Sunday 31 May 2015

முகநூல் முகங்கள்......

"அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது" என்று நல்லாவே தெரிந்தும் கிட்டதட்ட எட்டு வருடங்கள் ஆகுது இந்த முகப் புத்தகத்துக்கு முகவரை எழுதத் தொடங்கி, இவளவு வருடங்களில் "உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல" என்று ஒரு சின்னக் கணனித் திரையில் கிடைத்த அனுபவம் நிஜ வாழ்கையில் கிடைத்ததை விட அதிகம்,

                                                முக்கியமாக, " ஒல்லும் வாயெல்லாம் வினைநன்றே, ஒல்லாக்கால்
செல்லும் வாய்நோக்கிச் செயல் " போல அனைத்து வழிகளிலும் முயன்று செயல்படு, முடியவில்லை என்றால், மாற்று வழியில் செயல்படுத்துவது போன்ற தத்துவங்கள் எல்லாம் வேர்க் அவுட் ஆகாமல் இந்த முகநூல் கொடுக்கும் சில நேர்மையான நல்ல உற்சாகத்துக்கு மயங்கி அதை இரவும் பகலும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருக்க வைக்குது .

                                            பொறுமையாக இருத்தல், துன்பத்தை சகித்துக்கொள்ளுதல், இன்பத்தை அளவாக உணருதல், முகம் மட்டும் தெரிந்த நட்புக்கு புதிய வரைவிலக்கணம் , எதிரிகளின் காலை வாருதலுக்கு புதிய பரிமாணம் , பெரும்பாலான வழியல் இடைஞ்சல்களுக்கு வளைஞ்சு நெளிஞ்சு கழுவுற மீனில நழுவுற மீன் போல வழுக்கிக்கொண்டு போவது, எல்லா விசர்த்தனத்தையும் விமர்சனமாக நினைப்பது எல்லாருக்கும் நல்லவன் போல நடிப்பது, அவமதிப்புக்களை கணக்கில் எடுக்காமல் ஞானியைப் போல இருப்பது, போன்ற வாழ்கையில் ஒட்டியும் ஒட்டாமலும் சுயமரியாதையுடன் வாழக் கற்றுக்கொடுத்த பேஸ் புக் அனுபவம் அலாதியானது.

                                                   எப்படியோ சும்மா இருந்த ஒருவனை உலகளவு பொறுமை உள்ள முனிவன் ஆக்கிய பெருமை ,ஏறக்குறைய எதையும் தாங்கும் இதயத்தை பொதுவெளியில் உருவாக்கி ,ஈகோவை இறக்கி வைத்து விட்டு " உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே......" என்று கிறங்க வைத்தது முகநூல் முகங்கள் .


                                                    " 
சிந்தனையுடன் இருங்கள். ஆனால், எந்த சிந்தனையுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள் " என்று இந்த முகஸ்துதி நூலுக்கு எண்பதுக்களில், கடவுளாகத் துணிந்த மனிதன்  ரஷ்னிஷ் ஓஷோ அமரிக்காவில் ஓரேகன்  பார்ம் இல் ரோல்ஸ் ரோயிஸ் காருக்க இருந்து சொல்லும் போதும் செம்மறியாடு போலக் கேட்காமல் இருந்தது  எவளவு அவலம் என்று இப்ப விளங்குது  . இதை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் பிராங் காப்கா சொன்ன " By believing passionately in something that still does not exist, we create it. The nonexistent is whatever we have not sufficiently desired."தான் நினைவு வருகிறது.

.

Saturday 30 May 2015

தோசைக்கல்லு சைசில இசைத்தட்டு..

யாழ்பாணத்தில " பஸ் ஸ்டாண்டில " 80களில் " நியூ விக்டேர்ஸ் " என்று  ஒரு " மூயுசிக் ரோகொரடிங் பார் " இருந்தது, அதன் வெளியே பல இங்கிலிஸ் பாலடகள் பதிந்து வந்த,   தோசைக்கல்லு சைசில இருந்த பிளாஸ்டிக் தட்டில  பல இசைதட்டுகளை வெளியே எல்லாருக்கும் தெரியிற மாதிரி வைத்திருந்தார்கள் !

                                   அதில ஒரு LP அல்பத்தின் கவரை " ஷோ கேசில் " வைத்திருக்க ,அதில இரண்டு வெள்ளைகார ஆண்களும்,இரண்டு வெள்ளைகார பெண்களும் அருகருகே ஒட்டிக்கொண்டு , கைகளைக் கட்டிக்கொண்டு நிண்டு, சிரித்துக்கொண்டு, ஒரு "ஒளி வெள்ளம் பாயும் "  வட்டத்தில் நின்று  போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

                                   அந்த இரு ஆண்களும் ஸ்டார் வார் படத்தில வார  "வேற்றுகிரக வாசிகள் " போல இறுக்கமாக உடை அணிந்துகொண்டு இருக்க, அந்த இரு பெண்களும் அதைவிட இறுக்கமாக உடைஅணிந்து, மார்புப் பகுதிய வஞ்சகம் இல்லாமல் தாராளமாக காட்டிக்கொண்டு இருக்க, அந்த இரு பெண்களும்  அணிந்திருந்த குட்டைப் பாவாடை அவர்கள்  குனிந்தால் எல்லாம் தெரியும்போல இருக்க, சொக்கநாதரே  சொக்கிப்பிவிடுவார்போல இருக்க , அவர்களை சும்மா விரலால சுண்டினாலே சரி கம ப த நி ச நாதம் பேசும்போல  அவர்களின் உடலமைப்பு வில்லா வளைஞ்சு நிக்க ,  இசை மீது இருந்த தீராத தாகத்தால் , அவர்களே  பாடினால் எப்படி இருக்கும் என்பதை அறிய அந்த" ரோகொரடிங் பார் " இக்குள்ள துணிந்து போய் ,

                        "இந்த அல்பத்தின் கவரில் இருபவர்கள் யார்? " 

                                       எண்டு அங்கே தலையில "ஹெட் போனை" கொழுவி வேலை செய்தவரிடம் கேட்டேன் " அவர் இவர்கள்தான் உலகப் புகழ் பெற்ற  ABBA என்ற  இசைக் கோஸ்டி " என்றார். அவரிடம் 

                               " இசை என்றால் எனக்கு உசிர், இந்த அல்பத்தை கொஞ்சம் கிட்டத்தில பார்க்க தரமுடியுமா?" 

                                    என்றேன், அவர் எடுத்து தந்தார்,தெரிந்த தற்குறி இங்கிலீசை வைச்சு நோண்ட அதில் அவர்கள் ஸ்வீடன் என்ற நாடில இருக்குறார்கள் எண்டு எழுதிக்கிடந்தது 

                             ," ஸ்வீடன் என்ற நாடு எங்க இருக்குது ?" 

                         என்று  அவரிடம் அவரிடம் கேட்டேன் , அவர் "ஹெட் போனை" கழட்டி,தலையை சொரறிஞ்சு போட்டு,

                         " ஆபிரிகாவில இருக்குது , அதுக்கு முதல் உமக்கு இப்ப என்ன வேணும்?" 

                                                எண்டு கோபமாகாக் கேட்டார் , நான் கோவிக்கவில்லை , நானே பிட்காலதில ஒரு புகழ் பெற்ற கிடாரிச்ச்டா வருவேன் எண்டு எனக்கே அப்போது தெரியாது , பிறகு அவர்க்கு எப்படி என்னோட அருமை தெரியப்போகுது எண்டு போட்டு ! 

                             " இவர்களின் பாடல்கள் கேசட் வடிவில் உள்ளதா?"  எண்டு கேட்டேன் ?

 அவர் ,அதுக்கு

                            "  இல்லை , LP  வடிவிலதான் உள்ளது"  

                                                 என்றார் , இதுக்குமேல கேட்டால் மூன்சியில அறை விழும் என்பதுபோல என்னை சுவாரசியம் இல்லாமல் பார்க்க , நான் படு சுவாரசியமகா அந்த இரு பெண்களையும் பார்த்துகொண்டு,   இனி அவரிடம் என்னத்தை கேட்கிறது எண்டுபோட்டு, 

                              "இதை கேசட்டில ரெகார்ட் பண்ணி தருவீர்களா ?" என்றேன், அவர்

                                 " பேந்தும்பார் , இந்தப் பெடி முசுப்பாத்திவிடுறதை , ரேகொர்ட் பண்ணதானே ரேகொர்டிங் பார் வசிருக்கிரம்,வேற என்னதுக்கு  தலைமயிர் வெட்டுரதுக்கே இதை வசிருக்கிரம் "

                                         என்றார், அவரை பார்த்து நட்பாக  சிரிச்சுப்போட்டு , அந்த அல்பத்தை கடைசியா கொஞ்சம் முகத்துக்கு கிட்ட வைச்சுப் பார்த்தன்.

                                             இனி பொய் சொல்லி என்ன வரப்போகுது ,எல்லாத்தையும் இழுத்து மூடிக்கொண்டு இருக்கிற யாழ்ப்பாணக் கலாசார சூழலில் இருந்ததால் , கிட்டத்தில பார்க்க அந்த இரு பெண்களும் சொக்க தங்கம் போல இருக்க, அவர்களின்கண்களில் ஒருவித வசியம் இருந்தது, அப்பவே மனதளவில் சபதம் எடுத்தேன், 


                                              வளர்ந்து கலியாணம் கட்டினால் ,இப்படி ஒரு வெள்ளைக் கார பஞ்சகல்யானியதான் கட்டவேண்டும் எண்டு, சொல்லி வைச்ச மாதிரி விதி ஆரைத்தான் விட்டு வைக்குது, நாசாமாப் போன அந்த சபதம் என்னோட வாழ்கையில் நடந்தது,அதுவும் ஸ்வீடனில் நடந்தது!... அந்த கதை பிறகு சொல்லுறன்!


                                         அவர் அப்படி ரேகொட் பண்ணிதந்த அந்த கேசட்டை வீட்டில இருந்த ஒரு லொட்டு லொடக்கு "டேப் ரெகார்டரில் " போட்டுக் அடிக்கடி கேட்பேன், என்னோட அம்மாவே வியந்து பார்த்து ," இங்கபாரடா இவனை, இங்கிலிஸ் பாடத்துக்கு 26 மார்க்ஸ் இக்கு மேல ஒருநாளும் போகாத இவன், இங்கிலீசு பாட்டுக் கேட்கிறதை" எண்டு கிண்டல் அடிச்சா ! 


                                  அவர்கள் பாடிய அந்த ஆங்கிலப் பாடல்களின் கருத்து விளங்கவில்லை,, ஆனால் அவர்கக்ளின் அந்த இசை அந்த  இரு பெண்களைப் போலக் கவர்சியாதான் இருந்தது !அதில இருந்த "DANCING QUEEN" பாடல் , அது தான் ABBA இன் முதல் பாடலாம் , இதை அவர்கள் ஐரோப்பா அளவில் நடக்கும்  EURO SONG பாட்டுப்போடியில் பாட, அது முதலாவதா வர, இதுதான் அவர்களை உலகம் அறியச் செய்தது, 


                              உலகை கலக்கிய ABBAஇன் பாடல்கள் டெக்னிகலா MUSICALLY GENIOUS வகையில் இல்லை,வெறும் POWER CHORDS ஐ வைத்து "மைல்ட் பொப் " மெலடிகள்,அவர்களின் பெரும்பாலனா "Lyrics "பாடல்வரிகளும் " உன்னை நினைத்தன்,காதல் வந்தது,கவிதை எழுதினன்,அதை பாட்டப்படிச்சன்" டைபில வெறும் மேம்போகானவை,ஆனால் அவர்களின் இசை அந்த வரிகளுக்கு உலகளவு உயிர் கொடுத்தது உண்மை!


                                  ABBA வின், நான் ஜொள்ளுவிட்ட அந்த  இரு பெண்களும்,  இரு ஆண்களும் ," Take A Chance On Me " எண்டு மனம்  விரும்பி , அவர்களுக்குள்ளையே " Gimme! Gimme! Gimme! "  என்று  பாடி,  "DANCING QUEEN " என்று  ஆடி ,"  Honey Honey"  என்று  கட்டிப் பிடிசுக்  காதலர்கள் போல வாழ்ந்து , " I Do, I Do, I Do, I Do, I Do " எண்டு அடுத்தடுத்துப் பிள்ளைகள் பெற்று , கொஞ்சம் அலுத்துப் போக " Knowing Me Knowing You  " என்று சொலிப்  பின்னர் பிரிந்தார்கள், 


                                                      பிரிந்து அந்த காதலையும், காதலின் பிரிவையும் " " The Winner Takes It All  " என்று உருக்கமாக , ஆளை ஆள் மாறி மாறிப் பளியப்போட்டு ,ஆற்றாமையில்   " The Day Before You Came  " எண்டு  பாடலாக பாடினார்கள்! அப்படி வேற எந்த ஒரு இசைக்குழுவும் செய்யவில்லை!  

                                      அவர்களின் பாடல்களே அவர்களின் வாழ்க்கை,,,சில பாடல்கள் கேட்கும்போது மனஅழுத்தம் எங்களுக்கே வரும் , அந்த ஜோடிகளில்   பெனிஅன்டர்சன்..அவர் காதலி பிரிடாவை ஏமாற்றினார்,,,பிஜோர்ன் ,அவர் காதலி ,அக்னிதாவை ஏமாற்றினார்.. தனிபட்ட மன உடைவு இந்த இசைக்குழுவை உடைத்துவிட்டது ,,என்னதான் அந்த ரெண்டு ஆண்களான பென்னி அண்டர்சனும், பியோர்ன் உள்ளுவாலும் பின்னாட்களில் தனி அல்பங்களில் இசை அமைத்தாலும், ABBA  வின் இளமை உயிர் அதில இருக்கவில்லை இல்லை .

                       மிகவும் அடக்கமான , பப்ளிசிட்டி விரும்பாத " I Have A Dream " எண்டு தன்கள் இசை வாழ்வை அடக்கமாகத் தொடங்கிய  அவர்கள் ,அவர்களின் இசைவாழ்வு முடிந்தபின், "thanks you for the music" எண்டு பாடிப்போட்டு, பொது மேடைகளில தோன்றுவதை பெரும்பாலும் தவித்தார்கள் ! இன்றைவரை ஸ்வீடன் எண்ட நாட்டை உலகஅளவில் பெரபலம்  ஆக்கிய  பெருமை எனக்கும் ...கொஞ்சம் ABBA என்ற  இசை குழுவுக்கு இருக்கிறது!

.

" எலிங் " ஒரு நட்பின் கதை.

" எலிங் " என்ற ஒரு தனி மனிதனின் பெயரில் நோர்வேயிய மொழியில், 2001 இல் , நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் புறநகர் பகுதியான மஜாச்ற்றுவா என்ற டவுனில் வாழும் நட்பு தேடும் இரண்டு தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை ஒரு காமடி போல எடுத்த படம் ,இன்றுவரை நோர்வே தயாரித்த ஒரு அருமையான படம் என்று சொல்லலாம். 

                                           பெண்களே இல்லாத அந்த படத்தின் இரு கதாநாயகர்கள் எவளவு சாதாரண மத்திய வயது மனிதர்களோ அந்த அவளவு சிம்பில் அதன் கதை,,ஆனால் அதைக் கனம் ஆக்குவது அதன் திரைக்கதை. மனிதர்களுடன் அதிகம் பழகாத,வாழ்கையின் வரிகளுக்கு நடுவில் தடுமாறும் மனிதர்களுக்கு  நகைசுவைஉணர்வு அதிகம், அவர்கள் வாழ்கை சூழ்நிலை பலசமயம்,அந்த உணர்வை வெளிப்படுத் சந்தர்பம் கொடுக்காவிடினும்! இது போல  "குருடன் பெண்டிலுக்கு அடித்த மாதிரி " கிடைக்கும் அரிய சந்தர்பங்களில் சும்மா பூந்து விளையாடுகின்றார்கள் அந்த இரண்டு மனிதரும்.!

                                               பழக்கம் என்பது ஒரு மோசமான  மிகப்பெரிய பலவீனம், சிலரிடமிருக்கும் சில பழக்கங்கள்தான் இயல்பாக எல்லாரும் போல வாழ விடாமல் தடுத்து வைத்திருக்கிறது என்ற அடிப்படையில் நாவல் வடிவில் வந்து அதிகம் யாரும் வாசிக்காத ஒரு கதையைக் கையில எடுத்து தயாரிக்கப்பட்ட, பழக்கம் என்பது  ஏமாற்றிக் கொள்ளும் ஒரு தந்திரம், பலவீனங்களை நியாயப்படுத்தும் ஒரு மோசடிவேலை, இவை எல்லாம் நன்றாகவே தெரிந்தும்,  மாற்றிக் கொள்வது கடினம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டது  எலிங் படம்

                                  , சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவில் அந்த ஆண்டே ஒஸ்கார் விருதுக்குப் நோமிநெட் செய்யப்பட்டு, இந்தா அந்தா எண்டு பரபரப்பு கிளப்பினாலும் ,அதுக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை, என் அளவில் நான் நினைக்கும் காரணம் அந்தப் படத்தை ,நோர்வே மக்கள் எப்படி ஜோசிப்பார்கள், அவர்களின் வாழ்வியல் அடையாளம் என்ன,என்று   நோர்வேயிட்கு வெளியே வசிக்கும் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாதது  போல இருப்பது ஒரு காரணம், மற்றது நோர்வே மொழி விளங்கினால் தான் முழுமையாக அதற்குள் இறங்கி ரசிக்கலாம் போலவும் இருக்கு.

                                        கதை இதுதான், எலிங் அஸ்மா நோயால அவதிப்படும் ஒரு நாற்பது சொச்சம் வயசுள்ள ஒரு அப்பாவி,கொஞ்சம் எல்லாத்துக்கும் அதிகம் உணர்ச்சி ஆகும் நெர்வஸ் டைப் ,மிகவும் சட்டத்துக்கு பயந்த,வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடின வள்ளளார் ராமலிங்க சுவாமிகளின் இருபதாம் நூ ற்றாண்டு மறு பிரதி போன்ற மனிதர். நனைந்த கோழிக்குஞ்சைப் போல வெளிறிப்போன முகம், மழுப்ப சேவ் எடுத்த கன்னம், உடலுக்குப் பொருத்தமில்லாத ஜீன்ஸ் பேண்ட் , கலர் வெளிறிப்போன ஒரு விண்டர் ஜாகெட் என்று எளிமையா வாழும் எலிங் அவரோட அம்மாவோடதான் அவர் தனியா அந்த வயதுவரை  வாழ்ந்தார். 

                                   அம்மா இறந்து போக, அவரோட வாழ்க்கை சமூக உதவி, மனநிலை பாதிக்கப்படவர்களுக்கு  உள்ள நிலையில் வர,அவருக்கு ஒஸ்லோ கொமுன் என்ற முனிசுபால்டி ஒரு சிறிய அபார்ட்மென்ட், எலின் இன் இயல்பிலும் ,தோற்றத்திலும் எந்த விதத்திலும் ஒத்துவராத , பியோர்னே என்ற இன்னுமொரு தனி மனிதருடன் சேர்ந்து பகிர்ந்து வாழ கொடுகிறார்கள். அதில தான் இருளுக்குள் தீக்குச்சி உரசப்படுவது போலக் கதை சூடு பிடிக்குது...

                                        பியோர்னே என்ற மற்ற மனிதர்  ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வாற வில்லன் போல இருப்பார், நடந்தால் நிலம் அதிரும் உயரமான மனிதர்,பலமான கைகள், அகலமான முகம் அதில் கோரைப் புல் தாடி, கண்ணில மூர்க்கம் ,மூக்கு நுனியில் இயலாமையின் கோபம். அதிகம் படிக்காத எளிமையான சிந்தனை உள்ள, பார்க்கிற பெண்கள் எல்லாரோடும் படுக்க நினைக்கும், எதற்கு எடுத்தாலும் ஜோசிக்காமல் " வந்தா வா போனாப் போ கம்மாக்கோ சிக்காக்கோ " எண்டு வாழ்கையை வன்முறையில் எதிர் கொள்ளும் மனிதர். 

                                                       முரட்டு பியோர்னே ஒரு மெக்கானிக் இருந்தாலும் அவருக்குள்ள ஒரு இளகிய நட்பு தேடும் இதயம் இருக்கு,அது படத்தின் முடிவில் வெளிவரும்., அதுக்கு எதிரா எலிங் நோர்வேயில்  பல வருடம் பிரதமரா இருந்த குறு கார்லம் புடுட்லான் என்ற அம்மணியின் கொள்கைகளிலும் ,அவாவின்  கட்சியான தொழித் கட்சியில் ஊறியவர், அரசறிவியல் என்ற அரசியல் படித்த அறிவாளி . இந்த முரண்பாடான இருவரின் அன்றாட வாழ்கை எப்படி குழப்பம் உருவாக்குது எண்டு அந்தப் படம் காமடியா சொன்னாலும் நிறைய அன்புக்கு ஏங்கும் தனி மனித இயல்புகள் அதில மறைமுகமா நாடித்துடிப்பு போல இருக்கு.

                                                            ஜோசிதுப்பார்த்தால் ,நாங்கள் எல்லாருமே எப்பவுமே ஒரு நல்ல இமேஜ் ஐ பொதுவெளியில் உருவாக்கி வைத்திருக்கவே விரும்புகின்றோம்! உண்மையான எங்களின் ,அன்பின் ஏக்கம் போன்ற நல்ல விசயங்களும்  , மிருக்க இயல்பு, அட்டகாசங்கள், போன்ற நெகடிவ் இயல்புகளும்   இலகுவில் வெளியே தெரியாது ! கோபம், பொறாமை, பயம் ,வரும் நேரங்களில் மட்டும்தான் பல ஆழ்மனது மனது  இயல்புகள் பழையபடி பதுங்கி வெழிவருகின்றது  என்கிறார்கள் சைக்காலிச்டுகள் ! 

                                                  பியோர்னேயின் குளறுபடி அடக்காசம் பிரேமுக்கு பிரேம் படத்தில வரும் அதை அந்த அப்பாவி எலிங் எப்படி சமாளிக்குறார்  எண்டு சொல்லும் படத்தின் முடிவில் நிறைய எதிர்பாராத திருபங்கள் நடக்குது,ஒரு கட்டத்தில் எலிங் ,அவர் சக ரூம் மேட் பியோர்னே போலவே வாழ்க்கையைச் சுவாரசியமா எதிர்கொள்ள பழகி விடுகின்றார்.அந்த இரண்டு மனிதர்களின் பரி சுத்தமான நட்பின் விளிம்பில் வடியும் அன்பு அந்தப் படத்தை ஒரு கவிதை ஆக்குது....

                                       எலிங் படத்தை நோர்வே மொழியில் பார்த்தால் தான் அதன் முழு வீச்சு விளங்கும்,அதை ஆங்கில சப் டைட்டில் இல் பார்த்தால் ஆதரமான சில விசியங்கள் அடிபட்டு, என்னவோ ஒரு கலைப் படம் போல இருக்கும் ,அதுதான் அந்தப் படத்தின் பலவீனம். எப்படியோ , தனிமை வாழ்க்கை நெருக்கடி மனிதர்களை எல்லா விதமான  பொறுமைக்கும் , அனுசரிப்புக்கும் ,ஏமாற்றுதனத்திற்கும்,  துணிச்சலுக்கும் கொண்டு போய்விடுகிறது என்பதற்குச் சாட்சியாக, காமடியக் களமாகக்  கொண்டு இப்படியும் ஒரு படத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு.
.


வீட்டுக்கார அம்மா வேலைக்காரனுடன் ஓட்டம் !

இப்பெல்லாம் தாறுமாறா எழுதுவது மட்டுமில்லை ,,தாறுமாறா அதுகளுக்கு தலைப்பு வைத்து "தென்னாலி ராமன் தென்ன மரத்தில புல்லுப் புடுங்கின " மாதிர்  வில்லங்கமான விளக்கம்  கொடுத்து பல படைப்புகள் வருகுது ! பலரோட நாவல், கவிதைத் தொகுதி ,சிறுகதைத்  தொகுதி தலைப்புக்கள் சுவாரிசியமா இருக்கும், உள்ளுக்க அந்தளவு தரமாக சரக்கு  இருக்கும் என்பதுக்கு உத்தரவாதம் இருப்பதில்லை.!

                                                                        பலர் தங்கள் படைப்புகளுக்கு என்னைப் போல சாதாரண அரை விசுகோதுகளுக்கு விளங்காத மாதிர் எல்லாம் தலைப்பு வைச்சு பீதியக் கிளப்புகின்றார்கள் , இது விளங்கவில்லை என்றால் , இதெல்லாம் உங்களக்கு விளங்காது ,, இதை எல்லாம் விளங்க " இன்டலெக்சுவல் நோலேச் " வேணும் எண்டு சொல்லுராகள் ,இது இப்ப இல்லை தருமு சிவராமு என்ற பிரமிளுடன் வெங்கட் சாமிநாதன் என்ற குடுமிப்பிடி சண்டை நடந்த அந்தக் காலத்தில இருந்தே நடக்குது !

                                            உலக மகா மேதைகள் அப்படிதான் தலைப்பு வைப்பார்கள், அதிகம் பேருக்கு விளங்காது , அதுக்கு காரணம் அவர்கள் சொல்லும் விசியம் போலவே அதன் தலைப்பும் இருக்கவேண்டும் எண்டு இருக்கும் போல! பிராங் காப்ப்கா  மமெம்பிச்திசிசிஸ்  எண்டு வைச்சார் அவர் உலகப்புகழ் நாவலுக்கு, பிளேட்டோ அவரோட புத்தகத்துக்கு " ரிப்பப்பிளிக் " எண்டு வைக்க, எனக்கு ரெம்ப்பப் பிடித்த பிரேடிச் நெட்சே அவரோட தத்துவ பைபிளுக்கு "யாரதுச்டிதிரா " என்ற அழிந்துபோன சமயத்தின் பெயரை வைத்தார்!

                                                அதை விடுவம் ..இருந்தாலும் ,தமிழ் நாட்டு எழுத்தாளரை போலவே சுவாரசியமா , ஈழதுது எழுத்தாளர் வைத்த பெயர்களைப் பாருங்கள்."ஒரு விலைமகளைக் காதலித்தேன் " நாவல் , இந்துமகேஷ்,புங்குடுதீவு !"ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் " நாவல், நெல்லைக் க பேரன் ,நெல்லியடி !"சர்மிளாவின் இதய ராகம் " , நாவல் ,ஜூனைதா யுனைகின் ,,மட்டக்களப்பு !" கங்கைக்கரை ஓரம் " ,,,செங்கை ஆழியன் , "நீரில் எழுதப் பட்டிருக்கும் மீனை பூனை வாசிகிறது " கவிதை தொகுப்பு ,அகம்மது பைசல் ,பொதுவில்...இப்படி வைச்சு இருக்கிறார்கள் .

                                                   நோர்வேயில் இருந்து  ஒரு நியுஸ் பேப்பர் வருகுது , அதன் தலைமை பதிப்பகத்துக்கு வெளியே  வெண்கலசிலை  அருகில் இருந்து நானே இந்தப் படம் எடுத்தேன் , யாழ்ப்பாணத்தில காராசில வேலைசெய்யிறவர் போல இருக்குற இவர் ஒவ்வொரு நாளும் இந்தப் பத்திரகை வேண்டி  பதிப்பகத்துக்கு வெளியே இருந்து ஒரு வரி விடாமல் வாசிப்பாராம் , அதல அவருக்கு சிலை வைத்துள்ளார்கள் !பின்னாலே உள்ள  இந்தக் கட்டிடத்தில தான் இன்றும் உலக வீதி என்ற இந்த VG  பத்திரிகையின் பதிப்பு நடக்குது. 

                                                இந்த  VG நியூஸ் பேப்பர் அதன் தலைப்புகளுக்கா அறம்புறமா விற்கும் , கண்ணை திறந்து பார்க்காமே பலர் வேண்டும் அந்த VG நியூஸ் பேப்பர் பற்றிய ஒரு படபதிவுக்கு சென்ற வருடம்  ஒரு ,நண்பர் கேடிருந்தார் ,"உங்களுக்கும் நியூஸ் பேபருக்கும் என்ன சம்பந்தம்" எண்டு! நான் நியூஸ் பேப்பர்,முக்கியமா அந்த VG படிபதில்லை.அது கிசுகிசு கலந்த ஒரு பரபரப்பு பத்திரிகை!முதல் பக்கத்தில கொட்டை எழுதில உப்பு சப்பு இல்லாத விசியத்தை சுவாரசியமா தலையங்கம் போட அது நல்லா விக்குது ! இலங்கையில் மித்திரன் பேபரில முன்னம் எல்லாம் இலக்கியத் தரமா வருமே "வீட்டுக்கார அம்மா வேலைகாரனுடன் ஓட்டம் " போல தலயாங்கம் இருக்கும், வீட்டுகார அம்மா எதுக்கு வேலைகரனனுடன் ஓடி இருப்பா எண்டு எல்லாருக்கும் தெரிந்தாலும்,அதன் பின்னனி விடுப்பு அறிய எல்லாரும் வேண்டுவார்கள்!

                               இப்படி தலைப்பு புத்தகங்களுக்கு வைக்கும் விபரீத முயற்சியில்  எழுசியும் இருக்கிறது , வீழ்ச்சியும் இருக்கிறது ! சுந்தரராமசாமி  " புளியமரத்தின் கதை "எண்டு அவர் எழுதிய மிக சிறந்த நாவலுக்கு பெயர்  வைக்க ,புளியமரத்தில என்ன இருக்கும், பேய் தான் இருக்கும் எண்டு பலர் அதை ஆரம்பத்தில்  படிக்கவில்லை, அவரே பின்னர். "ஜே ஜே சிலகுறிப்புகள் " நாவல் எழுத அதுவும் நாவலா,கட்டுரையா,என்ற பெயர் குழப்பத்தால தமிழில் அதிகம் அறியப்படவில்லை ! அதன் பிரெஞ்ச் மொழிபெயர்ப்பு அதிகம் வித்ததாம் !

                                  இப்ப இந்த வைரஸ் வியாதி பேஸ் புக்குக்கும் தொற்றியுள்ளது. அண்மையில் ஒரு ஆண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் ஸ்போர்ட் ஸ்டீச்சர் அந்த பாடசாலையில் நல்லா ஸ்போர்ட்ஸ் செய்து ஓடக்கூடிய பையனுக்கு அந்தப் பையனோடு சேர்ந்து கிரவுண்டில ஓடி ஓடுறது எப்படி என்று சொல்லிக்கொடுத்தாங்க...அதைப் பார்த்துப்போட்டு பிரபலமான பேஸ் புக் பதிவாளர் கொழுவி குமாரு போட்ட ஸ்டேட்ஸ் . " பத்தாம் வகுப்பு மாணவன் 26 வயது ஆசிரியையுடன் ஓட்டம்...." .என்று போட்டுள்ளான்.  அய்யோ குமாரு , இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா என்று எஸ்கேப் ஆக வேண்டி வந்திட்டுது கடைசியில் 

                                    கைக் காசைக்  கொடுத்து புத்தகம் வேண்டி   நானே இப்படி ஒரு தலயங்கக்  குழப்பத்தில சில வருடம் முன் ஏமாந்தேன்,  "தேவதைகளின் தூமைச் சீலை " என்ற புத்தகத்தை அதன் தலைப்பு கவர்ச்சியாலும், அதை "போஸ்ட் மொடேர்ணிசம்,எச்சிஸ் டென்சியலிசம்" எண்டு ஒருவர் விமர்சனம் எழுதியாதாலும் வேலைமினக்கெட்டு வாசித்தன் ! அதில,தேவதையும் இல்லை, தீட்டுதுணியும் இல்லை, குறைந்தது ஒரு கோவணம் தன்னும் அதில இல்லை!!..

.

கவிஞர் தாககவி தண்ணிதாசன்.....

" சிலரை எப்படி ஏமாற்றுவதென்று சிலருக்கு தெரிந்திருக்கிறது. பாவப்பட்ட  அந்த  சிலருக்குத்தான் தெரிந்திருக்கவில்லை சிலர் எல்லா விதத்திலும் ஏமாற்றுகிறார்கள் ..." என்று கவிஞர்  தாககவி தண்ணிதாசன்  மிகவும் உருக்கமாக ஒரு ஸ்டேட்ஸ் போட்டு இருக்கிறார் அவரோட பழைய சுண்ணாம்பு உதிர்ந்து விழுகிற மண் சுவரில. 

                                   ஜெர்மனியில்  இருந்த நேரம் அவரும் உங்களையும் என்னையும் போல முன்னம் எல்லாம் இங்கே பேஸ் புக் டைம் லைன் வால் இல்தான் பதிவுகள் போடுவார், யாழ்பாணத்தில வசிக்கும் இப்போது , பல காரணங்களால் இந்த முகப் புத்தகத்தில் மேக் அப் போட்டு எல்லாருக்கும் சும்மா பொய்க்கு லைக்கும்,கொமென்ட்டும் போட சுயமரியாதை வளைஞ்சு நெளிய மறுத்ததால்,  இதை விட்டுப்போட்டு போய் அவரோட வீட்டு மண் சுவரில  இப்ப ஸ்டேடஸ் போடுறார்.. 

                                          அவரின் நடப்பு இலக்கிய முயற்சிகள் பற்றி டெலிபோனில தேங்காய் துருவுற மாதிரி துருவித் துருவி விசாரிச்சாலும் வெளிய வராத பல விசியம் அங்கே நடக்குது போல இருக்கு. தலைமறைவாக இருக்கும் அவர் நண்பர் கவிஞ்சர் வைரஸ் வைரவநாதன் எழுதும் கவிதைகளைப் பெற்றுத் தரச்சொல்லி கேட்டால்  அவரே கோவத்தில 

                              " நான் காதில பூ சுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். அவரை எனக்கு முன் பின் தெரியாதே பிறகு எப்படி அவர் அதை உங்களுக்கு  அனுப்பச் சொல்லி என்னிடம்  கூறுவார். வேறு ஏதாவது உருப்படியாய் பேசுங்கப்பா "   என்று திட்டுறார்.

                                ஜெர்மனியில் இருந்து கட்டுநாயக்கா போய் இறங்கின கையோட டொச்லான்ட் கழுகு படம் போட்ட யூரோபியன் யூனியன்  பாஸ்போட்டை கிழிச்சு எறிஞ்சு போட்டு இப்ப யாழ்பாணதில இருந்து கொண்டு,  கச்சான் அலுவா  கிண்டுற நேரம்  அடிப்பிடிக்க விடாமல் கிண்டுற கடைசிக் கிண்டில கவிட்டுக் கொட்டுற மாதிரி  உடன உடன  தாககவி தண்ணிதாசன்  சில நேரம் அளவுக்கு அதிகமாக அரிச்சந்திரன் ரேஞ்சுக்கு  நேர்மையாக நிலைத் தகவல் போடுவதால் பிரசினையும் வருகுது, 

                                        ஒருமுறை  பொஞ்சாதி பிள்ளைகள்  தன்னைத் தனியா விட்டுப் போட்டு நயினாதீவு தேர் , தீர்த்த,பூங்காவானத் திருவிழாவுக்குப்   போனதால் தான் தனியா வீட்டில  இருப்பதை  ஒரு மூன்று வரி ஹைக்கூ  கவிதையில் எழுதிப்போட, அதை வாசிச்ச கள்ளர்,  இரவு அவரோட வீடுக்குள்ள ஓட்டைப் பிரிச்சு இறங்கி, அவரோட வாயுக்க துணியை அடைஞ்சு போட்டு , அவரைக் கட்டிலோடு கட்டி வைச்சுப் போட்டு ,கிடந்த பெறுமதியான எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போயிட்டாங்கள் , அந்த நிகழ்வைத்தான் அவர் ஆங்கிலத்தில்  " And I won't cry out any more as  Time stands still as I gaze with lost " என்ற கவிதையில் எழுதி இருக்கிறார். 

                                             எனக்கு மிகவும் பிடித்த சமகால இவோகேட்டிவ் ரக பொயட் இந்த கவிஞர்  தாககவி தண்ணிதாசன். அவர் எழுதிய சில கவிதைகள் உலக அளவில் இபோல வைரசை விட பீதியக்கிளப்பி இருக்கு , பல இலக்கிய மேடைகளில் அவர் கவிதைகள் வாசிக்கப்பட்ட போது பலருக்கு மைக்கிறேன் என்ற ஒற்றைத்தலைவலி நிரந்தரமா வரக் காரணமா இருந்து இருக்கு, டொச் மொழியில் மொழிபெயர்த்த அவர் யாழ்ப்பானத் தமிழில் எழுதிய,

                 " பிள்ளைப் பெறுவுக்கு சரக்கு தூள் அரைக்க வரவா  "  என்ற கவிதை வாசித்த பல ஜெர்மன்காரங்களுக்கு ஓட்டோBபான்  போல இருந்திருக்கு  . அவரோட " நான் இரவில  பெரிசா  சாப்பிடுறதில்லை " என்ற சில்வியா பிளாத்தின் கொண்பெஸ்சனல் ஸ்டைலில் எழுதிய  கவிதை உங்களுக்கு சாம்பிளுக்கு நாளைக்கு இங்கே போடுறேன். இரவில  அவர் பெரிசா  என்ன சாப்பிடுறதில்லை என்பதை சர் ரியலிஸ்டிக் ஸ்டைலில் சூட்சுமமா அதில எழுதி இருக்கிறார் என்கிறார்கள்.

                                  ஆனாலும்  பல சமயம் தாக சாந்தி செய்ய வழி இல்லாத நேரம், சில  பேஸ் புக் பதிவாளர்களால் தன்னால் ஒரு  மண்ணாங்கட்டியும் எழுத முடியவில்லை எண்டு புலம்புகின்றார் இந்தப்  கவிஞர் தாககவி  தண்ணிதாசன்.  இந்தப் படத்தில நவீன புதுக்கவிதை படிம உருவக வடிவாக வைன் கிளாசை , ஈசான மூலை எண்டு வாஸ்து சாஸ்திரம் சொல்லும் திசையை பார்த்தவாறு,  பின் நவீனத்துவ கோட்பாட்டில்  ஆல்பர்ட் காம்யு ஸ்டைலில்,

                     'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ " என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டு  வம்ச விருத்தியாவது ஒழுங்கா நடக்கட்டும் எண்டு சரிச்சு தாக சாந்தி செய்பவர் தான்  பிரபல   கவிஞர்  தாககவி தண்ணிதாசன். உங்களுக்கு அவரைக் காட்ட வேண்டும் எண்டதுக்கு தான் இந்த விளாதிமிர் உலிச் உலியானவ் போல ஆட்டுக்கிடாய் தாடியோடு உள்ள அவர் தாக சாந்தி செய்யும் படம் போட்டு இருக்கிறேன் 

                              காக்கைப்பாடினியார்  சங்க காலத்திலேயே பொறுமையின்  எல்லையாக குமரியைக் குறிப்பிட்டுள்ள தமிழர்களுக்கு சொந்தமா மண்டையை பாவிச்சு ஜோசிக்கப் பஞ்சி என்றும், யாரவது ஒருவர் புதுவிதமா ஏதாவது தொடக்கினால் அதை " செட்டிநாட்டு பொம்பிளைகள்  மிளகாய்ப் பொடி அரைக்க மிட்டாசு ஜமிந்தார் அரவைக் கல்லுக்கு ஆராத்தி காட்டின மாதிரி " கொப்பி அடிச்சு ,சுடுற தோசைக் கல்லுக்கே நோகாமல் தோசை சுட்டு, உளுந்து வடை போல உல்டா பண்ணி,  உலக அளவில் பிரபலம் ஆகுறாங்க என்று  வெறுத்துப்  போய் இருக்கிறார்   
                                     அதனால   " வைக்கத் தெரியாதவன் " .... " ஐக் கொண்டு போய் மாச வட்டிக்கு " ..... "  சேட்டு  வீட்டில வைச்சாணாம் " என்ற மாதிரி பலர்  நொந்து போகிறார்கள்  என்றும்  அவரோட "இளிச்சவாயன்  கோப்பிரேசன் திணைவாகை " என்ற செய்யுளில்  பாயிரம் பாடி இருக்கிறார்.  

                                      இலங்கையில் அந்த நேரம்அவர் எழுதின தொடக்க நேரமே   திறணாய்வு வித்தகர்கள்  எல்லாம் ஒரு குழுவா மாறி  மாறி முதுகு சொறிஞ்சு,,தாங்க  எழுதுறதுதான் கவிதை என்று வல்லாதிக்கம் செய்து பலரை எழுதவே விடவில்லை . அதால பாதிக்கப்பட்டவர்  கவிஞர் தாககவி தண்ணிதாசன். அதை ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அவர்  எழுதிய " பேர்லின் சுவரில் மூத்திரம் பெய்தவன்  " என்ற நீண்ட கவிதையில் பதிவு செய்திருக்கிறார் 

                                             ஆனாலும்  அவர் கவிதைகளில் , சுதேசியத் தமிழ் மொழி வாசம்,  கவிதைமொழி உவமை, தனித்துவ  உருவகம்,  சொந்தமா சிந்தித்து எழுதும் இன்டலிஜென்ட் அதிகம் இல்லை என்றும்  ,அடுத்தவன் சரக்கில உல்டா பண்ணி  , சில மேற்கு ஐரோப்பிய மொழிபெயர்ப்புக் கவிதைகளை ஜலசா  பண்ணி எழுதியுள்ளதை அவரே ஒத்துக்கொண்டு , " எனக்கு யாழ்பாணத்தில ஆட்கள் இல்லாத  காணிக்க ,வேலிக்  கதியாலை தள்ளிப் போட்ட   பழக்க தோஷம் விடுகுதில்லை " என்று ஒத்துக்கொண்டுள்ளார்.

                                          பாவம்பா இவளவு நேர்மையா இருக்கும் அந்த  கவிஞர்பா அந்தாள்  தண்ணிதாசன் , ஏன்பா  " கடவுளின் மொழிதான் குழந்தைகளின் மொழி " எண்டு எப்பவும் அப்பாவியா சொல்லித்திரியும் அந்தாளிண்டயுக்க போய்க் கையைப் போட்டுத்  துலாவி எடுக்குரிங்களே ,  எடுத்து  இன்னும் எவளவு காலத்துக்குத்தான் கவுரவ எழுத்தாளர்கள் எண்ட பெயரில இப்படி அடிமாட்டு இலக்கியம் அடுத்தவங்களின் முதுகில ஏறி இருந்து ஓட்டுவீங்களோ தெரியலை.  இதைத்  தான் "  இல்லாத பிள்ளைக்கு பெயர் வைக்க அலைவது நல்லாகவே இல்லை " எண்டுறதாக்கும்..   

.......................... என்ன சீவியமடா இது !.
.
 .
                     


Thursday 28 May 2015

கல்யாணி என்றதுக்கு என்ன அர்த்தம்..

சில வாரங்களின் முன்னர் ஒஸ்லோவுக்கு வெளியே பல மைல்கள் தள்ளி உள்ள ஒரு நகரத்துக்கு போயிருந்தேன் , அடிக்கடி வெய்யிலும், மழை முகிலும் மாறி மாறி அந்த  நகரத்தை  வெளிச்சமாக்கியும் , கொஞ்சம் மம்மல் போல இருட்டாக்கியும் பிள்ளையார் பேணி எறிஞ்சு விளையாடிக்கொண்டு இருந்த  அந்த மத்தியானம் , போன அலுவல்களை முடித்துக்கொண்டு ஒஸ்லோ நகரத்தை நோக்கி  ரெயிலில் ஏறின நேரம் மழை கொஞ்சம் பன்னீர் தெளிச்சு தலையை நனைப்பது போல விசிறத்  தொடங்கியது.

                                            நான் ஏற்றின பெட்டி முழுவதும் நிறைய இளம் பள்ளி மாணவிகள் , மாணவர்கள் கும்பலாக எல்லா இருக்கைகளிலும் நெருக்கி அடிச்சுக்கொண்டு இருந்தார்கள். இருக்கைகளில் இருக்க இடம் அதிகம் இருக்கவில்லை . கிட்டதட்ட ஒன்றரை  மணித்தியாலம் அப்படி நின்று கொண்டே போகவேண்டி வரலாம் போலவும் இருந்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மற்றப்  பெட்டிக்கு மாறுவமா என்று நினைச்சுக்கொண்டு அதுக்கு வசதியாக கதவுக்கு கிட்ட ட்ரைன் சுவரில தென்னை மரத்தில பல்லி போல ஒட்டிக்கொண்டு முதுகை முண்டு கொடுத்துக்கொண்டு நின்றேன்.

                                                 பாடசாலை இளம்பிள்ளைகள் கும்பலாக இருந்தால் அவர்களுக்கு இடையில் காலியான இருக்கை இருந்தாலும் போய் இருக்க முடிவதில்லை. அவர்கள் எப்பவும் கூத்தும் கும்மாளமுமா கொஞ்சம் புரிந்துகொள்ள முடியாத நவீன கழுவி ஊத்தும் நோர்க்ஸ் மொழியில் கச கச என்று சின்னைக்கடை மீன்சந்தை  போல கதைப்பார்கள். முக்கியமா என்னைப்போன்ற வந்தேறுகுடிகளை சில நேரம் அவர்கள் வரவேற்பதில்லை.

                             ஆனால்  எனக்கு நேரே வலது பக்கம், ஜன்னல் விளிம்பு இருக்கையில் இருந்த ஒரு பதினாறு அல்லது பதினேழு வயது போல தோற்றத்தில் இளமைக்கும்  இன்சூரன்ஸ் பொலிசி எடுத்து வைச்சு இருப்பவள் போல இருந்த இளம் மாணவி , அவளுக்கு முன்னால் இருந்த யாருமில்லாத இருக்கையை சைகையால் காட்டி

                 " நீ வந்து இதில இருக்கப்போறியா, எனக்கு பிரச்னை இல்லை "

என்பது போல கேள்விக்குறியில் கண்ணை தொங்க விட்டுக் கொண்டு என்னைப் பார்த்தாள்.

                                              அவளைப் பார்க்க முழுவதும் நோர்வேயிய பிள்ளைப்போல இருக்கவில்லை. கலப்பு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைபோல இருந்தாள். அவளின் முகம் வெள்ளையடிச்ச சுண்ணாம்பு சுவர் போல வெளிறி இருந்தது. மூக்கு ஹோடலாந்த் உயர் சாதி நோர்வே மக்களின் வளைவில் இருக்க, கண்கள் நீலமா அக்குவா மரைன் கல்லுப்போல மின்ன, அவள் இமை மயிர் கொறக்கா புளி நிறத்தில அவிஞ்ச கறுப்பில இருக்க, கத்தை கத்தையாக பின்னோக்கி விழுந்த தலை மயிர்  பொன் நிறதுக்கும், பிரவுன் நிறத்துக்கும் நடுவால உள்ள ஒரு பனங்காப்பினாட்டு கலரில் இருக்க,,நிச்சயமா இவள் கலப்பின பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளையாக இருக்க வேண்டும் , சில நேரம் என்னோட கதைக்க விரும்புகிறாள் போல என்று நினைசேன்.

                                      அவள் காட்டின சீட் இக்கே போய் அவளுக்கு முன்னால இருந்தேன்.முன்னுக்கு மூன்று எதிரே மூன்று என்று  ஆறு பேர் உட்காரும் இருக்கைகளில் இருந்த  அவள் வகுப்பு மாணவர்கள், அமைதியாகி  என்னையும் அவளையும் கொஞ்சம் பார்த்தார்கள். அவள் நோர்வே மொழியில் சொல்லும் " வார்சி குட் " என்ற வந்து உட்காரு என்ற வார்த்தை சொன்ன போது அந்த  வார்த்தைகள் பருத்தித்துறை  பாணிப்பிணாட்டை முல்லைத்தீவு முதிரைத் தேனில தோச்சு எடுத்த மாதிரி அன்பாக இருந்தது

                          நான் இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் அவளைப் பார்த்தேன் அவள் முன்னுக்கு தள்ளிக் கொண்டு இருந்த மேல் வரிசைப் பற்களை உள்ளுக்குத் தள்ளும் கிளிப் போட்டிருந்தாள் , அந்தக் கிளிப் கம்பியில் சில வெள்ளை இரத்தினக் கற்கள் வைச்சு இருந்தது , அவளின் சொண்டு அலிடாலியா இத்தாலியன் ரெட் வைன் கலரில் தொஷ்காணா சீதோஷ்ணப்  பசுமையாக இருக்க, காதில  பெரிய ரெண்டு ஆப்ரோ அமரிகன் வட்ட வளயம் போட்டு இருந்தாள். அவள் நடு நெற்றியில் அட்ச பட்சத் தேய்பிறை சந்திரன் போல ஒரு வளைவு சமன் இல்லாமல் சரிந்து இருக்க . மொத்தத்தில் அவள் முகமே திருவாதிரை நட்சத்திரம் போல அம்சமா இருந்தது.
                                     
                      நான் நினைச்ச மாதிரி கையைப் பொத்தி வாயில வைச்சு ஊதிப்போட்டு, அவளே பேச்சை தொடக்கினாள்.

                                  "  டமில்  டைகர் , உன்னைப்பார்க்க ஸ்ரீலங்கா நாட்டவர் போல இருக்கு, நீ அந்த நாட்டில இருந்தா இங்கே வந்து இருக்கிறாய்,  டமில் டைகர்  "

                                             என்று சிரித்துக்கொண்டே நோர்வே மொழியில் கேட்டாள், அவள் நோர்க்ஸ் மொழியில் வடமேற்கு நோர்வே உச்சரிப்பு நனைந்து இருந்தது,

                        "  ஆமாம் ,  நான் அந்த நாட்டவனே தான்,  தமிழ் தான், ஆனால் டைகர் இல்லை, எனக்கு அவளவு வீரம் எல்லாம் இல்லை, வெள்ளைப் பூனைக்கே பயம்  அதுவும் பகலிலேயே "

                                    என்றேன், என்னோட சுவிடிஷ் மொழி சரிக்கு சரி கலந்த நோர்க்ஸ் அவளுக்கு விளங்குமா என்று சந்தேகமா பார்த்தேன் .அவள் கல கல என்று ட்ரைன் சடுன் பிரேக் போடும் போது கை பிடிக்கவென்று மேலே தொங்கும்  சங்கிலிகள் குலுங்கின மாதிரி சிரித்தாள்.

                                      "  நீ எவளவு காலம் இங்கே வசிக்கிறாய், நல்லா நோர்க்ஸ் நோர்வே நாட்டு உச்சரிப்பு சத்தத்தில் பேசுகின்றாயே, பொதுவாக உன் வயது வெளிநாட்டவர் இப்படிப் பேச மாட்டார்களே  "

                என்று கேட்டாள், நான் எவளவு வருடம் வாழுறேன் என்று சொன்னேன்.

                       " ஒ அப்படியா ,அவளவு வருடமா.  என்னோட வயது அது. ஹ்ம்ம், ஹ்ம்ம் , "

                          என்று சந்தேகமாகப் பார்த்தாள்..அவளே நல்ல அன்பாக கதைப்பதால் இயல்பாக

                             " எப்படிக் கண்டு பிடிச்சாய் என்னோட நோர்க்ஸ் நல்லா இருக்கு என்று, உன்னைப்பார்க்க முழுவதும் நோர்வே நாட்டு பெண் போல இல்லையே, நான் நினைப்பது சரியா  " என்று கேட்டேன்.

                                    " கொஞ்சம் பொறு சொல்லுறேன், கன விசியம் கதைக்க வேண்டும் , முதலில் எனக்கு என்ன பெயர் என்று சொல்லுறேன், அதில இருந்து தொடங்கலாம் , இந்த ட்ரைன் இல் பிளின்தரன் யூனிவெர்சிட்டி  வரைக்கும் நாங்கள் போகிறோம் நீ அங்கு வரைக்கும் எங்களோடு  வருவாயா "

                                   என்று அவசரமாக ஆனால் சந்தேகமாக் கேட்டாள்    

                "   பயப்பிடாதை  நான் அதுக்கு அங்காலையும் வருவேன்,, நான் இந்த ட்ரைன் போகும்  கடைசி ஸ்டேசன் வரைக்கும் நான் பிரயாணம் செய்ய வேண்டும் " என்றேன்

                                       அவள் பள்ளி நண்பர்கள்,என்னையும் அவளையும் கதைக்க விட்டுப்போட்டு தங்கள் கதையில் பரபரப்பாக இருக்க,ட்ரைன் பல ஸ்டேசன்களில் நின்றதையும் , அதில் ஆட்கள் ஏறியதையும் ,நானும் அவளும் கவனிக்கவே இல்லை.என்னோட  பெயரைக் கேட்டாள், சொன்னேன், அதை பலமுறை திருப்பி திருப்பி சொல்லி தனக்குள்ளே சிரித்துக்கொண்டு ,என்னோட பெயரை அவள் நண்பிக்கு சொன்னாள், அவள் நான் இப்ப இதெல்லாம் கேட்டேனா என்பது போல அவளைப் பார்த்தாள்.

                                      அவள் சந்தோசமா என்னைப் பார்த்து சிரித்தாள், நெற்றி புருவத்தை உயர்த்தி , கன்னத்தில் பல்லாங்குழி எல்லாப் பக்கமும் விழ  ,

                                      "   எனக்குப் பெயர் இசபெல்லா கல்யாணி, என்னோட அம்மா நோர்க்ஸ் ,,அப்பா ,,ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  ஹ்ம்ம் , மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  ஹ்ம்ம் ,,என்னோட அப்பா சிறிலங்காவில் இருந்து நோர்வேயிட்கு வந்த தமிழர் , மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  ஹ்ம்ம்  " என்றாள்.

                     இப்ப நான் "  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  " ஹ்ம்ம்  , என்றதுக்கு என்ன அர்த்தம் என்று சொன்னால் தான் இதுக்கு மேலே உங்களுக்கு கதை விளங்கும், அந்த சொற்தொடருக்கு அர்த்தம்  " என்னோட அம்மா சொன்னா, ஆனால் எனக்கு தெரியாது "  ,,,இப்படிதான் நோர்வே மொழியில் உறுதிப்படுத்த முடியாத சந்தேகமான விசியங்களை சொல்லுவார்கள்

                             ஆனாலும் இந்த உரையாடலின் தொடக்கத்திலேயே, கொஞ்சம் சிவசம்புப்  பரியாரி செம்பும் தண்ணியில் வெத்திலை போட்டு  பார்த்த போதே வில்லங்கம் வரப்போறதை சொன்ன மாதிரி  நாடி பிடித்துப் பார்க்க   " ஆட்காட்டி ஆட்காட்டி நான் பத்து முட்டை இட்டேன்  "  கதை போல கொஞ்சம் அவலமான சம்பவங்கள் எதிர் பாராத கோணத்தில் இருந்து வரலாம் போல இருந்தது .

                                          ஆனாலும் எனக்கு சந்தோசமா இருந்தது நான் நினைச்சது சரிதான் என்று அறிந்த போது, அவளை நேராகப் பார்த்தேன் சத்தியஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி போல அவள் முகத்தில் ஒரு சோகம் இருக்க, தில்லானா மோகனாம்பாள் போல அதை மறைப்பதுக்கு அவள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோற்றுக்கொண்டு இருப்பதும் தெரிந்தது , ஆனாலும் நான்  உற்சாகமா

                       "   அட்றாசக்கை எண்டாணாம்,  இசபெல்லா  நானும் அப்படிதான் நினைச்சேன், உண்மையில் நீ மிகவும் அழகு, உனக்கு கல்யாணி என்று பெயர் வைச்சது மிகவும் பொருத்தம் " என்று சொன்னேன்,

                                   அவள் உணர்ச்சியே இல்லாமல் , ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள், விசுக்கு விசுக்கு என்ற மரங்களும்,காடுகளும்,சின்ன வயல்களும், குடியிருப்புகளும் பிரேம் பிரேம் ஆக பறந்தது. முதல் முறையாக அவள் சிரிக்காமல் ,கொஞ்சம் காற்றில்  கரிசனத்தை வரவழைத்து நல்லா இழுத்து பெருமூச்சு விட்டு  

                         " கல்யாணி என்றதுக்கு என்ன அர்த்தம் "  
என்று கவலையாகக் கேட்டாள்.

                           " நீயே அந்தப் பெயரை வைச்ச உன் அப்பாவிடம் கேள்,அல்லது உன் அம்மாவிடம் கேள், உன் அப்பா அந்த அழகான தமிழ் பெயரை எதுக்கு உனக்குப் பொருத்தமா வைத்தார் என்று சொல்லி இருப்பார் "    என்றேன். அவள் இன்னும் கவலையாக

                           "   ஹ்ம்ம் ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,   என்னோட அப்பா நான் பிறந்து ஒரு  வருடத்தில் அம்மாவோடு வாழாமல் பிரிந்து போய் விட்டார்,   ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  அப்பாவை நான் இன்றுவரை படத்தில் தான் பார்த்து இருக்கிறேன், ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  கல்யாணி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று சொல்லு  "  என்றாள். நான் அவளை அதுக்குப் பிறகு கல்யாணி என்றே அழைக்க விரும்பி ,

                                 "   கல்யாணி ,உனக்கு உண்மையைச் சொன்னால் என்ன எனக்கு தமிழ் மொழி அறிவு அதிகம் இல்லை,,ஆனாலும்... ....................."

                             என்று சொல்ல வெளிக்கிட ,அவள் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள்,, அவளின் நண்பிகள்

                            "  என்னாச்சு பெல்லா,,என்னாச்சு பெல்லா,,நீ ஓகே யா பெல்லா,,,நீ இப்படி அழுகிற ஆள் இல்லையே ,,என்னாச்சு பெல்லா, சொல்லடி ,,பெல்லா "

                                            என்று அவளை கேட்டார்கள், நான் என்னவோ அவளுக்கு சொல்லிப்போட்டேன் என்பது  போல என்னைப்  பார்த்தார்கள், என்ன சொல்லி இருப்பான் இந்த வெளிநாட்டுக்காரன் என்ற தன் எச்சரிக்கை உணர்வில் பெண்களுக்கு எழும்பும் சந்தேகம் அவர்களின் நெற்றியில் சுருங்கி விரிய, கொஞ்ச நேரம் அவர்களுக்குள் கதைச்சுப்போட்டு மறுபடியும்  என்னை சந்தேகமாப் பார்த்தார்கள், நான் அவர்களுக்கு

                                   " பெல்லாவுக்கு நான் ஒன்றும் அழ வைக்கும் நோக்கத்தில் சொல்லவில்லை,  பெல்லா அவளின் சொந்த சோகத்தில் அழுகிறாள், எனக்கும் தான் விளங்கவில்லை ஏன் அவள் திடீர் என்று அழுகிறாள் என்று, அவளே சொன்னால்தான் தெரியும் , மறுபடியும் சொல்கிறேன் உங்க  பெல்லாவுக்கு நான் ஒன்றும் அழ வைக்கும் நோக்கத்தில் சொல்லவில்லை "

                                                என்றேன் . ஆனால் சில நிமிடத்தில் இசபெல்லா கண்களை , அதில் பூசி இருந்த மஸ்காரா அழகு மை அழியாமல் , நளினமாக  ஒரு கிளினெக்ஸ் டிசு பேப்பர் எடுத்து துடைச்சுப் போட்டு, மூக்கை ஒருக்கா சத்தமா உறிஞ்சி, தோள்களை உதறி சுதாகரித்து ,

                                          "  நீ கல்யாணி என்று என்னை கூப்பிடும் போது எவளவு சந்தோசமா இருக்கு தெரியுமா,  அதுதான் அழுதேன், அழவேண்டும் போல இருந்து அதால அழுதேன்.... என்னை யாருமே அப்படிக் கூப்பிடுவதில்லை, அந்தப் பெயரை வைச்ச என் அப்பாவே ஒரு நாளும் அந்தப் பெயரில் என்னைக் கூப்பிடுவதைக் கேட்கவே எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, அந்தப் பெயர் என் பெயரோடு வெறுமையா ஒட்டிக்கொண்டு இருக்கு அவளாவே , ப்ளிஸ் என்னை இனி கல்யாணி என்றே அழை,  ப்ளிஸ் கல்யாணி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று மறுபடியும் சொல்லு, அந்தப் பெயரின் அர்த்தத்தையாவது அறிவம்   "  என்றாள்

,                      "  குட்  கேர்ள்,  இல்லப்பா கல்யாணி ,,எனக்கு சரியா தெரியாது... அது  ஒரு  இந்துப் பெண் கடவுளோட பெயராக இருக்கலாம்,முக்கியமா அது ஒரு ராகத்தின் பெயர், உன்னைப்போலவே அந்த ராகமும் மிகவும் அழகானது, ஆனால்அந்தக்  கல்யாணி ,   இந்தக் கல்யாணி   என்று பல இராகம் அந்தக் கல்யானியிலயே இருக்கு , " என்றேன்,  அவள் சிரிச்சு,

                           "  என்னை அழகு என்று சொன்னதுக்கு நன்றி,  இராகம் என்றால் என்ன,  இசபெல்லா கல்யாணி என்று ராகம் இருக்கா "  என்று கேட்டாள்

                       " .இல்லப்பா மை டியர் குட் கேர்ள் , இசபெல்லா கல்யாணி என்று ஒரு இராகமும் இல்லை, ஆனால் பூர்வகல்யாணி  என்று ஒரு இராகம் இருக்கு ,   உனக்கு  பூர்வகல்யாணி என்று முழுப் பெயர் வைச்சு இருக்கலாம்,அவளவு சம்பூரணமாய் அழகாய் இருக்கிறாய் கல்யாணி " என்றேன்.

                                       நான் ஒவ்வொரு முறையும் கல்யாணி கல்யாணி என்று அவள் பெயரை சொல்லும் போது, கண்ணில சந்தோசம் குடம் குடமா கொட்டியது,  அதைவிட ஒரு டீன் ஏஜ் இளம் பெண்ணை அழகு அழகு என்று சொல்வது கொஞ்சம் நெருடல் போல இருந்தாலும், அப்படி சொல்லும் போதெல்லாம் அவள் சந்தோசப்படுவது , தகப்பன் இல்லாமல் வளரும் அந்தப் பிள்ளையின் உலகத்துக்கு அற்புதமான ஒரு அனுபவத்தைக் கொடுப்பது போல எனக்கு இருந்தது. கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  மனிதர்கள் சந்தோசமாக இருப்பதுதானே முக்கியம் இந்த அவசர உலகத்தில், அவள் மறுபடியும் சிரித்து ,

                                    " என்னை அழகு என்று சொன்னதுக்கும் ,கல்யாணி என்று சொன்னதுக்கும்  நன்றி, இராகம் என்றால் என்ன என்று மட்டும் சொல்லு அதுவே எனக்கு போதும், "

                                    என்று அவள் பிறந்ததில் இருந்தே தவறவிட்ட ஏதோ ஒன்றின் அர்த்தத்தை கேட்பது போலக் கெஞ்சிக் கேட்டாள்.

                                  "  ஓகே ,கல்யாணி , நீ இசைக்கருவி ஏதாவது வாசிக்க  ,அல்லது கிளாசிகல் முயூசிக் ஏதாவது படிக்கிறாயா டியர் குட் கேர்ள் " என்று கேட்டேன்

                                "  ஆமாம், செல்லோ பேஸ் வயலின் வாசிக்கப் படிக்கிறேன் , அது சுமாராக வாசிப்பேன் "  என்றாள்  .

                             "    நல்லது கல்யாணி , அப்ப உனக்கு வெஸ்டர்ன் முயுசிக்கில் ஸ்கேல் என்று சொல்லுவார்களே அதுதான் இந்திய கீழத்தேயே சாஸ்திர இசையில் ஏறக்குறைய இராகம் என்கிறார்கள்,   கல்யாணி ஒரு ஸ்கேல் . அழகான மென்மையான உணர்வுகளை சுற்றி வளைத்து ஒரு சின்ன முடிச்சில் முடிஞ்சு உள்ளங்  கையில் கொடுக்கும் ஸ்கேல் , "  என்றேன் .

                                     அவளுக்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது, இடை இடையே நான் பேசும் நோர்க்ஸ் உனக்கு விளங்குதா என்று கேட்டுக் கேட்டுத் தான் அவளுக்கு விளங்கப்படுத்தினேன், அவள் தன்னோட பெயருக்கு என்னோட விளக்கத்தை அவளோட நண்பிகளுக்கு கூப்பிட்டு சொன்னாள்.  அவர்கள் அவளுக்கு கல்யாணி என்று அதிகம் பாவனையில் இல்லாத முழுப்பெயரில் வரும் பின் இணைப்புப் பெயர் இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதன் பின்  அவர்கள் என்னை ஏதோ படிச்ச ஒரு பண்டிதர் போல பார்த்தார்கள். நான் ஜன்னலுக்கால ரெயின் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டு இருந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். கல்யாணி மறுபடியும்

                                 "  மிகவும் மிகவும் மிகவும் நன்றி , ஒ இவளவு அர்த்தம் இருக்கா என் பெயருக்கு , மிகவும் சந்தோசம் , நான் இன்று அம்மாவுக்கும் சொல்லுவேன்,ஹ்ம்ம்  மம்மா ஆல்ரி சோத்  தில் மே டென் மீனிங்கன் , மென் ஜெய் வியத்  இக்கி, மென் மம்மா ஆல்ரி சோத்  தில் மே டென் மீனிங்கன், நான் ஒவ்வொருநாளும் டையரி எழுதுவேன் ,,இதைக் கட்டாயம் இன்று விரிவாக எழுதுவேன், "  என்றாள்

                                   "  மம்மா ஆல்ரி சோத்  தில் மே டென் மீனிங்கன் , மென் ஜெய் வியத்  இக்கி  " என்று ஆரவாரப்பட்டு சொன்னதுக்கு  தமிழ் மொழிபெயர்ப்பு " அம்மா ஒருநாளுமே இந்த விளக்கம் சொன்னதில்லை, எனக்கும் ஏனென்று தெரியாது "  என்பது . கல்யாணி ,அதுக்குப் பிறக்கு ஒன்றுமே கேட்கவில்லை ஒருவித  திருப்தியில்,தன்னுடைய பெயருக்கு அர்த்தம் கண்டு பிடித்த நிறைவோடு இருந்தாள்...நான் அவளுக்கு நிறைய உதவி செய்தது போல இருந்ததாலும் , ட்ரைன் வேற ஒஸ்லோ நகர எல்லைக்குள் நெருங்கி விட்டதாலும்,  ,கடைசியாக.

                                  "   கல்யாணி, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா, உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பதில் சொல்லு,முடியாவிட்டால் சொல்ல விருப்பம் இல்லை என்று சொல்லு அதுவும் பிரச்சினை இல்லை "  என்றேன்,

அவளோ,,   "        நீ என்னைக் கல்யாணி என்று கூப்பிடுவதால் எத்தினை கேள்வியும் கேள் பதில் சொல்கிறேன்   "      என்று சிரித்தாள்.

   நான் கேட்டேன்

                        "   ,உன்னுடைய அப்பாவுக்கு என்ன பெயர் அவர் இப்ப எங்கே வசிக்கிறார், நீ விரும்பினால் இந்த இரண்டு கேள்விக்கும் பதில் சொல்லு,விருப்பம் இல்லை என்றால் சொல்லாதே " என்றேன்,

                                        அவள் கொஞ்சம் ஜோசித்தாள், மைக்கல் குரோஸ்  கைப் பையில் இருந்து லிப்டிக்ஸ் எடுத்து சொண்டில தடவினாள்.  என்னை நேராகப் பார்த்தாள், அணிந்து இருந்த லூயிஸ் வோல்தான் பிரெஞ்சு லெதர் சப்பாத்தைக் குனிந்து சரி செய்தாள்  . பிலடெல்பியா பின்ஸ் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள், கொஞ்சம் சரிந்து சந்தேகமாப் பார்த்தாள். எனக்கு கொஞ்சம் பயம் வந்திட்டுது. கல்யாணி சில செக்கன்களில்

                                 "  ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  என்னோட அப்பா எனக்கு ஒருவயதில் என்னை விட்டுப் போனவர்,, ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  ,,இன்றுவரை  நானோ அம்மாவோ கண்டதில்லை,  ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  என்னோட அப்பாவின் பெயர் மா லி ங்  க...ம்   இல்லை  மகா லின் கம் ,,,யெஸ்  மகாலிங்கம் ...அதுதான் பெயர் ,  ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  ஆனால் நோர்வேயை விட்டுப்போட்டு அப்பா கனடாவுக்கு போய்விட்டாராம் என்று அம்மா ஒரு முறை சொன்னா,  " என்று சொன்னாள்.

                           "   ஒ அப்படியா,,மகாலிங்கம் என்பது தமிழ் பெயர் தான் ,அவர் இலங்கை தமிழர். இந்தப் பெயர் அவரின் குடும்பப் பெயராக இருக்கலாம் , ,ஹ்ம்ம் .... அதனால் தான் உனக்கு கல்யாணி என்று பின் இணைப்பு பெயர் தமிழில் வைத்து இருக்கிறார், அது சந்தோசமான விசியம் தானே . " என்றேன் .

                    அதுக்கு அவள் உற்சாகமாகப் பதில் சொல்லவில்லை ,சில நேரம் பழையபடி மகாலிங்கம் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்பாளோ என்று நினைக்க,அவள் கேட்கவில்லை,அந்தப் பெயரை அவள் அதிகம் விரும்பவில்லை போலவும் முகத்தை வைச்சுக்கொண்டு இருந்தாள்.  ஆனால்

                        "  இசபெல்லா என் அம்மா வழி முப்பாட்டியின் பெயர், அவர்கள் தான் ஒரு காலத்தில் நோர்வேயின் முதல் வங்கியான ஹன்டேல்ஸ் பாங் என்பதை தொடக்கிய முன்னோடிகள் "

               என்று சொன்னாள். அதைக்கேட்க நான் முன்னமே நினைச்சது போல அவள் ஒரு உயர் குடி நோர்வே மக்களின் சாயலில் அவள் இருந்தது உறுதியானது,

                              ட்ரைன் இப்ப ஒஸ்லோ எல்லைக்குள் வந்து சன நெருக்கடியான உயர்ந்த கட்டிடங்கள்  தலை நிமிர்த்தும் ,மேம் பாலங்கள் மிதக்கும் பிரதேசம் ஊடாக மெதுவாக, கொஞ்சம் குலுங்கி, அடிக்கடி கிரிச் கிரிச் என்று தண்டவாளப் பாதைப்  பிரிவுகளில் உரசிக்கொண்டு  வளைந்து நெளிந்து ஓடத் தொடங்க ,  கல்யாணி கடைசியாக சொல்வது போல

                            "    நான் ப்ளாக் வைச்சு இருக்கேறேன் அதில  குருவிகள், பறவைகளின் கூடுகளை மட்டுமே படம் எடுத்துப் போடுவேன் ,கூடுகளின் பெறுமதி எப்பவுமே பறவைகளுக்கு புரிந்து கொள்ள முடிகிற ஒரு நினைவின் வழித்தடத்தில் வழிமாறிப்போகாத அனுபவம்,  ,நிறையப்பேர் அந்தப் கூடுகளின் படங்களை ரசிப்பார்கள் , ஆனால் நான்  எதுவுமே எப்பவுமே எதைப்பற்றியுமே அதில் எழுதியதில்லை இன்றுவரை , அதில் இன்றைய சம்பவத்தை எழுதப் போகிறேன், என்னுடைய ப்ளாக்குக்கு பெயரும் இல்லை, என்னோட படம் மட்டுமே அதில இருக்கு,,"

                      " ஒ அப்படியா,, இதை நானும் முதலிலேயே நினைச்சேன்  ஆட்காட்டி ஆட்காட்ட்டி நான் பத்து முட்டை இட்டேன்  கதை போல  வரும் என்று,,,,சரிப்பா  ஏன் உன் பிளக் இக்கு  பெயர் வைக்கவில்லை கல்யாணி , " என்று கேட்டேன் .அதுக்கு அவள்,,,

                               "   என்னோட இன்றைய நாள் வரையான வாழ்கையில் என்னுடைய அரைவாசி வெற்றிடமா ,,பெயர் இல்லாமல் தானே இருக்கு, ஹ்ம்ம்,,இருந்தது ,,இன்று அந்த பெயருக்கு அர்த்தம் கண்டு பிடித்தேன்... ஆனாலும் ஒரு வெறுமை வெளியில் சில இடங்களில் எல்லைகளை மீறாத  சிந்தனையுடன் இருந்தாலும் பல சமயம்  எந்த சிந்தனையுடனும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது மிகவும் கடினம் என்று "  சொன்னாள்

                                    "   அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை,,உலகத்தில் உன்னைவிட சந்தர்பங்கள், வசதிகள், வாய்ப்புக்கள் இல்லாமல் கோடிக்கணக்கான டீன் ஏஜ் பிள்ளைகள் இருக்கிறார்கள்,உன் கைகளை விட்டுப்போன, அல்லது கை கழுவி விட்டுப் போன சம்பவங்களை நினைப்பதால் கூட ஒரு நன்மையையும் இல்லை, அதனால் உன்னிடம் கைவசம் இருப்பதை வைச்சுக்கொண்டு முன்னேறு  "

                        என்று சொன்னேன். இதைச் சொல்லிப்போட்டு என்னை நினைக்க எனக்கே ஒரு மாதிரி இருந்தது. அடுத்தவர்கள்  தலையில தத்துவ மழையை சரிச்சு ஊத்துவது எவளவு இலகுவா இருக்கு பார்த்திங்களா

                                   இசபெல்லா கல்யாணி ,கொஞ்சம் என்னோட அறிவுரையை ஆர்வமாகக் கேட்டாள். இதுவரைக்கும் கேட்காத அவளின் இதயத்தின் பகுதியில்  இருந்து யாரோ அவளுக்கு மிகவும் வேண்டியவர்கள் சொல்வது போல நெருக்கமாக உணர்ந்து உள்வாங்கிக் கேட்டாள், கேட்டுப்போட்டு

                             "   என்னோட ப்ளக் , அதுக்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் ,,நீயே ஒரு பெயர் சொல்லேன், உன் நினைவாக இருக்கட்டுமே "  என்றாள் .

                        "  கல்யா மாலி என்று வை,,உன் பெயரும்,,உன் பாதியான உன் தந்தையின் பெயரும் போல இருக்கும் " என்று நான் சடார் என்று சொன்னேன்,

                                      "  அதெப்படி சடார் என்று உனக்கு இந்தப் பெயர் நினைவு வந்தது   " என்று கேட்டாள்

                                 "  எனக்கு எல்லாமே சடார் சடார் என்று   தான் வரும் ,நிதானமா ஆழமா ஜோசித்தால் மண்டைக்குள்ள இருந்து ஒன்றுமே வராது "

                                       என்று சொன்னேன், இசபெல்லா கல்யாணி  என்னைக் கட்டிப்பிடிச்சு நன்றி சொல்லிப்போட்டு,அவளோட நண்பிகளுடன் பிளிண்டரன் யூனிவெர்சிட்டி ஸ்டேஷனில் இறங்கிப் போய் விட்டாள்.

                             ட்ரைன் அரை மணித்தியாலம் நான் இருந்த பெட்டியில் அதிகம் யாரும் இல்லாமல் வெறுமையாக ஓடிக்கொண்டு இருந்தது, மறுபடியும் பெரிய ஒரு மழைக்கு கறுப்பு முகில்கள் ஒத்திகை பார்க்கத் தொடங்கவே ஜன்னலில் பொட்டு பொட்டு என்று பெரிய மழைத் துளிகள் குட்டத் தொடங்க, ட்ரைன் நிதானமாக ஓடிக்கொண்டு இருக்க, அதற்கு சமாந்தரமாக   என் நினைவுகளில்

                                          "  எதிர்மறையான எல்லாவற்றையும் நீங்கள் கடந்து சென்றால் நீங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைவீர்கள். அங்குதான் எதிர்மறையானவை சந்திக்கின்றன. கலந்து மறைகின்றன "

என்ற சத்குரு ஓஷோ சொன்ன வார்த்தைகள்  நினைவுகளோடு ஓடிக்கொண்டு இருந்தது.

.
29.05.15

Tuesday 26 May 2015

காற்றில் வரும் கீதமே.............

சிரேயா கோஸ்ஸல், பவதாரணி , சாதனா சர்க்கம், ஹரிஹரன் ஆகிய நாலு முக்கிய பாடகர்கள் ஒரே பாடலில் பாடி, யமன் கல்யாணி ராகத்தில், இசைஞானி இளையராஜா இசை அமைக்க மெட்டுச் சொல்ல சொல்ல கவிஞ்சர் வாலி அவர்கள் டெலிபோனில் வரிகள் சொல்லி இசை அமைக்கப்பட்ட பாடல்,

                                 இந்தப் பாடல் ஸ்ருதிலயங்கள் தன்னைச் சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் உறவாக அமைந்த யமன் கல்யாணி ராக சுரங்கள் முடிவில் அழகாக வருவது ஒரு அதிசயம். 
காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா என்று தொடங்கும் பாடல் .

                                 தொடக்க வரிகளை சிரேயா கோஸ்ஸல் பாட. அதுவே தொடர்ந்து அவன் வாய்க் குழலில் அழகாக அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்து நடந்து …அலைபோல் மிதந்து வர பவதாரணியும், சாதனாவும் வருந்தும் உயிருக்கு……ஒரு மருந்தாகும் இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகத் தொடர முடிவில் அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன் என்று ஹரிஹரன் பாட காற்றில் வரும் கீதமே,என் கண்ணனை அறிவாயா அமர்களம் தரும் அமைதியான பாடல் .

                              ஒரு பிரபலமான் கர்நாடக சங்கீத ராகத்தில் ஒரு மருந்தாக, இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாக இசையின் பயனே இறைவன் தானே என மனவெளி எங்கும் சந்தோஷ அலைகளை அடித்து விட்டுச் செல்கிறது.


https://www.youtube.com/watch?v=9FFvSvjoK9g


.

Monday 25 May 2015

மேரி யுவானா மயக்கிய பொப் மார்லி..

இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை .விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின், ஒரு காலகட்டத்தில் நடந்த கற்பனைக் கதை போல...

                                   யாழ்பாணத்தில வளர்ந்த காலத்தில ,பொப் மார்லியின் " ரெக்கே " இசை பற்றி கொஞ்சமும் , அவர் விரும்பிப் புகைத்த "மேரி யுவானா " போதை வஸ்துப் பற்றி கொஞ்சம் அதிகமாகவும் கேள்விப்பட்டு இருந்தாலும்,பின் நாடக்களில் ஸ்வீடனில் அரசியல் அகதி முகாமில் வசித்த போது அது இரண்டையும் அனுபவிக்கவே சந்தர்பம் கிடைத்தது ! கூடவெ அவர் உருவாகிய "ரச்தபேரியன்" கலாசாரம் பற்றி கொஞ்சம் கிட்டத்தில் அதுக்குள்ள இறங்கியே பார்க்கவும் அந்த ஸ்வீடடன் அரசியல் அகதி முகாமில் வாய்ப்பு வேற கிடைத்தது !

                                        பொப் மர்லியை 80 களில் பிரபலம் ஆக்கிய அவரின் இசையுடன்,அவர் வசித்த நாடான ஜமைக்காவில் , உலகம் எங்கும் சட்டவிரோதமணா  மேரி யுவானா போதைவஸ்து, அந்த நாடில் சட்டரீதியா எல்லாரும் புகைக்லாம் என்று இருந்தது. அதுவே  உலகம் எங்கும் இருந்து ரசிகர்களை அந்த நாடுக்கு போகப்பண்ணியது ,அவர்கள் திரும்பி வந்த போது தங்களுடன் பொப் மார்லியின் இசையுடன்,அவரின் பைபிளின் பழைய ஏற்பாட்டு கோட்பாடுகளில் அமைந்த "ரச்தபெரியன் "கலாசாரத்தையும் மேற்கு உலகத்துக்கு கொண்டு வந்தார்கள்!

                              ஆங்கிலேயர்களால், ஆபிரிக்காவில் இருந்து , கரூபியன் தீவுகளில் ஒரு சிறு தீவான ஜமைக்காவில் கரும்புத் தோட்டதுக்கு வேலைக்கு கொண்டுவரப்பட,  கரும்பு போலவே சக்கையாகப் பிழியப்பட்ட , பாவப்பட கறுப்பின மக்களின் அடிமைகளின் வம்சாவளியான, பொப் மார்லியின் பாடல்களில் எப்படியும் ஒரு வரி அடிமை விடுதலை பற்றி வரும், அவரோட " A Blackman Redemption  " என்ற பாடல் இன்றுவரை  கறுப்பின மக்களின் தேசிய விடுதலை கீதம் என்கிறார்கள் . 

                          அதாலதான் எப்படி, கியூபாவின்" விடுதலைத் தந்தை " ஏற்நேஸ்ட்ரோ சேகுவேரவின் முகத்தை புரட்சியின் அடையாளம், " கெரில்லாப் போராளிகளின் கடவுள் " என்பது போல கொண்டாடுகிறார்களோ அதுபோல ,பொப் மார்லியின் இசையை " அடிமை விடுதலைப் புரட்சி இசை " என்கிறார்கள் உலகம் முழுவதும் .

                                     ஸ்வீடன் அகதி முகாமில் என்னோட அறையிட்கு அருகில் வாசித்த,கிழக்கு ஆபிரிக்க நாடான எதியோபியாவில் இருந்து அகதியா வந்திருந்த டானியல், பொப் மார்லியின் இசைக்கு மட்டுமில்லை,அந்தப் புகைக்கும் தீவிர ரசிகரா இருந்தார்! அந்த " மேரி யுவானா " போதைவஸ்தை மொரோக்கோவில் இருந்து எடுப்பித்து சட்டவிரோதமா முகாமில் இருந்த புகை போக்கிகளுக்கு விற்றுக்கொண்டும் இருந்தார்! 

                               பொப் மார்லி போலவே,நடை,உடை,பாவனையில் இருந்த அவர்,தலை மயிரை குடும்பைச் சித்தர்போல சடை ஆக்கி ,கழுத்தில நாய்ச் சங்கிலி போல நிறைய மாலைகள் போட்டு, யாரைப் பார்த்தாலும் "யா, மாண் ,யா மாண் ," எண்டு பொப் மார்லி போலவே வெட்டி வெட்டி விழுங்கி ஆங்கிலம் பேசி, கை முஸ்டியை பொத்தி, இடித்து , வருபவர் போபவர்களுக்கு,  "  Freedom came my way one day , And I started out of town, yeah! "    எண்டு பாடி பொப் மார்லி அடையாள வணக்கம் சொல்லுவார்!

                                   பொப் மார்லி மீது இருந்த அபிமானத்தால், நான் அவரிடம் நட்பாகி , அவரின் அறையில் , 24 மணித்தியாலமும்" non -stop " ஆகப் பாடிக்கொண்டு இருக்கும் பொப் மார்லியின் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எதியோப்பியா, அதன் ஜெனாதிபதியாக இருந்த " ஆபிரிக்க சிங்கம்" எண்டு அழைக்கப்பட்ட சாலீஸ் லாச்க்கி, பொப் மார்லியின் " ரஸ்த பேரியன்" சமயம், " ரெக்கே" இசைவடிவம், போதை கொடுக்கும் இலை "மேரி யுவானா " இன் இங்கிதம், பொப் மார்லி நம்பிய பைபிளின் பழைய ஏற்பாட்டுக் கதைகள் , போன்ற எல்லாத்தையும் அவரிடம் இருந்து கேட்டு அறிந்தேன் ! 

                                அவர் மரியுவானவை ஒரு பேபரில் குழாய் போல சுருட்டி ,அதை "joint "எண்டு சொல்லுவார்கள்,அதை டானியல் பத்த வைத்து , விரல்களால் பொத்திப் பிடித்து உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளுக்க இழுத்து, புகையை வெளிய விடாமல் அமுக்கி , கண் இரண்டும் சிவப்பாக ,மேலே விட்டதை வெறித்துப் பார்த்துக்கொண்டு ஏகாந்தமா இருப்பார்!

                                         மேரி யுவானா  புகைக்கும் போது அவர் பாடல் CD ஐ நிப்பாட்டிப் போட்டு அமைதியாகப் புகைப்பார். ஒருமுறை

                 " ஏன் நீங்கள் அப்படி செய்கிறீர்கள்?" எண்டு கேட்டதுக்கு,

                              " மேரி யுவானா  புகைக்கும் போது ,பொப்பின் பாடல்கள் எல்லாம் நினைவுவரும், அதன் வரிகளுக்கு நிறைய வேறு வேறு அர்த்தமும் சேர்ந்து வரும் " என்றார், 

                             பொப் மார்லியே மேரி யுவானா  புகைத்துக்கொண்டு ,அவர் பாடல்களை எழுதி, அதுக்கு இசை அமைத்து இருக்கிறார் எண்டு வேற கேள்விப்படதால் அதில உண்மை இருக்கலாம் போலதான் இருந்தது !

                                          ஒரு நாள் டானியல் சொன்ன அந்த அனுபவத்தை அறிய , துணிந்து நானும் அதைப் புகைத்துப் பார்த்தேன், டானியல் joint சுருட்டித் தந்தார், அதைப் பவ்வியமா வேண்டி , பத்தவைத்து உள்ளுக்க இழுக்கவே தலை சுற்றியது, கொஞ்ச நேரத்தில கண் ரெண்டும் விரிய , காதுக்குள் யாழ்தேவி ரெயில் ஓடுற சதம் கேட்க , என் கை இரண்டும் சரணவாதம் வந்து  குறண்டிக்கொண்டு வரும்போல  விட்டு விட்டு இழுக்க ,   எப்பவுமே குப்பையாக இருக்கும் டானியலின் அறை, சடார் எண்டு சாணி போட்டு மெழுகியது போல சுத்தமா இருக்க , அதுக்குப் பிறக்கு நல்லா உள்ளுக்க இழுக்க, முளங்காலுக்கு கீழ என்னோட காலைத் தடவிப் பார்க்க இரண்டு காலும் காணாமல் போயிடுத்து....கண்ணீரும் புகையும் சேர்ந்து கண்ணீர்ப்புகை போல முகமெல்லாம் எரியத்  தொடங்க  

                                            " I shot the sheriff, but I swear it was in self defense  " என்ற வரிகளை , விரல்களை பிஸ்டல் துப்பாக்கி  போல ஒடுக்கி , அந்த பிஸ்டல் துப்பாக்கியை அங்கயும் ,இங்கையும் குறிபார்துக்கொண்டு ,  என்னைப் போலவே புகைத்துக் கொண்டு கனவில் மிதந்து பாடிக்கொண்டு இருந்த  டானியல் , பாடுறதை நிபாடிப்போட்டு , இயல்பாக

                             " யா மாண் , எப்படி இருக்கு? பொப் மார்லியின் பாடல் நினைவு வருகுதா, எங்க ஒரு பாடல் பாடும் பார்ப்பம்" என்றார். 

                               நான் " இடம் கொண்டு விம்மி , இனை கொண்டு இறுகி , இளகி முத்து வடங் கொண்ட கொங்கை நலங் கொண்ட நாயகி ,,,நல் அரவின்   அல்குர்ப் பனிமொழி... " எண்டு பாடினேன் ,

                              அவர் கோபமாகி " என்ன பிசத்துறாய் .இது , பொப் மார்லி பாடவில்லையே, எதோ புரியாத மொழியில் எதுக்குப் பாடி என்னோட உசிரை எடுகுறாய் ?" என்றார் கோபமாகி . நான், அமைதியாக , தலையைக்  கையாலா பிடிச்சுக்கொண்டு

                                  " இல்லை , இது எங்கள் நாட்டு கவிஞ்சர் அபிராமிப் பட்டர் என்பவர் பாடிய, அபிராமி அந்தாதி" என்றேன்,அவர் என்னை

                             " நிப்பாட்டு உன் பிசத்தலை" எண்டு , 


                  கொஞ்சம் வில்லன்கமாப் பார்க்க,  எனக்கு  அந்த பிஸ்டல் துப்பாக்கியை பார்க்க பயம் வந்திட்டுது ! நான் என்ன செய்ய  மேரி யுவானா  மண்டைக்குள்ள தாறு மாறாய்ப் பாய எனக்கு சின்ன வயசில படித்த அபிராமி அந்தாதி சாடர் எண்டு நினைவு வந்து, பொப் மார்லியின் பாட்டு ஒண்டுமே நினைவு வரவில்லை! 

                                அதுக்குப் பிறகு நான் ஒரு நாளும் அந்த நாசமாப் போன மரியுவான புகையை நினைத்தே பார்க்கவில்லை எண்டு ரீல் விடப்போறதில்லை ,,பல வருடங்களின் பின் ,ஹொலண்டில் ,ஆம்ஸ்டர்டாமில் அதை மீண்டும் ட்ரை பண்ணினேன் ,அது வேறுவிதமான அனுபவம் கொடுக்க , கடசியில் சக்கடத்தாரின் குதிரைபோல இருந்த கத்தரீனாவை சந்திக்க ,,,,அது வேற கதை ,,,,,,   !

                                       ஸ்வீடனில்  அரசியல் அகதிகள் ஆனா நாங்கள் எல்லாம் காட்டுவாசிகள் போல இருந்ததாலோ என்னோவோ , அந்த அகதி முகாமை , ரெம்ப நாகரிகமான ஸ்வீடிஷ் மக்கள், சன நடமாட்டம் இல்லாத ஒரு அத்துவானக் கிராமத்தில இருந்த பைன் மரக் காட்டுக்கு நடுவில வைத்திருந்தார்கள். சன நடமாடம் உள்ள டவுன்க்கு வரவே காடுப் தாண்டி  3 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்!

                                                நான் அந்த நாட்களில் தனிமையிலும் , வெறுப்பிலும் , மன அழுத்த நோயாலும் , வாழ்கையின் விளிம்பில் இருந்ததாலும்,  பொப் மார்லி போலவே,நடை,உடை, பாவனையில   மரியுவானா புகையின் மத்தியில்  இருந்த  டானியலின் போக்கு எனக்குப் பிடிக்கவேயில்லை . அனாலும் பொப் மார்லி போலவே,நடை,உடை, பாவனையில மட்டும் , அந்த முகாமில்  சில வருடம் வேறு  போக்கிடம் இல்லாமல்  இருந்தேன், 

                                  சிலநேரம் முகாமில இருந்து நடந்து காடுப் பாதையால டவுனுக்குப் போவேன், கிறுக்கு பிடித்த பொப் மார்லி போல இருந்த என்னைப் பார்த்தாலே நெறைய இளம் ஸ்வீடிஷ் பெண்கள் நெருங்கி வந்து , நட்பாக சிரித்து,பொப் மார்லி ஸ்டைலில் கை முஸ்டியை பொத்தி இடித்து " ம........... இருக்கா?" எண்டு ரகசியமாக ,கிசு கிசு குரலில் காதுக்க  கேட்பார்கள்.நான் அவர்களில் பலரை டானியலுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்!எதோ , அந்த நேரம் ஏதோ என்னால பொப் மார்லியின் "ரெக்கே "இசைக்கும்,அவரின் "ரேஸ்த பேரியன் " கலாசாரத்தும் செய்ய முடிஞ்சது அவ்வளவுதான்!

                                              மூன்றாம் உலக ,வறிய,ஆபிரிக்க  நாடுகளில் இருந்து அரசியல்  அகதியாகியா என்னைப் போன்றவர்கள்   வசிக்கும்  அகதிமுகாமில் டானியல்  மரியுவானா  விற்பது ஸ்வீடிஷ்  மக்களுக்கு பெரிய அக்கறை இருக்கவில்லை . ஆனால் அவர்களின் இளம் பெண் பிள்ளைகள் அகதிமுகாமுக்கு அதை வேண்ட வருவது கண்னுக்க குத்தத் தொடங்க  அதாலே நிறையப் பிரச்சினை வர ,ஒருநாள் டானியலை போலிஸ் வந்து அள்ளிக்கொண்டு போக அவரை பலதகரமாக இழுக்க, அவர் அப்பொழுதும் ,

                         "  Freedom came my way one day , And I started out of town, yeah!  ,Freedom came my way one day,,,¤

                                   எண்ட பொப் மார்லியின் பாடல் வரிகளை உரத்துப் பாடி , பொலிஸ்காரரோட  சண்டை பிடிக்க ,கடைசியில் டானியலை சுவிடிஷ் பொலிஸ்காரர் , விலங்கு போட்டு , கொற இழுவயில இழுத்துக்கொண்டு போயிட்டாங்கள் !

.