Wednesday 19 August 2015

புல்லாங்குழல் மாஸ்டரின் கோமதி அன்ரி..

எங்களின் ஊரில சின்ன வயசில எங்களின் வீட்டுக்கு அருகில் ஒரு புல்லாங்குழல் மாஸ்டர் இருந்தார், அவர் எங்கள் ஊர் ஆரம்ப இடைத்தர பள்ளிக்கூடத்தில சங்கீத ஆசிரியராகப்  படிப்பித்தார், அவர் பள்ளிக் கூடத்தில புல்லாங்குழல் வாசிக்கமாட்டார் என்றுதான் நானே அதில் படித்த காலத்தில் கண்டிருக்கிறேன். . சரி கம ப த நி ச எண்டு சங்கீதம் மட்டும் படிப்பிப்பார்.

                                      ஆனால் வீட்டில ஒவ்வொரு சைசில புல்லாங்குழல் மேசையில கிடக்கும், சிலதை சுவரில கட்டி தொங்க விட்டிருப்பார் . அரசம் இலையில குழந்தை மாயக்கண்ணன் படுத்துக் கிடந்தது கொண்டு புல்லாங்குழலை வாயில வைச்சு அதைக் கரும்பு கடிக்கிற மாதிரி கடிச்சுக்கொண்டு கோகுலத்துப் பெண்களை  பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு படம் அவர்கள் வீட்டில ஹோலில பெரிதாகா ப்ரேம் செய்து மாட்டி இருக்கும் .

                                        புல்லாங்குழல் மாஸ்டர் வீடிலையும், புல்லாங்குழல இரவு நேரம், வீட்டு கதவு, ஜன்னல் எல்லாத்தையும் இறுக்கிச்  சாத்திப் போட்டுதான் வாசிப்பார். அதன் குழல் ஓசை  " பன்னீர் மழை சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களே..."   என்று மயங்கி மயங்கி காற்றில் வரும்,ஆனால் புல்லாங்குழல் மாஸ்டர் அதைக் கையில் வைத்து வாசித்ததை எங்கள் அயலட்டையில் யாருமே பார்த்ததில்லை 

                                                     புல்லாங்குழல் மாஸ்டருக்கு எல்லாமே சங்கீதம் ,அவரோட வீட்டு வெளிப் படலையில்  தபால்க்காரன் மணி அடிச்சா அவனிட்ட கடிதம் வேண்டமுதல் அந்த  பெல் சத்தம் காரிகாம்போதி ராகம் போல இருக்கு எண்டுவார் ,அவன்  மண்டையைச் சொறிஞ்சு சிரிப்பான்.  பாண் விக்கிறவன் காலையில் வண்டிலில் அடிக்கிற ஹோர்ன் சத்தத்தை  ஆபேரி எண்டுவார், அவன் வாயத் திறக்காமல் இளிப்பான்.  பக்கத்துக்கு வீட்டு  அம்பலவாணர் தாத்தா அடித் தொண்டையில் ரெயில் போற மாதிரி  குரலில் இருமினா அது கரகரப்பிரியா எண்டுவார், நல்ல காலம் அம்பலத் தாத்தாவுக்கு காது கேட்காது.

                                                      புல்லாங்குழல் மாஸ்டர்  வீராளி அம்மன் கோவிலுக்கு பின்னால , விளாத்தி ஒழுங்கை தொடங்கிற முதல் முடக்கு வீட்டில அவரின் மனைவியோடு அவரோட அம்மா வழியில் வந்த   கல் வீட்டில வசித்தார்கள், நாங்கள் அன்பாக அவரோட மனைவியை மாஸ்டர் அன்ரி எண்டு சொல்லுவோம் , மாஸ்டர்  அவர் பாட்டில, காலையில பூபாள ராகம் ,மாலையில நீலாம்பரி ராகம் எண்டு ரகசியமா வேணுகானம் வாசித்துக்கொண்டு வசித்தாலும் ,அவர்களுக்கு வீடு முழுவதும் புல்லாங்குழலும் ,அதன் மயக்கும் இசையும் இருந்தது ஆனால், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை!.

                                            இளவயதில் அவர் வீட்டுக்கு சும்மா புல்லாங்குழல் தொங்கிரத்தை, மாஸ்டர் சில நேரம் பாடுறதை  வேடிக்கை பார்க்க போவேன். ஆனாலும் மாஸ்டர்  வாயதை திறந்தால் சங்கீதம் வெளிய போயிடும் போல அதிகம் கதைக்க மாட்டார், புறங்  கையால மட்டும் தொடையில் தட்டி தாளம் போட்டுக் கொண்டு ,வாயிட்குள்ள ஏதாவது ஒரு ராகத்தின் ஆரோகணம்,அவரோகணத்தை முணுமுணுத்துக்கொண்டு இருப்பார்,

                                               மாஸ்டர்  அன்ரி நல்ல  பெண்மணி .அன்பாகக் கதைப்பா  அம்மாவை விசாரிப்பா ,படித்தவா , நாலு நல்ல விசியம் தெரிந்தவா ஆனால் அநாவசியமா தனக்குப் பல விசியம் தெரியும் எண்டு காட்டிக்கொள்ள மாட்டா . அவாவின் அப்பா ஒரு அப்புக்காத்து என்ற வழக்கறிஞ்சர் எண்டு சொல்லுவார்கள். ஆனால் மாஸ்டர் அன்டி எங்கேயும் வெளியே போக மாட்டா. கோவிலுக்கே போக மாட்டா. சந்தியில் இருந்த  சில்லறைக்கடை மனியதிட்ட கடைக்கு மட்டும் மரக்கறி.சரக்குச் சாமான் வேண்டப் போவா. 

                                    தாய் வழிச் சொத்தான தென்னம் தோப்புக் காணியை தன் பெயரில் மாற்றிக்  காணி உறுதி எழுத பிரக்கிராசியிடம்  போன புல்லாங்குழல் மாஸ்டர் , அந்த நேரம் இளமை ஊஞ்சல் ஆடிய அன்ரியின் மோகன ராக அழகிலும் ,சிவரஞ்சனிக் கலர்  நிறத்திலும், ஹம்சத்வனி நனைத்த  இளமையிலும் கண்ணை வைச்சு, வயசாகி  பைல் கட்டைத்  தூக்கிக் கொண்டு கோட்ர்ஸ் இக்கு போகவே தடுமாறிய , கொஞ்சம் வருமானத்துக்கு அல்லாடிய அப்புக்காத்துக்கு வாயால வெட்டி வங்காளம் போற புண்ணியக்குஞ்சியைத் தூது  அனுப்பி,  பள்ளிக் கூடத்தில படிப்பிக்கிற அரசாங்க உத்தியோகத்தை முன்னால தூக்கிப்போட்டு .

                     " சட்டத்தரணி  மாஸ்டர் நல்ல மனுஷன்,  கலியாணம் கட்ட வயதைப்பற்றி  விசுவாமித்திரர் போல ஜோசிக்க தேவையில்லைக் காணும் , என்னதான் சொன்னாலும் கலியாணம் ஆயிரம் காலத்துப் பயிர் அது தான் ஒரு பொம்பிளைக்கு மரியாதை,பாதுகாப்பு, மாஸ்டர் படிச்ச மனுஷன் ,உம்மட பிள்ளையை கண் கலங்காமல் வைத்துக் காப்பாற்றுவார் , நீர் பயப்பிடாமல் ஓம் எண்டு சொல்லும் காணும்  , மிச்சம் நான் பார்க்கிறன் காணும் "

                              எண்டு வசியம் வைச்சு, ஒரு மாதிரி அன்ரியை சப்த ரிஷிகள் சாட்சியாக  மணவறைக் கோலத்தில அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்க வைச்சிட்டார் ஒரே ஊருக்குள்ள  ரெண்டு கலியாணம் கட்டி, மூன்றாவதா ஒரு சின்ன வீடும் அரசல் புரசலா வைச்சு இருந்த புண்ணியக் குஞ்சி என்ற புண்ணிய மூர்த்தி சித்தப்பு. இப்படிதான் பிரக்கிராசியின் கடைசி மகள் புல்லாங்குழல் வீட்டுக்கு மகாலஷ்மியாக வந்து கொஞ்சநாளில் மாஸ்டர் அன்டி ஆகின இதிகாசம். 

                            எப்பவும் போல சும்மா விடுப்புப் பார்க்க மாஸ்டர் வீட்டை போவேன். அப்படிப்  போன ஒருமுறை அவர்கள் வீட்டு ஈசி செயாரில மாஸ்டர் படுத்து இருந்துகொண்டு ஏதோ ஒரு ராகத்துக்கு மேல ஏறி உக்காந்து அதன் ஆலாபனையில் மேகத்தில பறந்துகொண்டு இருந்த நேரம் நானும் சும்மா கேட்டுக்கொண்டு இருந்தேன் அவர் என்ன  வாயுக்குள்ள பாடுறார் என்று .

                            அவர் பாடி முடிய , கண்ணை மூடிக்கொண்டு படுத்து இருந்த புல்லாங்குழல் மாஸ்டரிடம் , நான் அவருக்கு முன்னால சீமெந்து நிலத்தில குந்தி இருந்துகொண்டு

                      " மாஸ்டர் எனக்கு கன நாளா ஒரு சந்தேகம் , புண்ணாகவராளி ராகம் வாசித்தா பாம்பு மயங்குமா? "

                        எண்டு என்னோட சந்தேகத்தை கேட்டேன், அவர் அதுக்கு

                       " திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அதை நாதஸ்வரத்தில் வாசித்தால் பாம்பு அதைக் கேட்டு மயங்கும், அந்த ராகத்துக்கு  நாக ராம பத்திரன் இராகம் என்றும் பெயர் , வராளிக்கு  மயங்காத நாக பாம்பும் உண்டோ என்ற ஒரு  பாபநாசம் சிவன் உருப்படியே  இருக்கு , "

                                           எண்டு சொல்லி அந்த ராகத்தின் சரளி வரிசையைப் பாடிக்காட்டினார்.

                       " திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை பாம்புப் புத்துக்கு அருகில் இருந்து வாசித்தாரா "

                           எண்டு கேட்க நினைச்சேன் ஆனால் அது அவளவு முக்கியம் இல்லை எண்டு நினைச்சு,வேற ஒரு கேள்வியைக் கேட்டேன். அதையும் கொஞ்சம் ஜோசித்து தான் கேட்டேன், நான் கேட்டது

                            " பாம்புக்கு காது இல்லை ,என்று சொல்லுறார்கள் பிறகெப்படி மாஸ்டர் அதுக்கு இராகம் வாசிப்பது கேட்கும், அதுவும் இது புன்னாகவராளி ராகம் தான்  என்று அதுக்கு எப்படித்  தெரியும்  ?"  

                                எண்டு ,என்னோட இன்னுமொரு நீண்டநாள் சந்தேகத்தை அவரிடம் கேட்டேன் , புல்லாங்குழல் மாஸ்டர் கொஞ்சம் ஜோசிச்சுப் போட்டு

                                 " பாம்புக்கு காது இருக்கிறபடியால் தான் கேட்டு மயங்குது " எண்டு சொல்ல ,நான்

                              " பாம்புக்கு காது இல்லை  "

                          என்று  உறுதியாகச்  சொன்னேன் ,அவர் ஜோசிச்சுப் போட்டு

                             " இஞ்சேருமப்பா , இவன் பொடியன் என்னவோ அகராதி கரைசுக் குடிச்சவன் போல பாம்புக்கு காது இல்லை எண்டு சொல்லுறான் , நீர் ஒருக்கா வடிவா விளக்கமா சொல்லும் "

                               எண்டு குசினிப் பக்கம் பார்த்து சொல்ல ,மாஸ்டர் அன்ரி , சேலைத் தலைப்பால கையை துடைச்சுக்கொண்டு வந்து , குசினி கதவில சாஞ்சுகொண்டு, கொஞ்ச நேரம் ஜோசித்து , நாங்கள் கதைத்துக்கொண்டு இருந்ததை கேட்டது போல , என்னையும் மாஸ்டரையும் மாறி மாறிப் பார்த்தா. அவா பார்த்ததைப் பார்க்க  மாஸ்ட அன்டிக்கு பாம்புக் காது என்று சொல்லுவார்களே அது இருக்குமோ என்று எனக்கு சந்தேகமா இருந்தது. அன்டி வேற என்னவோ நினைவில் நிற்பதுபோல 

                                         "பாம்புக்கு காது இல்லை, அது உண்மை, பாம்புக்கு காது இருந்தால் என்ன இல்லாட்டி என்ன ,உயிருள்ள மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத உலகத்தில ,பாம்புக்கு காது இருந்தால் என்ன இல்லாட்டி என்ன ",

                                   எண்டு விரக்தியா அன்ரி மெல்லிய குரலில் சொல்ல ,புல்லாங்குழல் மாஸ்டருக்கு சின்னக் கோபம், ஏமாற்றம் வந்திட்டது,.மாஸ்டர் ஈசி செயரை விட்டு எழும்பி , குசினிவாசலை பார்த்து 

                                  " இப்ப நீர் என்ன சொல்லுறீர் " எண்டார், அந்த அன்டி பயபிடமா

                                   " பாம்புக்கு காது இல்லை, அது உண்மை, மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத உலகத்தில ,பாம்புக்கு காது இருந்தால் என்ன இல்லாட்டி என்ன ",

                                   என்று அலட்சியமா சொன்னா. இப்ப மாஸ்டடருக்கு கோபம் அண்டம் குண்டம் எல்லாம் பத்திக் கொண்டு வர,

                                            " என்னடி சொன்னனி, செத்தேல கிடந்ததுகளைத் தூக்கி மெத்தையில வைச்சா இப்பிடித்தான் ,வாய்க் கொழுப்பு காட்டுங்கள் " எண்டு சொல்லிக்கொண்டு, என்னைப் பார்த்து

                                    " இனி நீ இந்த வீடுப்பக்கம் வரக் கூடாது,சொல்லிபோட்டன் இனி நீ இந்த வீடுப்பக்கம் வரக் கூடாது ",

                                   எண்டு போட்டு ,கையில கட்டி இருந்த மணிக்கூட்டைக் கழட்டி மேசையில எறிஞ்சு போட்டு குசினிக்கு உள்ள போய் புல்லாங்குழல் மாஸ்டர் அந்த அன்ரியை , ரூபக தாளம் திஸ்ர நடையில குசினியில் போட்டுக் கும்மி எடுக்க ஆச்சரியமா இருந்தது ,

                                     "  என்னை எதிர்த்து பேச வெளிக்கிட்டுட்டாய், நான் ஆர் எண்டு இண்டைக்கு உனக்குக் காட்டுறேன், நண்டுக்கு .சதை கெண்டு  கிளப்பிக்கொண்டு   வந்தா  வளையில சும்மா கிடக்காதாம் ...என்னையே  எதிர்த்து பேச வெளிக்கிட்டுட்டாய்  தூமை , நான் ஆர் எண்டு இண்டைக்கு உனக்குக் காட்டுறேன் பாரடி இப்ப,,,இப்ப  காட்டுறேன் ,,"

                                அந்த அன்டி ஒரு எதிர்ப்பும் சொல்லாமல் அடி வேண்டிக்கொண்டு இருந்தா, மாஸ்டர் மிருதங்கம் மத்தளம் அடிக்கிற மாதிரி  அவாவின்  சீலையை சுருட்டிப் பிடிச்சு அதே கையால தலை மயிரையும் சேர்த்துக்  கும்மி பிடிச்சு மற்றக் கையால முதுகில போட்டுக் கும்மி எடுத்து வெளுத்துக்கொண்டிருக்க  நான் திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமா ஓடி வந்திட்டேன்.  

                                         புல்லாங்குழல் என்ற மென்மையான காற்று வாத்தியத்தை வாசிக்கும் மனிதனுக்குள் இவ்வளவு வைராக்கிய கோபம் எப்படி இருக்கு எண்டு ,என்றாலும் பொது வெளியில் பெரும்பாலானா ஆண்கள் ரெம்ப நல்லவர்கள் போலதானே இமேச்சை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ,நான் சத்தம் இல்லாமல் நழுவி வீட்டை வந்து ,ஹோல் மூலையில பிள்ளையார் சிலைக்கு முன்னால இருந்து கொண்டு சமயப் புத்தகத்தை எடுத்து கையில வைச்சுக்கொண்டு  ,

                                      " பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் , நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்ச் செய்   ....," எண்டு பிள்ளையார் காலுக்க நசிபடுற மூஞ்சூறை நினைத்துப் பாட , அம்மா பார்த்திட்டு ,

                                           " என்ன இண்டைக்கு பக்தி அமோகமா பரவசமா வழியுதே ,,நீ என்னவோ குழப்படி செய்துபோட்டு பம்முற மாதிரி கெடக்கே எண்டா  செய்தனி "  எண்டு சந்தேகமாக் கேட்டா, நான்

                                   " புல்லாங்குழல் மாஸ்டர்  வீட்டை சும்மா போனேன் , என்னவோ கதைவெளி வர  மாஸ்டர் அந்த அன்ரியை இண்டு அடிச்சுப் போடார் ,  அதை நான் பார்த்திட்டு ஓடி வந்திட்டேன் ," எண்டேன் ,

                                   " மாஸ்டர் அடிச்சவரோ ,,என்ன கதை சொல்லுறாய் ,,முதல் உனக்கு அதெல்லாம் என்னண்டு தெரியும் ?"

                                        எண்டு அம்மா கேட்டா ,நான் பாம்புக்கு காது இல்லாத கேள்வியில் தொடங்கி .. சண்டை வந்தது...மாஸ்டருக்கு கொதி வந்தது ... முழுவதும் சொல்லி முடிய அம்மா ,

                                                " இப்ப உனக்கு எதுக்கடா இந்த தேவை இல்லாதா கேள்வியும் ,சந்தேகமும், ஊர் சண்டையும் "

                                                    எண்டு பேசப்போராவே எண்டு நினைக்க.அம்மா என்னைப் பேசவில்லை, பதிலா அவாவும்

                                  " பாம்புக்கு காது இல்லை எண்டு உனக்கு எப்படி தெரியும் "
                                         
                                      எண்டு கேட்டா, நான் சயன்ஸ் புத்தகத்தில படிசேன் எண்டேன் ,அம்மா அதுக்கு ஜோசிசுப்போட்டு ,

                                              " அப்ப பாம்பு எப்படி இருட்டில தவளை பிடிக்குது "

                                              எண்டு கேட்டா, நான் அது ஒலி அதிர்வுகளிலும் , வெப்ப உணர்வு உணரிகள் என்ற கலங்கள் மூலம் கண்டு பிடிக்கும் எண்டேன் , அம்மா ஒண்டு மட்டும் சொன்னா

                                             " கோமதி ,பாவம், அவள் நல்லாப் படிச்சுக்கொண்டு கம்பஸ் போற அளவில  இருந்த நேரமே,  சிவநாஜகம்   மாஸ்டர் அரசாங்க உத்தியோகம் பார்கிரதால ,கோமதியிண்ட தகப்பன் பிறக்கிராசி  , இந்த மனுசனை செய்து வைக்க, மனுஷனுக்கு மூலக் கொதி வருமாம் ... இப்படி கன வீடுகளில் பிரச்சினை வருகுது, நீ  என்னத்துக்கடா தேவை இல்லாமல் அடுத்தவர் வீடுகளுக்குப்  போய் அனாவசியமா பாம்புக்கு காது இருக்கா , பாம்பு அந்தக் காதில தோடு போட்டிருக்கா எண்டு கேள்வி எல்லாம் கேட்கிறாய் ,,பேசாம உன் வேலயப்பார்துக்கொண்டு  இரடா  "

                                எண்டு சொல்லிக்கொண்டே போயிட்டா, அங்கே அந்த வீட்டில சண்டை அடிக்கடி நடக்கிறது அவாவுக்கு தெரியும் போல ,அல்லது எங்கட வீட்டுக்கு கீரை விக்கக் கொண்டுவாற கடகத்துக்க ஊர் விடுப்பு விண்ணாணம் சேர்த்து அடிக்கிக் கொண்டு வாற ப்ரேகிங் நியூஸ் குஞ்சரம் ஆச்சி சொல்லி இருக்கும் எண்டு நினைக்கிறேன்.....,

                       புல்லான்குழல் அன்ரியை நினைக்க பாவமா இருந்தது, சில வருடங்களின் முன் அந்த அன்டி தான் படிச்ச புத்தகங்கள் எல்லாத்தையும் ஒரு அறையில அலுமாரியில அடுக்கி வைச்சு இருந்தா, நான் அந்த இங்கிலிஸ் புத்தக தலைப்புகளை சும்மா படம் பார்த்துக்கொண்டு இருந்தேன்

                                    ஒரு நாள் அந்தப் புத்தகங்களில் ஒரு புத்தகத்தைத்  திறந்து பார்த்தேன் , " Biology: A Functional Approach " என்ற அந்தப் புத்தகத்தில சிவப்பு பேனையால பல இடத்தில அடிக்கோடு கீறி,பென்சிலாலா குறிப்பு எழுதி, மிகவும் ஆர்வமாக அந்த அன்டி படிச்ச அடையாளங்கள் அதில அழியாமல் இருந்தது. அன்டி படிப்பில புலி எண்டுதான் ஊருக்குள்ள பலர் சொல்லுவார்கள். ஆனால் கலியாணம் இடையில் வர படிப்பைத் தொடர முடியவில்லை

                        அந்தப்  புத்தகத்தில் ஒரு மயில் இறகு வைத்த ஒரு இடதில

                         " உன்னோடு ஒருநாள் ,,,,இல்லாடி ஒருநாளும் இல்லை ........"

                                         எண்டு ஒரு காதல் கவிதை எழுதி இருந்தது .  அந்த  அன்ரி நல்லாதான் படிக்கிற காலத்தில படிச்சு இருக்குறா போல இருந்தாலும் ,யாரையோ ,யாருக்கும் சொல்லாமல்  மனதோடு பேசிக்கொண்டே காதலித்து இருந்தா போலவும் இருந்தது. அதில பிழையும் இல்லை. இள வயதில் காதல் வரமால் குடுகுடுக் கிழவியான பிறகு அது வந்து என்ன பிரயோசனம் .

                                       நான் புத்தகம் பிரட்டிப் பார்க்கிரத்தை பார்த்திட்டு அந்த  அன்ரி அந்த புத்தகத்தை வேண்டி,கொஞ்சநேரம் பார்த்தா,அவாவின் கண்ணில இருந்து கண்ணீர் வழிந்து. அது முத்து முத்தா புத்தகதில டொக்கு டொக்கு எண்டு விழுந்திச்சு, நான் பயந்திட்டன்,

                          " ஏன் அன்ரி அழுகுறீங்க "

                                  எண்டு கேட்க நினைச்சேன்,ஆனால் அன்ரி வாய்விட்டு அளவில்லை முகத்தை ஏமாற்றதில் தொலைத்த மாதிரி வைத்துக்கொண்டிருக்க, கண்ணில இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டு இருந்தது  ,கடைசியில் பொறுக்க முடியாமல்

                              " ஏன் அன்ரி அழுகுறீங்க "

                                            எண்டு கேட்டேன். அவா அதுக்கு பதில் சொல்லவில்லை, பதிலா மயில் இறகை கையில எடுத்துப் பார்த்தா , இன்னும் கொஞ்சம் டொக்கு டொக்கு விழுந்தது, அதுக்கு மேல இனி டொக்கு டொக்கு விழ கண்ணீர் இல்லை போல இருந்த நேரத்தில ,புறங் கையால கண்ணைத் துடைத்துப் போட்டு, அன்ரி புத்தகத்தை கையில விரிச்ச படியே வைச்சு ஜோசித்துகொண்டே ,

                                   " நாங்கள் எல்லாம் பொம்பிளையள் ,எங்களின் கனவு வெறும் கனவு, நீங்க எல்லாம் ஆம்பிளையள் உங்களின் கனவு எல்லாம் எதிர் கால இலட்சியங்கள், "

                             எண்டு சொல்லிப்போட்டு, மயில் இறகை அதே இடத்தில நோகாமல் வைச்சுப்போட்டு,என்னைப் பார்த்தா

                          " அன்டி ,,நீங்க நல்லா சிவப்புப் பேனையால அடிக்கோடு , பென்சிலால குறிப்பு எல்லாம் குறித்து ஆர்வ் ஆர்வமா படித்து இருக்குரிங்க,,நீங்க  மேற்கொண்டு படிக்க சான்ஸ் கிடைச்சு இருந்தா கட்டாயம் கம்பஸ் போய் இருப்பிங்க "

                             " ஹ்ம்ம்..அதுதான் நடக்கவில்லையே,,,அதுமட்டுமில்லை  ,,இன்னும் எவளவோ கனவுகளும் அதோட அடியுண்டு போயிட்டுது .."

                             " சொறி அன்டி,,நான்  உங்களை நினைக்க ,,நீங்க அழும்போது பாவமா இருக்கு "

                                  "  பரவாயில்லை,,நான் எப்பவுமே அழுவதில்லை,இன்று தான் எவளவோ வருசத்துக்குப் பிறகு அந்த மயில் இறகையும் ,,அந்த பக்கத்தில் நான் எழுதியதையும்  ,,ஹ்ம்ம், உண்மையைச் சொன்னால் நான் நானாக இருந்த போது  எழுதிய அந்தக் கவிதை வரிகளை வாசிக்க கண்ணீர் அடக்க முடியாமல் வந்திட்டுது .."

                       "  அந்தக்  கவிதை  நானும்  பார்த்தேன் ,,அது  உங்கள்  வரிகளா "

                       "  ம் , கலில் ஜிப்ரான் போல நானும் ஆங்கிலத்திலேயே கவிதை எல்லாம் எழுதி இருக்கிறேன் "

                                "     ஒ அப்படியா ,,எழுதி என்ன செய்திங்க "

                                "    எழுதிப்போட்டுக் ,,கிழித்து எறிவேன் "

                                   " ஏன் அப்படிச் செய்திங்க "

                                  " அதை யார் வாசிக்கப்போறாங்க ,,என்னோட  குரல் எப்பவோ அடங்கிப் போய்விட்டது "

                                   " ஒ ,இப்ப இந்தப் புத்தகத்தில் ,இந்த மயில் இறக்குக்கு ஒத்தடம் கொடுக்கும் கவிதை  நான் முழுதும் வாசிக்கவில்லை,,ரெண்டு வரி வாசித்தேன்  அதுவே  ஆடி  வெள்ளி தேடி எடுத்து  அள்ளி எறியுதே "

,,                                " ஹ்ம்ம் இது  என் இதய வரிகள் ,,இதயம் எழுதிய வரிகள் ,,கைகள் அதை பேபரில் எழுதியது,,இதயம் அந்த வரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது "

                           " சரி,,அன்டி,,நான் போகப்போறேன் ,,இன்னொருநாள் கதைக்கவா உங்களோடு  "

                                 " ஓகே ,  நீ பயோ சயன்ஸ் படிக்கிறியா , இது அநோடோமி டெக்ஸ் உள்ள புத்தகம் ,  இந்தப் புத்தகம் உனக்கு வேணுமென்டா எடுத்துக் கொண்டு போ  "

                      எண்டு சொன்னா அன்ரி. எனக்கு தமிழில் அநோடோமி எழுதினாலே அதை வாசிக்க விளங்காது அதைப் பார்க்கவே கண்ணுக்குள்ள பூச்சி பறக்கும் , அதால அந்த ஆங்கிலப் புத்தகத்தை  நான் கொண்டுபோகவில்லை, இந்த சம்பவம் பாம்பால சண்டை நடப்பதுக்கு மூன்று அல்லது நாலு வருடங்களுக்கு முன் நடந்தது 

                                       பாம்பால சண்டை நடந்து , அதன் பின்  வந்த இடைப்பட்ட காலத்தில் நானே நிழலாக, இயங்கிக்கொண்டு வேறு பல விசியன்களில் அலைப்பட்டுக் கொண்டு இருந்ததால் ஊருக்குள் என்ன நடக்குது என்பதை விட நாட்டின் நிலைமையில் அதிகம் அக்கறையாக இருந்த காரணத்தால் இரவுகளில் மட்டும் நடமாடினேன்,நான் எங்கே போனேன் என்ன செய்யுறேன் எண்டு யாருக்கும் தெரியாது போல தான் நான் நினைச்சுக்கொண்டு இருந்த மாதிரி நிலைமை உண்மையில் இல்லை, என்னோட அம்மாவே

                       " நான் பொத்திப் பொத்தி வளர்த்த பொடியை ,,,எடுபட்டவங்கள் ......இழுத்துக்கொண்டு ......திரியுறாங்களே "

                                               எண்டு வாற போற சனத்துக்கு சொல்லி ஒப்பாரி வைச்சுக் கொண்டு இருந்து இருக்கிறா. எப்படியோ யாரும் என்னை எடுப்பட்டு வா எண்டு சொல்லி இழுக்கவில்லை,நானாதான் இழுபட்டுப் போனேன், அந்தக் குழப்ப நிகழ்வுகளாலும் ,பாம்பால சண்டை வந்து புல்லாங்குழல் வீட்டுப் பக்கமே சில வருஷம் நான் போகவில்லை

                                                ஒரு நாள் பின்னேரம் ,இருட்டுப் பட்ட நேரம் சந்தி சில்லறைக்கடை சுப்பிரமணியம் கடை வாசலில் இருந்த நேரம் புல்லான்குழல் அன்ரி, கடைக்கு சாமான் வேண்ட வந்தவா , காத்தவராயன் போல நெஞ்சை நிமிர்த்தி ,தோள்பட்டை விரிஞ்சு, கை எல்லாம் கறுத்து இருந்த என்னை சந்தேகமாப் பார்த்து ,

                               " மனோன்மணி அக்காவோட மகன் போல இருக்கே, ஆள் அடையாளம் தெரியாமா மாறிட்டீர் ,,இப்ப ஊருக்குள்ள உம்மட சிலமன் இல்லைப்போல இருக்கே ,,மன்னாரில நிக்கிரிர் எண்டு ஒருக்கா கேள்விபட்டேன்,,மெய்தான  அந்த செய்தி " ,

                                        எண்டு கிட்ட வந்து ஏதோ கன நாளாய் என்னகு சொல்ல வேண்டிய விசியம் இருக்கு போல சில விசியம் சொல்ல தொடங்கினா , அன்ரி முகத்தில்  அதிகம் மாறவில்லை , அவாவின் முன் தலைமயிர் கொஞ்சம் நரைத்து வெள்ளையாக இருக்க ,கண்ணைச் சுற்றி கருவளையம் போட்டு இருக்க, கொஞ்சம் மெலிந்து இருந்தா ,என்ன விசியம் சொல்லுங்க எண்டு கேட்டேன் 

                               " மாஸ்டர் உம்மை கண்டால் கையோட கூ ட்டிக்கொண்டு வரசொன்னவர் " எண்டா,

                                நான் " ஏன் " என்றேன் ,

                             " நீர் வீட்டை வாரும் அவரே சொல்லுவார் " எண்டா ,

                                          நான் " நாளைக்கு வாறன் " எண்டேன் ,சுப்பிரமணியம் வாயில சுருட்டை வைச்சு சுழட்டிக்கொண்டு என்னை சந்தேகமா பார்த்துக்கொண்டு இருந்தார் ,

                                                நான் வீட்டை வந்து மறந்து போன புல்லான்குழல் எப்படி இப்ப இருக்குறார் எண்டு அம்மாவிடம் கேட்டேன் ,அம்மா

                                         " வாத்திக்கு ஒரு கையும்,காலும் இழுத்துப் போட்டுது ,வேலைக்கு பென்சன் போட்டுட்டு  வீ ட்டோட இப்ப ,கோமதி தான் முறிஞ்சு முறிஞ்சு அவரை இழுத்துப் பறிச்சுப் பார்க்கிறாள் "

                                                  என்றா ,நான் கொஞ்சம் ஜோசித்தேன் , பாம்பு வந்து படம் எடுத்து ஆட்டிப் போட்டு களைப்பில சுருண்டு விழற மாதிரி இருந்தது அம்மா சலிப்பாக அதைச் சொல்ல.  புல்லான்குழல் மாஸ்டரை , கோமதி அன்ரியை நினைக்க பாவமா இருந்தது ,

                                 " கை இழுத்தா அவர் எப்படி இனி புல்லான்குழல் வாசிக்க முடியாதே "எண்டு அம்மாவிடம் சொன்னேன் ,

                                      அம்மா  "   கண்டறியாத புல்லாங்குழல் " எண்டு கோவத்தில சொன்னா. 

                                           அடுத்தநாள் காலையில நான் புல்லான்குழல் வீட்டை போனேன், போய் வெளிய நிண்டன் புல்லான்குழல் அன்ரி  வந்து ,," இடுப்பில ஊமல்க் கொட்டை ஒண்டும் இல்லைதானே, எதுக்கும் வெளிய நில்லடா , ஒண்டு கிடக்க ஒண்டு நடந்தா எல்லாரும் ஒரே நேரத்தில எமலோகம் போக வேண்டி வந்தாலும் வரும்,,,,,,,, " எண்டா, நான் பேசாம வாசலிலேயே  இருந்தேன், வெளிக்கதவில நிண்டு பார்க்க புல்லாங்குழல் எல்லாம் சுவரில தொங்க புல்லான்குழல் ஈசிச்  சேர்ல படுத்து இருந்தார், என்னைப் பார்த்து சிரித்தார் ,பாம்புக்கு காது இல்லை எண்டு சொன்னார் ,

                                  " இப்பத் தான் கன நாட்களா புத்தகம் படிக்கிரன் அதில பாம்புக்கு காது இல்லை எண்டு எழுதி இருந்தது "

                                              எண்டு சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு இருமல் வர அதோட சளிபோல வாயால வடிய , புல்லான்குழல் அண்டி சேலைத் தலைப்பால அதைத் துடைத்து விட்டா ,நான் அன்டியின் முகத்தைப் பார்த்தேன்,அதில ஒரு வித அனுதாபம் இருந்தது , நான் ஒண்டும் சொல்லவில்லை பேசாமா வந்திட்டன் ,வந்து பழையபடி போயிட்டன் . அதுக்குப்பிறகு நானே ஊரில இல்லை,,,,,,

                               சில வருடம் முன் " லங்கா சிரி " இணையதளத்தில் இலங்கையில் என்ன நடக்குது எண்டு எப்பவுமே பார்ப்பது போல ,முக்கியமா ஊரில யார் யாருக்கு விசா கிடைத்தது எண்டு அறிய  மரண அறிவித்தல் பார்க்கும் போது, அதில பதின் மூன்றாம் வருடாந்த நினைவு அஞ்சலி படம் போட்டு ,

                                           " இமைப் பொழுதும் என்னை மறவாமல் , அனுதினமும் அன்பிலும் பாசத்திலும் என்னை ,கருணையோடு வாழ வைத்த என் கணவருக்கு .."

                                          எண்டு வருடாந்த நினைவு அஞ்சலிக் கவிதை போல ஒரு நீண்ட கவிதை அன்பொழுக  எழுதி, முடிவில்   

                           " இப்படிக்கு உங்கள் அன்பை என்றும்  மறவாத அன்பு மனைவி கோமதி "

                                                   எண்டு எழுதி இருந்தது , அந்தப் படத்தில புல்லங்குழல் மாஸ்டரின் இளமையான படம் போட்டு, அதன் இரண்டு பக்கமும் இருண்டு குருவிகள் கொஞ்சிப் பேசும் படம் போடிருந்தது.

.
21-02-14