Monday 30 November 2015

Kaathirunthu Kaathirunth





தமிழ் சினிமா கிராமங்களில் கால்ஊன்றி நிஜத்துக்கு வெகு அருகில் இருந்த எண்பதுக்கள் என் போன்ற இளையவர்களின் இளமைக்கால இசைவரம். அதை இன்னுமொருபடி மேலே காதலோடு கொண்டு போனவர் இசைஞானி இளையராஜா, அதை சொல்லிச் சொல்லியே நினைவுகளின் நதிக்கரையில் கால்களை நனைத்தவர்கள் எல்லாருமே கிறங்கிப்போன பாடல்கள் வந்த ஒரு படம் ‘வைதேகி காத்திருந்தாள்’. 

அந்தத் திரைப்படம் வெளிவந்த நாட்களில் காதல் தோல்விக்கு இன்னுமொரு விதமான அரிதாரம் பூசி வைத்தார் டைரக்டர் ஆர்.சுந்தரராஜன். மிச்ச வேலை முழுவதையும் இசைஞானி இளையராஜா பாடல்களில் சொல்லாமலே சொல்ல வைத்தார். அந்தத் திரைப்படம் வெளியாகி அதில் இசைந்த பாடல்களால் அது ஒரு மிகப்பெரிய ஹிட்டானது.

‘காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி ’இந்தப் பாடல் இசைஞானி இளையராஜா போல்க் என்ற folk music கிராமிய இசைவடிவ டெம்போவில் மிக எளிமையாக ஒரு பாடல் இதயத்தை பூத்திருந்து புன்னகை செய்ய வைத்த அதிசயங்களில் ஒன்று. இந்தப் பாடலை பி.ஜெயச்சந்திரனை தொடக்கத்திலும், இடையிலும் ஹம்மிங் கொடுத்துப் பாடவைத்து நாட்டார் பாடல் வரிகளுக்கு ஒருவிதமான கிராமிய அடையாளத்தை இடையில் செருகி அந்தப் பாடலைப் படத்தில் பார்க்காமலே நிறைவாகக் கற்பனை செய்ய வைத்தார்.

அண்மைக்காலமாக சினிமாப் பாடல்கள் இன்ன இன்ன ராகங்களில் வந்திருக்கு என்று பலர் எழுதுகிறார்கள். நானும் கொஞ்சக்காலம் அப்படி பாடல்களைக் தெரிந்த சங்கீத இசை அறிவில் வைச்சுக் கிண்டி, அதை வெஸ்டேர்ன் கிட்டார் ஸ்கேல் உடன் ஒப்பிட்டுக் குழம்பி ,முடிந்தவரை சில பாடல்களின் சுர அமைப்புகளை ராகங்களோடு ஒப்பிட்டு, அது என்ன இராகம் எண்டு கொஞ்சம் சந்தேகத்தில் தான் எழுதி இருக்கிறேன். பலருக்கு கர்நாடிக், வெஸ்டர்ன், ஸ்கேல், கிட்டார் ,போன்றவற்றில் அதிகம் விசியம் தெரியாததால் நான் என்னமோ பெரிய அறிவுக்கு கொழுந்து என்று நினைத்து வாசித்தும் இருக்கிறார்கள்.

ஆனால் இப்பெல்லாம் பாடலின் இராகம் பற்றி சொல்லப் பயமா இருக்கு,அதுக்கு நிறையக் காரணம் இருக்கு ,ஆனால் ஸ்கேல் போன்ற வெஸ்டர்ன் விசியங்கள் சொல்ல முடியும். காத்திருத்தலின் சோகத்தை இசைஞானி இளையராஜா எவளவோ பாடல்களில் பதிவு செய்து இருக்கிறார். நான் நினைக்கிறன் அவரின் மிகச்சிறந்த காதல் ரசம் பிழியும் பாடல்கள் கர்ணரஞ்சினி, தர்பாரிகானடா இரண்டு ராகத்திலும் காலங்களைத் தாண்டி நிக்கவைத்தார். ஆனால் அந்த ரெண்டு ராகமும் மிகவும் கடினம்,ஜோசிக்கவே கடினம், ஆனால் இந்தப் பாடல் சிவரஞ்சனி ராகத்தின் சுர சாயலில் உள்ளது. உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

சிவரஞ்சனி ராகம் பெயரைப்போலவே அழகான, ஆனால் சுரங்கள் குறைவான குறை ராகம், முழுமையான ஏழு சுரங்களும் அதில ஆரோஹணம், அவரோஹணம் இரண்டிலும் இல்லை.அதனால் அதன் வீச்சு எப்பவுமே குறைவு .ஒரு நல்ல இசைஅமைப்பாளர் அந்த சின்னச் சுரஞானக்கோவைக்குள் இறங்கி significant orchestration இக்குத் தேவையான முத்துக்களை எடுத்துக் கோர்த்து ஒரு மாணிக்க மாலை செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இசைஞானி இளையராஜா, அவரைப் பொறுத்தவரை significant orchestration என்பதெல்லாம் சிம்பிள்.

வெஸ்டர்ன் harmonies and string arrangements இல் சொன்னால் ‘காத்திருந்து, காத்திருந்து ’ பாடல் ஒரு மைனர் ஸ்கேல் பாடல். சிம்பிளான Fm என்ற ஸ்கேல் இல இங்கே நான் வாசித்துள்ளேன், இந்தப் பாடலின் தொடக்க ஹம்மிங் வாற இடத்தில ஒரு கோட்ஸ் இடையில் வரும். அப்படி ஒரு கோர்ட்ஸ் தமிழ் சினிமா பாடலில் இன்றுதான் வருவதைக் கவனித்தேன்.

முக்கியமா இந்தக் கரோக்கி பிண்ணனியில் வாசித்த இந்த வீடியோ ஒரியினல் பாடல் போல முழுவதும் இல்லை. இப்படிக் குழப்பங்கள் நிறைய கரோக்கி பிண்ணணியில் பாடல் வாசிக்கும் போது ஏற்படும்.அதனால் தாழ்மையுடன் சொல்லுகிறேன், இதை ஒரிஜினல் பாடல் என்று நினைத்து யாரும் கிட்டாரில் வாசிக்கப் பழக வேண்டாம்.சும்மா என்னமோ கிட்டாருக்க இருந்து என்னமோ சத்தம் வருகுது என்று நினைத்துக் கேளுங்க .
.

Sunday 29 November 2015

பெரிய மாமா ..முதலாவது புயல்

ஆண்களுக்கு ஒரு கிலோ தவிடு தூக்கிற பலம் இருக்கும் வரை ஆம்பிளை என்ற அடையாளம் வயது வளைந்து  வயதாகிக்கொண்டு போனாலும் பெண் ஆசையை மட்டும்  விலத்தி விட்டுப் போகா வைக்காது  என்று சொல்லுவார்கள். அதை அவளவு இலகுவாக வெளியே தெரியும்படி யாருமே காட்டிக்கொள்வதில்லை. சில ஆண்களுக்கு  அந்த ஓர்மம்  ஒரு நிழல்போல இயங்கி  வெறிபோலச் சதிராடும் நேரமெல்லாம் நேரடியாகப் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான்.  

                                        வயதான காலத்தில் ,அதுவும் படுக்கையில் விழுந்த  நேரம் கணவன் உதவியாக இருக்கவேண்டுமென்றுதான் எல்லா மனைவியும் நினைப்பார்கள். முப்பது சொச்சம்  வருடம் தர்மபத்தினியாக வாழ்ந்த மனைவிக்கு உதவியாக இருக்க வேண்டிய நேரம் பெரியமாமா தனக்குச்  சமையலுக்கென  உதவிக்கு இன்னுமொரு அழகான பித்தளைக் குடம் போன்ற பெண்ணை நடு வீட்டுக்குள்ள கொண்டுவந்து வைச்சுக்கொண்டு நல்ல குருநாதன் போல உபதேசம் செய்து, நடுச்சாமம்  உபத்திரவமும் கொடுத்துக்கொண்டு இருந்தார்.  

                                       பெரிய மாமா எங்கள் குடும்பத்துக்கு தூரத்து அம்மாவழி உறவு. வயதில் அதிகமாகவும், பெரிய தோற்றமும் ,பெரிய வேலையும் அந்த நேரம் செய்துகொண்டு இருந்ததால் அவரை பெரிய மாமா என்று சொல்லவேண்டி வந்திருக்காலம் போல .  அதை விட எங்களின் ஊரில் இருந்த அவரே கட்டிக்  குடிபுகுரல் எல்லாம் பெரிதாகச் செய்த, முன்னுக்கு பெரிய தாமரைத் தொட்டி கட்டி , அதுக்கு நடுவில காஸ்மீர் ஏரிபோல விசிரியடிச்சு பைப் தண்ணி பூப்போல விரிஞ்சு பறக்க விட்டு , அதைச் சுற்றி பெரிய சீமெந்து  வாசில் போகன்வில்லாப்  பூக்கள் வளர்த்த  பெரிய  கல் வீட்டில் வசித்தார். எல்லாமே அவரைப் பொறுத்தவரை பெரிசாதான்
இருக்க வேண்டும் .

                                                வாழைச்சேனை அரசாங்க பேப்பர் கொம்பனியில் மார்கெட்டிங்  மனேஜர் என்ற விற்பனை முகாமையாளராக  வேலை செய்த பெரிய மாமா பென்சன் எடுக்கும் காலம்வரை மட்டக்களப்பில் தான் இருந்தார்.  உண்மையைச் சொன்னால் அந்தக் கிழக்கு  மாகாணத்தில் வடக்கிலிருந்து போய் வசித்தார்.  இந்த " வசித்தார் " என்ற வரிக்குள் இன்னுமொரு வாழ்கையே அவருக்கு மீன் பாயம் தேன் நாட்டில்  இருந்தது.  அது  எழுவத்தெட்டில்  மட்டக்களப்பில் புயல் அடிச்ச நேரம் தான் அரசல்புரசலாக வெளியால தெரியவந்தது. ஆனால் அதையும் பெரியமாமா புயல் போல எழும்ப விடாமல் அமுக்கி வைச்சிட்டார்  . 

                                        பெரிதாக எழும்பிப் பேசிய குடும்பத்தில் இருந்து அவர் வந்து இருந்தாலும் , பேப்பர் பக்டரி அரசாங்கக் குவாட்டசில்தான் தங்கி  இருந்து, மூட்டை கடிக்கும் ஒரு பழைய கட்டிலில் படுத்து எழும்பி, தானே சமைச்சு சாபிட்டுகொண்டு  வேலை செய்தார் என்றுதான் யாழ்பாணத்தில் சொல்லுவார்கள் ஆனால் அவர் அரசாங்கக் குவாட்டசில் இருக்கவேயில்லை.  இன்னொரு பெண்ணின் மடியில தலை வைச்சு உல்லாசமாக தான் வாழ்ந்தார் என்று அவரோட அதே பக்டரியில் வேலைசெய்த எங்களின் அயல் ஊரில் வசித்த இன்னுமொரு மாமா  சொன்னதை யாருமே நம்பவில்லை .

                                       மட்டக்களப்புப்  புயல்  வங்காளா விரிகுடாவில் தாளமுக்கமாக எழும்புது என்று ரேடியோவில் அறிவிச்ச நேரமே பெரியமாமா பேப்பர் பக்டிரியை விட்டுப்போட்டு , வந்தாறுமூலைப் பாலம் எல்லாம் கடந்து பாதுகாப்பான கிராமப் பக்கம் இருந்த , அவர்  கீப் ஆக வைச்சு கொண்டு சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்த அம்மணியின் வீட்டுக்கு போட்டார். புயலே அவர் பேப்பர் பக்டறியை  விட்டுப் போனாப் பிறகு மூன்று நாள் கழிச்சுதான் மட்டக்களப்புக்கு குறுக்கா அடிச்சது 

                           யாழ்பாணத்தில பெரிய மாமி ரேடியோவுக்கு பக்கத்தில அங்கால இங்கால நகராமல், கையில தேவாரப்புத்தகத்தை வைச்சுப் பாடிக்கொண்டு , சமைக்காமல் சாப்பிடாமல் உறங்காமல் இருந்து கொண்டு 

                                " கடவுளே , எண்ட மனுஷனுக்கு ஒண்டும் நடக்கக்கூடாது, பாதுகாப்பா இருக்க வேண்டும் , இந்த மனுஷன் எல்லாத்தையும் போட்டது போட்டபடி  விட்டுப்போட்டு தப்பி ஓடி வருவம் எண்டு இல்லாமல் வேலை முக்கியமெண்டு பக்டரியைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு நிக்குதே, எனக்கு இந்தாள் உயிர் முக்கியமெண்டு ஏங்கி ஏங்கி சாக இந்த மனுஷன் புயலுக்க நிக்குதே  " 

                                     என்று எல்லாக் கோவிலுக்கும் நேர்த்தி வைத்துக்கொண்டு இருந்தா.  அவா நேர்த்தி வைத்த கடவுள்கள் அவரைக் கைவிடவில்லை பாதுகாப்பா இருக்க வேண்டிய இடத்தில தான் கடவுள்களும் அவரை வைச்சு இருந்தார்கள். 

                                             புயல் அடிச்சு ஓஞ்சு பேப்பர் பக்டரி ஏறைக்குறைய முக்கால்வாசி அழிந்துபோன பின் ஒருகிழமை கழித்துதான் பெரிய மாமா பக்டரிக்கு வந்து பார்த்திருக்கிறார். அதுக்குப் பிறகு சில மாதம் அவர் யாழ்பாணத்தில் வந்து நின்றார்,எல்லாச் சனங்களும் போய் 

                          " மெய்யாத்தான் கேட்கிறம் , வங்காள விரிகுடாவில் இருந்து வந்த  புயல் எப்படி அடிச்சது, அதில நீங்கள் எப்படி உயிர் தப்பினீங்கள், உன்னான  பேப்பர் பக்டரிக்கு முன்னால நிண்ட லொறிகளின் ஹோர்ன் எல்லாம் தானா அடிச்சுதாமே,,"

                                      எண்டு கேட்டார்கள்,பெரிய மாமா அதுக்கு புயலுக்கு முன்னுக்கு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்று பேப்பர் பக்டிரியைக் காப்பாற்றின மாதிரி கதைகளை அவிட்டு விட்டுக்கொண்டு இருந்தார். அந்தக் கதைகளும் வங்காள விரிகுடா போல பெரிசு பெரிசாத்தான் இருந்தது .

                                      பெரிய மாமா  பேப்பர் பக்டரி திருத்த எடுத்த மாதங்கள் முழுவதும் எங்கள் ஊரில்தான் நின்றார். பெரிய ஒரு யுத்தத்தை வென்ற ஜெனரல் போல மீசையை முறிக்கிகொண்டு எழுப்பும் விட்டுக்கொண்டு திரிஞ்சார்.  பெரிய மாமி நேர்த்திக்கடன் வைச்ச மாதிரி, வைரவருக்கு வடை மாலை செய்து போட்டா, பழங்கிணத்தடிப் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கினா. வீராளி அம்மனுக்கு நெருப்புச் சட்டி தலையில வைச்சு வேப்பிலைக் காவடி எடுத்தா, நல்லூர் கோவிலுக்கு  போய்ப் பத்து நாள்  முழங்காலில் உள்வீதியில் அடியழிச்சு அருச்சனை செய்தா, பெரிய மாமா அதைக் கணக்கில் எடுக்கவில்லை ,
  
                             "  எடியே இப்ப என்னத்துக்கு இந்த காவடி ஆட்டமும், வேப்பிலைக்  கூத்தும் ,,நான் மட்டக்களப்பில் புசலுக்கால தப்பி வந்தது என்னோட மண்டையப் பாவிச்சு, இந்தப் புயல் என்ன இன்னும் எத்தினை புயல் வந்தாலும் தப்பி வருவன், புயல் என்னை என்ன செய்யும்,,அவளவு பயந்தவனா நான் இருந்தா இங்க இருந்து போய் மட்டக்களப்பை இந்த ஆட்டு ஆட்டுவனா,,சொல்லு பார்ப்பம் விளையாடத் தெரிஞ்சவனுக்கு எங்கயும்  சொல்வழி கேட்டு வித்தை விளையாடும் , இங்க ஒரு வீடுவாசல் .. போல... அங்க ஒரு வாசல் வீடு.. ,"

                                      என்று பிடி கொடுக்காமல் பேசிக்கொண்டு இருப்பார். ஆனால் பின் நாட்களில்  பென்சன் எடுத்த நேரம் அவர் இதே  நடுவீட்டுக்குள் அவரே கொண்டு வந்த அழகான பித்தளைக்குடம் போன்ற நடுத்தர வயது சின்னப் புயல், ஒரு நாள் தாளமுக்கமாகி நாலு பக்கமும் சுழண்டு அடிச்சு, சதிராடி ,எல்லாத்தையும் பிரட்டி , பெரிய ஒரு மலையையே தள்ளி விழுதி , அவரை ஒரேயடியாகச் சரித்துப்போட்டுப் போன நேரம்  அதன் அபரிமிதமான கவர்ச்சியில் பெரிய மாமாவின் தந்திரங்கள் எதுவுமே பலிக்கவில்லை. 

                                               பெரிய மாமா சுமாரான , ஆனால் ஒருவித சந்திர வம்ச லட்சணம் போல அழகான தோற்றமுள்ளவர் ,நல்ல சுத்தமான கலப்பில்லாத கறுப்பு நிறம். அரசாங்க வேலை செய்தாலும் வெள்ளை வேட்டிதான் கட்டுவார், வெள்ளை நீளக்கை சேட்டுத்தான் போடுவார்.அதை மடிக்க மாட்டார் . தோளில எப்பவும் ஒரு கலர்த்  துவாய் போட்டிருப்பார்.  அதிலதான் அவர் இன்னும் வடிவா இருப்பார். அவரோட முகத்தில எப்பவுமே எதையும் அலட்சியமாக எதிர்கொள்ளும் சிரிப்பு இருக்கும் . அந்த  அலட்சியக் கண்களில் ஒருவிதமான விரும்பின எல்லாத்தையும் அடையும்  லட்சியமான வசீகரம் பதுங்கிப்பாயத் தயாரா இருக்கும் .

                                              அவரிடம் எந்த ஒரு குறை சொல்லும்படியான  ஒரு கெட்ட பழக்கமும் இல்ல்லை. குடி வெறி, புகைத்தல் , ஏன் வெத்திலையே போடமாட்டார். சாப்பாட்டில பயங்கரக் கவனம். உடம்பு உடைஞ்சு போயிடும் என்று எப்பவுமே சுத்த சைவம் . அதால உடட்பயிட்சி செய்யாமலே கட்டுமஸ்தான பர்மாத் தேக்குமரத் தேகம் . பரந்த நெஞ்சில  அடர்த்தியான  மயிர் , எண்ணை போட்டுப் பிடிச்சுவிட்ட மாதிரி உடம்பு அந்த வயசிலும் அரிசி குத்திற  நாட்டு உரல் போல இறுக்கமா இருக்கும். 

                                               அந்தக் கண்களின் வசீகரம் அதுதான் அவரோட மன்மத லீலைகளுக்கு பெண்களை மயக்கவைத்த மன்மத அம்பு.  அவரோட இவளவு அடக்கமான சோலி சுரட்டுக்குப் போகாத மனுஷன் என்ற முகமூடிக்குப் பின்னால் பயங்கரமான முரட்டுத்தனம் இருந்தது. அது பூனை போலப் பதுங்கிக்கொண்டிருந்தது. அதுவே புலிபோலப் பாய்ந்த சம்பவங்கள் பலது இருந்தும் வெளியால ஒருத்தருக்கும் தெரியாது. 

                                             சின்ன வயசிலேயே அவருக்கு அந்த அரசாங்க உத்தியோகம் கிடைத்து இருக்கு .  பெரிய மாமி பதின்நாலு வயசில சாமத்தியப்பட்ட அடுத்த மாதமே மறு சாமத்தியப்பட முதலே வீட்டுக்க பூந்து இழுத்துக்கொண்டு வந்து இரவோடு  இரவாக்  கலியாணம் கட்டினார்.  அதை சட்டப்படி கவுரவமாக்க கோவிலில் தாலி கட்டினார்.   

                                         பெரிய மாமாவுக்கு மூன்று பிள்ளைகள் ,ரெண்டு பொடியன்கள்.  பெரிய ராசன், சின்ன ராசன் என்ற  ரெண்டு பொடியன்களும் என்பதுக்களின் தொடக்கத்திலேயே இயக்கங்களில் இழுபட்டு உருப்படாமல்  போயிடுவாங்கள் என்று பயத்தில கிழக்கு ஜெர்மன்  டி டி ஆர் விசா எடுத்து, ஒருத்தனை  ஜெர்மனிக்கும் , இன்னொருத்தனைப்  பிரான்ஸ்க்கும் பிடிச்சு அனுப்பிப்போட்டார் .

                                             " கலாச்சாரம் பண்பாட்டு  எவளவு முக்கியமெண்டு  இதுகளுக்கு விளங்குதில்லையே ..சின்ன ராசன்,,காடை வத்திப்போய்  வெள்ளைகாரிகளோடு அலையுறானாம் எண்டு பெரியவன் சொல்லுறான்,,இந்தப் பொடிக்கு என்ன குறைச்சல் எண்டு எனக்கு விளங்கேல்ல, இங்கனேக்க வரப்பண்ணி ஒரு ஊர்  உலகத்தில அறிஞ்சு நல்ல ஒரு  பொடிச்சிய கையில பிடிசுக் கொடுப்பமெண்டா வாரானும் இல்லையே ..."

                                                 எண்டு சொல்லுவர் . அவர் பென்சன் எடுத்து இருந்த காலத்தில் பிரான்சில்  ஒரு  இலங்கைப் பெண்ணைத் திருமணம் முடித்து இருந்த அவரோட மூத்த மகன் பெரிய ராசன் மட்டுமே காசு அனுப்பி தொடர்பில் இருந்துகொண்டு இருந்தான் . சின்ன ராசன் தொடர்பே இல்லை.

                                                  அவருக்கு ஒரு மகள் ராசாத்தி என்று இருந்தா .அந்த  மகள் யாழ்பாணம் கம்பச்சில் படிச்சுக் கொண்டு இருந்த நேரமே தன்னுடன்   சயன்ஸ் பக்கல்டியில் படிச்சுக்கொண்டு இருந்த முல்லைத்தீவு பொடியனை லவ் பண்ணிக் கலியாணம் செய்யப் போறேன் என்று ஒற்றைக்காலில் நிக்க ,

                                   " பொம்பிளைக்கு ஒழுக்கம் எவளவு முக்கியமெண்டு  விளங்கமாட்டேன்  எண்டு நிக்கிறியே காதல் தான் உனக்குப் பெரிசு எண்டு நினைச்சி எண்டா ,,நீயே உன் முடிவில போயிடு,,பிறக்கு என்னையும்  கொம்மாவையும்  நினைக்கத் தேவையில்லை,, ஒழுங்கு  மரியாதை  பண்பாடு இல்லாத பொம்புளைப் பிள்ளையை வீட்டுக்க வைச்சிருக்க எனக்கும்தான் பரிசுகேடு..." 

                               என்று சொல்லி  ராசாத்தி  விருப்பத்துக்கே கலியாணம் கட்ட விட்டார் . அவா பெரிய மாமா குடும்பத்தோடு தொடசல் இல்லாமல் திருகோணமலைக்கு டீச்சிங் வேலை எடுத்துக்கொண்டு போட்டா. அங்கே போய் யாரை லவ் பண்ணிக்கொண்டு இருந்தாவோ அவரையே கலியாணம் கட்டி சந்தோசமா வாழ்ந்துகொண்டு இருந்தா என்றுதான் சொல்லுவார்கள். காதலித்துக் கட்டுறதே  சந்தோஷமா இருக்கத்தானே.

                                    அதுக்குப்பிறகு பெரிய மாமியும்,பெரிய மாமாவும் வயதாகித் தனியாதான் அந்த பெரிய கல் வீட்டில் இருந்தார்கள்.  ஆனால் நல்லா உடுத்து, நல்லாச் சாப்பிட்டு  நல்ல வசதியாகத்தான்  இருந்தார்கள். இன்னுமொரு நடுத்தர  வயதுப் பெண்னை அவர் சமயல்வேலைக்கு என்று நடுவீட்டுக்குள் கொண்டு வரும் வரை. ஆனால் இந்தக் குளறுபடிகள் வெளியே அதிகம் யாருக்கும் தெரியாது. காதும் காதும் ஓட்ட வைச்ச மாதிரி பெரியமாமா அதைக்  காய்நகர்த்தி நடத்திக்கொண்டு இருந்தார் 

                              பிறகு எப்படி இதெல்லாம் எனக்கு தெரியும் என்று விடுப்பு அறிவதில் அனுபவம் உள்ளவர்கள் கேட்கலாம். நான் மட்டுமே அந்த வீட்டுக்கு உள்ளே நடமாட அனுமதிக்கப்பட்டேன். பெரியமாமாவுக்கு என்னில நல்ல விருப்பம், இப்பபோலத்தான் என்னைப் பார்க்க அப்பவும் நல்லவன் போல இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை  நம்பிக்கையும் அதிகம் அதால அனுமதித்தார். ஆனால் நான் இப்ப போலத்தான் அப்பவும் நிழலாக பல திருகுதாளம் செய்துகொண்டு இருந்தேன் . ஆனாலும்  யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த ,கரண்ட் இல்லாத அந்த வருடங்களில்  நான்தான்  அவர்களுக்கு கூப்பிட்ட  கைக்கு  எல்லா உதவியும். 

                               முக்கியமா அவர்களுக்கு தண்ணி இறைக்கிற மிசின் கொண்டு வந்து கிணற்று தண்ணியை நீண்ட பைப் போட்டு ஏற்றி  அவர்களின் உயரமான வாட்டர் டேங்க் இக்கு அடிச்சு நிரப்பிறது . அவர்களுக்கு டவுனில  கடைகளுக்குப் போய் சாமான் வேண்டிக்கொண்டுவந்து கொடுப்பது. எல்லாத்துக்கும் எனக்கு கைச் செலவுக்கு காசு தருவார் பெரிய மாமா. பள்ளிக்கூடம் இல்லாத சனிக்கிழமை  தின்னவேலி சந்தைக்கப் போய் மரக்கறி சாமான் வேண்டிக்கொடுப்பேன், மிச்சக் காசும் திருப்பிக் கேட்க மாட்டார் . ஞாயிற்றுக் கிழமை போய் அவர்கள் வீட்டில  தொட்டாட்டு வேலை எல்லாம் செய்து கொடுப்பேன். காசு பார்த்துப் பாராமல் தருவார்.    

                                   பெரிய மாமாவுக்கு சாப்பாடு சொல்லப்பட்ட மாதிரி ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும். மத்தியானம், உமியவிட்டு வடிச்ச புழுங்கல் கைக்குத்தரிசிச் சோறு ,எண்ணை தாளிச்ச  பிரட்டல் உறைப்புக்   குழம்பு, தேங்காய்ப்பால் மிதக்கும் ஒரு வெள்ளைக் கறி, சரக்குத் தூள் போட்டு ஒரு மரக்கறி வதக்கல் ,  வறை சுண்டிய இலை ,தேசிக்காய் புழிஞ்சு விட்டுக் கடைந்த முளைக்கீரை   ,கூட்டுப் பொரியல்,  பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் போட்ட பால்ச் சொதி, முறுக்கிக்கொண்டிருக்கும்  பப்படம்.  இது கட்டாயம் இருக்க வேண்டும் இல்லாட்டி குசினிக்க சட்டி பானை உடையும் 

                                           " இதெல்லாம் நேரத்துக்கு நேரம் இல்லாமல் மட்டகளப்பில இந்த மனுஷன் எவளவு கஷ்டப்பட்டுக் கொண்டு  இருக்குமே,  அங்க என்ன இருக்கப் போகுது, அரையும் குறையுமா அவிச்சு வடிச்சு ஆறப்போட்டு சாப்பிட்டு வாயும் வயிறும் எங்க நிறையப் போகுது, "

                                    என்று  பெரியமாமி சொலிச் சொல்லி பார்த்துப் பார்த்து சமைப்பா ,

                                  " இனிப் போய் பழையபடி வாய்க்கு ருசியா உப்புப் புளி இல்லாமல்,என்னோட சமையலை நினைச்சுக்கொண்டு  கிடந்தது , காஞ்சுபோன கடைச்  சாப்பாட்டைத் திண்டு  கொண்டு கிடக்கப்போகுதே , என்னோட சமையல் காணுமே என்னை மறக்காமல் நினைக்க வைக்க, எண்டாலும் ஒரு ஆம்பிளைக்கு பக்கத்தில இருந்து பார்த்துப் பார்த்து சமைச்சுப் போடுமாப் போல வருமே .."

                                        என்று கவலைப்படுவா. பெரியமாமாவுக்கு இதே அடுக்கில மட்டக்களப்பிலயும் சாப்பாட்டு , சிலநேரம் இதைவிட எடுப்பா எருமைத்தயிரும் வைச்சு ஒவ்வொருநாளும் கிடைக்கும் என்று அவாவுக்குத் தெரிந்திருக்க  நியாயம் இல்லைத்தான். இதெல்லாம் அவர் மட்டக்களப்பில் வேலை செய்த நேரம் நடந்தது. ஆனால் அவர் பென்சன் எடுத்து வீட்டோடு வந்த பிறகுதான் அவரோட ஒழித்துக் கொண்டு இருந்து வேஷம் போட்ட ஓர்மம் அதிகமாய் ஆட்டம் போடத் தொடங்கியது ..

                                  பெரிய மாமி ஒருநாள் பாத்ரூமில் குளிக்கும் போது வழிக்கி விழுந்திட்டா என்று செய்தியோடு  என்னை அவசரமா வரச்சொல்லி தகவல் பெரியமாமா அனுப்பி இருந்தார். போய்ப் பார்க்க பெரியமாமியின்  வலது முழங்கால் வளைஞ்சு, இடது கையும் மணிக்கட்டில் முறிஞ்ச மாதிரி இருந்தது. அந்த வயதான வயதில அவாவை பெரியாஸ்பத்திரிக்கு இழுத்துப் பறிக்க அவர் விரும்பவில்லை. அல்லது வேற ஏதும் பிளான் போட்டாரா தெரியவில்லை 

                                          வீட்டு செற்றியில் இருந்து ஜோசித்தார். நாயன்மார்கட்டில்  இருந்த முறிவு நெறிவுக்குப்  பத்துப்போடுற பொம்பிளையைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார். அவளைக் கூட்டிக் கொண்டு வர அவள் வந்து கையால எண்ணை போட்டு நெறி இழுத்து உருவிப்  பார்த்திட்டு பத்துப் போட்டாள். அது போட்ட அன்று சாமி அறையில் இருந்த படுக்கையில் பெரிய மாமி போய் விழுந்தா. அவளவுதான் அதுக்குப் பிறகு அத்தியாவசிய தேவைகளுக்குத் தவிர வேற எதுக்கும் எழும்பி  நடமாட முடியவில்லை,முக்கியமா சமைக்க அறவே முடியவில்லை . 

                                            பெரிய மாமா ரெண்டு நாள் தான் சமையல் ஒழுங்கில் இல்லாமல் சமாளித்தார். மூன்றாம் நாள் முடிவெடுத்தார். இனி சமையலுக்கு ஒருத்தி இந்த வீட்டுக்கு கட்டாயம் வேணும் என்று அதனால என்னைக் கேட்டார் 

                                 "  யாரும் ஒரு பொம்பிளை வந்து சமைச்சு வைச்சுப்போட்டு போற மாதிரி பிடிச்சுத் தர முடியுமா,,உனக்கு தெரிஞ்ச ஆரும் இருக்கினமே ,அல்லது கொம்மாவைக் கேட்டுப் பாரேன் சிலநேரம் அவாவுக்கு அயலட்டையில் நல்லா  தெரிஞ்ச மாதிரி  நல்ல பழக்க வழக்கம் உள்ள பொம்பிளை யாரையும் தெரிஞ்சு இருக்கலாம் ,,இல்லாட்டி இனி நான் தான் கடிதம் எழுதிக் கூப்பிட வேண்டும் ,,,அதுகள்  பிரசினையில்  சில நேரம்  முடியலாம்,,,அதயுமெல்லோ ஜோசிக்க வேணும் ,,நாளைக்கு ,,ஒண்டு கிடக்க  ஒண்டு  மேலே  ஏறிப்  பாஞ்சா... "

                                        என்று கேட்டார் .எனக்கு அப்படி யாருமே தெரியாது என்று சொன்னேன். ஆனால்  " கடிதம் எழுதிக் கூப்பிட வேண்டும் ,,,அதுகள்  பிரசினையில்  சில நேரம்  முடியலாம், " என்று விழுங்கி விழுங்கி சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறதுக்கு   என்ன அர்த்த மெண்டு கேட்க நினைச்சேன், நானே  சின்னப் பொடியன், பெரியாக்களின்   பெரிய பிரசினைகள் எனக்கு என்னத்துக்கு எண்டு கேட்கவில்லை . 

                                      ஆனால் நடு முதுகில வளம் பார்த்துப் பொல்லால அடிச்ச மாதிரி அடுத்த சில வாரங்களில்  ஒரு நடுத்தர வயது அழகான பித்தளைக் குடம் போல ஒரு பொம்பிளை குசினிக்க இல்லை, நடு வீட்டில நடமாடி ஏறைக்குறைய வீட்டுத் துறப்பையே எடுத்து இடுப்பில செருகிக்கொண்டு நடமாடியதை பார்க்க முடிந்தது.

                                     அந்தப் பொம்புளை எங்களின் ஊரில் உள்ள பொம்பிளை இல்லை. கதை பேச்சு கொஞ்சம் பிறத்தி ஊர் போல இருந்தது. கட்டியிருந்த நூல் சீலையில்  பின்னுக்கு கொசுவம் வைச்சதே வித்தியாசமா இருந்தது.கேள்வி  எல்லாத்துக்கும் வஞ்சகமில்லாத  பதில் போல சிரிச்சா. உள் சூட்டுக்  காச்சல் போல கணகணப்பான நடுத்தர வயது, உடம்பில ஒருவித றாத்தலடி நல்லெண்ணெய்  தடவி உள்ளங் கையால நீவி விட்ட  மாதிரி மினுமினுப்பு , பெரிசா இருந்தாலும் விழாமல் எடுப்பாய் குத்திக்கொண்டு நெஞ்சு , உயரமான கால்கள் நீளமான கைகள், முகத்தில நேர்மையான நட்பு, கண்களில் இன்னும் நிறைவடையாத ஏக்கம், மொத்தத்தில் பித்தளைக் குடம் போல அள்ளிப் போடுற வாளிப்பு , 

                                         பெரிய மாமா இந்த அள்ளிப் போடுற  பித்தளைக் குடத்தை நிட்சயமாக சமையலுக்கு மட்டுமே வைச்சு வீணடிக்க மாட்டார் என்று மட்டும் உத்தரவாதமாகத் தெரிந்தது. அவர் பரமார்த்தகுருவை நம்பி  ஆத்துக்குள்ள கொள்ளிக்கட்டை யை  வைச்சுப் பார்த்த மட்டி மடையன் போல விபரம் தெரியாத ஒரு  ஆள் இல்லை . வயதானாலும் அழகை ஆராதிக்கும் விபரமான  மனிதர். அதை சில நாட்களில் அவர் முக்கியமா  டவுனில  சுப்பிரமணியம் மருந்துகடையில் வேண்டச் சொல்லி தந்த சில்லறைச் சாமான் லிஸ்டில்  கண்டு பிடிச்சேன்.  

                                         அந்த லிஸ்டில், சீயாக்காய், சந்தனாதித்தைலம், ஜாதிக்காய், கராம்பு , ஏலம், மாதுளம்பழ எண்ணை, வாசப் புகையிலை, சுண்ணாம்பு ,வெத்திலை,பாக்கு , பாக்கு உரல் , சண்டுள் வூட் சோப் , இன்னும் பல இருந்தது. இதுகள் அவர் முன்னம் ஒரு போதும் வேண்டியது இல்லை,முக்கியமா  பெரிய மாமி வீட்டு குடும்பத் தலைவியாக இருந்த நேரம் வேண்டியதேயில்லை. எனக்கும் தெரியும் யாருக்கு வேண்டுறார் என்று.ஆனாலும் ஆச்சரியமாக இருந்தது  பித்தளைக் குடம் இதெல்லாம் பாவிப்பதால் தான் பவுர்ணமி ஜொலிப்பாகப்  பித்தளைக் குடம் போல இருப்பது போல இருந்தது. 

                                               பெரிய மாமிக்கு இன்னுமொரு பெண்ணைத்  தன்னோட புருஷன் சமையலுக்கு கொண்டு வந்து வைத்திருப்பது நன்றாகவே தெரியும், ஒரு கட்டத்தில் அந்தப் பெண் சமையலுக்கு மட்டுமில்லை என்பதும் தெரியவந்தநேரம் சாமியறைக் கதவை இறுக்கிச் சாத்திப்போட்டு, எப்பவுமே படுத்த படுக்கையை விட்டு எழும்பி நடமாடவே விரும்பாமல் ஒவ்வொருநாள் காலையிலும்  படித்துக்கொண்டிருந்த தேவார திருவாசகத்தையும் படிக்கிறதை நிட்பாட்டிப்போட்டு நிரந்தர மவுனம் ஆகிட்டா.  

                                        பித்தளைக்குடம் நல்லா சமைப்பா. அது ஒரு வேறு விதமான சமையல், நிறைய சரக்குத்தூள் அம்மியில அரைச்சுப் போட்டு செட்டிநாட்டு சமையல் போல இருக்கும். பெரிய மாமாவும் பித்தளைக்குடம் அருகில் இருந்து பரிமாற  மிகவும் சந்தோசமா சாப்பிட்டார். அதுக்குப்பிறகு பித்தளைக் குடம் சாப்பிட்டு முடிய  பெரிய மாமிக்கு ஒரு தட்டில சாப்பாடு போட்டு ஜெயிலில் உள்ளவர்களுக்குக்  கம்பிக் கதைவைத் திறந்து தள்ளி விடுவார்களே அதே போல தள்ளி விடுவா. பெரிய மாமா அதைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பிறகு  பித்தளைக்குடம் பாக்கு உரலில் வெத்திலை இடிச்சுப் போட முன்னுக்கு இருந்து சிரித்து சிரித்து கதைத்துக்கொண்டு இருப்பார் .

                                   பித்தளைக்குடம் வந்த ஒரு கிழமைக்குள் பெரிய மாமா அந்த வீட்டில சாமி அறை எந்தப்பக்கம் இருக்கு என்பதையே மறந்திட்டார். பித்தளைக்குடம் அவரை சேலைத் தலைப்பில முடிஞ்சு வைச்சு இருந்தா. நாய்க் குட்டி போல  பித்தளைக்குடத்தின் காலுக்க கிடந்தது சுழன்டார் பெரிய மாமா . எனக்கும் வேண்டுறதுக்கு சாமான் லிஸ்ட் எப்பவுமே பெரிய லிஸ்ட் ஆக இருக்க மிச்சக் காசு எவளவு வந்தாலும் கேட்க மாட்டார்.  அதால நானும் கைச் செலவுக்கு காசு அதிகம் வருகுது தானே என்று என்ன நாசமறுப்பு எண்டாலும் நடக்கட்டும் எண்டு என் பாட்டில் இருந்தேன், நான் சொன்னால்தான் வெளிய தெரியவரும் இதெல்லாம் எண்டு அவருக்கு நல்லா தெரியும் அதால இடைக்கிடை கடனாக நூ று . இருநூறு  எண்டு கேட்பேன்  உடனையே ஆயிரத்தில் மயில் தாள் உருவித் தருவார்  

                                          பித்தளைக்குடம் என்னோட அதிகம் கதைக்க மாட்டா , ஆனால் நல்ல ஒரு பெண்மணி போல இருந்தது அவா கதைத்த சில நாட்களில். பெரிய மாமா ஆகோ ஓகோ எண்டு தலை கால் சந்தோஷத்தில் மிதந்துகொண்டு இருந்தார், பத்துப் போடுற பொம்பிளை வந்து பெரிய மாமிக்கு பத்துப்போடுவா,

                        "  இனி நீ  மருந்து கட்ட வரவேண்டாம், கதவை இறுக்கி அடிச்சு சாத்திப்போட்டுப் போ, இந்த வீட்டுக்குள்ள என்னோட புருஷன் போடுற கூத்துப் போதும் எனக்கு வலிக்க வலிக்க செத்துப்போக  , இன்னும் சில  நாளில் நான் செத்துப் போக வேண்டும் , இனி நீ இங்க வர வேண்டாம்,,நீ இங்க அடிக்கடி வந்தா பிறகு உன்னையும் எண்ட மனுஷன் ,,வேண்டாம்,,எக்கேடு கெட்டு எண்டாலும்  வாழ்ந்து தொலையட்டும்,இன்றைக்கே நான் செத்தாலும் சந்தோசமா போயிடுவேன் ..நீ கதவை அடிச்சு சாத்திப்போட்டு போ , முதல் இங்க நடக்கிற கதையும்,,சிரிப்பும்,,கும்மாளமும்  என்னை ஒவ்வொரு அணு அணுவா குத்திக் கொல்லுது ...நீ கதவை அடிச்சு சாத்திப்போட்டு போ " 

                       என்று சொன்ன நாளில் இருந்து அவள் வரவில்லை. 

                          பித்தளைக்குடம் வீட்டில இப்ப முக்கிய பிரமுகராக இருந்தாலும். அவாவின் செயல்கள் அதுக்கு பெரிய மாமா கொடுக்கும் ரியாக்சன், அதுக்கு பித்தளைக்குடம்  தள்ளி விடும் சைட் எபெக்ட் , பிறகு ரெண்டு பேரும் மாறிமாறி ஆளை ஆள் கண்ணால சிக்னல் போட்டு அதுக்குப்  போடுற பக்கிரவுண்ட் மியூசிக் இதுகளைப் பார்க்க பித்தளைக் குடமும் பெரியமாமாவும் முதலே வருசக்கணக்கா ஒன்றா வாழ்ந்தவர்கள் போல இருந்தது. ஆனாலும் எங்கே  என்று உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது , 

                          ஒருநாள் குசினியில் சாப்பிடும் போது பெரிய மாமா கோபமாகி 

                      " செவிட்டில அறைஞ்சன் என்டா இப்ப உனக்கு,  வருசக் கணக்கா சமைச்சுப்போட்டும் இன்னும் என்னோட உப்புப் பதம் பிடிக்க முடியவில்லையே  ,என்னத்தைக் இவளவு வருசமும் கவிட்டுக் கொட்டிக்கொண்டு இருகிறாய் என்று மெய்யாத்தான் எனக்கு விளங்கவில்லை "

                                 என்று  சாப்பாட்டில உப்பு அதிகம் என்று தாறு மாறாக் கத்தினார் , இன்னொருநாள் வேட்டி வளம் மாறிக் கரை மடிசுக் கிடக்கு என்று உரிமையோடு கோபமாகி, 

                          " முகத்தில போட்டன்  என்டா இப்ப உனக்கு, நாலு முழம் வேட்டிக்கு பட்டுக்கரை பிடிச்சு மடிச்சு வைக்கத் தெரியாமல் இவளவு வருசமும் என்னத்தை ஆவெண்டு பார்த்துக்கொண்டு இருந்தனி,,இப்பிடி செய்யவேண்டாம் எண்டு எத்தின வருசமா படிச்சுப் படிச்சு சொல்லுறன்,,நீயும் நாய் வால் போல நிமிராமல் தானே நிக்குறாய் அடம்பிடிச்சுக்கொண்டு " 

                                      என்று தோச்சு மடிச்ச வேட்டியைக் கரை மாறி மடிச்சதுக்கு பேசினார் . அதுக்கும் பித்தளைக்குடம் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து "ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: " மந்திரம் சொல்லி தாலி கட்டின கணவனிடம் திட்டு வேண்டுற பதிவிரதை மனைவிபோல  தலையைக்குனிந்து கால் விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தா. அப்பவும் பேச்சு பின்னணியில் பித்தளைக் குடத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து விழுந்துகொண்டு இருந்தது 

                                                இதெல்லாம்  எனக்குத் தெளிவாகக் கேட்க முடியாத தூரத்தில் நடந்த உரையாடல்கள். சிவாஜி கணேசன் நடித்த தமிழ் சினிமாப் படங்கள் பார்த்த அனுபவத்தில் உரையாடலுக்கும் வாய் அசைவுக்கும், முகப் பாவனைக்கும்  உள்ள வார்த்தைத் தொடர்பை உன்னிப்பாக ஊகிக்கும்  திறமை அந்த நாட்களில் என்னிடமிருந்தது. என்றாலும் ஒருநாள் பெரியமாமா வவுனியாவுக்குப் போய் இருந்த நேரம் பித்தளைக்குடத்தையே  மடக்கிக்  கேள்வி கேட்டேன் 

                                     " பெரிய மாமாவை,, ,சமையல் வேலைக்கு இங்கே வர முதல்  முன்னமே தெரியுமோ "

                                    " ஏன்  நீர் கேக்குறீர் ,,உமக்கு என்ன பிரசினை இப்ப "

                               "  இல்லை , முதலே வருசக்கணக்கா ஒன்றா வாழ்ந்தவர்கள் போல இருந்தது. அதால சும்மா கேட்டேன் "

                                " ஏன்  நீர்  என்னைக்  கேக்குறீர் , உம்மட மாமாவைக் கேளுமேன் முதலில் , அவர் சொல்லட்டுமென்  பதிலை. " 

                                  " இல்ல மாமாவைக் கேட்டால், பிறகு பிரசினை , எனக்கு ஏன் தேவையில்லாத கேள்வியும், தேவையில்லாத  பதிலும்  "

                                "  ஏன் எப்பவுமே இதுக்கு பொம்பிளையளிட்ட பதில் சொல்லச்  சொல்லி கேள்வி கேட்குறிங்க, செய்யிற திருக்கூ த்து எல்லாம் உம்மட பெரிய மாமா செய்துபோட்டு ,பெரிய்ய்ய்ய்ய்ய  மாமா ,,ஹ்ம்ம் ,,பெயர்தான்  பெரிய மாமா,,இப்ப உருத்திராட்சம் மாலையைக் கையில வைச்சு சுழட்டிகொண்டு இருந்தா சரிவருமே   "

                               "அய்யோ,,,என்னை விடுங்க,,,இந்தக் கேள்வியையே மறந்திருங்க இப்படிக்  குருசேஸ்திர   அஸ்திரங்கள்  பாயும் என்று  தெரியாமல் கேட்டுப் போட்டேன்  " 

                                       " ஹஹஹஹா, உங்க மாமாவே,, ஹ்ம்ம்,, இவர்தான் பெரிய்ய்ய்ய்ய்ய  மாமா,, பெரியமாமா  அவரும்  மறந்துதானே ஓடப்பார்த்தார் , விதி விடாதே "

                                       " விதி யாரைத்தான் விட்டு வைக்குது "

                                    " இல்லை,,நீர் மாமாவை  சும்மா கேளும், எனக்கும்  அவர் என்ன பதில் சொல்லுறார் எண்டு அறிய ஆவால் , ஹ்ம்ம், உமக்கு என்ன பிரசினை அதலா வரப்போகுது  எண்டும் பார்ப்பமேன்  " 

                                   " ஹஹஹா,,பிறகு மாமா இங்க வரவேண்டாம் என்டு சொன்னால்,,கைசெலவுக்கு காசு வருமானம் நிண்டு போடுமே,,அதால நானா வாயத் திறந்து ஒண்டும் கேட்கவே மாட்டேன் "

                                 " இல்லை உமக்கு மண்டைக்குள்ள கேள்விகள் கிடந்தது புழு குடையிற மாதிரி நிறைய இருக்கெண்டு நான் என்ன செய்யுறேன் எண்டு என்னை ஒவ்வொரு முறையும் நீர் இரகசியமாப் பார்க்கும் போது  எனக்கு தெரியும் "

                                      " அது உண்மை,,ஆனால் இப்ப எனக்கு இது தேவை இல்லாத உத்தியோகம்,,பெரிய மாமா எனக்கு நல்ல பினான்சியல் சப்போர்ட்,,அதுதான் காசு காய்கிற மரம்,   அதைக் கெடுக்க விரும்பவில்லை "

                                       " ஒ அப்பிடியே சங்கதி "

                                      "  பெரிய மாமா அப்படி செய்ய மாட்டார், என்றாலும் சொல்ல ஏலாது .."

                                        " இல்லை அவர் அப்படி செய்ய மாட்டார்,,நல்ல மனுஷன்,,விருப்பமான ஆட்களை ஒருநாளும் உதறி ஏறிய மாட்டார் "

                                     " ஹ்ம்ம்,,,அப்படியா ,ஹ்ம்ம், ,"

                                  " இப்ப என்னத்துக்கு சாமி அறையைப் பார்த்து பெரு மூச்சு விட வேணும் ..,,அதுக்கு என்ன அர்த்தம் சொல்லும் "

                                       " இல்லை,,ஒண்டுமில்லை "

                              "  இவர் உமக்கு என்ன தாய் மாமாவா , பெரிய மாமா எண்டு சிலநேரம் சொல்லுறீர் ,,இவர்  ,உம்மோட அம்மாவோட  அண்ணாவா .."

                                 " இல்லை ,,தூரத்துச் சொந்தமெண்டு அம்மா சொல்லி இருக்கிறா "

                                   " ஹ்ம்ம்,,எனக்கும் உம்மட மாமா  துராத்தில்...இங்கிருந்து  வெகு  தூரத்தில்,,,,நல்லா  தெரியும்,,,ஹ்ம்ம்,,,இங்கே யாருக்கும்  தெரியாமல்  இருந்து இருக்கும் .".

                                 "  என்னது  வெகு தூரத்தில் என்றால் எந்த ஊரில "

                              "  இல்லை ,,ஹ்ம்ம்,,இல்லை,,,என்னண்டு சொல்ல,  ஒருவேளை போன பிறப்பில ஒன்றாக கணவன் மனைவியாக இருந்து இருப்பமோ  தெரியவில்லை ,,ஹ்ம்ம்,,எப்படிப் பதில் நல்லா சோத்தாங் கையால பிடறீல அறைஞ்ச மாதிரி இருக்கா " 

                               "  எனக்கு ஒன்றுமே புரியவில்லை ,நான் பிறகு ஒருநாள் ஆறுதலாக் கதைக்கிறேன் ,,இவளவு கதைததுக்கே நன்றி . "

                                      பரிஸ் இல் வசித்துக்கொண்டிருந்த பெரிய ராசன் அந்த வீட்டில தாய் மீது மிகவும் அன்பும்,அக்கறையும் உள்ள ஒருவர். பெரிய மாமா  வீட்டில அண்மைக்காலமாக  நடக்கும் எதையுமே அவருக்கு சொன்ன மாதிரி தெரியவில்லை.முக்கியமா பெரிய மாமி படுத்தபடுகையாக இருப்பது சொல்லப்படவில்லை. மற்றப்படி அந்த வீட்டில்  ஒன்றுமே சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டிருப்பது இல்லை போலதான் இருந்தது. இப்பிடி  " ஒன்றுமே சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டிருப்பது இல்லை போல "  என்று எப்பவாவது நடந்தால் அதுக்குப் பிறகு தான் பெரிய குண்டுகள் வெடிக்கும் . 

                               பெரிய மாமா  சில நாள் வவுனியாவுக்கு போய் லொட்சில் நின்று  ,பெரிய ராசனுடன் டெலிபோனில் கதைப்பார் , கதைச்சு காசு எடுத்துக்கொண்டு வருவார். அப்படிப் போனபோது பெரிய மாமி படுக்கையில் இருக்கிறதா சொல்லி இருக்கிறார் போல,ஏன் சொன்னார் என்று தெரியலை, அல்லது  சில பிராத்தனைகள் ,வேண்டுதல்கள் , இறந்துகொண்டிருக்கும் நம்பிக்கைகள் அவரை அறியாமலே அப்படி அவர் வாயாலயே சொல்ல வைத்ததா என்று எனக்கு சரியாத் தெரியவில்லை.

                                    வவுனியாவுக்கு போயிட்டு வந்த சில நாட்களில் ஒரு நாள் பின்னேரம் பெரியமாமா  வீட்டுக்குப் போனேன்  , பித்தளைக்குடம் குசினி வாசலில் நிலத்தில இருந்து கொண்டு  பாக்கு உரலில் வெத்திலை இடிச்சு வாய்க்க வழிச்சு அடைஞ்சு கொண்டு இருந்தா. பெரிய மாமா ஹோல் நடுவில் இருந்த குஷன் செற்றியில் காலுக்கு மேலே காலைப் போட்டுக்கொண்டு, அதை ஆட்டிக்கொண்டு, மெய்கண்டான் கலண்டரில் தாள்களை  ஒவ்வொன்றாய் பிரட்டிப் பிரட்டி ஜோசிதுக்கொண்டு இருந்தார் ,நான் ஹோல் வெளிக்கதவில்  பெட்ரோல்மக்ஸ்க்குக்  காற்று அடிச்சுக்கொண்டு இருந்தேன் , பித்தளைக் குடம் அன்றைக்கு அதிசயமா 

                                " என்ன ,,உம்மோட கொண்ணை வெளிநாட்டில் இருந்து வாறாராமே,,இனியென்ன உமக்கும்,,உங்களுக்கும்  கொண்டாட்டம்  தானே,,இனிப் பிறிச்சுப்   பார்த்து ..நான் பழையபடி  பிறத்தி ஆட்கள்  போல  வெளியால போக ..உங்களுக்கு  இனிக் கொண்டாட்டம்  தானே ,,ஹ்ம்ம்  "

                                   என்று சொன்னா. பெரிய மாமா அப்படிக் கதைக்க வேண்டாம் என்று சொன்னார். எனக்குப் பெரியமாமாவைப் பார்க்கக்  குழப்பமாக இருந்தது .அவர் கையில வைச்சிருந்த மெய்கண்டான் கலண்டரில  திருத்தனி முருகபெருமான்  தங்கவேலை இறுக்கிப் பிடிசுக் கொண்டிருந்த படத்தில ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டு வள்ளியும் மற்றப்பக்கம் ஒட்டிக்கொண்டு தெய்வயானையும் இருக்க " யாமிருக்கப் பயமேன் " என்று மேலே கறுப்புக் கொட்டை எழுதில மேல எழுதி இருந்தது   
                                  
                                  " ஹ்ம்ம், இந்த முறை வவுனியாவுக்கு போன நேரம், பெரிய ராசனுடன் கதைச்சனான்,,,ஹ்ம்ம்,,பத்தோடு பதினொன்டா ,,உளறிப்போட்டன் ..,,ஹ்ம்ம்,,,சண்டை பிடிச்சான்,,, இப்ப அவன் அடுத்த கிழமை வந்து இறங்கப் போறான் எண்டு சொல்லிப்போட்டான், ....இந்தக் கிழமைகுள்ள  வந்திருவான் போல இருக்கு ...ம்..." 

                                     என்று சொன்னார்,,சொல்லிப்போட்டு என்னைப் பார்த்தார்,,நான் பித்தளைக் குடத்தைப் பார்த்தேன்,,பித்தளைக் குடம் பெரிய மாமாவைப் பார்த்துக்கொண்டு இருந்தா,,நான் அதைக் கேட்டுக்கொண்டு பெற்றோல்மக்ஸ்க்கு புசுக்கு புசுக்கு என்று காத்து அடிச்சுக் கொண்டு இருந்தேன் 

                                   " என்ன நான் சொன்னது கேட்டதே  உனக்கு,,,"

                                   "  இல்லை மாமோய் ,வடிவாக் கேட்கவில்லை, இன்னொரு தரம் சொல்லுங்கோ மாமோய்      "

                                        " ஹ்ம்ம், இந்த முறை வவுனியாவுக்கு போன நேரம், பெரிய ராசனுடன் கதைச்சனான்,,,ஹ்ம்ம்,,பத்தோடு பதினொன்டா ,,உளறிப்போட்டன் ..,,ஹ்ம்ம்,,,சண்டை பிடிச்சான்,,, இப்ப அவன் அடுத்த கிழமை வந்து இறங்கப் போறான் எண்டு சொல்லிப்போட்டான்,,,,,இந்தக் கிழமைகுள்ள  வந்திருவான் போல இருக்கு ...ம்..." 

                                      "  ஓ,, அப்படியே  சங்கதி .மாமோய் ....ம்,,,"

                                    " என்ன நான் சொன்னது கேட்டதே  உனக்கு,,,"

                                "  நல்லா விளங்குது மாமோய்  ..கன வருசம் ராசன் அண்ணை இங்காலே வரேல்லத்  தானே, வந்தா சந்தோசம்  தானே " 

                       என்று சொல்லி பித்தளைக் குடத்தைப் பார்த்தேன், பித்தளைக் குடம் நாடிக்கு கையை முண்டு கொடுத்துக்கொண்டு, வாயில வெத்திலை போட்டு மென்று கொண்டு,  பெரிய மாமாவைப் பார்த்துக்கொண்டு இருந்தா

                                     " இவளைப் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் பார்ப்பம் என்று நினைக்கிறேன் ,, அல்லது  சென்றல் நேர்சிங் ஹோமில் வைச்சும் பார்க்கலாம் என்று நினைக்கிறன் நீ என்ன நினைக்கிறாய் "

                                  "  உங்களுக்கு என்ன விருப்பமோ,,என்ன வசதியோ அதுபோல செய்யலாம்,,மாமி  முதல் சம்மதப்பட்டு வருவாவோ தெரியாதே "

                                       " அது தான், நீ ஒருக்கா கதவைத்திறந்து கேள்..நான் அந்த அறைப்பக்கமே இவ்வளவு நாளும் எட்டிப் பார்க்கவில்லை , இப்ப அவள் இப்ப என்னோட முகத்தைக் கண்டாள் கட்டாயம்  யமனை கண்ட மாதிரி  எரிஞ்சு பாஞ்சு விழுவாள் "

                                        "    சரி , நான் கதைக்கிறேன், சில நேரம் என்னோட அவா  கதைச்சு இதுக்கு எதுவும் ஒரு முடிவு கட்ட முடியும் என்றா நான் கதைக்குறேன்  மாமோய்    "

                                       "  விளங்கேல்ல, நீ சொல்லுறது  என்னத்தைக் கதைச்சு  என்னத்துக்கு முடிவு கட்டப் போறாய்,  நான் ஏற்கனவே குழம்பிக்கொண்டிருக்கிறேன்,  இதுக்குள்ள நீ வேற என்ன சொல்லுறாய் " 

                                    " இல்லை மாமோய் ,பிரைவட் வாட்டில் நிற்பாட்டி சென்றல் நேர்சிங் ஹோமில் வைச்சும் பார்க்கலாம் என்று நீங்க  நினைக்கிறதை சொன்னேன் மாமோய் "

                                    " அதுதான் நானும் நல்லது எண்டு நினைக்கிறன்,இப்ப உள்ள நிலைமையில் நான் கதைக்கப் போனால் பெரிய பிரசினை எடுப்பாள் "

                                      "     ம்  "

                                "  என்ன ம் ம் எண்டு மண்டிக்கொண்டு இருகிறாய்,,நீ கதைக்கிறியே ,,இப்பவே உதைக்  கொழுத்திப்போட்டு போய்க் கதை "

                                      "  மாமா ,,வந்து ..வந்து "

                                   " என்னடா  மண்டையச் சொறியிறாய் "

                              "  இல்ல  மாமா ,,ஒரு சின்னப்  பிரசினை  எனக்கு ,,மாமா "

                         " சொல்லடா,,நானே  பெரிய  பிரசினையில் நிக்குறேன் "

                                   " அது வந்து  மாமா,,,வந்து "

                                 " என்னடா  வந்தது  போனது  ,,வாயை திறந்து  சொல்லு "

                                     "   மாமோய் , ஏசியாச் சைக்கில்  ஒன்டு நல்ல விலைக்கு வந்திருக்கு மாமோய்,,இப்ப வைச்சு ஓடுற பழைய சைனாக்காரன் செய்த சைக்கிள் சக்குப் பிடிச்ச சைனாக்காரன் போலக்  கிடந்தது அவிக்குது மாமோய் "

                                        "   ம்  என்ன விலையாம் "

                                     "  ரெண்டாரியம் சொல்லுறாங்கள் மாமோய்,,"

                                        "     ம்,,நாளைக்கு காசு தாரன் ,,இப்ப நீ போய்க் கதைச்சு அவளை ஒரு வழிக்குக் கொண்டுவா ,,ரெண்டாயிரம் நாளைக்கு கட்டாயம் தாரேன் "

                                           "   சரி மாமோய் ,,நான் வெண்டு தாரன் நீங்க ஜோசிக்க வேண்டாம்,,உங்கட நல்ல மனதுக்கு எல்லாமே நல்லபடியாதான் நடக்கும், 2

                            என்று சொல்லி பெட்ரோல்மக்ஸ்சைக் கொழுத்தி வைச்சுப்போட்டு எழுந்து போய்க் சாமியறைக் கதவைத் திறந்து மெல்ல எட்டிப் பார்த்தேன். பெரிய மாமி அரைவாசியாய் மெலிஞ்சு போய் கிடந்தா என்னை நேராகப் பார்த்தா. இதுக்கெல்லாம்  நீயும்தானே உடந்தை என்பது போல அந்தக் கண்களில் ஒரு கோபம் இருந்தது. என்னோடையும் கதைக்க விருப்பம் இல்லை என்று சொன்னா, " கதவை மட்டும் இறுக்கிச் சாத்திப்போட்டுப் போ " என்று சைகையில் சொன்னா.

                                        இது நடந்து ரெண்டாம் நாள் பெரிய மாமா சொன்ன மாதிரியே பெரிய ராசன் வந்திட்டார் என்றும் என்னை உடனடியா வரசொல்லியும் இந்த முறை பித்தளைக்குடம் தகவல் அனுப்பி இருந்தா. போய்ப் பார்த்த போது நான் நினைச்ச மாதிரிதான் புயலடிச்சு ஓஞ்சு   நாலு பக்கமும் சிதறி இருந்தது வீடு ..........

                           பாகம் இரண்டில்  புயல் தொடரும்.... ..


Saturday 28 November 2015

திரும்பபப் பெற்றுக்கொள்ள முடியாத இசை

ஆங்கிலப் பாடல்கள் கிட்டாரில் வாசித்துப் பாடிய நேரம் கொஞ்சம் வித்தியாசமா காதல் பாடல்கள் இசை அமைத்த பலரில் ,முக்கியமானவர் போல தெரிந்த கேட்ஸ் ஸ்டீவன்ஸ்  இன் ஒரு " it's a wild world And it's hard to get by just upon a smile " பாடலை எப்போதும் பாடுவேன் ! அதில் உள்ள கிடார் கோட்ஸ் அமைப்புகள் மிகவும் அழகா இருக்கும் ! 

                                  அந்தப் " it's a wild world And it's har
d to get by just upon a smile "பாடல் சென்ற  வருடம்  நான் facebook இல் என்னோட சுவரில தப்பினேன்,ஒருவரும் ரசித்துக் கேட்ட மாதிரி தெரியவில்லை,என்ன காரணமாக இருக்கும் எண்டு எனக்கு இண்டுவரை விளங்கவில்லை. இந்தப் பாடல் ஒரு உலகப் புகழ் பெற்றபாடல், டெக்னிகலா "ரிதம் " அதன் அரிதான chords ஒழுங்கமைப்பில் பல புதுமை செய்த பாடல்,

                              ஸ்கண்டிநேவிய சுவிடன்,நோர்வேயில்  இது ரெம்பப் பிரபலம், துரதிஸ்டவசமாக மற்ற நாடுகளில் அதிகம் கவரப்படவில்லை ! பாடல் வரிகளும் அர்த்தம் நிறைந்த , humanitarian பற்றிif you wanna leave, take good care ,Hope you make a lot of nice friends out there,But just remember there's a lot of bad and beware, beware நிறைய விசியங்கள் உள்ளது !

                                           இதைப் பாடி,இசை அமைத்த Cat Stevens என்ற இந்தப் பாடகர், கிரேக் நாடட்டு அப்பாவுக்கும்,ஸ்வீடன் நாட்டு அம்மாவுக்கும் ,இங்கிலாந்தில் பிறந்தவர்,அந்த நாடில வளர்ந்தவர்,14 வயதில் கச நோயால தாக்கப்பட்டு மயிர் இழையில் உசிர் தாப்பியவர் ! "டீன் ஏஜ் வயசில்" கிற்றார் வாசிக்க தொடங்கி "டீன் ஏஜ் " வயசிலையே அவரோட முதல் அல்பத்தை வெளியிட்டவர்,அது இரண்டு கிழமையில் 5 மில்லியன் வித்து தள்ளியது !

                                          கட்ஸ் ஒருமுறை கடலில் குளிக்கும் போது சுழி இழுக்க ,எல்லா கடவுளையும் கூப்பிட ஒருவரும் வரவில்லை,கடசியா " அல்லா நீயாவது வந்து என்னைக் காப்பாற்று " என்று கதற ,அலைகளின் மீது ஒரு மரப்பலகை மிதந்துவர அதைப் பிடித்து உசிர் தப்பினார் ,அன்றில் இருந்து இஸ்லாம் மார்கத்துக்கு மாறி , யூசப் இஸலாம் எண்டு பெயரை மாற்றிக்கொண்டு ,அடியோடு பொப் இசை அமைப்பதை நிறுத்திவிட்டார் !

                                    கிட்டார் என்ற வாத்தியத்தில் "Consonance and dissonance" என்ற வித்தையில் கில்லாடியான கட்ஸ் , இசை உலகை விட்டுப் விலத்தி ,இசலாமிய ஆன்மீகத்தில் இறங்கியது ,இசை உலகத்துக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு ,அவர் இஸ்லாமியர் ஆனபின் "A FOR ALLAA " எண்டு ஒரு அல்பம் வெளியிட்டார், அது பல சர்சைகளைக் கிளப்பியது. அதன் இசையில் கிட்டார் இருந்தாலும்,கருத்துக்கள் கொஞ்சம் தத்துவ வில்லங்கமாக இருக்க ,உலகம் எங்கும் உள்ள அவரோட ரசிகர்கள் குழம்பிப் போனார்கள் ! 

                                      அவதுவும் இல்லாமல் துணிந்து " அமரிக்காதான் இந்த உலகின் முதல் பயங்கரவாதி " என்று சொல்ல அவரை வாழ்நாளில் அமரிக்காவுக்குள் வரமுடியாதவாறு தடை செய்துவிட்டார்கள்!

                                           இதயத்தில ஈரம் உள்ள , கட்ஸ் ,அவரோட இசை அல்பங்கள் விற்றுவரும் பணத்தையும்,தன்னோட எல்லா கிடார்களையும் ஏலம் விட்டு, வந்த பணத்ததை வறிய இஸ்லாமிய நாடுகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டார் . இசையில் இருந்து ஒதுங்கினாலும், இந்த இசை மேதைக்கு , அவரோட பழைய பொப் ,சோல் ,ப்ளு கிராஸ் ஸ்டைல் பாடல் தந்த பாதிப்பில் இன்னமும் விடாப்பிடியாக உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்குறார்கள் !

                                       அப்படிதான் அவர் , மனதை கசக்கிப் பிழியும் மெட்டுக்களில் பாடல்கள் இசை அமைத்தார் ! இந்த உலகத்தில எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்கிறது,இந்த நுற்றாண்டின் திரும்பபப் பெற்றுக்கொள்ள முடியாத இசை இழப்பு கேட்ஸ் ஸ்டீவன்ஸ் ....it's a wild world I'll always remember you....!

.

Samsaaram Enpathu Veenai...Guitar Cover .Vijaya Baskar





.தமிழில் அதிகம் அறியப்படாத, தமிழ் நாடில் முதலியார் குடும்பத்தில் பிறந்த விஜயபாஸ்கர் என்ற கன்னட இசை அமைப்பாளர் இசைஅமைத்த , ",S .B B இக்கு புகழ் தேடித்தந்த ,கவியரசு கண்ணதாசனின் வரிகள் அசத்திய " சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது இராகம் " பாடல் விஜயபாஸ்கர் இசை அமைத்தது .

கன்னட படங்களில் கொடிகட்டிப் பறந்த விஜய பாஸ்கர் தமிழை விட, கன்னடா, தெலுங்கு,மலையாளம் ,மராத்தி,கொங்கனி ,துளு மொழிப் பாடல்களுக்கும் இசைஅமைத்துள்ளார். புகழ்பெற்ற அடூர் கோபாலக்ருஷ்ணன் என்ற மலையாள இயக்குனரின் எல்லாப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார் !
சிறுவயசிலேயே ஹிந்துஸ்தானி இசை வெஸ்டர்ன் பியானோ முறைப்படி பயின்ற விஜய பாஸ்கர் ,தெனிந்திய திரை உலகில் "Theme Music "என்பதை முதல் முதல் அறிமுகம் செய்தவர் என்கிறார்கள்! கன்னட மொழியின் சிறந்த கவிஞ்சர்கள் எழுதிய கவிதைகள் எல்லாத்துக்கும் இசை அமைத்து உள்ளாராம்! எழுபதுகளிலேயே லண்டனுக்குப் போய் Robert Clive என்ற இந்திய வரலாற்று ஆங்கிலப் படத்துக்கு BGM பின்னணி இசைஅமைத்துள்ளார்!
தென் இந்திய இசை அமைபாளர்களிலேயே மிகக் குறைவான இசை கருவிகளை ஒர்கேஸ்ராவில் வைத்து இசை அமைத்தவர் இவர் ஒருவர்தானாம் , அதாலதான் அவர் பாடல்கள் இனிமையாக அதே நேரம் எளிமையாக இருக்குது போல ! ஆறு முறை ஒரு மாநிலத்தின் சிறந்த " State Film Award for Best Music Director " பரிசு வென்றவர் ,
ஹிந்துஸ்தானி கஜல் பாடல்கள்,தெய்வீகப் பக்திப் பாடல்கள், நாடுப்புற FOLK பாடல்கள் இசை அமைத்த விஜய பாஸ்கர் ஒரு பேட்டியில் அடக்கமாக "folk music was the forerunner of all existing forms of music in the world" என்று இசையின் ஆதரமே நாடுப்புற இசையில் தொடங்குகின்றது எண்டு சொல்கின்றார் !
77 வயதில் 2002 இல் பெங்கலுரில் மார்அடைப்பால் திடீர் எண்டு இந்த உலகை விட்டுப் போனாலும் விஜய பாஸ்கர் இசை அமைத்த பல பாடல்கள் அவளவு இலகுவாக ரசிகர் மனங்களை விட்டுப்போக முடியாதவை!

Sunday 22 November 2015

மங்களேஸ்வரி...முதல்ச் சண்டை

சிங்கம் எல்லா வேட்டையிலும் வெல்லாது அதுபோல ஒழுக்க சீலமாக  நல் நடத்தையோடு  வாழவேண்டும் என்று எழுதி வைத்த எல்லாமே எப்பவும் நடக்காது . அது வெறும் தியரி , அதை நடைமுறையில் எதிர்கொள்ளும் போது முன்னுக்கு வந்து விழும் வாழ்க்கை அனுபவம் என்பது பிரக்டிக்கல். ஆனாலும் ஒரு இடத்தில தொடர்ந்து ஒரே வேலையைச்  செய்வதுக்கு தியரியும், பிரக்டிகலும் பல சந்தர்பங்களில் ஒரே நேரத்தில் பாஸ் செய்யவேண்டியிருக்கும். 

                                                  அப்படி சொல்லிக்கொண்டுதான் மங்களேஸ்வரி அந்த இடத்துக்கு ஒரு கிழமை சோதனை மேற்பார்வைக்கு வந்தா. வந்து நல்லா அடிப்பெட்டியில் இருந்து அகப்பைக் காம்பு வரை சோதனை செய்து , அந்த ஒரு கிழமை முடிவில் என்னோட வேலைக்கு அவா எழுதிய  சோதனை மேற்பார்வை ரிப்போட் ஆப்பு வைச்சுது. அது நடக்கும் என்று மங்களேஸ்வரி வந்த முதல் நாளே அவா தலையை விரிச்சுப் போட்டு வேப்பிலை இல்லாத குறையாகப் பத்திரகாளி ஆட்டம் போட்ட போதே எனக்கு விளங்கியதால், நான் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை .

                                                            முதலில் நான் வேலை செய்த அந்த  மயான அமைதியான  இடத்தையும் , ரெண்டாவதா அதில என்ன வெட்டுக் குத்து வேலை செய்தேன் என்பதையும், மங்களேஸ்வரி என்ற மங்கல்ஸ் யார் என்பதையும்..பிறகு  ,,பிறகென்ன  உங்களுக்கே வரிச்சு மட்டை வேலியைப் பிடிச்சுக்கொண்டு போன மாதிரி வாசித்துக்கொண்டு போக விளங்கும் ஏன் மங்களேஸ்வரி கோடாலி போட்டுப்  பனங்கொட்டுப் பிளந்தது போல  எனக்கு ஆப்பு வைச்சா எண்டு 

                                                 சில வருடம் முன்னர்  நோர்வேயில் ஓய்வூதியம் பெறும் வயதானவர்களுக்குப்  பகல் நேரம் மத்தியானச் சாப்பாட்டு கொடுத்து , பின் அவர்களை  வேறு சில உடட்பயிட்சியுடன் இயங்க வைக்கும் நிகழ்வுகள் நடத்தி , முக்கியமா அவர்கள் தங்களுக்குள் இளமையில் செய்த  எல்லா நல்ல செயல்களையும் நினைத்துச் சிரித்து, துன்ப நிகழ்வுகளில் துக்கித்து,  கதைத்துப் பேசி, கோப்பி குடிக்கும் " எல்டர் செண்டர் " என்ற  இடத்தில ஆரம்ப நிலை சமையல் குக் ஆக வேலை செய்தேன்

                                       அந்த இடம் வயதானவர்களின் கடைசிக்காலம் அதன் கடைசிப் பக்கத்தில் பிரியாவிடை எழுதும் நேரத்துக்காகக் காத்திருக்குமிடம். ரெண்டு கிழமைக்கு இடையில் ரெண்டு பேருக்கு அதே இடத்தில படம் வைச்சு மெழுகுதிரி ஏற்றுவார்கள். அந்த ரெண்டு பெரும் சில வாரம் முன் என்னோட கோப்பி குடிக்கும்போது வாழ்க்கை எவளவு அழகானது எண்டு கதைத்துக்கொண்டு இருந்திருப்பார்கள். மற்றவர்கள் அந்த மெழுகுதிரி வாசத்தில் அந்த ரெண்டு பேரின் நினைவுகளைப் பேசிக்கொண்டு தங்களுக்காக  மெழுகுதிரி ஏற்றி வைக்கும் நாளுக்காக மவுனமாகக் காத்திருப்பார்கள். 

                                                    இது வழமையா நடப்பதால் எனக்குச்  சாவு வெறுத்துப் போச்சு. யமன் பாசக் கயிறு எல்லாம் எறிஞ்சு என்னை பிடிச்சு இழுக்கத் தேவையில்லை நானே அதுக்குள்ளே விரும்பித் தலையைவிடத் தயாராக இருந்தேன். நானே நிறைய வாழ்வா அதில் சாவா  அல்லது சாவதுக்கு வாழ்வா எண்டு பார்க்க மதுபோதையின் விளிம்பு வரை போய் சித்திர குப்தனின் கணக்கு வழக்குமுடித்து  வைக்கும் வரவுப் பதிவு புத்தகத்தை தொட்டுப்பார்த்துப் போட்டுத் திரும்பி வந்துதான் அதில சிசிலியாவின் புண்ணியத்தில் வேலை கிடைத்து செய்தேன்.  

                                                        அந்த வேலை எனக்கு என்னோட பிரெண்ட் சிசிலியாதான் மினக்கெட்டு எடுத்து, தலையைப் போட்டுப் பிச்சு என்னை சிபார்சு செய்து ,அதில ஒரு வருடம் வேலை செய்ய வாய்ப்புத்  தந்தாள் . ஜெர்சிப் பசு  மாட்டில பால் கறந்து அதைக் காச்சி காராம்பசுவுக்குப் பருக்கிற  மாதிரி அலுப்பில்லாத வேலை. சில குறிப்பிட்ட உணவுகள், குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட கலோரி சக்கி உள்ளதாக சமைக்க வேண்டும், அங்கே சமையல் கொத்திப் பிரட்டி  ருசி இல்லாட்டியும் பரவாயில்லை ஆனால் அங்கே மெனு  எழுதியுள்ள புத்தகத்தில் உள்ள " சத்துணவுச்  சட்டப்படி " சமைக்க வேணும் ,சிம்பிளாச் சொன்னால் சிம்பிள் வேலை!

                                                                       மங்களேஸ்வரி இலங்கைத் தமிழ் பெண். யாழ்பாணத்தில செம்பாட்டு மண் உள்ள தோட்டக்காணிகள் உள்ள ஒரு இடதில பிறந்ததா சொன்னா, இடம் நினைவில்லை. நோர்வேயிட்கு என்பதுக்களின் ஆரம்பத்தில் போல்க்ஹைஸ் ஸ்கோல் என்ற நோர்வேகாரனின் குடிமக்கள் குடிசைக் கைத்தொழில் படிக்கும் பாடசாலைக்கு படிக்க வந்தவா, அதில படிச்சு,நோர்க்ஸ் மொழி படிச்சு , நடுத்தரப் பாடசாலையில் படிச்சு ,நோர்வே நெளிவு சுளிவு படிச்சு, யூனிவேர்சிட்டியில் சத்துணவு விஞ்ஞானத்தில் டிகிரி படிச்சு ,ஒஸ்லோ சுகாதார திணைக்களத்தில் வேலை செய்தா. அவளவு படிச்சதாலோ என்னவோ தெரியவில்லை  என்னைச்  செக் பண்ண வரும்போது கையோட ஆப்பு ரெண்டும் எடுத்துக்கொண்டு வந்தா.

                                                      தோற்றத்தில் குள்ளமாக என்னோட தோள் மூட்டுக்கு  நிக்கும் அவ்வாவோட நெற்றியில் ஒட்டி இருக்கும் சிவப்பு ஒட்டுப் பொட்டு. உடம்பு ஆட்டுக்கல்லுப் பிரமாணத்தில் ரெண்டு சுற்று ,அதிகம் நடந்தா மூச்சு காற்று கேட்டு வாங்கும். முகத்தில சந்தோசம் கலியாணம் கட்டின அடையாளம் , கடின உழைப்பால் ஜவ்வன ஜொலிப்பு கொஞ்சநாளில் விடை பெற்றுப் போன தடங்கள். படித்த நோர்வே பெண்கள் போல உடுப்பு. இலக்கண சுத்தமா  நோர்வே பாசை எழுதுவா, ஆனால் கதைக்கும் நோர்க்ஸ் மொழியில் இலக்கணம் இருக்கும் அதையும் மேவி மேற்படியான்  ஜெப்னா டமில்ஸ் இன் குறளிவித்தை இழுவையும்  இருக்கும், அது ஒரியினல் நோர்ஸ்கில் இல்லை. மற்றப்படி   சட்ட திட்டத்தில் மங்களேஸ்வரி கையில பிரம்பு இல்லாத கணக்கு டீச்சர். 
                                          

                                                      நான் அந்த இடத்தில வேலைக்கு சேர்ந்த முதல் மூன்று  மாதமும் பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும் என்று  ஒழுங்கா வேலை செய்தேன், பிறகு அந்த வேலை அலுப்படிக்கத் தொடங்க சுத்து மாத்து செய்யத் தொடங்கிட்டன். இப்பிடியே கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர் போல ஜோசிச்சுக்கொண்டிருந்தா வாழ்கையில் முன்னேற ஏலாது எண்டுதான் அதைத் தொடங்கினேன் . நாலு சுவருக்குள்ள நடந்த  அது எல்லாம் எப்படியோ மேலிடத்துக்கு தெரிய வந்துள்ளது. நாலு சுவர் தாண்டி யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியாது, சுவரில பல்லி இருந்தால் அதையாவது கேட்கலாம் அதுவும் நோர்வேயில் இல்லையே .

                                                                      நான் என்ன திருகுதாளம் செய்தேன் என்று உங்களுக்கு சேர்ச்சில் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது சொல்லுறதில ஒருவித மனப்பாரம் குறையும் எண்டு சொல்லுறாங்களே அதுபோல சொல்லுறேன். இல்லை முழங்காலில் இருந்துதான் சொல்ல வேண்டும் எண்டு சொன்னாலும் அப்படி இருந்தும் சொல்லுறேன். இதில வெட்கப்பட என்ன இருக்கு நான் செய்து முடிச்ச, முடிந்த விசியம் தானே . போகேக்கா  என்ன  அதையும் சேர்த்தா கொண்டு போகப்போறேன் இல்லையே, பிறகென்னதுக்கு பிடாரி அம்மன் கோவில் கிடாய் வெட்டுப்போல  மறைக்க வேண்டும்

                                                             எல்டர் சென்டரில் இன்ன இன்ன நாள் இன்ன இன்ன சாப்பாடுதான் செய்ய வேண்டும் என்று மெனு இருந்தது. நான் அதைத் திட்டமிட்டு அதிகம் கவனிப்பதில்லை. மெனுவில இல்லாத ,ஸ்ரீலங்கன் ,இண்டியன்,பாகிஸ்தானி, மெக்ஸ்சிகன், துருக்கி  சாப்பாடு எல்லாம் செய்வேன். வயதானவர்கள் அதன் பெயர் எல்லாம் கேட்டு ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். தலை வாழை இலையில பால்ப்பாயசம் ஊற்றி புறங்கையை  நக்கி வழிச்சு சாப்பிட்ட மாதிரி திருப்திகரமாக இருந்ததாலோ என்னவோ ஒரு நாளும் ஒரு குறையும் சொன்னதில்லை. 
                                        
                                            அவர்களே இந்தா அந்தா எண்டு இண்டைக்கோ நாளைக்கோ என்று  ஆணை விழுந்த அதர் அடியில ஆமடையன் பெண்டிலும் விழுந்த மாதிரி  சொல்லாமல் கொள்ளாமல் மேல போற ஆட்கள் தானே அதால அது அவர்களுக்கு அது போற வழிக்கு   ஒரு பெரிய பிரசினை இல்லை. பசித்த  வயிற்றுக்கு வயிறாற ஈஸ்ட்மென் கலரில் விருந்து படைத்தது மகிழ்ந்தேன் எண்டுதான் நான் நல்லகுருநாதன் போல நினைசுக்கொண்டிருந்தேன் . ஆனால் "  சத்துணவுச் சட்டப்படி " அதுவும்  பிழை   எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ் 

                                                      அந்த இடத்துக்கு சமைப்பதுக்கு வேற ஒரு பெரிய குசினி விநியோக மையத்தில் இருந்து ரெண்டு கிழமைக்கு ஒரு தடவை எல்லா உணவுப்பொருட்கள் ,சேர்மானங்கள் ,வேறு எல்லாக் குசினித் தேவைகளும் வரும் . முடிய முடிய முடிந்தவைகளின் லிஸ்ட் அனுப்ப மேலதிகமாகவும் வரும் . விலை அதிகமான மிகத் தரமான உணவுப்பொருட்கள் அவை என்பதுக்கு உத்தரவாதம் எப்பவுமே அதில இருக்கும். நோர்வே நாடு வயதான மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து சாவைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது போல இருக்கும் அவங்கள் அனுப்புற சாமான்களைப் பார்க்க, 

                                                     ஒவ்வொரு கிழமைக்கும் நாலு  சிகப்பு ,ரெண்டு வெள்ளை, என ஆறு வைன் போத்தல் ஒதுக்கப்பட்டிருக்கும். வைட் வைன் சோஸ்,ரெட் வைன் சோஸ் , ரெட் வைன் வேறு சில " பிரெஞ்ச்  ப்லேம்மே ஸ்டைல்  குசின் " எண்ட சமையலுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும். அதை முழுவதும் நான் சோஸ் செய்யப் பாவிப்பதில்லை, முக்கியமா " பிரெஞ்ச் ப்லேம்மேக்கு " ரெட் வைன்னுக்கு பதிலா வினாகிரியை உதறிவிட்டுபோட்டு, சோஸ் செய்யும் போது வாசத்துக்கு கொஞ்சம் மேலே தெளிச்சுப் போட்டு மிச்சப் போத்திலை கொஞ்சம் கொஞ்சமா குசினிக்க வைச்சே நான் உள்ளுக்க விட்டுருவேன் , அதுவும் " சத்துணவுச் சட்டப்படி " அது பிழை எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்  

                                                              வெறும் வயித்தில வைன் சரிச்சு விட்டுக்கொண்டு இருந்தா ஈரல் குலை எரிஞ்சு குடல் அறுந்து விழும் எண்டு டாக்குத்தர்மார் சொல்லுறதால , அப்படி வைன் அடிக்கும்போது, குளிர்சாதனப்பெட்டியில் சமைக்க எண்டு வைச்சிருக்கும் விலையுயர்ந்த உருகுவே நாட்டு மேல் தோள்பட்டை மென்சவ்வு இறைச்சி எடுத்து மெல்லிய சூட்டில் வாட்டி அதுக்கு ,பச்சை மிளகாய் வெட்டிப் போட்டு " கேசெல்லோ பீப் சோஸ் " செய்து அதையும் சேர்த்துதான் சாப்பிடுவேன் ,நான் என்ன செய்ய  ஈரல் குலை அறுந்து விழும் எண்டு டாக்குத்தர்மார் சொல்லுறதாலதான் அப்படிச் செய்தேன். அதுவும் " சத்துணவுச் சட்டப்படி "  பிழையாம் எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்,

                                                  அந்த இடத்தில நான் வேண்டுமென்றே கலர் கலரா சமைப்பேன். அதில ஒண்டும் பெரிய டெக்னிக் இல்லை, வழமையான சாப்பாட்டில், கேக் அடிக்கும் போது  ஐசிங் சுகருக்கு போடுற " எடிபிள் கலரிங் " கிடந்தால் மாறி மாறி அதில ஒவ்வொரு நாளுக்கு ஒரு கலர் எண்டு அள்ளிப்போட்டு விடுறது. அந்த வயதானவர்கள் அவர்கள் வாழ் நாளில் அப்படி ஒரு சாப்பாட்டை கண்டே இருக்காத மாதிரி ஆச்சரியாமா அதன் பெயர் எல்லாம் கேட்பார்கள். நான் அந்த நேரம் வாய்க்குள்ள வந்து தவறிவிழும்   என்னவோ ஒரு பெயரைச்சொல்லிபோட்டுப் போவேன் .அவர்கள் மேல சொர்க்க வாயிலுக்கால  போற நேரம் எதை மறந்தார்களோ இல்லையோ என்னோட கலர்  கலரான சாப்பாடுகளை அந்த நேரமும் மறக்க மாட்டார்கள், ஆனால் அதுவும்  " சத்துணவுச் சட்டப்படி " அது பிழையாம்  எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்.   

                           நான் அந்த இடத்தில வேலை செய்த போது எப்பவுமே " தாமரைப் பூவுக்கும்  தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை, ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..." என்று ஒரு தமிழ் சினிமாப் பாட்டுப் பாடுவேன் . அதை சில நேரம் நான் எப்பவும் பாடுவதைக் கேட்ட அந்த வயதானவர்கள் சில நேரம் முதல் சில வரிகளைப் அவர்களும் சேர்ந்து பாடுவார்கள். மங்களேஸ்வரி சோதனைக்கு என்று வந்து நின்ற ரெண்டாவது நாளே அந்தப் பாட்டை படிக்க வேண்டாம் எண்டு சட்டம் போட்டா. அதைக் கேட்க தனக்கு அண்டம் குண்டமெல்லாம் பத்திக்கொண்டு வாற கோபம் வருகுது எண்டா  ,பிறகு " சத்துணவுச் சட்டப்படி  " அது பிழையாம்  எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்.

                                       மங்களேஸ்வரி ஒரு கிழமை தான் பரிசோதனை மேற்பார்வைக்கு வந்தா என்று சொன்னேன் எல்லா, வந்த முதல் நாளே என்னை அவாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் நட்பாகப் கதைத்தேன்,. அவா என்னோட திருகுதாளாங்கள் பற்றி கேட்ட கேள்விக்கு நான் பொறுப்பில்லாமல் பதில் சொல்ல உலக்கையால தூக்கி அடிக்கிற மாதிரி முழிஞ்சு பார்த்தா.  ஆனால் நான் மயிரை விட்டான் சிங்கன் என்று பயப்பிடாம உண்மையச் சொன்னேன். வேண்டா வெறுப்பா எல்லாம் செக் செய்தா, வயதானவர்களிடம் என்னைப்பற்றிக் கேட்டா, ஸ்டோக் என்ற இருப்பு எல்லாம் செக் செய்தா, லொக் புக்கில் போட்ட  மெனு  எல்லாம் செக் பண்ணினா. 

                                                  ரெண்டாம் நாளே ரிப்போட் எழுதத் தொடங்கிட்டா, ஆனால் ரெண்டாம் நாளே முக்கிய சூரன்போர் சண்டை தொடங்கி ,முதல்த் தலை கோவில்  வடக்கு வாசலில் விழுந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. மங்களேஸ்வரி வந்த முதல் நாள்,  என்னோட நட்பான வயதானவர்கள் அவா யார், என்ன பெயர், எண்டு விசாரித்தார்கள். நான் அவா பெயர் நோர்க்ஸ்குகள் சொல்ல நீண்ட பெயராக இருப்பதால் பகிடியாக சுருக்கி                      

                         " மங்கல்ஸ் " 
                                   
              என்றும் , இன்னும் ஒரு பகிடியாக அவாவின் வேலையை 
                      
                      " குசினிக்கு தொற்று நீக்கி மருந்து அடிக்க வந்திருக்கிறா  " 

                     என்று சொல்லிக் கதையைப் பரப்பி விட்டேன் . 

                                நோர்வேயில் கள்ளனைப் பிடிக்க வாற பொலிஸ்காரனே அவனுக்குக் ஹலோ சொல்லி, அவனின் பெயர் சொல்லி கையைக் குலுக்கிப் போட்டுத்தான் கையை மடக்கி விலங்கு போடுவான். மங்களேஸ்வரி வந்த நேரத்தில் இருந்து சம்பிரதாய நடைமுறை அறிமுக வந்தன வணக்கங்கள் ஒன்றுமே சொல்லவில்லை. அந்த அறிமுகத்தையும்  நான் விரும்பி எதிர்பார்க்கவுமில்லை, என் பெயர் மற்ற விபரங்கள் பதிவுகளில் இருக்கும் .  

                                                          மங்களேஸ் ரெண்டாம் நாள் காலை வந்து வயதானவர்களுடன் கதைத்த போது பதறிப் போட்டா, கொஞ்சம் என்னோட நுளம்புத்திரிப் பிரச்சாரம் வேலை செய்திருக்கு ,நேரே குசினிக்கு வந்தா 

                              " எனக்குப் பெயர் திருமதி மங்களேஸ்வரி.........,,  மங்களேஸ்வரி ,,ஹ்ம்ம் ,, கங்காள அம்மனின்  பெயர்  தெரியுமா அது  ,

                                "  ஹ்ம்ம்  அது  தெரியுது "

                                   "  நல்ல அழகான அம்மன்  பெயர் அப்பா அம்மா வைச்சது ,,நீ போய் கிழடுகளுக்கு என்னக்கு என்ன ஒரு புதுப் பெயர் சொல்லிக் கொடுத்து இருக்கிறாய் ,,"

                                  " சும்மா  சொன்னேன்  மங்கல்ஸ் "

                                  " என்ன  சும்மா  இனி மங்கல்ஸ்  எண்டி  எண்டா  வாயில  பளார்  எண்டு  போடுவேன்  தெரியுமா  " 

                                    " வாயில  போடாதையுங்க..முதுகில  பளார்  என்டு  போடுங்க..நாரி உளையுது  அதாவது  எடுபடும்  " 

                                  "   பாத்தியா  நீ  என்னை  ஒரு  மேலதிகாரி  என்று  கொஞ்சம்தன்னும்  மதிக்கிறாய்  இல்லையே ,,உனக்கு  வாயில  என்னடா  சீலம்பாயா  சுதிக்கிடக்குது "

                                      "  எனக்கு  வாய் சரி  இல்லை  மங்கல்ஸ் ,  பால்குடியா  பிறந்த  நேரத்தில  இருந்து இப்பிடித்தான்  கதைப்பேன் என்று  எனோட  அம்மாவே  சொல்லுவா "

                                     " இதுதானா இங்க வேலை உனக்கு,,இதுக்கா நோர்வே அரசாங்கம் சம்பளம் தருகுது உனக்கு ,,சொல்லு,,பதில்  சொல்லு,,"

                                  "  என்ன பெயர் சொன்னார்கள் அவர்கள் "

                                  " என்ன பெயரோ ,,அந்தக் கிழடுகள் மண், கல் எண்டு என்னவோ உளறுதுகள் ,,நீ என்ன பெயர் எனக்கு எண்டு சொன்னனி அதை,,சொல்லு,,எனக்குப்  பதில் சொல்லு,,பதில்  இப்ப வேணும் , இப்ப இதுக்கே சட்டப்படி  நடவடிக்கை எடுக்கலாம் தெரியுமா "

                                      " மங்கல்ஸ் எண்டு சொன்னேன்,,அது உங்களுக்கு இளமையா ,,அழகா இருந்தது,,எனக்கும் அந்தப் பெயர் பிரெண்ட்லியா இருக்கு,,அப்படி  நான் கூப்பிடவா  உங்களை "

                                   " ஒ ,,பெயர் வைக்கிறதில பெரிய காளமேகப் புலவர் போல, என்னை அப்படிக் கூப்பிட  வேண்டாம் , மேடம் எண்டு கூப்பிடு அல்லது மங்களேஸ்வரி என்று கூப்பிடு , இல்லாட்டி வாயைப் பொத்திக்கொண்டிரு,  உனக்குத் தெரியுமா நான் சட்டப்படி உன் மேலதிகாரி "

                                     "   தெரியும் மங்கல்ஸ் "

                                   " அய்யோ பேந்தும்பார்..இவளவு சொல்லியும் உனக்கு மண்டைக்க ஏறுதில்லையே ,,ஆண்டவா என்னைக் காப்பாற்று "    

                                "  உங்க பெயர் நீண்டதா இருக்கு  அதை சுருக்கி மங்கல்ஸ் எண்டு வைச்சேன் அதுக்கு என்னவோ குடியிருந்த குடிசை தீப்பற்றின மாதிரி  இந்தக் குதி குதிக்குரின்களே மங்கல்ஸ்   "

                                "  அய்யோ கடவுளே  பேந்தும்பார், மங்கல்ஸ் ,,மங்க்ல்ஸ் ,மங்கல்ஸ் எண்டு சாகிறியே,,என்னை மேடம் எண்டு சொல்லு ,,உனக்கு ஒண்டும் குறைஞ்சு போகாது ,,உன்னட்ட என்ன கிடக்கு குறைஞ்சு போக ,,இனி   மேடம் எண்டு கூப்பிடு    "

                                       " நான் தானே உங்களை குசினிக்க மட்டும் அப்படிக் கூப்பிடுறேன் , இதில என்ன பெரிய பிரசினை, வயதானவர்கள் வேற என்ன சொன்னார்கள்,,உங்க வேலை என்ன எண்டு கேட்டார்களா மங்கல்ஸ் " 

                                  " அய்யோ கடவுளே  பேந்தும்பார், மங்கல்ஸ் ,,மங்க்ல்ஸ்..கிழடுகள் அதொண்டும் சொல்லவில்லை,,மண் கல் எண்டுதுகள்,,சரி நீ சொல்லுற மாதிரி மங்கல்ஸ் எண்டு ஸ்டைல்ல சொன்னாலும் பரவாயில்லையே ,,அதெல்லே கொதி வரப்பண்ணுது "

                                      " சரி விடுங்க ,,சிரிச்சிட்டுப் போங்க " 

                                   " ஹலோ,,மிஸ்டர் .N.....  நான் இங்க சிரிக்க வரவில்லை,,நீ என்னக்கு  சிரிப்புக் காட்டுறதுக்கு நோர்வே அரசாங்கம் உனக்கு சம்பளம் தரவில்ல,,அதை நினைவில் கொள்ளு ,,உன் அணுகுமுறை இதெல்லாம் சட்டப்படி பிழை தெரியுமா " 

                               " தெரியும் மங்கல்ஸ் ,,ஏன் காலைக்  கெந்திக்  கெந்தி நடகுரிங்க "

                        "  காலில  பித்த வெடிப்பு  இருக்கு "

                                          "   அதுக்கு  ஆமனக்கு  எண்ணையில் கடுகு வெந்தயம் தாளிச்சுப் போட்டு அதைப் போட்டு  உருவி விட்டா  நல்லா  இருக்கும்  "

                                              "    நீ அதெல்லாம்  செய்வியா "

                                    "  நாட்டு வைத்தியம் கொஞ்சம் தெரியும்  மங்கல்ஸ் "

                                  "  இதே  சாட்டில பெண்டுகளின் கால் கையைத் தடவுற  பிளான்  போட்டு வைச்சு இருக்கிறாய்  போல  "                   

                                   " தாமரைப் பூவுக்கும்  தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை, ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..."          

                                   "  ஹ்ம்ம்,,,இதென்ன  பாட்டு,,என்னை வைச்சு முசுப்பாத்தி போல,,,,நான் யார் தெரியுமா,,உனக்கு மேலதிகாரி,,,எனக்கே கொசப்பு பாட்டு பாடிக் காட்டுறாய் , அதுவும் எனக்கு முன்னாலேயே "

                                 " இல்லை,,இது ஒற்றுமையை வலியுறுத்தும் பாட்டு மங்கல்ஸ் "

                               " அய்யோ,,எனக்கு மண்டை வெடிக்குது, இனி மங்கல்ஸ் எண்டு சொன்னி எண்டால் ,,எனக்கு கோபம் வருமா எண்டு எனக்கே தெரியவில்லை,,ஆனால் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு,,ஆனால் சிரிப்பன் எண்டு நினைக்காதை அது நடக்காது,,நான் உன்னோட மேலதிகாரி அதை நினைவில் வை     "

                                "  சரி ,,மங்கல்ஸ் "

                            " என்ன சரி ,,முதல் வாய்க்கு வாய் காட்டாதை, மேலதிகாரி சொல்லுறதைக் கேள், அது ஆம்பிளையோ,,பொம்பிளையோ  அது முக்கியமில்லை, ,நீயா நினைத்துக்கொண்டு எழுப்பம் விட்டு ஆடாதை  "             
                                    " இல்லை,,மங்கல்ஸ் ,இதில என்ன இருக்கு,நீங்க ஒரு கிழமைதானே இங்கே வேலை செய்து ரிப்போட் எழுதி கொடுக்கப் போறீங்க,,,அந்த ஒருகிழமையோடு நானும் நிட்ச்சயமா போயிருவேன்...மங்கல்ஸ் என்ற பெயர் ஒருகிழமை மட்டும் இருந்திட்டுப் போகட்டுமே " 

                               என்றேன். " அந்த ஒருகிழமையோடு நானும் நிட்ச்சயமா போயிருவேன்.."  இந்த வார்த்தையைக் கேட்ட போது மங்கல்ஸ் கொஞ்சம் இரக்கமா என்னைப் பார்த்தா.என்னதான் இருந்தாலும் அவா ஒரு தமிழ் பெண் தானே,கட்டாயம் இறுக்கம் இருந்தாலும் இரக்கமும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அதனால் மங்கல்ஸ் பிறகு பெயர் பற்றி ஒண்டும் சொல்லவில்லை . 

                                      முதல்ச் சண்டை இப்படி மெல்லவே தொடங்கினாலும்  மூன்றாம் நாள் தான் வாழை வெட்டுப்போல முக்கிய சண்டை குசினிக்க தொடங்கியது .கதை வடக்கன் மாடுகளை அவிட்டு விட்ட மாதிரியான  திசை வளத்தில்  போறதால் ,மிச்சத்தைப் பாகம் ரெண்டிலும்,மூன்றிலும் எழுதி ஒரு முடிவு காணுறேன் ...  ஓகே யா ?
.
.

Ore Naal Unai Naan Acoustic Guitar Cover



திருமணம் முடித்து சில நாட்களில் கணவனைப் பிரிந்துவிட்ட ஒரு இளம்பெண்ணின் தவிப்பு ஒரேயொரு நாள் தன் மிக நெருங்கிய நண்பியின் காதலனுடன் விரகதாபமாகி ஏதேச்சையாக நடந்த உடலுறவில் அந்தப் பெண்ணின் வாழ்க்கை எப்படி திசைமாறி சீரழிகிறது என்பதை ஒரு சினிமாப் படமாக இல்லாமல் வாழ்க்கைப் பாடமாகத் திரையில் பதிந்துவிட்ட திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய " இளமை ஊஞ்சல் ஆடுகிறது ".

.

இசைஞானி இளையராஜா இசையமைத்த பஹடி என்ற மலைகளின் ராணி என்று சொல்லப்படும் ஹிந்துஸ்தானி ராகத்தின் சுரங்கள் அதிகமுள்ள பாடல். டாக்டர் எஸ் பி பாலசுப்பிரமணியமும்,வாணி ஜெயராம் அம்மாவும் பாடிய ஒரு டுயட் காதல் ரொமாண்டிக் பாடல்.

.

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது ஒரு அமர்களமான இளமைக் கவிஞ்சர் வாலியின் காதல் வரிகள் உள்ள பாடல், நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம் மழை நீ, நிலம் நான் தயக்கமென்ன,,இதைவிட ஒரு கற்பனை யாருக்கு வரும்.

.

இந்தப் படத்தில் இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின், கதை இந்த நாலுபேரையுன் தான் சுற்றி கொஞ்சமும் விலகாமல் நடக்கும். இந்தப் படத்தில் உள்ள ஒரு முக்கிய விசியம் ஒரு ஹீரோ எப்பவுமே புக்கு புக்கு என்று சிகரெட் ஊதித்தள்ள மற்ற ஹீரோ எப்பவுமே சுவிங்கம் சாப்பிடுவார்,டைரக்டர் ஸ்ரீதர் அவரும் ஒரு செயின் சுமோக்கர் என்று சொல்லுறார்கள்.

.

இந்தப் பாடல் ரேடியோவில் ஒலிபரப்புவது போலத் தொடங்கும், " இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் கவிஞ்சர் வாலி எழுதிய பாடலுக்கு இசை இளையராஜா இசை என்று அந்தப் படத்திலேயே புதுமையாக அப்படி சேர்த்து வைத்தார் இயக்குனர் ஸ்ரீதர் .அதைவிட இந்தப்படம் ஒரு திரைப்படம் எப்படி எடுக்கவேண்டும் என்று பாடம் சொல்லிக்கொடுக்கும் படம்.

.

முக்கியமா இந்தக் கரோக்கி பிண்ணனி ஒரியினல் பாடல் போல முழுவதும் இல்லை. அதுக்குக் காரணம் ஒரிஜினல் பாடல் G Major என்ற ஸ்கேல்ல இருக்கு. இந்தக் கரோக்கி F#m என்ற ஸ்கேல்ல இருக்கு. வேற வழியில்லாமல் நண்பர் பிரிஸ்டோ அய்யர் பின்னணி இசை வாசித்த F#m ஸ்கேல் இல் வாசித்துள்ளேன். இப்படிக் குழப்பங்கள் நிறைய கரோக்கி பிண்ணணியில் பாடல் வாசிக்கும் போது ஏற்படும்.

.

அதனால் தாழ்மையுடன் சொல்லுகிறேன், இதை முழுவதும் ஒரிஜினல் பாடல் என்று நினைத்து யாரும் கிட்டாரில் வாசிக்கப் பழக வேண்டாம். ஒரு 80 வீதம் ஒரியினல் பாடல் போல இருக்கும். இன்றைய ஞாயிறு விடுமுறையில் ஓய்வாக வீட்டிலிருந்து கொண்டு காலைக் கையை இளமைக் காலத்தில் ஊஞ்சல் போல ஆட்டிக்கொண்டு கேட்கக் கொடுத்துவைத்தவர்கள் கேளுங்க.

.


Friday 20 November 2015

சிசிலியா

கலாச்சாரத்துக்கும் அறிவியலுக்கும் எப்பவுமே ஒத்துப்போவதில்லை என்று தெரிந்தாலும் பல விசியங்களை வெளிப்படையாகப் பேச முடியாத வாழ்வியல் பின்னணியில் இருந்து வேறுபட்டு ,சுதந்திரமான கருத்துக்களை சொல்லவும், கேட்கவும் , கலந்துரையாடவும் முன்னேறிய நாடுகளில் எப்பவுமே சாத்தியங்கள் வாசல்களை அகலமாகத் திறந்து வைத்திருப்பது ஒரு அதிஸ்டம்.

                                      முக்கியமாக பெண்கள் , அவர்களின் உரிமைகள் பற்றி என்னைப் போன்ற ஒருவன் என்னைப்போலவே தமிழ்க் கலாச்சாரப் பிண்ணனி உள்ளவர்களுடன் பேசினால் விதண்டாவாதம் வந்து சிலநேரம் வெறும் வாயில் உளறி  அடி உதையும் அவல் போலக் கிடைக்கும். ஆனால் சிசிலியாவோடு கதைத்தபோது வேற மாதிரி ஆச்சரியங்கள் கிடைத்தது. 

                                         இந்த வருடம் கோடை வெய்யில் அளவுக்கு அதிகமாக ஒஸ்லோ நகரத்தை வெளிச்சமாக்கி ,வெப்ப நிலையை அதிகரித்து வைத்திருந்த ஒரு  வெள்ளிக்கிழமையன்று  சிசிலியா அவள் வேண்டிய புது வோசிங் மிஷினை நகர அங்காடியில் இருந்து ஏற்றி அவள் வீட்டில் பறிச்சு அதைப் பொருத்த  உதவி செய்வியா என்று போனில கேட்டாள்.

                             " ஏற்றிப்   பறிக்க முடியும்,,அதைப் பொருத்தும் தொழில்நுட்ப விசியங்கள் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது சிசில் , அதெல்லாம் நீதான் செய்ய வேண்டும் ஓகேயா  "

                              "  ஹஹஹா அதென்ன பெரிய வேலையா, கட்லோக் இருக்கும், அதைப்     பார்த்து பொருத்தலாம்,,"

                                  " சரி  நீ சொல்லிதா சிசில்  நான் செய்து பார்கிறேன் "

                          " குழாய் எங்க பொருத்தமாய் ஓட்டுறது எண்டு எனக்கு நல்லா தெரியும் ,,"

                                  "     ஹஹஹாஹ, என்னடி உனக்கு இண்டைக்கு கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்குற மாதிரிப் பிசத்துறாய்  ,"

                                     " நீ சும்மா  பார்த்துக்கொண்டிரு நான் அதெல்லாம் செய்வேன் ,,என்ன வாரியா, சொன்கன் ப்ரிவில்லிக் சென்றாளில் வந்து நில்லு ,எனக்கு அங்கே ஒரு மீட்டிங் இருக்கு 

                          "   சரி  வா  சிசில் "

                               "   மீட்டிங்   முடிய , நான் கார்ல  ஏத்துறேன், அலனாபுருவுக்குப் போக வேண்டும்  "

                                "  சரி வா ,,அது  ஏத்தி இறக்கி பொருத்தி முடிய,,,பின் இரவு சொயிஸ் பப் இக்கு போகலாம்,,மார்டினும்  ,ஆமுண்டும் ,ஜோன் எரிக்கும் இன்று வாறதா சொன்னார்கள் ,,நீயும் வருவியா சிசில் "


                                சிசிலியா என்ற சிசில் என்னோட பிரெண்ட். பிரெண்ட் என்றால் பிரெண்ட். வில்லங்கமா வேற ஒன்றுமில்லை. நிரந்தரமா இன்னும் யாரையும் கலியாணம் கட்டவில்லை.  என்னை விட எட்டு வயசு குறைந்தவள். நேர்ல பார்க்க என்னைவிட பதினைந்து வயது குறைந்தவள் போல இருப்பாள்.  குதிரைச்சவாரி செய்வாள், பணக்காரி , திருப்பி தாறதா ஒரு நாள் சொல்லி அவசரத்துக்கு கேட்டால் உடன காசு தருவாள். தந்திட்டு சொன்ன நாளுக்கு மறக்காமல் போன் அடிச்சு " வையடா காசை  " என்று அந்தக் காசைக் கேட்பாள் 

                                    என்னோட நோர்வே நாட்டு நண்பர்களில் ஒரே ஒரு பெண் நண்பி.  ஒஸ்லோவிலும் அவள் வில்லா என்ற  தனி வீட்டில் கீழே வசித்தாள். அதன் மேல்வீட்டை வாடைக்கு விட்டிருந்தாள் . மத்திய நோர்வேயில் உள்ள மிக மிக அழகான வால்ரஸ் என்ற இடத்தில பெருங்குடியில் பிறந்தவள். அதனாலதானோ தெரியவில்லை மிக அழகா, உயரமா இருப்பாள். ட்ரோன்ஹேய்ம்  யூனிவேர்சிட்டியில் படித்தவள். அதிகம் பேச மாட்டாள்,நிறையச் சிரிப்பாள் . முக்கியமா நிறைய விசியம் தெரியும், சுருக்கமாக சொன்னால் " இளமை இன்டர்நெட்  "
                               
                                        வயதானவர்களுக்கு வயதானதை மறக்கவைக்கும் பல நிகழ்வுகளை அன்றாடம் நிகழ்த்திக்காட்டும் அந்த  இடத்துக்கு சிசிலியாவுக்காகப்   போய்க் காத்திருந்தேன் . இன்னும் இளமையாக இருக்கும் எனக்கும் , என்னை விட அரைவாசி இளமையாக இருக்கும் சிசிலியாவுக்கும் எந்த விதத்திலும் அந்த இடம் சம்பந்தமில்லை. ஆனால்  சிசிலியா அந்த மாதிரியான சமூக நிறுவனத்திற்க்கு காசு ஒதுக்கும்ஒஸ்லோ நகரசபையில் அதன் தலைமை அலுவலகத்தில் எக்கொனொமிஸ்ட் ஆக  வேலை செய்கிறாள். என்னை சந்திக்க மட்டுமே அந்த இடத்துக்கு வரச்சொல்லி இருந்தாள்.

                                      அங்கே போய் ஒரு சவுகரியமான சோபாவில் வெளியே ஜன்னலுக்கால மழை பெய்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிசிலியா ஏற்கனவே வந்து அந்த பெரிய அறையின் தொங்கலில் இருந்த இன்னுமொரு பெரிய அறையில் மீட்டிங் வைச்சுக்கொண்டு இருந்தாள். அது முடிய என்னை வந்து சந்திப்பதாக சொன்னாள். அதால அந்த அறையில் இருந்த புத்தக அலுமாரியில் இருந்த புத்தகங்களின் தலைப்பை மேய்ந்து கொண்டு இருந்தேன். ஒரு நோர்வே மொழிப் புத்தகம் மிகவும் இளமையாக " இளம்பெண்ணே உனக்கு " என்ற ஒரு தலைப்பில் அழகா இளம் " டீன் ஏச் " பெண்களின் படம் போட்டு இருந்தது. அதை எடுத்துக்கொண்டு வந்து கொஞ்சம் வாசித்தேன்.

                                                அந்தப் புத்தகம் இளம் பெண் பிள்ளைகள் வயதுக்கு வரும் போது ஏற்படும் உடலியல் மாறுபாடுகள், மனவியல் வேறுபாடுகள், அவை சம்பந்தமான சந்தேகக்  கேள்விகள் , அவற்றுக்கு நம்பிக்கை தரும் பதில்கள், பெண்ணியல் பற்றிய நிறைய விஞ்ஞான தகவல்கள் என்று சுவாரசியமாக இருந்தது அந்தப் புத்தகம்.  இளம்  பெண்களின் ஒவ்வொரு பருவ நிகழ்வும் அழகாக படம் போட்டு விளக்கி இருந்தார்கள்.

                                                          அதை வாசித்தபோது உண்மையாகவே என்னோட மரமண்டை மூளையில் எவளவோ விசியங்கள் அன்றுதான் ஆச்சரியமாக மணி அடித்தது. முக்கியமா ஒரு பெண்ணின் கருமுட்டை  வெறும் ஐந்தரை மணித்தியாலங்கள் தான் உயிர்ப்புடன் கருப்பை வாசலில் காத்திருக்கும் என்றும், ஒரு ஆணின் விந்து ரெண்டரை நாட்கள் வரை உயிர்ப்புடன் உள்செலுத்தப்பட்ட பின் இருக்கும் என்றும் போட்டிருந்தார்கள். அதனோடு சேர்ந்த பல விசியங்களை " சயண்டிபிக் அப்புரோச்சில் " அழகாக,எளிமையாக எழுதி இருந்தார்கள்.

                                                       அதே புத்தகத்தில் ஒரு சின்னக் காட்டூன் படம் போட்டிருந்தார்கள்.ஒரு  டீன்ஏச்  இளம் ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் ஒரே கட்டிலில் படுத்து இருப்பார்கள். ஆனால் அந்தக் கட்டில் " அப்பர் டெக் " என்ற ரெண்டு தட்டுக் கட்டில் ,பொடியன் மேலேயும், அந்தப் பெண் பிள்ளை கீழேயும் படுத்திருந்து ஜோசிக்கிரார்கள்,பொடியன் ஜோசிக்கிறான்  " இவளுக்கு மேலே படுத்து இருப்பாதால்  இவள் கர்ப்பம் ஆகிவிடுவாளா " என்றும் அந்தப் பெண் பிள்ளை " இவனுக்கு கீழே படுத்து இருப்பதால் இவன் என்னைக் கர்ப்பம் ஆக்கி விடுவானோ " என்றும் ஜோசிக்கிறாள் .

                                                  இளையவர்களின் ஆதராமான சந்தேகத்தை  எளிமையாக விளக்க அப்படி ஒரு காட்டூன் வடிவில் கொஞ்சம் ஜோக் ஆகப் போட்டு இருந்தது, அதைப் பார்த்து சிரித்துக்கொண்டு அந்தப் புத்தகத்தை மூடி வைக்க முன்னுக்கு சிசிலியா நின்றாள்

                                     " இப்ப என்னத்துக்கு இந்தப் புத்தகத்தைப் பார்த்து சிரிச்சனி,என்ன எழுதி இருக்கு,,எனக்கும் சொல்லு நானும் சிரிக்கிறேன் "

                                        என்றாள் , நான் அந்தப் பக்கத்தைக் காட்டினேன்,ஹஹஹஹா எண்டு சிரிச்சாள், பிறகு அநதப் புத்தகத் தலைப்பை பார்த்தாள், வேற பக்கம்களையும் புரட்டிப் பார்த்தாள்,பார்த்திட்டு

                                  " ஒ இந்தப் புத்தகமா  இவளவு நேரமும் இண்டரஸ்ட் ஆக வாசித்துக்கொண்டு இருந்தாய் ,,"

                              "ஹ்ம்ம்  " 

                                 "  என்ன படிச்சுப் புரிந்து கொண்டாய்,,நல்ல விசியம் என்னவும் இருந்தா எனக்கும் சொல்லேன் "

                                     "   சயன்ஸ்  தான்  எழுதி இருந்தாங்க ,," 

                                    "  .உன்னோட வாயல லேடிஸ் ஒன்லி மாட்டார் கேட்க்க சுவாரசியமா இருக்கும் ,,சொல்லு "

                                 " ஹ்ம்ம், ஒரு பெண்குழந்தை  வயதுக்கு வரும் போது உடலியியலில் நடக்கும் மாற்றங்களை அழகாக எழுதி இருக்கிறார்கள், எங்களின் நாட்டில் இப்படியெல்லாம் வெளிப்படையாக இதை பேசவோ,எழுதவோ மாட்டார்கள்..  "

                              "    ஒ உங்கள் நாட்டிலும்   பெண்குழந்தைகள்   வயதுக்கு வருவார்கள் தானே ,,அதில  என்ன குழப்பம்,, சரி வா, காருக்குள்ள இருந்து கதைத்து கதைத்து கடைக்குப் போவோம் "

                                  என்றாள். காருக்க ஏறி பெல்ட் போட்டு, போட்டிருந்த எப் எம் ரேடியோவை ஆப் செய்து போட்டு , லிப்ஸ்டிக் எடுத்து சொண்டில ரெண்டு இழுவை இழுத்துப்போட்டு,டாஸ் போட் கண்ணாடியில் பார்த்து தலைமயிரை ஸ்டைலா முன்னுக்கு இழுத்து விட்டுப் போட்டு , ஜி பி எஸ் நேவிக்கேசனில் அலனா புறு  எண்டு அடிச்சுப்போட்டு ,காரை ஸ்டார்ட் செய்து, ரிவேஸ் எடுத்து , ஒஸ்லோவுக்கு போகும்  கொஞ்சம் நேரான வேகப் பாதையில் இறக்கினவுடன சிசிலியா கதையைத் தொடக்கினாள்.

                                 " சொல்லு,உங்கள் நாட்டில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தால் என்ன செய்வார்கள்,,ஒரு ஸ்ரீலங்கன் தமிழ் குடும்பம் அதுக்கு ஒரு விழா எடுத்ததை இங்கே ஒஸ்லோவில் ஒரு அல்பத்தில் படங்கள் பார்த்தேன் "

                                      " ஹ்ம்ம்,,அப்படிதான் இரவல்  சீலையை நம்பி இடுப்புக் கந்தையைக் கழட்டி  எறிந்த மாதிரி செய்வார்கள் .

                                      " என்ன ஒரு சோடனை,,ஹ்ம்ம்,,சும்மா  பாபிலோனியன் தொங்கு பூங்கா போல சோடிச்சு ,,யப்பா,,பார்க்கவே  அழகு ..,உண்மையா என்னதான் செய்விங்க "

                                " யெஸ்,,அதைதான் சாமத்திய வீடு எண்டு எங்கள் பக்கத்து மனிதர்கள் சொல்லுவார்கள் ,, "

                               " சரி அதை ஏன் செய்கிறார்கள்,,பெண்பிள்ளைகள் வயதுக்கு வருவது ஒன்றும் உலக அதிசயம் இல்லையே,,இயல்பா உடம்பில நடக்கும் பயோலோயிகள் ,அனோடோமிகள் மாற்றம் தானே ,,"

                              " அதுதான் எங்களுக்கு கொண்டாட்டம்,,எங்கள் கலாசாரத்தில் பெண்களை கொண்டாடுவது ஒரு சம்பிரதாயம்,,அதைவிட  வருடத்தில் குறைந்தது அஞ்சு கொண்டாட்டம் நடக்கும்,,அதில பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் இதுவும் ஒரு கொண்டாட்டம் "

                             "  ஒ ஆனால் நிறைய மனிதர்கள் வருவார்களே, எங்க இருந்தப்பா இவளவு ஆட்கள் வாறாங்க,,பெரிய முயூசிக் கொன்சேர்ட்டுக்கு வாற மாதிரி  "
                              
                                " அது உண்மைதான் நெருங்கிய உறவினர், நண்பர்கள் இப்படிக் கொண்டாடங்களில் தான் ஒன்று சேர்வார்கள், அதுகள்  குடும்பங்களின் நெருக்கத்தை அதிகரிக்கும் ஒரு சம்பவம்,,உங்களுக்கு  கிறிஸ்மஸ் போல "

                                " ஒரு வருடத்தில் ஒரே ஒருமுறைதானே கிறிஸ்மஸ் வருகுது எங்களுக்கு,,சரி அந்த சாமத்திய வீட்டில் என்ன ஸ்பெசல் ஆக அந்தப் பெண்ணுக்கு செய்வார்கள் "

                                    " தலைக்கு தண்ணி வார்ப்பார்கள் "

                                     " என்னது தலையில குளிக்கிறதா,,,அதுக்கு என்னத்துக்கு இவ்வளவு ஆட்கள்,,இவளவு  சோடனை,,கொண்டாட்டம் "

                           " ஹ்ம்ம்,,அடிப்படையில் அதுதான் , அறுகம் புல்லைப் புடுங்கி  பாலில போட்டு, அந்தப் பாலை பூசுமஞ்சள் தடவிய தலையில ஊற்றி தலைக்கு தண்ணி ஊற்றிக் குளிக்க வார்ப்பார்கள்.."

                          " அதென்ன  அறுகம் புல் ,,ஹெர்பல் சாம்பூவில் கலந்திருக்குமே ஆலோவீரா  என்ற ஹெர்பல் அதுவா ,,பூசு மஞ்சள் ,அதென்னப்  பா ,,ஒருவகை சம்பூ  அல்லது பொடி லோஷனா ,,"

                             "  இல்லைப்பா அருகம்புல் அது  இங்கே இல்லை,,பால் அதுதான் கவ் மில்க்,,பூசு மஞ்சள் அதுதான் சமையலுக்குப்  பாவிக்கும்  டெர்மரிக்  "

                             " ஹ்ம்ம் ,,பால் அறுகு பூசுமஞ்சள் வைச்சு தலை முழுக்காட்டி என்ன குற்றமா,,அல்லது  அந்தப் பெண்ணுக்கு அதுக்குப் பிறகு ஒழுங்கா மாதவிடாய் வராதா,,,,"

                                 " அதெல்லாம் வரும்,அல்லது முத்திப் பிந்தி வந்தாலும் வர வேண்டியது எல்லாம் வரும் அது பிரச்சினை இல்லை ,,இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்,,ஆனால் மஞ்சள் அது இயற்கையான கிருமி நாசினி  அது வைச்சுக் குளிச்சா யாருக்குமே நல்லதுதான் "

                              " ஹ்ம்ம்,,வேற  என்ன செய்வார்கள்,,அந்தப் பெண்ணை தேவதை போல அலங்கரித்து மேடை போல ஒண்டில சாமி போல வைச்சு பூசை செய்வார்களா "

                              "  ஹஹஹஹா அது பூசை இல்லை,,ஒரு வித ஆராதனை,,ஆராத்தி எண்டு சொல்லுவார்கள்,,எங்கள் நம்பிக்கைப்படி ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைச்சுதான் அந்தப் பெண்ணின் எதிர்கால  ருது திருமண  சாதக பலனே கணிப்பார்கள்,,,"

                           "  அப்படியா ,,என்னடா சொல்லுறாய் "

                                        "   அதன் அடிப்படையில்தான் அநதப் பெண்ணின் திருமணம் அமையும்,, அவர்களின் கலியான பேச்சு ஆரம்பமே சாமத்திய வீட்டில் இருந்து தொடங்கலாம் "

                                 "   ஒ ,,அப்படியா,,,இண்டரஸ்டிங் ,,ஒ கலியாணம் தொடங்குமா,,வாவ் எவளவு நல்லா இருக்கு கேட்கவே "

                    "அது ஒரு நல்ல ஆரோக்கியமான சடங்கு,,வயதுக்கு வந்த பெண்ணின் உடல்நலத்தை  முன்னிறுத்தி பல விசியங்கள் செய்வார்கள் " 
                                            
                                                 " ஆனாலும் அந்தப் பெண்ணின் சோடனையப் பார்க்க எனக்கே கால் ரெண்டும் குறுகுறுக்குது, எனக்கு அப்படி யாருமே செய்யவில்லையே  என்று, நான் ஸ்ரீலங்காவில் தமிழ் பெண்ணாகப் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன் "

                          " கிழிஞ்சுது,,நீ அங்கே பிறந்திருந்தால்,,அங்கே இருந்து  கொண்டு அய்யோ நான் ஒரு நோர்ஸ்கியாப் பிறக்கலையே என்று ஏங்குவாய் "

                          " இல்லை,,எனக்கும் அங்கே சாமத்திய வீடு நடந்து இருக்குமெல்லா,,அழகா சோடிச்சு என்னையே எல்லாரும் கவனித்துப் பார்க்கிற மாதிரி ஒரு நாள் கிடைக்குமென்றால் எவளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா, ஒரு பெண்ணாக இருந்து அதை உணர்ந்து பார்த்தால் தான் உனக்கு தெரியும் "
                           
                              "உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களுமே  பலர் தங்களைப்   கவனித்துப் பார்க்க வேண்டும் என்கிற மாதிரித்  தானே சோடிச்சுக்கொண்டு திரிகிறார்கள் ,பிறகென்ன அதுக்கெண்டு ஒரு ஸ்பெஷல் நாள்  "

                                              இந்த இடத்தில இதையும் சொல்லத்தான் வேண்டும். உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் அழகை ஒருகணம் யாராவது உற்றுப்பார்க்க வேண்டும் என்ற அவாவில் தானே இயங்குகிறார்கள். கோடிக்கணக்கான டாலர் பிரளும் அழகுசாதன, முகப் பவுடர், அழகு சோடனைப் பொருட்கள் விற்பனை நடப்பதே பெண்களுக்குப் பின்னே உள்ள அந்த சைக்கோலோயியை அடிப்படையில் வைத்துக்கொண்டு தானே . இந்த முகப்பவுடரில் ஏமாந்து வாழ்கையை முழுதாகத் தொலைத்த ஸ்ரீராமன்கள் நிறையப்பேர் இருக்கிறார்களே.

                                  "  சரி ,,இப்ப நீ என்னத்துக்கு அதிகம் கலவரம் ஆகுறாய், சாமத்திய வீடு தமிழரின்  எளிமையான  கொண்டாட்டமாக இருந்தது , இப்ப சில தமிழ் வீடுகளில் ஆடம்பரமும், தங்களின் பணக்காரத்தனத்தை காட்டவும் வெளிக்கிட்டு   திண்டாட்டமும்  ஆகிவிட்டது சிசிலி "

                              " எனக்கும் ,பால் அறுகு பூசுமஞ்சள் வைச்சு தலை முழுக்க வார்த்து  இருந்தா,,நல்ல கலியாணம்  கிடைத்து இருக்கும் போல,,,அதுகள்  வைச்சு தலை முழுக்காட்டாததால் தான்,,ரெண்டு தரம்  போய் பிரண்ட் பிடிச்சும்,,ரெண்டு பேரும் ஆறு மாதத்தில ஓடிட்டாங்கள் போல  " 

                                     " ஹஹஹா சிசிலி நீ என்ன ஒரு லொயிக் இல்லாமல் குழந்தைப் பிள்ளைகள் போல ஜோசிக்கிறாய் ,அல்லது என்னோட காலை வாருரியா "

                                      " இல்லை ,,நான் உண்மையத்தான் சொல்லுறேன்,,நான் ஒரு கலாச்சாரா அடையாளம் இல்லாத வெறுமையில் வாழ்வது என்னோட எண்ணங்களைப் பாதிக்குது,,அதன் பாதிப்பு என் நடத்தையில் எதிரொலிக்கலாம் " 

                                   " யப்பா சாமி  நான் தெரியாம உனக்கு எல்லாம் சொல்லிபோட்டேன் ,,உன்னோட  போய் பிரண்ட்ஸ் ஓடிப்போனதுக்கு  பால் அறுகு பூசுமஞ்சள் காரணமில்லை "

                              "என்னடா சொல்லுறாய் , எனக்கு என்ன குறைச்சல் சொல்லு ,எனக்கு நீ சொல்லும் விளக்கம் கேட்கக்  கவலையா இருக்கு  " 

                                        "  அதுக்குக் காரணம்  உன்னோட அணுகுமுறை . உன் வாழ்க்கை முறையில் உறவு என்பதை நீ எப்படி நடைமுறையில் கடைப்பிடிப்பது என்பதில் தங்கி உள்ளது # 

                             "நீ  எப்பவும்  என்னோட அன்பா கதைக்கமாட்டாய்,,என்னை ஏண்டா  திட்டுறாய்,, எப்பப்  பார்  இப்பிடியே கதைக்கிறாய் ,, எனக்கு அழுகை வருகுது தெரியுமாடா   "

                                 " உனக்கு ஒண்டும் குறைச்சல்  இல்ல இப்பவே தேவதை போலதானே இருக்கிறாய்.."

                              " ஹ்ம்ம்,,உண்மையாவா சொல்லுறாய், நான் அதிகம் கதைகிறேனா ,"

                                " ஹஹஹாஹ்,,சினிமாவில் கவர்ச்சி நடிகை அதிகம் கதைத்தால் யாரும் ரசிக்கமாட்டார்கள், ,அவள் சும்மா உடல் மொழியால் பேச வேண்டும் எல்லாரும் ரசிப்பார்கள் "

                                " என்னது என்னைப்பார்த்தால் கவர்ச்சி நடிகை போலவா இருக்கு,,இப்ப அலனா புரு  போறதுக்கு இடையிலேயே என்னட்ட அடி வேண்டிச் சாகப்போறாய் "

                            "  ஆமாடி மோட்டுக் கழுதை, சிசிலி  ,நீயே நேற்றுதான் சாமத்தியப்பட்ட மாதிரி மினுக்கு மினுக்கு எண்டு மினுக்கிக் கொண்டு அணில் பாயும்  செவ் இளனிக் குரும்பை , மாலையில் மொட்டு விட்ட மல்லிகை போல இருகிறாய் " 

                           "   ஹ்ம்ம்,,,உண்மையாவா சொல்லுறாய்,,உண்மையாவா சொல்லுறாய் "

                               "  ஆமாடி,,மோட்டுக் கழுதை உண்மையாதான் சொல்லுறேன் சிசிலி, நீ  நாயுண்ணி மலர்களுக்கு நடுவில்  நாகதேவன்துறை  செம்மங் குண்டில  செளிர்த்து வளர்ந்த செந்தாமரை போலவே இருகிறாய்  "

                             அந்த உரையாடல் முடியும் போது அலனாபுறுக்கு வந்திட்டம், முன் இருட்டு இருட்டி விட்டது, சிசிலியா காரைப் பார்க் பண்ணிப்போட்டு ,இறங்கி உள்ளுக்குப் போய் கொஞ்ச நேரத்தில் கையில பேப்பர்களோடு வந்தாள், காரைப் பின்னுக்கு விநியோகிக்கும் வாசலுக்கு கொண்டுபோய் டிக்கிய திறத்து அதில வோசிங் மிசினை ஏற்றி முழுவதும் உள்ளே தள்ள இடமில்லாமல் பின் கதவை அரைவாசி மூடி பெல்ட் போட்டுக் கட்டி மெல்ல மெல்ல ஓடிக்கொண்டு வந்தோம். அவள் வீட்டுக்குப் போற வழி முழுவதும் ஒன்றும் பேசவில்ல,எப் எம் ரேடியோவைப் போட்டுடுத் தனக்குள்ள சிரிச்சுக்கொண்டு வந்தாள்   ,

                                                   வோசிங் மிஷினை அவளோட வீட்டில கொண்டு வந்து இறக்கி வைச்சு முடிய, சிசிலியா வந்து உடனையே பைப் லைன் எல்லாம் இழுத்துப்போட்டு பொருத்துவாள் என்று நினைக்க ,அவள் சம்பெயின் வைட் வைன்  போத்தலும் ரெண்டு சம்பையின் கிளாசும் எடுத்துக்கொண்டு வந்து மேசையில் வைச்சாள், மேலுடுப்பைக் கழட்டிபோட்டு ரெண்டு நூலில தொங்க விட்ட மாதிரி  ஒரு சின்ன ஸ்போர்ட்ஸ் பெனியன் போட்டிருந்தாள்.  

                            " சிசிலி,,,என்னாச்சு ,,நீ இப்ப பைப் லைன் எல்லாம் கொழுவவில்லையா , நீதானே அது செய்யுறது எண்டு சொன்னாய் ,அதையும் என்னையே  செய்யச்சொல்லி  வேலை காட்டப்போறியா  .."

                           "  இல்லை,  நீ  ஏன் கிடந்தது பதறுகிறாய் ,,நீயே  கொழுவு,,கட்லோக்கைப் பார்த்துக் கொழுவு,கஷ்டம் இல்லை,,மூண்டு விதமான பைப் லைன் தான் வரும்,நீ பிடிப்பாய்,,ஒரு ஆம்பிளை வியர்க்க வியர்க்க வேலை செய்யுறது பார்க்க ஆசையா இருக்கும் ,,அவங்கள் தான் மச்சோ ஆண்மை உள்ள ஆம்பிளைகள் .. "

                              " அடிடா சக்கை எண்டானாம் , சரி ,,நான்  கொழுவிப் பார்கேறேன்,,நீ என்ன இப்பவே வைன் போதில்லை திறக்கிறாய்,,இரவு சொயிஸ் பப் போற பிளான் இல்லையே "

                               " ஹ்ம்ம்,,அங்கேயும் பிறகு போவோம்,,இன்றைக்கு என்னவோ ரொமண்டிக் மூட் ஆக இருக்கு,, வெளிய வெயில் சூடு,,ஹ்ம்ம்,,உள்ளுக்கும் எல்லாம் சூடாக் கொதிக்குது ,,ஹஹஹாஹ் ,,என்ன ஜோசிகுறாய்,,வீட்டுக்கு உள்ளே என்றேன் " 

                                            என்று சொல்லி ஜன்னல் எல்லாத்தையும் திறந்துவிட்டாள்,நான் கட்லோக்கை பார்த்து ஒரு மாதிரி எல்லா பைப் லைன்னும் கொழுவிப் போட்டு, சுடுதண்ணி, பச்சைத் தண்ணி , ரெண்டையும் திறந்து போட்டு  முதல் முதல் மிசினைப் போட்டேன்.அது பூனை புறுபுறுத்த மாதிரி மெல்லிய சத்தத்துடன்  சுற்றத் தொடங்க, சிசிலியா வந்து பார்த்தாள். கையில கொண்டு வந்த ஒரு சம்பெயின் வைன் கிளாசைத் தந்து தன்னோட வைன் கிளாசுடன் முட்டி மோதி

                   " சியேர்ர்ர்ர்ர்ர்ஸ்  ஒரு கிளாஸ் குடிச்சிட்டு சாப்பிடப் போறியா "

                                                 என்று கேட்டாள், எனக்கு வேண்டாம் என்றேன், அவள் என்னமோ மைக்கிரோ அவனில சூடாக்கி சாப்பிட்டாள் ,எனக்கு ஒரு கிளாஸ் வையின் வாயில வைச்சா பிறகு சாப்பிடமாட்டேன்,,பிறகு தண்ணி தண்ணியா உள்ளுக்கு விட்டாத்தான் தாகசாந்தி தீரும். ஆனால் வைன் என்னோட விருப்ப லிஸ்டில்  இல்லை, அதனால  அந்த ஒரு கிளாஸ் வைன் கிளாசை வைச்சு சூப்பிக்கொண்டு அவளோட மூன்று பூனைகளையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிசிலியா குளிக்கப் போறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு துவாயைக் கட்டிக்கொண்டு வந்தாள், 

                               " இப்ப நீ இண்டைக்கு சொன்ன பால் அறுகு மஞ்சள் வைச்சு தலையில குளிச்சா எப்படி இருக்கும் ,,ஹஹஹஹா,,இன்றைக்கு இரவு ருது கலியாணம் என்னவும் நடக்க சான்ஸ் கிடைக்குமா ...ஹஹஹஹா...சொல்லு நீ தானே சாத்திரம் எல்லாம் நல்லா சொல்லுறாய் .."

                               "  இப்ப    பால் அறுகு மஞ்சள் வைச்சு தலையில குளிச்சுப்போட்டு வெளிய போனால் கலியாணம் கிடைக்காது,,,உனக்கு சன்னிதான் பிடிக்கும் ,,போடி போய் முதல் குளியடி,,வைன் வாயில மணந்தால் சொயிஸ் பப்புக்கு உள்ள விடமாட்டான் "

                                  "  ஹ்ம்ம்,,பாத் ரூம் கதைவைத் திறந்து போட்டு குளிக்கவா ,,உனக்கு ஒண்டும் ஆட்சேபனை இல்லைதானே "

                                 " உன்னோட வீட்டில நீ என்னத்தை வேண்டுமெண்டாலும் திறந்துபோட்டுக் குளி. எனக்கு ஒரு மண்ணும் இல்லை.ஹஹஹஹஹஹா"

                            " இப்ப என்னத்துக்கு இப்பிடி அலாவுதீன் அற்புத விளக்குக்  கண்டு பிடிச்ச மாதிரி  சிரிக்கிறாய்,,சொல்லு "

                            " கதைவை மூடிக்கொண்டு குளியடி,,உன்னோட பூனைகள் என்னத்தையும் பார்த்து மிரளப் போகுதுகள் "

                              " ஹிஹிஹிஹிஹிஹி,,அதுகளுக்கு எல்லாம் நல்ல பழக்கம்,,,,நீ மிரளாமல் இரு ..அது  போதும்..பிறகு  நான் அம்புலன்சுக்கு அடிக்க ஏலாது "

                                       நான் ஹோல் சோபாவில் மடிஞ்சு இருந்துகொண்டு டெலிவிசனில் " ஜக்தன் போ சார்லிகெட் " என்ற  " விவசாயி காதலியத் தேடுறான் " என்ற நோர்வே நாட்டு நாட்டுப்புற விவசாயி கண்ணாபிண்ணா எண்டு காதல் தேடும்  நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்தேன். கொள்கையைத் தளர்த்தி  வாயில நனைச்சதால இனி எல்லாம் ஒண்டுதான் என்று  வைன் போதில்லை சரிச்சு உள்ளுக்க விட்டுக் கொண்டிருந்தேன். 

                               சிசிலியா குளிச்சு முடிச்சு நடு  உடம்பை மட்டும் மறைக்கும் குறுக்குக் கட்டில  துவாயைக் கட்டிக்கொண்டு  பாத்ரூம்  கதவில எட்டிப் பார்த்தாள் , அதுக்குப்பிறகும்  ஒரு மணித்தியாலம் சோடினை போட்டு வெளிய வந்தாள்.துவாயைக் கட்டிக்கொண்டு ஹை ஹீல்ஸ் போட்டு ஒரு மாதிரி வில்லங்கமா சொண்டைக் கடிச்சாள் . நான்   மேலே இருந்து கீழே போட்டிருந்த ஹை ஹீல்ஸ் வரைக்கும் ரெண்டுதரம் ஆச்சரியாமா பார்த்தேன் .அவள் அழகு அப்படி சுண்டியிழுக்கும் அழகு 

                                தலை மயிரை மர்லின்மன்றோ போல நடுவகிடில் பரப்பி ரெண்டு பக்கமும் பொப் பிடிச்சு இருந்தாள். கண் இமைக்கு போட்ட மஸ்கார இஸ்தான்புல்லுக்கு வரச்சொல்லி அழைப்பு விட்டது, சொண்டில லிப்ஸ்டிக்  கலீல் ஜிப்ரானின் காதல் கவிதையில் தோச்சு எடுத்த மாதிரி இருக்க, ஐய் ப்ரோ இல் பெண்மயில் நிண்டு அகவும் சத்தம் வந்தது. கழுத்தில கோகினூர் வைரம் வைச்ச பென்டன்  போல என்னவோ போட்டிருந்தாள், 

                                 டொல்லஸ் கபானா  இத்தாலியன் வெஸ்ட் போட்டு ,அதுக்கு மேலே லியுவான் மொண்டே பிரெஞ்ச்  கலெக்சன் சமர் கோட் போட்டு கீழே ஒரு ஹென்னேஷ் அண்ட் மாரிஸ் லெதர் குட்டைப் பாவாடை,,அதுக்கு கீழே முழங்கால் முட்டி வரை நீண்ட ரெட் லேடி சப்பாத்து. தோளில மைக்கல் குரோஸ்  செலிபிரிட்டி நம்பர் வன் ஹான்ட்பாக் கொழுவியிருந்தாள் . எல்லாம் சேர்ந்து இண்டைக்கு இரவு என்னவோ வில்லங்கம் வரப்போகுது போலதான் இருந்தது.

                                         சிசிலியா எனக்கு ஒரு விலை அதிகமான  புது சென்ட் பாஸ்ட் செபஸ்தியான் சேட் கொண்டு வந்து தந்தாள். அவள் ரோம் சுற்றிபார்க்க  இத்தாலி போனபோது ஒரு டசின் வேண்டிக்கொண்டு வந்ததா சொன்னாள். அளவு எனக்கு சரியா இருந்தது,,நானும் பாத் ரூமில் போய் அரைக் குளியல் குளிச்சிட்டு அந்த சேட்டப் போட்டுக்கொண்டு வந்து போக வெளிக்கிட 

                                   " இண்டைக்கு இரவு எனக்கு கலியாணம் நடக்கப்போகுது ஏன் சொல்லு பார்ப்பாம் "

                              "   ஹ்ம்ம் தெரியலை ,நீயே சொல்லு சிசிலி "

                             " நான் இப்ப தலைக்கு வைச்சுக் குளிச்ச  லோசனில்  பாலும்,,பாலாடையும் ,,ஆலோவீராவும்  தேனும் ,,அதுதான் மில்க் அண்ட் ஹணி  ஆலோவீரா  சேர்த்து செய்தது எண்டு போட்டு இருந்தது "

                               " அடி,,செருப்பால,,,,அய்யோ,,உனக்கு தெரியாமல் நான் விளக்கப்பட்டுத்தப்போய் இப்ப நரி சிங்கதிட்ட மாட்டி தப்பி ஓடி வந்து வாசிக சாலையில் உதயன் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த மாதிரி மாட்டிட்டனே "

                               "  என்னடா  சொல்லுறாய் "

                                "அடியே எருமை மாடு ,,நீ போட்ட சம்புக்கும் பால் அறுகு பூசுமஞ்சளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை,,இப்ப நீ வெளிக்கிடுற ஸ்டைலுக்கு கலியாணமில்லை..யாரும் இழுத்து வைச்சுக் கற்பழிக்கப் போறாங்கள் "

                                 "  ஹஹஹஹா,,நீதானே என்னோட வாராய்..யார் வரப்போறான் என்னோட சேட்டை விட "

                                   "  அட  நானே ஒரு பயந்தாங்கொள்ளி ,எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா போல அவசரத்தில எஸ்கேப் ஆகிற ஆள்டி மோட்டு  எருமை "

                                   "   இன்னும் ஒரு கிளாஸ் வைன் அடிச்சிட்டு இறங்குவமா,,அடுத்த  தேபாணா  ட்ரைன் 21. 06 இக்கு கீழ ஸ்டேஷன் அடிக்கு  வரும் ,,பாட்டி முடிய நீ டாக்சியில் போ,,நான் காசு தாரன் ,,நானும் டாக்சி அடிச்சுதான் வருவேன் "

                                 "   ஹ்ம்ம், "

                                    "அல்லது  இன்றைக்கு இரவு என்னோட வீட்டில தங்கேன், எனக்கும் இரவெல்லாம்  ஜாலியா கும்மாளம் அடிச்சுப்போட்டு டக் எண்டு  கரண்ட் நின்று லைட் எல்லாம் அணைந்த மாதிரி  தனியவர  வெறுப்பா இருக்கும் "

                                    "  இல்லை,,சிசில்,,எனக்கு அது சொல்ல முடியாது இப்ப,,,பிறகு போறநேரம் பார்க்கலாம்,,,,

                                   "  என்ன நடக்கும்  சொல்லு,,உன்  வாயால சொல்லடா  என் கந்தர்வா "

                                       "  என்ன நடக்குது  எண்டு முதல்ல சொயிஸ் பப் புக்கு போவோம்,,மாட்ரின் ரெண்டு மெசேஸ் அனுப்பி இருக்கிறார்,,எங்க நிக்கிரம் எண்டு கேட்டு "

                            நான் ஒரு போத்தல் வைட்வைன் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் குடித்ததால்  ஒஸ்லோ சிட்டிக்கு நடுவால் நடந்து போகவே வெறி போல ஆட்டியது, சிசிலியா உற்சாகமாக கையை விசிக்கிக்கொண்டு " Reidun Sæther " என்ற நோர்வே பாடகி பாடிய " High on love " பாட்டுப் பாடிக்கொண்டு, நடைபாதை மனிதர்களை பார்த்துக்கொண்டு,  கத்திக்கொண்டு கடந்து போன சோமாலியர் கதைப்பது போல வேடிக்கையாக மிமிக்கிரி செய்துகொண்டு  வந்தாள். எனக்கு நடக்கிற மாதிரி இல்லாமல் கொஞ்சம் மிதக்கிற மாதிரி இருந்தது ஒவ்வொரு அடியும் 

                                       சொயிஸ் பப்புக்கு நாங்க போய்ச் சேர்ந்த நேரம் வெளி வாசல் வரைக்கும் அது நிரம்பி இருந்தது,பலர் இருக்க இடமில்லாமல் நிண்டுகொண்டு குடித்துக்கொண்டிருந்தார்கள் , " மெட்டாலிக்கா  ஸ்டைல்"  இசைக்குழு ஒண்டு லைவ் ஆக உள்ளே மேடையில் வாசித்துக்கொண்டு இருந்தார்கள்,அவர்களின் முயூசிக் சத்தம் மரம் அறுக்கிற மிசினில இருந்து வாறது போல வெளிக்கிளம்பி கண்ணாடி ஜன்னல் எல்லாத்தையும் அதிர வைத்தது. 

                                          பப் வாசலில் போய் வெளிக் கதவின் கண்ணாடியை  வெறியில இடிக்கப் பார்த்தேன்,அதில  நின்ற " டோர் வக்த் "  என்று சொல்லும்  வாசல் சிக்கியூரிட்டி என்னைக் கட்டாயம் வெறியா என்று செக் பண்ணுவான் என்று நினைக்க,அவன் என்னை உள்ளுக்கு விட்டான்,,உள்ளுக்கு கதவைத்திறந்து கொண்டு போய் ஒருத்தனின் நெற்றியில் மோதினேன்,,அவன் திரும்பிப் பார்க்க முதலே பக்கத்தில நின்டவனின் மண்டையில் மோதினேன் ,பின்னால பார்க்க சிசிலியா உள்ளுக்கு வரவில்லை,திரும்பிப் பார்ப்பமெண்டு  திரும்ப பூமி ஒருக்கா மற்றப் பக்கம் சுத்திச்சு ஜன்னலுக்கால பார்க்க  சிசிலியாவை மறிச்சு வைச்சு இருந்தான், ஒரு மாதிரி மிதந்து கொண்டு வெளிய வந்து  


                               "  ய்ய்வளை  யேயேன் மமாமாறிச்சு வைஸ்ஸ்ச்சு  றிருக் ருகிறாய்,,ய்ய்வள் யேன் பிரிரிரெண்ட் யின்னோட வென்ந்தாள்,,லுள்ளே வேறும் ஸில்ல நோண்பர்கள் யேங்களுக்காக கா ஆத்துக்கொண்டு யிய்யிருக்கிறார்கள்,,அவ்வவர்கள் ஒரு மேசையே புக் ப்னப்ண்ணி வைத்து யிஈருக்கிறார்கள்  "


                            "    பிரதர்,,நீ ஓகே,நீ நிதானமாய்க்  கதைக்குறாய் ,நிதானமாய் நிக்குறாய் ,,இவள் கொஞ்சம் நடை தடு மாறுகின்றாள் ,,கொஞ்சம் பொறு நான் அஞ்சு நிமிடம் கவனித்துப் போட்டு உள்ளே விடுறேன் "

                                என்றான்,கொஞ்ச நேரத்தில் சிசிலியா உள்ளுக்கு வந்திட்டாள்,வந்து முதல் கொஞ்சநேரம் மாட்ரின், ஆமுன்ட்,ஜான் எரிக்குடன் கதைச்சுப்போட்டு ஒரு " ப்லோடி மாரி " கொக்டையில் எடுத்தாள், அதை அவள் உறிஞ்சி முடிக்க முதல் நான் மூன்று " ஜெகமாஸ்தர் சொட் " அடிச்சு முடிச்சிட்டேன், பிறகு அவள்  ஒரு " கியூபா லிபரே "  கொக்டைல் எடுத்தாள், அது முடிய முதல் நான் ரெண்டு " சிர்மனோவ் வோட்கா " சொட் உள்ளுக்கு தள்ளிட்டேன் ,கடைசில 

                          " என்னது  பந்தயக் குதிரை ஓடி முடிச்சு தொழுவத்தில தண்ணியை முகத்தால இழுத்த மாதிரி இழுக்கிறாய்,,"

                       " இந்தப் பப்பில் ஒரு மண்ணும் எனக்கு நடக்காது,,இது  என்னோட சொந்த வீடு போல,,நீ பிசத்தாதை "

                                   "  இண்டைக்கு என்னவோ நடக்கப்போகுது ,எனக்கு கடைசியா இன்னும் ஒரு  கொக்டைல் எடுக்கலாம் போல இருக்கு,,"

                             "   ஒண்டும் வராது  டான்ஸ்  ஆடு ,,இயல்பா இரு,,என்ஜாய்  பண்ணு ,,உலகத்தை மற..முக்கியமாய் நாளை என்பதே இல்லை என்று நினை சிசிலி "

                                  "  இப்பவே உன்னோட கண் நாலாத் தெரியுது,,நீயே சொல்லேன் ஒரு ரொமாண்டி ஆன கொக்டைல்  "

                            "  செக்ஸ் ஒன் த பீச் "

                             " என்னது,,இது,,உனக்கு  வெறி ஏறிட்டுது போல,,,ஹ்ம்ம்,,இவளவு கெதியா உனக்கு ஏறாதே இரும்பு மனிதா,,,என்னாச்சு இன்று "

                            " ஹ்ம்ம்,,உனக்கு செக்ஸ் ஒன் த பீச் என்று ஒரு கொக்டைல் இருக்கு தெரியுமா, டொமினிக்கன் ரிப்பப்பிளிக் தான் அதன் பிறப்பிடம், கரிபியன் தீவுகளில் அது பேமஸ். மலிபு வெள்ளை ரம் விட்டு செய்வாங்கள் ,இங்கே இருக்கா  என்று கேள் " 

                           "  வாவ்,,வாவ்,,உனக்கு வெறி எண்டாலும்,,முக்கியமான விசியங்களை மறக்க மாட்டாய்,,,வாவ் வாவ் செக்ஸ் ஒன் த பீச்,,ஹஹஹா  அய்யோ பெயரைக் கேட்கவே உடம்பெல்லாம் கிளுகிளுப்பா இருக்கே,,நான் ஜாமைக்கா  , பார்படாஸ் போய் இருக்கிறேன் ,,ஆனால் இந்த கொக்டைல் கேள்விப்பட்டதில்லையே .." 

                                     " ஹ்ம்ம்,,,நீலக் கடல் அலை உன் காதுகளில் தாலாட்டும் , தளர் மேனி தள்ளாடும் , இனி விட்டால் நானே பிசத்துவேன்,,வா இன்னும் கொஞ்ச நேரத்தில் இது மூடப்போறாங்கள், தொர்ஸ்கோ சதுக்கத்தில் துருக்கிக்  கடையில் டோனர் கெபாப் சாப்பிடுவம், ஓகேயா உனக்கு " 

                                " ஓகே ,வாவ் ,,,வாவேன் எஞ்சேல்பேர்ட் ஹம்பர்டிக்கின்   ஸ்பெனிஷ் ஐஸ் பாட்டு வாசிக்குறாங்க  என்னோட சலசா ஆடேன்,,நீ நல்லா சலசா  ஆடுவாயே , ஹ்ம்ம்,,அது  முடியுது  ,கொஞ்சம் பொறு பிளமிங்கோ பாட்டு வாசிக்குறாங்க டான்ஸ் ஆடிப்போட்டு வாறன் ,,என்னோட கொக்டைல்லைப் பார்த்துக்கொள். என்னோட கைப் பையையும் தாரேன் பத்திரமாப் பார்த்துக்கொள் " 

                                  எனக்கு லத்தின் அமரிக்கன் டான்ஸ் ஆடத்தெரியும்,ஆனால் அந்த நேரம்  ஆடியிருந்தால்  பிறகு அது சிவபெருமானின் ஊழித்தாண்டவம் போலதான் ஆட வேண்டி வருமென்பதால் ஆடவில்லை.  சிசிலியா அதுக்குப் பிறகு ஒரு முக்கால் மணித்தியாலம் தாங்கோ, சலசா,  பிளெமிங்கோ, மரிம்பா , இங்கிலீஷ் வால்ஸ், ரிதம் அண்ட் ப்ளுஸ்,  எல்லா நடனமும் பலரோடு சேர்ந்து ஆடினாள். 

                                           சிசிலியா  ஒரு அருமையான நடனக்காரி , நடனத்தை ஒழுங்காகப் படித்தவள் . அவள் வெட்டி வெட்டி  நடக்கும் போதே  கால்களில் சந்தம் தவறாத தாளம் வரும்.  அவள்  இடுப்பே ஒரு  பதஞ்சலி முனிவரின்   பரத நாட்டிய நடனம் ,  அவளை அனைத்துப் பிடித்து ஆடிய ஆண்கள் அவளை வேண்டுமென்றே நெஞ்சில் நெரித்து, பின் புறத்தை தடவி விட்டு , முத்தம் கொடுக்க முயட்சித்துகொண்டிருந்தார்கள் , நான் கடைசி " ஐரிஷ் ஸ்கொச் விஸ்கி சொட் " ஒன்றை குடிக்க முடியாமல் குடிச்சுக்கொண்டிருந்தேன் ,

                                        சொயிஸ் பப் அதிகாலை மூன்று மணிக்கு மூடினார்கள். வெளியே டாக்சிக்காரர்  கொண்டையில் மஞ்சள் லைட் போட்ட கார்களில் வரிசையாக நின்றார்கள், தற்காலிகமாக ஜோடி சேர்ந்த இரவுக் காதலர்கள் யார் வீட்டுக்குப் போவதென்று பிளான் போட்டுக் கொண்டிருந்தார்கள் , அதிகம் குடித்த ஒரு ஜென்டில்மேன் பாதை ஓரம் குந்தி இருந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார், ஒஸ்லோ நகரம் நீலமாக விடிந்திருந்தது, சிசிலியா நடக்க தடுமாறிக்கொண்டிருந்தாள்,வாய் உளறிக்கொண்டு  

                              " செக்ஸ் ஒன் த பீச்,,ஹஹஹா  செக்ஸ் ஒன் த பீச்,,ஹஹஹா,,,யப்பா சாமி என்ன ஒரு கொக்டைல்,"

                                    " ,ஹ்ம்ம், ரசிதுக்குடி அதை அது காளிதாசன் கண்ணதாசன் பருகத் தவறிய  தேன் சிட்டுக்குருவியின் தெய்வீக மதுரசம் "

                                  "    என்னடா  உளருராய்,,நோஸ்ர்கில்  சொல்லு,,உன்  மண்ணாங்கட்டி  தமிழ்  எனக்கு  புரியாது  என நண்பனே "

                             "   இப்ப  எனக்கு உலக மொழிகள் எல்லாமே ஒண்டுதான்,,என்னை விடுடி சிசில்,,எனக்கு வெறிடி செல்லம்" 

                                " ஜமைக்காவில் போட் ஒப் ஸ்பெயின் தீவில  பொப் மார்லி பாட்டுக்கேட்டுக் கொண்டு ,,பறக்கிற மாதிரி இருக்கு ,,உனக்கு தெரியுமா எனக்கு இப்பவும் கவலையாக இருக்கு "

                               "  உனக்கு என்ன கவலை இப்ப ,,சொல்லு சிசிலி "

                                   " கலியாணம் தொடங்குமா,,வாவ் எவளவு நல்லா இருக்கு கேட்கவே ..ஆனாலும் அந்தப் பெண்ணின் சோடனையப் பார்க்க எனக்கே கால் ரெண்டும் குறுகுறுக்குது,,எனக்கு அப்படி யாருமே செய்யவில்லையே  என்று,,நான் ஸ்ரீலங்காவில் தமிழ் பெண்ணாகப் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன் "

                           " போச்சுடா,,விடியக்காலை, மூன்று மணிக்கு ஆரம்ப்பிசிட்டியா "

                               "  இல்லை,,எனக்கும் அங்கே சாமத்திய வீடு நடந்து இருக்குமெல்லா,,அழகா சோடிச்சு என்னையே எல்லாரும் கவனித்துப் பார்க்கிற மாதிரி ஒருநாள் கிடைக்குமென்றால் எவளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா,,ஒரு பெண்ணாக இருந்து அதை உணர்ந்து பார்த்தால் தான் உனக்கு தெரியும் .."

                         " ஹ்ம்ம்,,,அதில ஒரு மண்ணும் இல்லை ,,சம்பா விளைஞ்சு சரிஞ்சு கிடக்க உம்பார் இல்லாமல் ஊர்க் குருவி திண்டிச்சாம் அதுக்குள்ளே ஒருத்தி  சட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து சம்மணம் கட்டி இருந்தாளாம்  என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள் எங்கள் ஊரில் "

                          " சம்பா விளைஞ்சு சரிஞ்சு கிடக்க உம்பார் இல்லாமல் ஊர்க் குருவி திண்டிச்சாம் அதுக்குள்ளே ஒருத்தி  சட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து சம்மணம் கட்டி இருந்தாளாம்  ,,இதுக்கு என்ன அர்த்தம் "

                         "   எனக்கு அர்த்தம் நோர்ஸ்கில் சொல்ல முடியாது சிசில்,"  

                        "  இல்லை,,என்னோட அம்மாவும்,,அப்பாவும்  எனக்கு மூன்று வயதில் பிரிந்து விட்டார்கள்,,நான் தனியா சில காலம் அம்மாவோடு,,சில காலம் அப்பாவோடு வளர்ந்தேன்,,எனக்கு ஒரு பெண்ணாக என்னோட இதயத்தின் மென்மையான பிரதேசங்களில் நினைவு கொள்ளும்படி ஒரு கொண்டாட்டமுமே என்னை முதன்மைப்படுத்தி நடக்கவேயில்லை,,அது எவளவு வேதனை தெரியுமா ,,,உனக்குப் புரியாது "

                         " ஹ்ம்ம்,,அதுக்கு இப்ப என்னதான் செய்ய முடியும்,,சிசிலி  சொல்லு,,"

                           "எனக்கும் ,பால் அறுகு பூசு மஞ்சள் வைச்சு தலை முழுக்காட்டி இருந்தா,,நல்ல கலியாணம்  கிடைத்து இருக்கும் போல,,,அது வைச்சு தலை  முழுக்காட்டாதால் தான்,,ரெண்டு தரம்  போய் பிரண்ட் பிடிச்சும்,,ரெண்டு பேரும் ஆறு மாதத்தில ஓடிட்டாங்க "

                        "  ஹஹஹஹஹஹாஹ்  ஒ அதுவா இப்ப பிரசினை,உனக்கு இப்ப வெறி சிசிலி  "

                          " போடா மடையா,,,ஒண்டுக்கும் உதவாத மடையா,,,"

                           " ம்,,....................................."

                          "  நீ என்னை சில நேரம் மோட்டுக் கழுதை எண்டு திட்டுவாய்,,நீ யார் தெரியுமா,,நீ ஒரு காட்டுப் பண்டி,,எருமை மாடு,,,கருங் குரங்கு,,ஹஹஹஹா,,,காணுமா ,,இல்லை இன்னும் வேணுமா 

                     "  ஹஹஹ ,,இப்போதைக்கு,,இன்றைய இரவுக்குக்  காணும்  சிசிலி "
      
                      "  என்ன ஹஹஹஹஹஹா, உனக்கும் இப்ப வெறி ,,,உன்னால என்ன செய்ய முடியும் "

                        " எனக்கு வெறிதான்,,சரி  உனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு "

            " எனக்குப் பால் அறுகு பூசுமஞ்சள் வைச்சு தலை முழுக்காட்டிவிடு " 
                                      

                 " ஹஹஹா  ஓகே,,வா, கேபாப் சாப்பிட்ட முதல் ,விடிய விடியத் திறக்கிற பாக்கிஸ்தான் சில்லறைக் கடையில ஒரு போத்தல் பால் வேண்டுவம், குருண்லான்ட் பார்க்கில கொஞ்சம் புல்லுப் புடுங்குவம், இந்தியன் ரெஸ்ரோரெண்டில் கொஞ்சம் தந்தூரி கோழிக் காலுக்குப் பூசுற சிவப்புத் தூள் வேண்டுவம் எல்லாத்தையும் தலையில தப்பி உன்னை ஆர்கிஸ் எல்வா ஆற்றுக்க முக்கி எடுக்கிறான், அதோட உனக்கு கலியான ராசி தொடங்கும்,,ஓகே  யா."

                         "  ஹ்ம்ம்..இன்றைக்கு நீ என்னோட வீட்டை வாவேன்,,ப்ளிஸ் ,,எனக்கு தனிமையா இருக்கு, ப்ளிஸ், "

                                என்று  சிசிலியா அன்று முழுவதும் மூன்று அடி தள்ளி நின்றவள் என் கைகளைப் பிடித்துக் கேட்டாள் , நான் ஒன்றும் சொல்லவில்லை , அவளை ஒரு டாக்சி பிடிச்சு உள்ளுக்க தள்ளி அடைஞ்சு போட்டு, டாக்சிக்காரனின் நம்பரை வேண்டிக்கொண்டு , என்னோட வீட்டுக்கு போறதுக்கு கடைசி நைட் பஸ் எடுக்கிற இடத்துக்கு நடந்து போய் கடைசி நைட் பஸ்ஸில் நெரிச்சுக்கொண்டு போய் இறங்கிற நேரம் தடுமாறி விழுந்து எழும்பி வீட்டுக் கதைவை அரைமணித்தியாலம் திறப்புப் போட்டு திறந்து டமார் எண்டு கட்டிலுக்கு  அருகில் நிலத்தில் விழுந்து படுத்திட்டேன்.

                                                     அடுத்த நாள் ,மத்தியானம் போல சிசிலியா போன் அடிச்சு எழுப்பினாள் ,நேற்று என்ன நடந்தது எண்டு கேட்டாள், நான் எனக்கு என்ன நடந்தது எண்டு கொஞ்சம் கொஞ்சமாக  நினைவுகளை மீட்டு எடுத்துக் கொண்டிருக்க அவள் , 

                                           " நேற்று இரவு ஒன்றும் நினைவில்லை,,ஆனால் கனவில் கலியாணம் கட்டுற மாதிரி கனவு வந்தது " 

                                          என்று சொன்னாள், 

                                       "  போடி மோட்டுக் கழுதை " 

                             எண்டு சொல்லிப்போட்டு நான்  போனை வைச்சிட்டேன்.