவேதான் ,, "

" எப்பவும் நேர்வேஸ் ஆக இருப்பியா , அலைபாயும் சிந்தனையில் அவதிப்படுவாயா "

" அதெப்படித் தெரியும் "

" இந்த மரவாங்கில் விரல்களால் தட்டிக்கொண்டு இருக்கிறாயே , உன்னிடம் ஒருவித பாதுகாப்புத்தன்மையற்ற பயமிருக்கு "

" ஹஹஹா,,உண்மைதான் "

" அடிக்கடி ட்ரெயினில் பிரயாணம் செய்வாயா "

" இல்லை,,இப்போது குறைவு , ஏனென்றால் பல நாட்கள் நான் சைக்கில் ஓடியே ஒஸ்லோ சிட்டி போவது "

" அப்படியா,,எனக்கு சைக்கிளில் இருந்து பிரயாணம் செய்ய மிகவும் விருப்பம்,,அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அறிந்ததேயில்லை "

" சரி ஒருநாள் உன்னை என் சைக்கிளில் ஏற்றி ஓடிக்காட்டுறேன் "

" வாவ்,,உண்மையாவா சொல்லுறாய் ,,"


" யா,,,உண்மையாதான் சொல்லுறேன்..நோர்வே முழுவதுமே ஓடிக்காட்டுறேன் "

" ஹஹஹா,,அப்படி எல்லாம் வழியாதே,,சும்மா இந்த ...,,,,,,,,,,,,.. இடத்தையே காட்டு..ஓகே யா "

" ஓகே,,ஏஞ்சலினா "

" உனக்கு ஒரு விசியம் சொல்லவா, அல்லது கேட்கவா,,செய்வியா,, நீ என் கையைப்பிடித்து ஹாய் சொன்னபோது அதை உணர்ந்தேன், "

" அட அது என்ன சொல்லு அப்பிடியே நீ வாசித்த அந்தக் கதை என்ன என்று சொல்லு "

" ஹஹஹா,,அது ஒரு கதை "

" அதுதான் என்ன கதை அது ஏஞ்சலினா ,,எனக்கு கதை கேட்க பயங்கர விருப்பம் ,,ப்ளிஸ் சொல்லு "

" ஒரு பார்வை அற்றவள் ட்ரெயினில் பயணிக்கும்போது மார்பைத் திறந்து அவள் குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள், அவளுக்கு முன்னே ஒருவன் இருந்து அதைப் பார்க்கிறான் . அவன் நோக்கமே வேற ..பிறகு...ஹ்ம்ம்...பிறகு...... "

" அடப் பாவமே பிறகு என்ன நடந்தது ஏஞ்சலினா "

" அடுத்தமுறை சந்திக்கும்போது சொல்லுறேன்,, "


................தொடரும் ......


Thursday 22 September 2016

வயது வந்தவர்களுக்கு மட்டும்.....

சின்ன வயசில் எங்களின் குளத்தடி குழப்படி குருப்பின்,கிரிகெட் விளையாடி முடிய ,புளிய மர இருட்டில் நடக்கும், பிந்திய இரவு சம்பாசனைகளில் கொஞ்சம் அறிவுபூர்வமா எப்போதும் பயந்து பயந்து விவாதிக்கும் விசியம் ," அடல்ட்ஸ் ஒன்லி " என்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் கண்டிப்பாக பார்க்க அனுமதிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள் டவுனில எந்த தியடரில் ஓடுது என்பதும்,அந்தப் படம் ஏன் பார்க்க வேண்டும் என்பது போன்ற மிட் நைட் மசாலா விசியங்கள்.

                                              இனி நான் சொல்லப்போறது அந்தப் படங்களை தியேடரில் பார்ப்பதில் உள்ள சிக்கல்கள , " யங் லேடி  சட்டர்லி லவ்வர்ஸ் " என்ற 18 என்ற இலக்கத்தைச் சுற்றி வட்டம் போட்ட கொஞ்சம் வில்லங்கமான படம் பார்த்து பெற்ற " அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்பெருங் காடு உளரும் அசைவளி போலும் " ஜென்ம சாபல்யம், அதைப் பார்க்க நாங்கள் எடுத்த ரிஸ்க், அதோடு இணைந்த" மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகலஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது" போன்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் சம்பவங்கள்.

                                                   டவுனில இருந்த லிடோ ,வெலிங்கடன், ரீகல்,முக்கியமா இசகு பிசகு   மூத்திர முடுக்கில இருந்த சாந்தி  தியடரில்தான் அந்த மாதிர்ப் படங்கள் அதிகம் போடுவார்கள்,போட்டு அதன் விளம்பரத்தில் 18 என்ற இலக்கத்தைப் போட்டு அதைச் சுற்றி ஒரு வட்டம் போட்டு ,சில நேரம் " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் " எண்டு போட்டு இருப்பார்கள், அது இன்னும் ஆர்வத்தைக் கிளப்பும்,

                                               அந்த இளந்தாரி வயதில, மீசை முளைத்துக்கொண்டும். தோள்ப்பட்டை விரிந்து கொண்டும்,பார்க்கிற சுமாரான பெட்டைகள் வெட்டி வெட்டி அக்சிடென்ட் பட்ட லொறி போல நடக்கும் போதும் அபிநய சுந்தரித் தேவதைகள் போலவும் ,அவர்கள் இளிக்கும் இழிப்பிலும் புன்னகை அரசிகள் போல தெரிந்து கொண்டு இருந்த போதும் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதுக்கும் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் இடையில் உள்ள வரன்முறை எங்களுக்கு அப்போது விளங்கவில்லை,.
                                                         குளத்தடி குழப்படிக் குருப்பின் நண்பர்களில் கொஞ்சம்,வயதுக்கு மீறி விபரம் தெரிந்த பித்துக்குளி தான் அதை கொஞ்சம் விபரமா சொன்னான்,அவன்தான் முதல் முதல் எங்களுக்கு வெள்ளைகாரிகளின் உடுப்பு இல்லாத படம் போட்ட புத்தகம் முதல் முதல் காட்டி எங்க அறிவுக் கண்ணைத் திறந்தவன் எண்ட படியால அவன் சொல்வதை நாங்க எப்பவும் கேட்போம்,அவன் சொன்னது,

                                  " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டுபோடுவது கலியாணம் கட்டிய ஆண்கள் பார்க்கும் படம் "

                                        எண்டு, கலியாணம் கட்டிய ஆண்கள்தான் எல்லாத்தையும் ரியலிடியில் லைவ் அக்சனில் பார்க்கலாமே அப்புறம் எதுக்கு அவர்கள் வெள்ளித்திரையில் ஆ வெண்டு கொட்டாவி விட்டுப் பார்க்கவேண்டும் எண்டு நாங்கள் கேட்டதுக்கு அவன் சொன்ன " படு முடைப் பருந்து பார்த்திருக்கும்நெடு மூதிடைய நீர் இல் ஆறே..." போன்ற சங்க இலக்கியச் செறிவுள்ள தெளிவுரையை இங்கே எழுதவே முடியாது,...

                                                      யாழ்பாணத்தில அந்த நாட்களில் படிக்கும் மாணவர்கள் இப்படி இங்கிலிஸ் படம் பார்ப்பது ஒரு பஞ்சமகா பாவச் செயல் என்பது போலதான் இருந்தது,முக்கியமா தியடரில் டிக்கெட் எடுக்க முடியாது எண்டு சொன்னாலும், வீராளி அம்மன் புண்ணியத்தில் டிக்கெட் எடுக்கலாம், அதில சில டெக்னிக்குகள் இருக்கு,   பாடசாலை  வகுப்பைக்  கட் அடிச்சு படம் பார்பது எப்பவுமே  பயங்கர ரிக்ஸ்  , எல்லாப் பாடசாலை மாணவர்களும் கட் அடிப்பார்கள். பிரிஞ்சுபலுக்கு  யாரும்  சொல்லிக்கொடுதுப்  பிடிச்சா வாழ்க்கை அவளவுந்தான். 

                                        அதுக்குதானே  வார  இறுதி  நாட்களில்  ரெண்டுநாள் பாடசாலையில்  லீவு தருவார்களே. அதைவிட அந்த சனி ஞாயிரு  நாட்களில்  தியேட்டரில்  சனம்  அதிகமா இருக்கும். சனத்தோடு  சனமா  கும்பலில்  கோவிந்தா போட்டு  கடல் மீன்கள்  போல  சுழி ஓடலாம் . பொது ஜனம்கள்  எப்பவுமே  நாங்கள்  படிக்கிறமா  கிழிக்கிறமா  என்று  ஆராய்ச்சி செய்வதில்லை.   அரைகுறை  ஆடை  இங்கிலிஸ்  படம்  பார்த்துக்  குட்டிச்சுவர் ஆனாலும் அவர்களுக்கு  கவலை  இல்லை 
                                     முக்கியமா நாங்கள் தியேட்டருக்கு படம் தொடங்க முதலே போக மாட்டோம்,வெளிய ரோட்டில விடுப்பு பார்க்கிற மாதிரி நிண்டுகொண்டு முதலாவது பெல் அடிக்கும் வரை அப்பாவிகள் போல நிற்போம்,அது அடிக்க தியேட்டர் உள்ளுக்க லைட் நிற்பாட்டி போடுவார்கள், அந்த இடை வெளியில் போய் டக்கெண்டு டிக்கெட் கவுண்டரில் கொஞ்சம்,குதிக்காலில் எம்பி நிண்டு கொண்டு " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி " எண்டு பாடிக்கொண்டு டிக்கெட்  எடுப்போம்,

                                                    ஒருநாளும் எங்களுக்கு வயது வந்துவிட்டதா எண்டு டிக்கெட் கொடுப்பவர் செக் பண்ணியதே இல்லை,அப்படி எடுத்துக்கொண்டு இரண்டாவது பெல் அடிக்க, படம் பற்றிய தொடக்க டைட்டில் விசியம் மிஸ் பண்ணும் கவலை இருந்தாலும், இருட்டில தடவிக்கொண்டு போய், அதிகம் யாரும் இல்லாத மூலையில் இருந்து பார்த்தல் தான் எங்களுக்கு இங்கில்ஷ் இடைஞ்சல் இல்லாமல் விளங்கும் என்பதால் அப்படி இடங்களை செலக்ட் பண்ணி உடைந்த கதிரையில் இருந்து பார்ப்போம்.

                                                 இடை வேளையில்,எல்லா லைட்டும் போடுவார்கள் நாங்கள் போட்டிருக்கிற தொப்பியை நல்லா இழுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்போம்,எழும்பி கண்டின் இக்கு போகமாட்டோம்,போனால் பிறகு கதை மறந்து விடும் என்பதால் கதையின் தொடர்ச்சியை மறக்காமல் இருக்க அப்படியே இருப்போம். படம் முடியத்தான் முக்கிய அலுப்பு தொடங்கும்.வெளிய வாறதுதான் பெரிய கவுரவப் பிரச்சினை,அதிலயும் எல்லாரும் எழும்பிப் போன பிறகுதான் பதுங்கி பதுங்கி வெளிய வருவம்,

                                                         அந்த நேரம் தான் வருசத்தில எப்பவாவது கலியான வீடு ,செத்தவீட்டுக்கு மட்டும் தலை காட்டும் சித்தப்பா, பெரியப்பா அல்லது மாமாவை தியேடர் வாசலில் சொல்லி வைச்ச மாதிரி சந்திக்க வேண்டி வரும், தூரத்து சொந்தகாரரே திடீர் எண்டு ரெம்ப அக்கறையான நெருங்கிய ரத்த உறவு  சொந்தமா மாறி வீட்டை வந்து சொல்லி கொடுப்பார்கள்,வெலிங்கடன் தியட்டரில் "யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் " படம் ரசித்து பார்த்து முடிய " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! " எண்டு பாடிக்கொண்டு வெளிய வர புண்ணியக் குஞ்சி சித்தப்பு, டவர் கூல் பாருக்கு முன்னால் நிண்டார்,

                                                என்னைக் கண்டார்,  கண்டும் காணதது போல அண்டங்காகம்  போல  தலையை  வேற  பக்கமா திருப்பிக்கொண்டு     நிண்டு   போட்டு ,நான் வீட்டை வரமுதலே அவர் வீட்டை வந்து அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்திட்டார்.. வீட்டை வர முதலே அம்மா,
                                     " பூனை போலப் பந்துங்குறாய் எங்கடா போயிட்டு வாராய். "

                                             எண்டு கேட்டா, நான் பேசாம நின்டேன்,

                               " ஏனடா இந்த வயசிலேயே தலையால தெறிக்கிறன் எண்டு நிக்குறாய் ,நான் எவளவு கஷ்டப்பட்டு உங்களை எல்லாம் வளர்குறேன், இதெல்லாம் உனக்கு இப்ப தேவையா "

                      எண்டு கேட்டா, கொஞ்சநேரம்  தலையை  மண்டிக்கொண்டு நின்றேன் 

                               " சொல்லு  இப்பவே  தியேட்டர்  வாசலில்  நிண்டி  என்றால் பின்னடிக்கு  நெடுகிலும்   சீவியம்  கிழியப்போகுது "

                                      "    ஹ்ம்ம்,,நல்ல  கருத்து  உள்ள  படம்  எண்டு  பிரெண்ட்ஸ்  சொன்னாங்கள்  அதால  பார்க்கப்  போனேன் "

                                    "    சரி  அது  என்ன  படம்  சொல்லு  "

                               "  குதிரை  லாயத்தில்  குதிரைக்குக்  கொள்ளு வைக்கிற  கதை "

                                    " அது  அப்ப  நல்ல  படம் போல  இருக்கே ,,"

                                "   ஓம்  நல்ல  படம் தான்  ..இப்படி வெள்ளைக்  குதிரையை  இங்கே  எங்க அம்மா  பார்க்க கிடைக்கும்,,இப்பிடி  இங்கிலிஸ்  படதிலதானே  காட்டுறாங்கள் "

                                   "    இதென்னவோ  உன்னோட வயதுக்கு  பார்க்கத்  தேவையில்லாத  படம்  எண்டது போல எல்லோ குஞ்சி  சாடை  மாடையா  பறைஞ்சார் "

                                     " அதுதானே  சொன்னேன்  அவருக்கு  இங்கிலிஸ் விளங்காது  எண்டு "

                                   " அப்பிடியே  சிலமன்,,   அதுக்கு  என்னத்துக்கு  புண்ணியக்  குஞ்சி  குத்தி  முறியுது  எண்டு  ஓடிவந்து  சொன்னார் "

                                    "   ஓம் , அவருக்கு  இங்கிலிஸ்  தெரியாது  அதுதான்  அப்படி  சொல்லி இருப்பார் "

                                   "  என்னதான் இருந்தாலும்  இதெல்லாம்  உனக்கு இப்ப தேவையா  சொல்லு "

                     " தேவைதான், தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! "

                       எண்டு சொல்ல நினைச்சேன்,பயத்தில அதுக்கு ஒண்டும் சொல்லவில்லை, அம்மா

                     " இனி இதெல்லாம் பார்க்க மாட்டேன் "

                                          எண்டு தலையில அடிச்சு சத்தியம் செய்து தரச் சொன்னா, செய்து கொடுத்தேன், அதென்ன பெரிய விசியமா, அம்மா இப்படி எல்லாத்துக்கும் கேட்பா,ஒரு கட்டத்தில் எனக்கே எது எதுக்கு தலையில அடிச்சு சத்தியம் செய்து கொடுத்தது எண்டு நினைவே இல்லை அந்த இளந்தாரி டீன் ஏஜ் வயது  நாட்களில். ஆனாலும் என்னோட நியாயமா

                                    " பள்ளிக்கூடத்தில இங்கிலிஸ் டிச்சர் சொன்னவா,இங்கிலிஸ் படம் பார்த்த இங்கில்ஸ் நோலேச் அதிகம் ஆகும் எண்டு அதால பார்த்தேன் "

                         எண்டேன், நல்ல காலம் அம்மா அது என்ன படம் எண்டு கேட்கவில்லை,புண்ணியக் குஞ்சியும் விபரமா சொல்லவில்லை..

                                              யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் படக் கதை விக்டோரியா ராணி இங்கிலாந்தை ஆண்ட காலத்தில் நடக்கும் ஒரு கதை ,லோர்ட் என்ற உயர் சமூகத்தில் இருக்கும் கவுரவமான  பிரபு சடர்லி ஒரு பக்கவாத நோயாள திடிர் எண்டு படுக்கையில் விழ,அவரின் இளம் மனைவி லேடி சடர்லி என்ற அழகான் இளம் பெண் வேறு ஒருவரின் படுக்கையில் ஏறும் கதைதையை சுவாரசியமா சொல்லி இருந்தார்கள். பிரபு சடர்லி நல்ல மனிதர் அவரே சொல்லுறார்,

                                      " இனி என்னிடம் திருமண உறவு சந்தோஷ விசியங்களை எதிர் பார்க்க வேண்டாம்,உன் விருப்பப்படியே இன்னுமொரு பிரபுவிடம் உனக்கு விரும்பினால் உன் ஆசைகளை பெற்றுக்கொள் "

                          எண்டு உண்மையாகவே கொஞ்சம் விக்டோரியன் கால நடைமுறைகளில் இருந்து விலத்தி சொல்லுறார்.

                                               லேடி சடர்லி இயல்பாக இருப்பா,நிறைய பிரபுக்களின் பார்டிகளுக்கு பக்கவாத கணவனையும் அழைத்துக்கொண்டு போவா ,லோர்ட் சடர்லி எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பார் .ஆனால் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே எண்டு, நீலக் கண்கள்,அதில் ஏக்கம், நுரை போல வழுக்கி விழும் சுருள் முடி, கீழ் நோக்கி வளைந்த கிளி மூக்கு எண்டு அண்டலேசியன் அழகில்  அந்த அம்மணி கைய்க்கு சவுக்காரம்  போட்டுக் களுவிப்போட்டுதான்  காலையே  தொட வேண்டும் போல அவளவு  தங்கப் பதுமைக்   களையா  இருப்பா 

                                  ஆனால்   அழகில் அம்சமாக இருக்கும் அவர் மனைவி லேடி சடர்லி,  உடுப்பு எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு பாய்வது வேறு ஒரு உயர் குல பிரபுவுடன் இல்லை,  பதிலாக அவர்கள் பரம்பரைக் குதிரை லாயத்தில்,குதிரைக்கு கொள்ளு வைக்கும் எடுபிடி வேலை செய்யும் ஒரு சாதாரணமாண வேர்கிங் கிளாஸ் என்ற உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்து  ஒரு இளம் மனிதருடன்.  அதுதான் கதையின் திருப்பம்,.

                                        அந்தப் படம் எடுக்கப்பட்ட திரைக்கதை உண்மையில் டி எச் லாரன்ஸ் என்ற ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் அந்தக் கதையை ஒரு " கொன்பெஸ்சனல் ஸ்டைலில் " நாவலாக எழுதினாராம், விக்டோரியா ராணி அந்தக் கதையை தடை செய்தா. அவரையும் " உதவாக்கரை " எண்டு சொல்லி இருக்குறா.

                                நடு நெத்தியில சந்தனம் பூசி நாமம் போட்ட அந்த கதை அதன் சுருக்கிய வடிவில் நான் பின் நாட்களில் படித்து இருக்கிறேன், அதில நிறைய இலக்கியம் இருந்தது, அதைத் தடை செய்த விக்டோரியா மகா ராணியின் கணவர் இறந்தபின் அவா யாரோடு காதலில் இருந்தா எண்ட விசியம் செமக் காமடி,பாவம் தன் காதல் வாழ்கையை அவா யாருக்கும் சொல்லாமல் செத்துப்போனா விக்டோரியா மகா ராணியின் ரோமன்ஸ் உண்மைக் கதை " யங் லேடி சடர்லி " என்ற இளம் பெண்ணின் விரகதாபத்தை விட சுவாரசியம் ஆனது என்பதையும் படித்து இருக்குறேன்...

                                       உண்மையில் யாழ்பாணத்தில் வெலிங்கடன் தியடரில் பார்த்த " யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் " படத்தில,லேடி சடர்லி உடுப்பு எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு, கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் புரியும்படி செய்த விசியங்களை விட, அந்தப் படத்தில வார அமரிகன் செடில் பிரெட் வகைக் குதிரைகள்,  அவை பாய்ந்து திரியும் பரந்த புல் வெளிகள், சடை வளர்த்த ஐஸ்லாண்டிக் குதிரை இழுக்கும் குதிரை வண்டிகள், பெரிய பெரிய விக்டோரியன் இங்கிலாந்து வேல்ஸ் நாட்டின் நாட்டுப்புற மாளிகைகளை  வளைத்து எடுத்துப்  படமாக்கி இருந்தார்கள்  

                                                   அதில் நடக்கும் இரவுப் பாட்டிகள், கிளிங் கிளிங் எண்டு மோதும் சம்பெயின் கிண்ணங்கள் , நளினமான இங்கில்ஷ் வால்ஸ் நடனம், மென்மையான மெழுகுவர்த்தி வெளிச்சம், உறவின் பிளிவாக மயக்கும் பின்னணி கிளாசிகல் சிம்பொனி இசை , அழகான பெண்களின் நீண்ட எல்லாத்தையும் இழுத்து மூடிய நிறைய ப்ரில் வைத்த உடை, பெண்களின் தலையில அலைய விட்டு தூக்கி நிமிர்த்தி,சரிய விட்டு நடு வகிடில் நதி பாயும் கொண்டைகள் ,முக்கியமா இலக்கணம் தவறாத விக்டோரியன் ஆங்கிலம் என்னை மிகவும் கவர்ந்த விசியம்...

                                   அந்தப்  படத்தில்  பல  இடங்களில்  திறந்த  மார்பகம்  எப்படி  இருக்கும்  என்று  பார்க்கக் கிடைத்தது. ரொமான்ஸ் கலவிக்கு  எவளவு முக்கியம்  என்று படிப்பினை கற்பித்தது . ஒரு  சீனில்  மரத்தோடு  சாத்தி  வைச்சு  அந்த    மச்சோ  ஆண்மை  குதிரைக்காரன் செந்தூரப்பூப்போல  மென்மையான   லேடி சட்டர்லியை .....................போட்டு  எடுக்க அந்த  மரம் புயலில் அகப்பட்டது  போல  முறியிற மாதிரி  உலுப்பி எடுக்கும். 

                                     செக்ஸ்  இவளவு  சுவாரசியமான  விசியம்  என்று  அந்த வயதில்  கொஞ்சம் மூளையின்   ஹிப்போதலமசில் குண்டுசியால குத்தின மாதிரி  இருக்க , எதிர்கால  வாழ்வின் சில  முக்கிய  காலகட்டம் கனவுபோல  வந்தது. இதெல்லாம்  தெரியாமால் இருப்பதே  தவறுபோல  இருந்தது.  

                                " காந்திருவம் "  என்று மருதன் இளநாகனார் என்ற புலவர் பாடிய  அகநானூறு இல் வரும்   சங்கத் தமிழ் சொல்லும்  " கருத்து ஒருமித்த இருவர் தாமே கூடி இணைவது " என்ற கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் புரியும் விசியங்கள் " யங் லேடி சடர்லி லவ்வர்ஸ் " என்ற அந்தப் படத்தில் அதிகம் கவரவில்லை!  என்  நண்பர்கள்  கதிரை நுனியில் குதிக்கால் குத்தி  நிக்கதான்  அதை  ரசித்துப் பார்த்தாங்கள்.  அதென்னவோ  உண்மைதான் 

Monday 19 September 2016

இதுதான் அது அதுதான் இது !

அது சென்ற கிழமை
நான்கே நான்கு
சின்னஞ்சிறு வெள்ளைமுட்டைகள்
இங்கிருந்து பார்க்க
பாதுகாப்பான கூட்டுக்குள்,
தாய்ப்பறவை
அடைக்காப்பதைக் கண்டதேயில்லை,
மூன்று நாட்களின்முன்
ரெண்டுதான் தெரிந்தது,
வில்லோமரம் வேறு
இலையுதிர் சதிருக்கு
ஆவேசமாக ஆடிக்கொண்டு
ஆசுவாசமாக அவதிப்பட்டுக்கொண்டிருந்தது,
நேற்று
எட்டாவது தட்டு மொட்டைமாடிக்கு
ஏறிப்போய்ப்பார்க்க
வெறுமையான கூடு
வாக்குவாதம் நடந்தது போல
கொஞ்சம் கசங்கிஇருந்தது,
இன்று
படிஎடுத்துக் கீழிறங்கிப்போய்
மரத்தினடியை நேராகவே விசாரித்தேன்.
முட்டைகள் விழுந்துடைந்த
சாட்சி சம்பவங்கள் எதுவுமில்லை !
என்ன நடந்திருக்கும் ?
நோர்வேயில் பாம்புகள் இல்லை
மரஅணில்கள் சுத்தசைவம்
குயில் காகத்தை ஏமாற்றிய
குடும்பச்சொத்துக் குழப்பங்களும் இங்கில்லை
வேற என்னதாகத்தானிருக்கும்?
ஹ்ம்ம்
பருந்தின் விருந்து ?
அதைத்தானே நீங்கள் நினைகிறீர்கள் ?
ஹ்ம்ம்
அதைத்தான் நானும் முடிவாக்குகிறேன்.!


.......................................................................................

தனியாகவே விசாரிக்க
வரிசை தவறாத
மலைவேம்புத் தட்டு அடுக்குகளிலும்
சுவர் முழுவதிலும்
பலவர்ண முகங்களில்
நிறங்களை வேண்டிக்கொண்டு
ஒரு நூலகம் ,
மயான இரவு போலவே
அமைதி பரவிக்கொண்டிருக்கும்
புத்தகங்களின்
மிகமிக நெருக்கமான கனவு
வெளியேற வழி இல்லாத
ஒருநாள் ,
தடித்த தலைப்புகளையும்
பதிவுசெய்த பெயர்களையும்
வாசித்துக் களைத்து
மேய்ந்துவிட்டுப் போன
செழிப்பான புல்தரையில்
எதைத் தேடிப்போனேனோ
அது கிடைக்கவில்லை ,
அக்கினி மூலையில்
குளிர்தண்ணித் தாங்கி
இன்னொரு சூரியமேட்டில்
இணையத்தில் உலாவரும் கணணி
அஷ்டகோணத் திருப்பத்தில்
மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
உருக்கிவடித்த வெங்கலச்சிலை
வெளிச்ச ஜன்னல்களில்
சலிப்பைத்தந்துவிட்டு
விரைந்துகொண்டிருக்கும் மனிதர்கள்,
இந்த இயலாமையின்
அடுத்த கட்டம் துன்புறுத்தல்தான்.
இனி என்ன வாசித்து
இனி என்னவரப்போகுதென்று
சமாளிக்கிறேன் என்று
முடிவுக்கு வந்துவிடவேண்டாம்
இதுக்குள்ளே
ஒரேயொரு புத்தகம்
திடீரென்று முழித்து
என் ஏழாவது அறிவை எழுப்பிவிடும் !


.......................................................................................

எதிர் எதிரே எதிராக
மேசைக்கு கீழே குத்திக் கால்கள்
தொட்டுக்கொள்ளும் நெருக்கத்தில்
சின்னதான மேசை,
அதுக்கும் அவர்களைப்
வயதாகவும் பல வருடங்களாய் சிநேகம்,
நுரை தளும்பும்
மிக உயரமான பியர்க் குவளையின்
நுனி அகன்ற விளிம்புவரை
நொதித்துப் புளித்த
மார்க்கழி மாதத்தின்
உறைபனித்துளியின் வாசனை,
ஐந்தில் ஒரு பங்கில்
மஞ்சள் நிறத் திரவம் நிறுத்திக்கொள்ள
மிச்ச ஒரே பங்குக்கு
வெள்ளைத்தைத் தொப்பியாக
எழுந்து விசாலித்துக்கொள்கிறது
சின்னக் குமிழி வட்டங்கள்,
இளம்பெண்ணின்
இடுப்பு வளைவுகளை உவமிக்கும்
வன் கண்ணாடியில்
அந்த மதுக்கிண்ணங்களை
அந்த நால்வரும்
கிளிங் கிலிங் கிளிங் என்று
திராட்ஸைரஸ ஷாம்பெயின் கிண்ணங்கள்போல
உட்சாகமெடுத்து உரசவில்லை ,
வளமிடமாக ரெண்டுபேர்
உள்ளங்கைப் பரிவில்
கிளாஸின் நாபிக்கமலத்தை அணைத்துக்கொண்டிருக்க
மற்ற இரண்டு பேரும்
உலகளந்து ஊதிச் சுழலவிட்டுப்
புகைத்துக்கொண்டிருந்தார்கள்,
நான்கு பியர்க் கிண்ணங்களுக்கும்
அவர்கள் ஒருவரோ ஒருவரோடு
கதைக்கவேமாடார்கள் என்பது தெரியும் போல
அந்த நெருக்கடி தெரியாமல்
இந்தப் பக்க மூலையில் இருந்து
நானோ
சலனமான இரைச்சலை எதிர்பாத்து
அந்த மாலை முழுவதும்
ஏமாந்துபோனேன்.

...............................................................

நடு நேர நிசியிலா
அல்லது
விடி அதிகாலையிலா
அந்த மெட்டு நுழைந்ததென்று
சரியாகத் தெரியவில்லை,
பெருமூச்சொலிகளின்
வெப்பம் மெல்லவே உருவாகி
குளிர்ந்துபோக வழியின்றி
திசைகளைத்
திணறவைத்துச் சுழன்றடித்து,
அபஸ்சுரங்களின் மேவல்
மேகங்களற்ற
வானப்பெருவெளியை முட்டிமோதி
நிலையாமையின்
அபத்தங்களை உணர்த்தி,
பதின்வயது
முதல்க்காதலை முத்தமிட்டு
நனைந்த கூந்தல்
தீண்டிக்கொண்டிருக்கும் சுவையோடு
உள்ளிறங்கி உறவாடி,
பிரத்தியேகமான ஊடல்
வாசனைகளோடு அத்தனை அருகாமையில்
நினைவுகளில்
எங்கோ காணாமல்ப்போன
ஒரு வாக்குறுதியை மீட்டெடுத்து,
பருவகாலங்கள்
அவசரத்தில் விட்டுப்போன
அந்தரங்கத்தில் நடனமாடி
ஸ்பரிசத்தின் தொடுகைக்குள்
பரவசத்திற்குள்ளாக்கிவிட்டு
கனவு முடிவதுக்குச் சற்றுமுன்
போயேபோய்விட்டது!
இவளவுதான்
அந்த மெட்டில் நினைக்கமுடிகிறது !


.................................................................................

தொடர்மாடி
வெளிக்கதவு திறப்பதுக்கும்
வாசல்படியைக் கடப்பதுக்கும்
இடையில் எட்டி வைப்பது
எப்பவுமே
நாலு செக்கன்கள்தான்,
திட்டமிடல்கள் நெருக்கமான
சந்து ஓடை போலிருக்கும்
வெளிச்சமிதப்பு வரண்டாவில்
மொத்தக்கம்பளம்
நீட்டி விரித்திருக்கிறார்கள்,
எனக்கு முன்னே
வேகமாக வெளியே போனவளின்
துவட்டாத கூந்தலின் சம்பூ
மூக்கைச் சுரண்ட
பிரத்தியேக நாட்கள்
விட்டுச்சென்ற வாசனைகள்
படிந்திருக்கும் காற்றில்
திடுக்கிடும் கற்பனைகள்.
சடார் படார் சடாரென்று
திறந்து பறந்துகொண்டிருக்கும்
கதவண்ட்டையில் நின்று
யாருமே
திசைகள்தேடுவதைக் கண்டதில்லை,
பளிச்சென்று
வெளியே வெய்யிலா மழையாவென்று
கண்ணாடி முகத்தினுடே
காலநிலமையைப் பார்த்து
அம்புகள்போலவே பாய்வதில்
அவசரம்பற்றிய
குறுக்கீடுகள் எழுகிறதுமில்லை,
இப்படியானவொரு
ஆத்மயுத்த ஆர்ப்பரிப்பு நாள்
கதவு திறந்து மூடுவதை
சுவாரசியமாக ரசித்துக்கொண்டிருந்தேன் ,
கதவின் கைப்பிடியில்
மெல்லவே தள்ளித்திறந்த
இரக்கமுள்ளவர்களின்
உள்ளங்கை ரேகைப் பதிவுகள்,
அயோக்கியத்தனம்
இரகசிய அசைவுகளில்
ஆடி ஆடி அடங்க
என்னைக் கேள்விகளால் விலத்தி
சிலர்தான்
சந்தேகமாகப் பரபரத்தார்கள்
அல்லது
எனக்குத்தான் அப்படித் தோன்றியதா ?


.................................................................................

காற்றோடு
காதுநுனியில் சுண்டிக்
கதைத்துக்கொண்டு
சுமாரான வேகத்தில்தான்
துவிச்சுக்கொண்டிருந்தேன்
விசுக்கென்று சின்னவள்
என்னை முந்திக்கடந்தாள் ,
மூச்சு இழுத்து
விபரமாகப் பார்ப்பதுக்குள்
விசை எடுத்துப்
பின்வாங்க வைத்தாள்,
சிவப்பு விளக்கில் நின்றபோது
அவளுக்கு
முன்னுக்கு நிறுத்தினேன்,
அடுத்த நிறுத்தவிளக்கிடையில்
செடில்பிரெட் குதிரைபோல
கூந்தலைப் பறக்கவிட்டு
மீண்டும் முந்தி விட்டாள்,
நதிபோலவே
தெருவழியும் நகர்ந்துகொண்டிருக்க
நான் வளையவேண்டிய
வட்டச் சதுக்கத்தை
அவளும் வளைத்தாள்,
திரும்ப நினைத்த திருப்பத்தில்
அவளும் திரும்பினாள்,
என் நிலையறிந்து
பாதை இறக்கக்கோணத்தில்
இறங்கிக்கொண்டபோது
வென்றாகவேண்டுமென
அசுரமாக மிதிக்க நினைத்தேன்,
என்
உந்துருளி போட்டிவேண்டாமென்று
கெஞ்சியது
ஆண்மை வைராக்கியமாக அதை
அலட்சியப்படுத்திய நேரம்
பிடிக்கவேமுடியாத தூரத்தில்
ஒரு புள்ளிபோல எங்கேயோபோய்விட்டாள்
என் வயதைப் போலவே.!


.............................................................................................

திசைமாற்றங்களை
மயக்கிவிடும்
மனப்போராட்டங்கள்
நிகழ்த்தும் புறநிகழ்வுகள்
புரியமுடியாமல் சலிப்பூட்டுகிறது,
இன்னும் எத்தனை
இருட்டுத் தின்னும் இரவுகளை
தொட்டுணர்வது போலவே
அருகாமையின்றி
அகாலத்தில் கடக்கவேண்டுமோ?
இப்பவும்
கையாலாகாத அமைதிதான்
பகல்களில்
மேலும் மேலும் விசாலமடைய
வெகுதூரத்தில்
எல்லாமே நிறைந்திருப்பது போலவே
ஆசை துரத்துகிறது.
புத்திசாலித்தனங்கள்
ஜோசிக்கவிடாமல்
அதிகம் அலுப்பூட்டுகின்றன!
ஏன்
ஒரு நாள் வட்டமாக இருக்கிறது?
சதுரமாக இருந்தால்
மூலைகளிளாவது
முட்டி மோதிக்கொள்ளலாம் !
நிரந்தரம் நிறை வரம் தரும்
ஏக்கம் நிரம்பிவழியும்
கனவுப்பட்டறை
காலம் கடந்துவிட்டதால்
நிதானமாகச் செதுக்கவேண்டிய
நேரான பாதைகளைத்
தருணங்களில் தவறவிட்டு
குறுக்குவழியில்
எனக்கே எனக்காக வந்து வாய்த்திருக்கு
இந்த வாழ்க்கை.!


......................................................................................

மூச்சுக் காற்றை
ஜனிப்பில் வலுக்கட்டாயமாக
அதிகமான எதிர்பார்ப்புக்களுடன்
திணிக்கப்பட்டதுக்கு
ஆதாரங்கள் இருப்பதாக 
நினைப்பதேயில்லை

அதுவரையில்
அங்குமிங்கும் பரபரப்புடன்
அலைந்துகொண்டிருந்ததை
பிரசவவேதனையில்
பிடித்திழுத்து
அம்மா
உள்நுழைத்த விபரங்கள்
எனக்குத் தெரியாது
முதல்ச் சுவாச சத்தம்
கரடுமுரடான பாதையில்
பேரிரைச்சலுடன்
ஒலித்து
மேலும் அதிகரித்து
இடித்துப் பிளந்து
முன்னேறிய நேரம்
கையைக் காலை வேகமாக வீசி
ஈனக் குரலெடுத்து போன்ற
வர்ணனைகளும் தெரியாது
இப்போதெல்லாம்
ஆழ்ந்த அசதி உறக்கத்தில்
சிலநேரங்களில்
அது
ஒவ்வாமைகளை சுட்டிக்காட்டி
ஓய்வெடுக்கவிரும்புவதுபோலவே
பின்வாங்கும் போது
கண்கள் உணர்ந்து
திடுக்கிட்டு விழித்துவிடுகின்றன
இந்த நிமிடம்வரையிலும்
அது
என்னைவிட்டுப்போனதில்லை
அதுக்கும்எனக்குமான
உடன்படிக்கைகளும்
இன்னுமே கிழிக்கப்படவுமில்லை
அதனால்தான்
அதன் ஜீவநதிப் பெறுமதி
தெரியாமலிருக்கிறேன் போலிருக்கு.!

...........................................................................................

மரஅணில்கள்
நாலுதான் எனக்குத்தெரிந்தது
வேறுசிலவும்
அடிமரத்தின் பிடியில்
மறைந்துகொண்டிருக்கலாம்
அதுபற்றிய ஆராய்ச்சி
அக்கணம் முக்கியமில்லாமலிருந்தது
மற்ற மூன்றும்
இலை வளைந்த கிளையில்
பாரம் ஏற்றிவைத்து
ஊஞ்சல்க் காற்றிலாட
நாலில் ஒன்றுதான்
அதிகம் நெருங்கிவந்து
என்மூச்சு வாசத்தை
தற்காப்பாகவே தள்ளிநின்று
விசாரித்துவிட்டு
சடாரெண்டு பின்வாங்கிவிட்டது
பட்டைமர நிறத்துக்க்குள்
உருமறைத்துக்கொண்டிருந்த
நோர்வே அணில்களின்
வளைகோணிய முதுக்கில்
அயோத்தி ராமனின் நேசம்மிகு
காலம் போட்ட பாலத்தின்
மூன்றுகோடுகள் இருக்காவென்று
விலத்திவிலத்திப் பார்த்தேன்
அடப்போங்கப்பா
ஒரு மண்ணுமில்லை
அடர்த்தியான அதன் வாலில்தான்
மிதிலைமன்னன் மகளின்
விரிசடைக் கூந்தல் இருந்தது!

......................................................................................

மிகப்பெரிய கவலை
பொறுமை இல்லை என்பது
தேவைக்கதிகமான
நல்லவொரு பிம்பத்தை
சுமந்து கஷ்டபட்டு கொண்டே
ஒரு சீரழிந்த
அவசர வார்த்தையோடு
நிமிர்ந்து நிற்கவேமுடியாத
எல்லா புரிந்துணர்வும்
மெல்ல வெளியேறிவிடுகிறது

நாட்டாண்மை
தன்னால் வந்து விட.
எதை எழுத வேண்டும்,
எப்போது முடிக்க வேண்டும்
எது அவமானம்,
எது அகங்காரம் என்று
தீர்ப்பு நெருங்கிவருவதும்
நல்லாவே தெரிகிறது
சமயம் பார்த்து
அனுஸ்டானங்களையும்
முகஸ்துதிகளையும்
முட்டிபோட்டு ஆதரிப்பதில்லை
அதனால்தானோ என்னவோ
அதன் ஆதியந்த
எல்லைகளளும் தெரியாமலேயிருகிறது
விட்டறுப்புகளில் இருந்து
வெளியேறாமுடியாத
காழ்ப்புணர்ச்சிக்கு
என் நல்ல பக்கம்
பொறுப்பில்லையென்று அன்பின்
மொழியில் சொல்கிறேன்
அவலமான காலமே
என்னை அமைதியாக இருக்கவிடு
தோல்வி அடைந்ததை
கொள்கைரீதியாக ஏற்றுக்கொள்
கருணை இல்லாதா கதை
இப்படிதான் முடியவேன்றுமென்றால்
எவளவு தேவையோ அவளவு
மன்னிப்புக்கேட்கிறேன் !

........................................................................

படுக்கையறையில்
நடனமாடும் குழல்விளக்குக்கு
எவளவு திமிர் என்று
உங்களுக்குத் தெரியவாய்ப்பேயில்லை,
பின்னிரவில் 
ஒரு புத்தகமதன் வெளிச்சவிலாசத்தில்
வாசித்ததேயில்லையென்று
அதுக்குஅடங்காத கோபம்
நான்
என்னதான் செய்யமுடியும்
பெருவிரல்களில் எச்சில் ஒற்றி
தாள்களை நுனியில் விழித்து
பக்கங்களை விரித்துகொண்டே
கனவோடு நேரிடையாக நெறிபோடும்
பழக்கத்தைவிட்டு வெளியேறி
முப்பது சொச்சம்வருடங்கள்,
ஆனாலும்
இப்பவும் அலாரமடிக்கும் மணி
அதன்கீழேதான் இருக்கிறது
அது இன்னும்
மண்டியிடவைக்கும் அவமதிப்பாம்,
உள்ளாடைபோலவே
குஞ்சரங்கள் தொங்குமதன்
நினைவு ஓரங்களை
என் வசதிக்கு என்றுமே
வாவென்று வலித்ததில்லை,
முடிந்த நாட்களில்
தடவித்தடவி
பக்கச்சார்பற்றுத் துடைத்தும் விடுகிறேன்.
இருக்கும் இடத்தில
இரவெல்லாம் இயல்பாவேயிரு
என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
அது திமிறிக்கொண்டிருக்கு.
என் பொறுமைமீறும்
ஒருநாளோடு அது இனி இருக்கப்போவதில்லை
அதன்பின்
மெழுகுதிரிகளை ஏற்றிவிட்டு
வாசமோடு பார்த்திருப்பேன்
வீடே எரிந்தாலும் பரவாயில்லை!


...........................................................................

கோடைமுழுவதும்
ஏரிக்கரை வழித்தடங்களில்
கூடவேவந்த
மென்தோல் சப்பாத்து
நேற்றுமாலை
குறுனிக்கற்கள்
உருண்டு உரசும் பாதையில்
அதன் கடைசிப்பிடிப்பையும்
கால்தவறிய கணத்தில்
நிலைதடுமாறிய நொடியில்
கைவிட்டது,
என் நடைப்பயணங்களில்
என்னைவிட அதுவே
மூச்செடுத்து
நடந்து கடந்திருக்காலம்,
பொதுஇடத்தில் கழட்டிவிட்டால்
களவுபோவதில்லை என்பதில்
என்னைவிட யாக்கிரதையாகவிருக்கும்,
அதுக்கு
ஓய்வுகொடுக்காமல்
ஓடிக்களைத்த தூரங்கள்
அதன் எதிர்கால
ஒத்திகைகள்போன்றிருக்கலாம்,
வெய்யிலோடு
அலைந்த நாட்களில்
அதுக்கும் வியர்த்துவிடும்,
சதுப்புநிலத் தப்புத்தண்ணி
சேறள்ளிப் பூசினாலும்
சகிப்புதண்மையோடிருக்கும்,
அடுக்கிவைக்கும் தட்டில்
அருகிருக்கும்
அழகானஉறைபனிக்கால
வன்தோல்ச் சப்பாத்தின்
குளிர்தாங்குதிறனை
அது கண்டுகொள்வதில்லை
என்
காலுக்குள் மிதிபட்டத்தைதவிர
பெரிதாகவேறெந்த
கவுரவக்குறைச்சலையுமது
சந்திக்கவில்லை என்பதையும்
ஒத்துக்கொள்கிறேன்!


......................................................................................

தீராதபரவசங்கள்
ஒரு
ஜன்னல் திரைச்சீலை இழுப்பில்
விரிந்துவிடுமென்றால்
நம்பக்கடினமாக இருக்கிறதா?
அப்படித்தான்
மேருமலைத்தொடர்ச்சி
மேற்க்குப்பக்கமாக
நிறைமாதக்கற்பிணி போலப்
ஒருக்கழித்து சரிந்திருக்கு,
கிழக்கில் விரிந்து
ஒப்பீடுகளில் ஆர்வமில்லாத
பள்ளத்தாக்கு
பாய்விரித்துப் படுத்திருக்கு,
பகல் முழுமைக்கும்
பச்சையாகவே இருக்கும் மலை
இரகசிய இரவுகளில்
இன்னுமொரு மோகவடிவத்திலிருக்கலாம்
அதன்உயரங்களை அளக்க
நடந்தே போனால்
மலை காணாமல்போய்விடும்
வேறுபல மலைகள் சட்டென்று
சுற்றிவர எழும்பிவிடும்,
சாமத்தில்
ஒருசிவப்பு விளக்கு அதன்
தலையைக் கைப்பற்றிக்கொண்டிருக்க
உறைபனிக்காலமெல்லாம்
வெள்ளையாகி
விதவையாகிவிடும்,
விபரிப்புக்களில் அதிகம் கற்பனைகளை
எடுதுக்கொடுக்காத
பள்ளத்தாக்கின் கதை
கவர்ச்சிகரமான வரிகளில் இல்லை
என் விருப்பங்களெல்லாம்
பள்ளத்திலும்
என் தோல்விகள் ஒண்றாகி
உயரத்திலும்
எதிரெதிர் துருவங்களாக மாற
இரண்டையும் பார்க்கும்போதுதான்
எப்படியோ
கொஞ்சமாவது பின்வாங்கிவிடுகிறது
தனித்த மனச்சுமைகள்!


........................................................................

எப்போவாவது
ஒரு அவதியற்ற நாளில்
ஒரு அலாதியான பொழுதில்
பல்கனியில்
பூமிப்பந்தெங்கும் ஒரு பங்குகேட்டு
மூச்சுமுட்டிக் காற்று வேண்டுவது,
முன்னுக்குப் பின்னாக
முரண்பட்டுக்கொண்டு
தேவையான அளவில்
படம் போல வெளித்தோற்றம் காட்டும் ,
தற்பெருமைக்களைத்
திறந்தே வைத்திருக்கும்
அதிகப்பிரசங்கித் தருணங்களிலும்
உப்பரிகை
ஓவியம் வரைந்து வைத்திருக்கும்
பருவச் சமநிலைகள்
என்றுமே விலாசம் தவறியதில்லை,
தளிர் உயிர்ப்புக் காலத்தில்
கோடை வெய்யில் வெறுப்பேற்றும் போது
மஞ்சள் இலையிறப்பு மாதங்களில்
உறைபனி வெருட்டும் இருட்டிலும்
பூசி மெழுகி ஒப்பேற்றிவிட
அதனிடம்
இரகசிய நிறங்கள் இருக்கு,
அடிக்கடி
கருக்கொண்டு கருக்கலையும் மேகம்,
நெடுந்துயர் நீண்டு படிந்த
தாரமிழந்த பள்ளத்தாக்கு,
துங்காமணிவிளக்குகளில்
நடனமாடும் நகரம்,
நீலக் கடலில்
மாங்கல்ய அம்மன் பொட்டுபோல
ஒஸ்லோ துறைமுகக்கழிமுகம்,
பால்கொடுக்கும் மார்பகம்போல
பெருத்துப்போன மலைகள்,
மழையை மறக்காத
பூங்காவன மரங்கள்,
ஹ்ம்ம்
ஒரு சிகரெட்
ரசித்து ஊதிமுடிப்பதுக்குள்
இவளவும் இயல்பாகக்
கவனிக்கமுடியுமென்றால்
மிச்சத்தை நீங்களே ஊகியுங்கள்!


......................................................................................

நள்ளிரவு முழுவதும்
நிமிரமுடியாத

நாரியைப் பிராண்டும் உளைவு
உடல்ச் சூடு கூடியது
கண்விழித்த போது எரிச்சலாகியது.
ஊரைக் கூட்டிக்கொண்டுவந்து
ஒப்பாரி வைத்தபடி
வெளியே மழை,
மலைப்பாம்புபோல
தினவெடுத்த தோள்கள்
களைத்துப்போய்விட்டது,
காற்றின் வெறுமையில்
உரத்துக் கதைத்தபடி
நேரங்கெட்ட நேரத்தில் கேடுகெட்ட குடிகாரர்,
ஜன்னல்களை அடித்துச்சாத்தியும்
குங்குலிய வாசனை போலவே
பொட்டுப்போட்டு உள்நுழைந்து
சுற்றிக் கொண்டது குளிர் .
கட்டுப்பாடு இழந்துபோக
நடுங்க ஆரம்பித்தது தனிமை,
ஒன்றும் செய்யமுடியாமல்
தூக்கமில்லாத தூரத்து விளக்குகளைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்,
எப்போதும்
அற்பமான கேள்விகளை
வைப்பாட்டிபோல அருகில்
உறங்கவிடாமல் வைத்திருக்கிறது
விடியாத இரவு .
அதன்
விசாரணையில் சிக்குண்டு
சூனியத்தில் விழுந்துகொண்டிருக்க
வடக்குவான வெளிச்சம்
ஒருகணம் துலக்குவது போலிருக்கக்
கவிதை எழுத நினைத்தேன்,
மறுபடியும்
அசதியாக்கிய நித்திரை
அதைப் பறித்துக்கொண்டுபோய்விட்டது!


..........................................................................................

என்
சுயசரிதையில்
நானாவது உண்மையாக இருப்பேனா
என்பது
நிகழ்வுகளின் நம்பகத்தன்மையில் 
மிகைப்படுத்தப்படாத
ஒரு மொழியில் ஜோசிக்கிறேன்.
புனைவுகலோடே
பின்னிக்கொண்டிருப்பதால்
கற்பனைகளைக்
நிராகரித்துக்கொண்டு
எப்படிக் கடப்பதென்று தெரியவில்லை,
முக்கியத்துவமற்ற
காதலித்துப் பேதலித்த
சம்பவங்கள் தொடங்கும் போதே
தோல்வியுற்ற போதும்
மறைத்து எழுதினால்
குற்றவுணர்வு
மிகவும் நெருங்கிவிட வாய்ப்புள்ளது.
வசீகரமான புன்னகை
மிகஅழகான பொய்கள்
நம்பிக்கைத்துரோகம்
உருமறைப்பில் சுயநலம்
தேவையற்ற பொறாமை
இவைகள் அதிகமதிகம்
விரிந்து வியாபிப்பதை
முடிந்தவரையில் தவிர்க்கவேமுடியாது,
தவறியும்
ஆளுமையான தனித்தன்மைகள்
இருக்கவாய்ப்பேயில்லை,
சமாளித்துப் பின்வாங்கிய
சந்தர்பவாதங்கள்
சபையேறி சாட்சிகொடுக்கலாம்,
பிடிவாதத்தன்னுணர்வு
இறந்துகொண்டிருப்பதால்
போகிறபோக்கில்
சில விசியங்களை ஒத்துகொள்வேன்,
வெட்கத்துக்கு
வயதாகிவிட்டதால்
ஏமாற்றிய சந்தர்பங்களை
வாய்விட்டு ஒப்புக்கொடுப்பேன்
தந்திரமாக
ஒளித்து வைக்கப்படும்
உண்மைகளுக்கு நடுவில்
வாசித்துமுடிக்கும்போது
சத்தியமான சோதனையில்
ஒரு இடத்திலாவது
நான் நானாகவேயிருப்பேன்
அது போதும் !


...................................................................

எல்லாவற்றையும்
விசாரணைக்கு உட்படுத்தும்
பிரபலமில்லாத
பிரெஞ்ச் நாவலொன்றின்
தழுவல் போலவேயிருந்தது
அந்தத் திரைப்படம்,
எதற்காக நேரமொதுக்கி
அயர்ந்து சொருகும் இமைகளைக்
கசக்கிக்கொண்டு
பார்த்து முடித்தேனோ
அதன் உத்தரவாதம்
காட்சிக்குக் காட்சியாகி விரிந்த
தடுமாற்றங்களில்
என்னையும் விழுந்துவிட வைத்தது,
இலட்சியமான
மூலத்திரைக்கதையில்
மோசமான குரலில்
சுமாரான தோற்றமுடைய
தனியொருத்தி
மேடை ஏறிப் பாடகியாகிறாள்
அதுவும் முடிவில்தான்,
அந்தரங்கமான
ஓரினச்சேர்க்கையில்
அதுவரைக்கும்
மனதின் போர்வைக்குள்ளிருந்த
இன்னொருத்தி
அவளை விழுத்தினாளென்பது
உபகதையில் கவனம் பெற்றுவிட்டது,
உரையாடல்கள்
எதிர் பாலினங்களின்
அர்த்தமிழக்கும் தருணங்களிலும்
முகபாவனைகள்
அசையவிடாமல் கட்டிப்போட்டது,
பொறாமையிலும்
காதலைப் பாடலோடு மோதவிடும்
ஒரு காட்சியில்
மொழிபுரியாத பார்வையாளனுக்கும்
உலக எல்லைகள்
அந்தரத்தில் விரிந்துகொள்ள
காதலியும் காதலியும்
மறுதலிப்புக்களற்ற
முத்தங்களை
ஸ்பரிசிக்கத் தொடங்கும்போது
படம் முடிந்துவிட்டது.!