Tuesday 25 August 2015

வாடைக்காற்று

ஒரு  எழுத்துருவில்  வந்த ஒரு  நாவலைப்  படமாக்குவது  எப்பவுமே  சவால் நிறைந்த ஒரு முயற்சி. இலங்கையின் முக்கிய  தினசரியான வீரகேசரியில்  தொடராக  வந்த  கதை வாடைக்காற்று. அதைப் படம் ஆக்கினார்  ஈழத்து ரத்தினம்  என்ற தயாரிப்பாளர். அதுவும் முப்பத்தைந்து   சொச்சம் வருடங்களின் முன். அப்போது  இலங்கை  எல்லா  இன மத மொழி மக்களும் ஒன்றாக இருந்த நேரம் . அப்படி வந்த வாடைக்காற்று  என்ற படத்தைப் பற்றி நோர்வே நாட்டு தலைநகர்  ஒஸ்லோவில்  இருந்து ஒரு மீள்பார்வை செய்கிறேன். 

                                              யாழ்பானத்தில் ராணி தியேட்டரில் ஓடிய , இலங்கைக் கலைஞர்கள் பலர் ஒன்றாக ஆளை ஆள் நீயா நானா எண்டு முரண்டு பிடிக்க்கும்  ஈகோ இல்லாமல்  சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள் நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. அந்தப் படத்தின் ரீல் களையே  என்பது மூன்று  அடிக்கலவரத்தில் சிங்களக்  காடையர்கள்  எரித்து விட்டார்கள்  என்றும் சொல்கிறார்கள் 

                                    அந்தப் படம் ராணியில்  ஓடியபோது வெளியே ஒரு கறுப்பு  வெள்ளையில் ஆர்டிஸ்ட்  மணியம் வரைந்த   பெரிய கட்டவுட் வைச்சு இருந்தார்கள். அதில் ஒரு மீனவப் பெண் சீத்தைத் துணியில் தைத்த பிளவுசும், பூப்போட்ட சரமும் கட்டி இடுப்பில் சாளை மீன் அள்ளும் ஓலைப்பிரம்புக் கூடையை வைச்சுக்கொண்டு ஏக்கமாக  அலைகளில்  அடித்துச் செல்லப்பட்ட  வாழ்க்கை ஒன்றின் சொல்லமுடியாத  வழியைப்  பார்வையில் ஏற்றிவைத்து  அந்தப் படத்தின் ஜீவனை வெளிக்கொணர்ந்திருந்தார்கள்.  

                                       மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற 'வாடைக்காற்று' படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெரிய இழப்பு என்று இள வயதில்என்னைப்போல அந்தப் படம் பார்த்த பலருக்கு தெரியும்.

                                      செங்கை ஆழியன் என்ற கலாநிதி கந்தையா குணராசா எழுதிய வீரகேசரிப் பிரசுரமாக வந்த வாடைக்காற்று நாவலாக வாசித்த காலத்திலேயே கொஞ்சம் ஜனரஞ்சகமா. கிளாசிகல் சுவாரசியமா இருந்த அதை , நாவலின் பெயரானா வாடைக்காற்று பெயரிலேயே திரைப்படமாக்க, கதை நெடுந்தீவில் நடப்பதால் அங்கேதான் ஏ. வீ. எம். வாசகம் என்ற காமராமான் ,கமராவை வைச்சு சுழட்டி எடுத்து இயற்கைக்கு உயிர் கொடுத்து இருப்பார் எண்டு நினைத்திருந்தேன்,

                                           உண்மையில், வெள்ளித் திரையில் கறுப்பு வெள்ளை படத்தொகுப்பிலும் மின்னிய ,கடல் கரை, அதை தழுவும் அலைகள், பனங் காணிகள், கன்னாப் பத்தைகள் ,பனை வடலிகள், கோவேறு கழுதைகள்,பிளமிங்கோ பறவைகள், மணல் கும்பிகள் எல்லாம் ,கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது என்று படித்த போது ஆச்சரியமா இருந்தது.

                                      நெடுந்தீவில் வேலை செய்த போது செங்கை ஆழியன் கவனித்த விடயங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை பின்னர் அந்தக் கதை நடந்த நெடுந்தீவில்ப் படமாகப் பட முடியாமல்ப் போனதுக்கு முக்கிய காரணம் அந்த கதையை நாவலாக எழுதிய செங்கை ஆழியன், நெடுந்தீவு மக்களின் தோற்றம் ,ஹோலந்த் என்ற டச்சுக்காரர்கள் அந்த மக்களின் முன்னோர்களின் வழியில் ,வம்சத்தில் குறுக்கிட்டதால் ஏற்பட்ட சில ஜீன் மரபு ரீதியான தோற்ற வெளிப்பாட்டை அந்தக் கதையில் எழுதியதால், நெடுந்தீவில் அவர் சிவில் அரசாங்க அதிகாரியா வேலை செய்த அலுவலகம் முற்றுகை இடப்பட்டு,அடித்து நொறுக்கப்பட்டு அவருக்கு எதிராக வழக்கும் போடப்பட்டது எண்டு சொன்னார்கள்.

                                      இரவினிலே இறைவனை நம்பி தொழிலுக்காக செல்லும் மனிதர்களின் கதையான வாடைக்காற்று , வங்காள விரிகுடாவில் ஆவேசமாக எழும்பும் வாடைக்காற்று காலத்தில் மன்னாரில ,கரையூர்ல இருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, காதல் ,ஒரு கற்பழிப்பில் சூடு பிடிச்சு, ஒரு கொலையில் முடியும் இதுதான் கதை . கதை இரண்டு பருவங்களில் ,கூளைக் கிடாய் என்ற பிளிகன் பறவைகள் ரசியாவின் சைபிரியாவில் இருந்து நெடுந்தீவு வந்து இறங்க,அவைகளின் வரவோடு கதை தொடங்கி , மனிதர்களின் விரிசல்களோடு கதை நடக்கும்.

                              சில வருடம் முன் மன்னாரில் இருந்து வந்து வாடிவீடு கட்டி தொழில் செயத சம்மாட்டி செமியோன் ஆக பொப் இசைப் பாடகர் ஏ இ மனோகரன் நடிக்க , உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா என்ற பெண்ணாக சந்திரகலா நடித்து இருந்தார். செமியோனுக்கும்,பிலோமினாவுக்கும் இடையில் இருந்த ஒரு வித காதல் கலந்த உறவு, அவளது அப்பா , அண்ணன் ஆகியோருடன் செமியோன்க்கு ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது.

                                   உள்ளூர்க்காரரான பொன்னுக்கிழவர் ஆக நடித்த "முகத்தார் வீடு " புகழ் ஜேசுரட்னம், பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிற அவர், உள்ளுரில் கோவேறு கழுதையில் சுற்றித் திரியும், பத்தைக் காடுகளில் முயல் பிடிக்கிற அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலம் ஆக நடித்த அண்மையில் மறைந்த கே எஸ் பாலச்சந்திரனுக்கு அவளை கலியாணம் செய்து வைக்கவேண்டுமென்று ஆசைப்பட, மன்னாரில் இருந்து வந்த சம்மாட்டி வேதக்கார செமியோன், சைவக்கார நாகம்மாவையும் மனம்மாற்றி மயக்கிக் கொண்டுபோக சண்டை தொடங்குது.

                                  இந்தப் படத்தில மரியதாஸ் என்ற பாத்திரத்தில் நடித்த ,வைத்திய நிபுணர்,சில வருடம் முன் லண்டனில் மறைந்த டாக்டர் இந்திரகுமார் சிமியோனுகுப் போட்டியா வாற சம்மாட்டியா நடித்து இருந்தார், ஒரு டாக்டர் எதுக்கு தமிழ் சினிமாவில நடிச்சார் எண்டு இன்னுமே விளங்கவில்லை. மிகவும் அடக்கமான  புகழ் விரும்பாத டாக்டர்  இந்திரகுமார்   இலண்டனில் அவர்  இறந்தபோதுதான்  பலருக்குத் தெரியவந்தது  அவர்  ஒரு  ஜனாதிபதி விருது வேண்டிய நடிகரும் என்று .


                                             செமியோன் சம்மாட்டி வழக்கமாக மரியதாஸ் வாடி போடும் இடத்திலே பலாத்காரமா வாடி போட்டுத் தொழில் செய்ய, பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுக்க, இவளவு நாட்டாண்மை செய்தும் செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே அதிகம் லாபம்,தொழில் வெற்றி கிடைக்க தொடங்க கதையில் வாடைக்காற்று திசை மாறி எதிர் எதிர அடிக்க தொடங்குது.

                                      டாக்டர் இந்திரகுமார் அவரது தொழில்சார் துறையாகிய மருத்துவத்துறையில் நிபுணராக விளங்கியதுபோதும்,தமிழ் மொழியின் மீதும், நடிப்புத் துறைமீதும் அதிகம் விருப்பம் இருக்க அவருடைய திறமைக்குச் சான்றாக அவர் மரியதாஸ் ஆகா நடித்த வாடைக்காற்று திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றுக் கொடுத்திருக்கு. 


                                   எழுத்தாளராகவும், மருத்துவராகவும் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய டாக்டர் இந்திரகுமார் 1983 கலவரத்தில் லன்டனுகுப் புலம் பெயர்த்து 25 வருடங்கள் அங்கே பிரபல வைத்திய நிபுணரா வேலை செய்த அவர்தான் வாடைக்காற்றுபடத்தில , உயர்த்திக் கட்டிய சரத்தோட , சேட்டும் போடாமல், " அப்புவைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வியா " எண்டு ஒரு " பன்ச் டயலக் " எப்பவுமே அவரின் காதலி நாகம்மாவிடம் குறும்பாகக் கேட்டு ,கடற்கரை எங்கும் மணல் வெளியில்க் காவியம் எழுதிய மரியதாஸ் எண்டு பலருக்கு தெரியாமலே போனது.....

                                            சுடலைச் சண்முகம் என்ற பாத்திரமாக ஜவாஹர் என்பவர் நடித்து இருந்தார் ,உண்மையில் அந்தப் பாத்திரம் தான் படத்தின் கதையில் முக்கியமான பல திருப்பங்களைக் கொண்டுவரும் .ஊர்த் திருவிழா நடக்கிற நேரம் , செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிற இரவு இருட்டு நேரத்தில , இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட. அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன சிமியோனின் மீன் கொத்தி பறவை போல அழகான காதலி பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடடுகிறார் 


                            இதில  கதை  இன்னொரு  திசை நோக்கி திரிலர் படங்கள் போல உருவெடுக்கும் . எப்படியோ  நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்ல , விருத்தாசலம் பாத்திரமாகவே மாறி கேஸ் எஸ் பாலச்சந்திரன் அதில் நடித்து இருகிறார்..

                                           இவளவு குழப்பமும் வெளியூர் மீனவர்களால் உள்ளுரில் நடக்க அதை எங்கள் செங்கை ஆழியன் கதையாக எழுத வெள்ளித்திரையில் பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் டைரக் செய்து, கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றி, ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன்எழுதிய, பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க பாட, திரைக்கதை..வசனம் கே.எம்.வாசகர்   என்ற யாழ்பாண எழுத்தாளர் எழுதி இருக்கிறார்..


                              . இதில் புலோமினாவின் அண்ணன் சூசையாக தற்சமயம் ஐரோப்பாவில்,சுவிஸ்லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் குணபதி கந்தசாமி ஐயாவும் நடித்து இருக்கின்றார். 

                              இந்தப்  படத்தின்  " தீம் சாங் " என்ற  " வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே..."   என்ற  பாடல்  இலங்கை வானொலியில்  மிகவும் பிரபலமாக  இருந்தது.  அந்தப்  பாடலின்  மூன்று  சரணங்களும்  வேறு வேறு விதமான  உணர்வுப் பிழிவாக இருக்கும் .  ஒருவருடத்தில் ஒருமுறைதான்  வரும்  வாடைக்காற்றை  நம்பி  வாழும் ஒரு உழைப்பாள சமூகத்தின் அத்தனை அவலங்களையும் அந்த  ஒரு பாடலில் சொல்லியிருப்பார்கள் .  இந்தப்  படத்துக்கு டி எப்  லத்திப் இசை அமைத்து  இருந்தார்.

                                   யாழ்பாண தீபகற்பத்தின் நிலப்பரப்புக்கு வெளியே வங்காள விரிகுடாவின் அலைகள் தாலாட்டும் ஒரு சின்னத் தீவான நெடுந்தீவில் ஒரு சம்பவம் ஒரு கதையின் உயிர் ஆகி ,
நீல கடல் மீதினிலே ஓடமிது நீங்கி வரும் கலையிலே நாளுமிது வலைவீசி வாழுகின்ற கூட்டமிது,நாங்கள் வாழுவது கடலோரம் குடிசையிலே  எங்கள்  குடிசையிலே என்று மீனவ சமூகத்தின் வாழ்வின் தொடர்கதை வெள்ளித்திரையில்த் தவழந்து எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட வாடைகாற்று அசைக்கமுடியாத இலங்கைத் தமிழரின் சரித்திர சாதனை ....


                                 இலங்கை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் ஜோசப் ராசேந்திரன் பாடிய இதயம் பிழியும்" வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே ,நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓரத்திலே ..." என்ற பாடலைப் பின்னணியில் நீலக்கடல் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் போது, விருத்தாசலம் ஆசையோடு கனவோடு காத்திருந்த அவரின் காதலி மரியதாஸ் சம்மட் டியோடு போக மனநிலை நொந்துபோக , சம்மடடி செமியோனும் பிலோமினா கற்பழிக்கப் பட்டுக் கொலை செயப்பட இழப்பினால் வருந்த, மரியதாஸ சம்மாட்டி நாகம்மாவை ஊரை விட்டுப் கூடிக்கொண்டு போகிறார் 


                         இலங்கைக்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத  கூளைக்கிடாய் என்ற பிளிக்கன் பறவைகளும் தங்கள் சொந்த ரஸ்சிய நாட்டு சைபிரியாவுகுப் போக , மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது. வாழ்கை தொடருது. பிளிக்கன் பறவைகளின் வரவையும்  அவைகளின் புறப்படுதலையும் சிம்போலிக் ஆக செங்கை ஆழியான்  அவர் நாவலில் எழுதி இருப்பார். வாடைக்காற்று எடுத்த டீம்  அதை  இன்னொருபடி மேலே போய்  விஷுவல் ஆக  வெள்ளித்திரையில் பின்னி எடுத்தார்கள் .

                             கண்களில் கண்ணீரை வரவழைத்து , உலகம் மறந்து கடற்கரை மணல் வெளி எங்கும் வலியோடு யதார்த்தமாய் வாழ்க்கை சொன்ன அழகின் அற்புதம் வாடைக்காற்று' , தென்னிந்திய சினிமா ஜிகிணா முகப் பூச்சு , அளவுக்கு அதிகமான மேக் அப் , நேரம் கெட்ட நேரத்தில கனவுக் காட்சி, ஹீரோவுகுக் கும்மியடிக்கும் குறுப் டான்ஸ் , இதுபோல ஒண்டுமே இல்லாமல் , மீனவ மக்களின் வியர்வையின் வாசத்தை, அவர்களின் இளகிய இதயத்தை திரையில உணரவைத்த அந்தப் படம், ஒரு கவிதை போல ஜோசிக்க வைத்து முடிவு இன்னொரு பருவத்தின் தொடக்கமாகி முடிகிறது.


                                 நம்மவர்களும்  சளைத்தவர்கள் இல்லை  என்று  சேட் கொலரை தூக்கி விட்டு  பெருமைப்பட வைத்த விதத்தில் வாடைக்காற்று   ஒரு பெருமழை பெய்து  முடித்த நிகழ்வுபோல இருக்கும்  அந்தத் திரைப்படம் பார்த்து  முடியும் போது .  அதைவிட அந்தப் பெருமழையில்   நனைந்தது  போலவே  உணர்வோடு ஓட்டிகொண்டு சில  கண்ணீர் துளிகளையும்  சிந்திவிட்டு வரவேண்டிய ஒரு காவியம்  வாடைக்காற்று.

.